செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ஓட்டுனர்க்கு… !

நடையர்க்(கு) அச்சம் நல்கா(து) ஊர்தியைத்
தடையின்றிச் செலுத்தல் தலை!

ஒலியெழுப்பி மக்களுக்(கு) உறுகண் இழைக்காமல்
வழியளித்துச் செல்லுதல் மாண்பு!

முந்த முயல்வாரை முந்தாது வழிவிட்டுப்
பிந்திச் செல்வதைப் பேண்!

எதிரில் வருமூர்திக்(கு) இடமளித்(து) உன்வழியில்
மிதவிரைவிற் செல்வதே மேல்!

மிகுவிரைவு கூட்டுதல் மிகப்பெரும் இடருக்கு
வகுக்கும் வழியொன்றை வந்து!

புகைத்த படியே போயூர்தி ஓட்டாதே!
நிகழும் நேர்ச்சியை நினை!

மதுவின் மயக்கத்தில் மகிழுந்(து) ஓட்டுதல்
எதிர்கொண்(டு) எமனழைத்தற்(கு) இணை!

சாலை சட்டத்தை சார்த்து நடப்பதே
கோளென நெஞ்சில் குறி!

ஊர்தியை ஓட்டுகையில் ஒருவரொடும் பேசாதே!
நேர்ச்சிக்கு வழிகோளாய் நீ!

எரிபொருளைச் சேமித்தல் ஏலும் மிதவிரைவைச்
சரியாய்க் கையாளுங் கால்!

அகரம் அமுதா

விரைவு!


அகரம் அமுதா

திங்கள், 8 பிப்ரவரி, 2010

வசைபோய் வாழ்ந்தவன்!

தேரா மன்னா! தேரா மன்னா!
ஓரா தொருசொல் உரைத்ததோ உன்நா?

கொல்லன் உரைத்ததைக் கொண்டத னாலே
கொல்லத் துணிந்ததோ கோவுன்செங் கோலே!

காதில் விழுந்த களவுச் செய்தியால்
கோதில் ஒருவனைக் கொன்றது முறையா?

அழைத்தா ராயா தவன்தலை கொய்து
பிழைத்தாய் பெரும்பிழை இழைத்தா யன்றோ?

குற்றம் புரிந்ததாய்க் கூறக் கேட்டநீ
சற்றும் ஆய தளைப்பட் டனையோ?

முற்றும் உணரா மொழியுரைத் தனையே!
குற்றம் புரியான் கொலையுண் டனனே!

பாம்பின் நஞ்சைப் பற்றி யெடுத்துப்
பாம்பிடம் விற்கப் பறப்பா ருண்டா?

திருடிய பொருளைத் திருடிய பொழுதிற்
திருடிய இடத்தில் சென்றுவிற் பவர்யார்?

திருட்டுப் பொருளைச் சென்றுகா சாக்க
இருட்டுப் பொழுதே ஏற்றது மன்றோ?

கொற்றவள் சிலம்பைக் கொல்லை கொண்டவன்
விற்றிட வீதியில் விரைந்திடு வானா?

தப்பைப் புரிந்தவன் தனைமறைக் காது
தொப்பை தெரிய உலவிய துண்டா?

கறந்த பாலைக் காக்க கன்றினைச்
சிறந்த காவலாய்த் தேர்ந்திடும் செயல்போல்

பழுது பட்ட பாழ்மனத் தானிடம்
பழுது பார்க்கக் காற்சிலம் பீந்தனை!

நெஞ்சில் கரவை நிறைத்து வைத்தவன்
வஞ்சம் புரிந்தான் வழுவின் வழிசென்றான்!

ஒற்றைச் சிலம்பை ஒளித்தா னெனினும்
மற்றைச் சிலம்பை மறைத்தா னில்லை!

தற்செய லாக தன்சிலம் பெடுத்து
விற்கவந் தவன்மேல் வீண்பழி யுரைத்தான்!

உரைத்த பழியின் உண்மை யுணரா
திறைத்தாய் கடுஞ்சொ லிறந்தான் நல்லோன்!

பொற்கொல் லன்தன் பொல்லாப் பழியால்
நிற்குந் தலைபோய் நில்லா தொழிந்தனன்!

காவலன் உன்னிணையாள் காற்சிலம் பெடுத்தவன்
கோவலன் என்றா குறித்தனை? அய்யோ!

தகாத சொல்லால் தலைபோய் வீழ்ந்தான்
புகாரின் தோன்றல்; புகழ்செய லிதுவா?

குற்றம் புரிந்ததாய்க் கொள்ளினும் ஆளும்
கொற்றவா! அவையைக் கூட்டியவ் விருவரை

நயன்மை மன்றில் நிறுத்திய துண்டா?
அயலவன் அவனை அழித்தது நன்றா?

அறிவில் செறிந்தோ ரவையில் இருக்க
நெறியின் வழியில் நின்றி டாமல்

அரசன் என்னுஞ் செருக்கா லன்றோ
உரசிப் பார்த்தாய்? உயிர்கொலை செய்தாய்!

உண்மை அறியு முள்ள மில்லாய்!
அண்மித் தழிவி லகப்பட் டாயே!

எண்ணித் துணிந்தா யில்லை; உன்னிரு
கண்ணால் கண்டனை யில்லை; காதால்

கேட்டதை மெய்யெனக் கொண்டத னாலே
மாட்சி இழந்தாய்! மனம்மிக நொந்தாய்!

ஏதிலி யாகி இறந்து கிடந்தவன்
காதலி வந்தாள்; காற்சிலம் பெடுத்தாள்;

நயன்மை கேட்டு நடந்தா ளவையோர்
வியக்கு முரையை விரித்தாள் வீசி

எறிந்த சிலம்பி லிந்த பரல்கள்
தெறித்தன; சாட்சிகள் செப்பின; அந்தக்

காட்சியைக் கண்ட காவலா! உன்றன்
பேச்சினை இழந்தாய்; பேருருக ணுற்றாய்;

‘யானே கள்வன்!’ எனுமுரை செய்து
போனாய்; விண்ணகம் போந்தத னாலே

இசையிற் சிறந்த இறைவா!
வசைபோய் வாழ்ந்தாய் மண்ணுல கினிலே!

அகரம் அமுதா

சனி, 6 பிப்ரவரி, 2010

பண்பாய் தமிழில் படி!

கண்ணில் அருளும் கருத்தினிலே நேர்மையுமாய்
விண்ணில் திகழ்வெண் நிலாச்சொறியும் -தண்ணொளிபோல்
பண்பெல்லாம் பெற்றேயிப் பாரில் சிறப்படைய
பண்பாய் தமிழில் படி!


அகரம் அமுதா

வியாழன், 28 ஜனவரி, 2010

“லீ” வாழ்க!

சிற்றெறும்பின் அணியென்பேன் சாலை யெங்கும்
செல்லுகின்ற வாகனங்கள்; சோலை தன்னைச்
சுற்றுகின்ற தும்பிகளே வான ஊர்தி!
சிரிக்கின்ற விளக்குகளே தார கைகள்!
பற்றுவிட்ட துறவிகள்போல் பாகம் காட்டிப்
பாங்காக நிற்கின்ற கட்டி டங்கள்
ஒற்றுவிட்ட வெண்பாவே! ஓங்கி நிற்கும்
ஒப்பில்லா மரங்களெல்லாம் நிழற்கு டைகள்!

சத்தியமாய் சேய்மனமே தூய்மை தன்னைச்
செப்புதற் கேற்றதொரு உவமை யாகும்!
சச்சரவு சஞ்சலங்கள் சூழ்ச்சி தீது
செய்தறியா மாந்தரெல்லாம் தேனீ யாவர்!
இத்தனையும் ஒரணியாய் இணையப் பெற்ற
இளஞ்சிங்கை நாட்டிற்கென் உவமை சொல்வேன்?
இச்சகத்திற் கேசிங்கை நெற்றிப் பொட்டாம்!
இயற்றிவைத்த லீகுவான்யூ என்றும் வாழ்க!

அகரம் அமுதா

புதன், 13 ஜனவரி, 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (2)

முதற்பகுதியை >இங்கு< நோக்குக!

உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!
இலங்கைத் தமிழர்க் கிறைவா! -உலங்குவா(ன்)
ஊர்திப் படைநடத்தி ஊரழித்த சிங்களரின்
மார்பிளந்த நீயன்றோ மன்! (11)

மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்
உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய
துய்ய மனத்தாற் துயரம் களைந்தகதிர்க்
கைய! எமக்குநீ காப்பு! (12)

காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்
கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை
பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)
உற்றதுணை ஆனாய் உவந்து! (13)

உவமையொன் றில்லா உயர்கோனே! நீயே
உவமையுனக் கென்றே உணர்ந்தோம் –உவட்டா
இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்
இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (14)

என்று பிறந்தகுடி என்ப தறியாமல்
இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றாத்
தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே
அமிழ்தினும் மிக்க அரிது! (15)

அரிதரி(து) உன்போல் அடலேற்றைக் காணல்;
அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது
கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);
உள்வைத்தேன் உன்னை உவந்து! (16)

உவரி நடுவே உதித்த தமிழர்
உவலைக் கடலில் உழலும் –அவலம்
களையப் பிறந்த கரிகாலா! உன்னை
அளையப் புகுமென் அகம்! (17)

அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்
பகைகொண்ட மாணார்ப் பரிசை –இகம்கொண்ட
மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி
ஏந்திப் பிடித்தாய் இயன்று! (18)

இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே –தியங்கா(து)
அவர்க்குநற் பாடல் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (19)

தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர் இனிதே –உழுவக்
கொடிதாங்கி ஈழத்திற் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (20)

சொற்பொருள்:-
உலங்குவானூர்தி -ஹெலிகாப்டர்; மன்னுதல் –நிலைத்தல்; உன்னுதல் –உணர்தல்; துய்ய -தூய்மையுள்ள; உவட்டா -அருவருப்பில்லாத; அடலேறு –வலிமையுடையவன்; கோ -அரசன்; உவரி –கடல்; உவரிநடுவே உதித்ததமிழர் –இலங்கைத்தமிழர்; அளைதல்- தழுவுதல்; மாணார் –பகைவர்; பரிசு –பண்பு; இகம் –இவ்வுலக வாழ்வு; தியங்காது –கலங்காது

அகரம் அமுதா

சனி, 9 ஜனவரி, 2010

குறுங்கவிதை!

மிட்டாயுடன் சிறார்கள்
கையசைத்து விடைதந்தது
தேசியக்கொடி!

தவளைச் சத்தம்
தேடிவந்தது பாம்பு
பசியாறியது பருந்து!

வியாழன், 29 அக்டோபர், 2009

முதல் எழுத்து!

பெண் எலியின் கருமுட்டையை எடுத்து உயிரணு தோற்றுவித்து, அதனை வேறொரு பெண் எலியின் கருமுட்டையில் செலுத்தி எலிக்குஞ்சி தோற்றுவித்துள்ளார் ஜப்பான் விஞ்ஞானி “டோமகிரோ”
-செய்தி-

இச்சோதனை, முறையே மனிதர்களுக்கும் நிகழ்த்திப் பார்க்கப் படுமாயின், அப்படிப் பிறந்த குழந்தை தன் அவலம் பாடுவதாக இக்கவிதை...

மாலையிட்டு மஞ்சம் கண்டு
மசக்கை கொள்வது –வெட்டி
வேலையென்று எண்ணிவிட்ட
டோமகிரோ நில்லடா!

தந்தையின்றி தாய்கள்கொண்டு
சனித்த பிள்ளைநான் –இந்த
விந்தைசெய்யும் எண்ணமுன்னில்
விளைந்த தேனடா?

அன்றுசெண்டில் தேனெடுத்து
வண்டு சேர்த்தது –இன்று
செண்டில்செண்டு தேனெடுத்து
சேர்த்து வைக்குது!

இயற்கையென்னும் காண்டிபத்தை
இரண்டு செய்தவா! –உறவின்
இயல்புமாற்றி இனம்பெருக்கும்
அவலம் ஏனடா?

அன்னையிருவர் ஆனதாலே
அன்பில் திளைக்கிறேன் –அன்பு
தந்தையொருவர் இல்லையென்று
தவித்து நிற்கிறேன்!

எதிர்த்தவீட்டு ஏழைப்பிள்ளை
தந்தை தோளிலே –என்னை
உதயம்செய்த தந்தையிங்கு
அன்னை உருவிலே!

மின்னலொன்று மின்னிமின்னி
மனதில் மோதுதே! –விழி
சன்னல்மீதில் சோகமேகம்
சாரல் போடுதே!

காதுகிள்ளி ஓடும்சேயைத்
தாய் அடிக்கலாம் –பிள்ளை
பாதுகாப்பு கருதிதந்தை
போர்வை நுழையலாம்!

தாயடிக்க தாயைச்சேரும்
தமையன் நானடா –என்றன்
காயம்பட்ட இதயத்திற்குக்
களிம்பு பூசடா!

சிறுவர்க்கூட்டம் வீதியெங்கும்
சிற்றல் ஆடுதே –என்னை
அருவருக்கும் பார்வைபார்க்கும்
அவலம் நேருதே!

விதவிதமாய்ப் பெயரும்சூட்ட
விழையும் அன்னைகாள் –என்றன்
முதலெழுத்து என்னவென்று
முதலில் சொல்லுங்கள்!

இடியாய்என்னுள் இதயத்துடிப்பு
இரங்கத் துடிக்கிறேன் –மரண
விடியல்தேடி வாழ்க்கைத் தீயில்
விழுந்து கிடக்கிறேன்!

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஹைக்கூ!

தந்தையின் ஊதியம் சாம்பலாகிறது
மகனின் விரல்களில்
சிகரெட்!

புகைக்கத் தடை
பலகை எச்சரித்தும்
புகைத்தபடி வாகனங்கள்!

இரவில் தேடிவந்து
இலவச ஊசிகுத்தும்
கொசு!

விழிப்புணர்ச்சியோடிருந்தும்
கருத்தரித்து விடுகிறது
காதல்!

நாட்டின் கணிசமான குழந்தைகளைத்
தத்தெழுத்துக் கொண்டிருக்கிறது
குப்பைத் தொட்டி!

வனமெனும் கற்பினைக் காக்கும்வரை
பெய்யெனப் பெய்யும்
மழை!

மற்றவர்கள் அமர
நின்றுகொண்டிருக்கிறது
நாற்காலி!

மின்னல் தோன்றுமுன்
இடியோசை
கொலுசுச் சத்தம்!

பூமி பொய்த்தும்
வானம் விளைகிறது
விண்மீன்கள்!

உயிர்களின் மெய்களில்
எழுதப்படுகின்ற உயிர்மெய்
விதி!

ஒவ்வொரு காலையிலும்
அவளுக்காக வழிந்தபடி
பனிமலர்!

அகரம் அமுதா

திங்கள், 19 அக்டோபர், 2009

பிரிவுப் படலம்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேளை
அது தொடருமானால்
நம் திருமண பந்தத்தால்
திரிந்து போகலாம்...

கலவியின் முடிவில்
கசந்து போகலாம்...

குடும்பச் சுமைசுமந்து
கூன்விழவும் நேரிடலாம்...

இப்படியாய் அதற்கு
மரணம் சம்பவிக்க
நமக்குள்
பிரிவாற்றாமை நிகழக்கூடும்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேலை
அது தொடருமானால்
அதுவே என்
எழுதப்படாத கவிதைகளுக்கு
முற்றுப் புள்ளியாய்
அமையக்கூடும்...!

அகரம் அமுதா

சனி, 26 செப்டம்பர், 2009

சனி, 5 செப்டம்பர், 2009

அலை! இடி!

அலை!

கடலுக்கும் கரைக்கும்
நடக்கும் திருமணத்தில்
நடைபெறும்
மாலைமாற்று!

இடி!

முகில்மண மக்கள்
இணைகிற வேளை
மின்னல் கட்டில்
முறிகிற ஓசை!

அகரம்.அமுதா

சனி, 29 ஆகஸ்ட், 2009

ஏக்கவெடி!

கண்ணி வெடி,
கையெறி வெடி,
ஏவுகணை, துப்பாக்கி
என
நாளும் விதவிதமாய்
வெடித்துக் கொண்டிருக்கிறார்
தீபாவளிக்கு எனக்கு
வெடிவாங்கித் தராத
அப்பா...

அகரம்.அமுதா

சனி, 22 ஆகஸ்ட், 2009

முருகடியான் அடியான் சொன்னேன்!

வளமான பொருளைத் தேடி
..வழங்குசொற் சிலம்ப மாடி
அளவான தமிழை நாடி
..அழுதகவி என்றும் பாடிக்
குளமேவு குமுதம் போன்ற
..கோலமிகு புகழைச் சேர்த்தும்
உளமேவும் தமிழால் வாழும்
..முருகடியான் பெருமை சொல்வேன்!

நேர்த்தியாய்க் கவிதை தீட்டி
..நெஞ்சத்தை ஆளும் பாட்டன்
கீர்த்திமிகு கவியால் கம்பன்
..கிளர்த்தபுகழ் பாடும் பூட்டன்
வார்த்தகவி வயலில் நன்றாய்
..வண்ணப்பா வார்க்கும் தோட்டன்
ஈர்க்குமிடை முலையர் பாடா(து)
..இறைவனிசை பாடும் ஏட்டன்

பூவான தமிழைக் கொய்து
..புத்துவமை நாரில் நெய்து
நாவாறப் பாடும் கிள்ளை
..ஞாலத்தில் இவர்போல் இல்லை
தேவாரத் தமிழை இன்று
..செய்புலவர் சிலரே யுண்டு
ஆவாரே அவருள் என்றன்
..ஆசானே முதன்மை என்று!

பணிஓய்வு கொள்ளு கின்ற
..பருவமதை அடைந்த போதும்
பிணிஓய்வு கொள்ளத் தோன்றும்
..பேருறுதி பெற்ற நெஞ்சன்
நனிதோயும் தமிழே மூச்சாய்
..நாற்றிசையும் அதுவே பேச்சாய்த்
தனித்தாய்ந்த தமிழில் பாடத்
..தணியாத யாப்பின் தஞ்சன்!

ஒப்பில்லா என்னா சான்கை
..உவந்திரு எழுது கோலை
அப்பெரும் பிரம்மன் கேட்டே
..அடம்பிடிப் தழுது தீர்ப்பான்
முப்போகம் விளைச்சல் காணும்
..முந்நாடு நந்தம் நாடு
எப்போதும் விளைச்சல் காணும்
..என்னாசான் கைப்பொன் னேடு!

பஞ்சினால் ஆன நெஞ்சம்
..பார்வையோ கணினி யொக்கும்
அஞ்சிடா ஆண்மைத் தோற்றம்
..அடுத்தவர்க் கீயும் கைகள்
நெஞ்சுநேர் செல்லும் கால்கள்
..நீசரை ஒடுக்கும் தோள்கள்
மஞ்சுதான் மேனி வண்ணம்
..மாண்புறும் இலர்நல் லெண்ணம்!

மருவிடும் தமிழைக் காக்கும்
..மாண்பதே மாண்பா மென்றே
செருப்புகுந் தாடும் வாளாய்
..சீற்றத்தோ டெழுந்து பொங்கி
அருவியாய்ப் பொழிவார் தம்மை
..அல்லகவி என்பார் யாக்கை
குருதியால் நிறைந்த தாமோ?
..குக்கல்வாய் உமிழ்நீ ரன்றோ?

அன்பினால் அடிக்கக் கூட
..ஆகுமாம் ஆனால் கொஞ்சம்
வம்பினால் அணைக்கக் கூட
..வகைபடாப் பண்பு கொண்ட
நேஞ்சனாம் என்றன் ஆசான்
..நில்வழி நானும் நிற்பேன்
வஞ்சனைப் பேய்கள் என்னை
..வளைப்பினும் சூழ்ச்சிக் கஞ்சேன்!

திமிங்கிலம் என்னா சான்போல்
..தீந்தமிழில் நஞ்சாய் சேரும்
தமிங்கிலம் எதிர்த்து நிற்பேன்
..தமிழில்தான் கவிப டைப்பேன்
அமிழ்தமிழ் தென்றே ஓத
..அமிழ்திலும் தமிழே உண்டாம்
உமிழ்பிற மொழிக்க லப்பை
..முருகடியான் அடியான் சொன்னேன்!

அகரம்.அமுதா

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சத்துடனே வார்த்திட்ட சங்கமமாம் பாவியத்தைப்
பொத்தகமாய்க் கோர்த்துப் புழங்கவிட்டீர் -பித்துடனே

மொய்த்ததனை மோகித்து மும்முரமாய் வாசித்து
மெய்த்தமிழை நான்கண்டேன் மேன்மையெலாம் -மொய்த்தநற்

கற்பனையைக் கண்டேன் கவின்நடையும் தான்கண்டேன்
விற்றொடுத்த அம்பாய் விரைந்துவரும் -சொற்கண்டேன்

நாணமிலார் வாய்பாட்டால் நற்றமிழுக் கேற்படும்
ஊனத்தைப் போக்கும் உரம்கண்டேன் -தேனமுதம்

கொட்டும் அருவியன்றோ கோலக் கவியுன்றன்
பட்டுக் கவியெலாம் பார்த்தறிந்(து) -அட்டியின்றிப்

பக்குவமாய்ச் சொல்கின்றேன் காக்கைகளின் மத்தியிலே
குக்கூ வெனுக்குயில்நீர் குக்களிடை -நற்பிடிநீர்

சேற்றிலொரு செங்கழுநீர் தெண்ணீரில் தேன்குளிநீர்
ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சங்கமம் -பாத்தென்றல் முருகடியான் வெளியிட்ட நூல்களுள் ஒன்று.

அகரம் அமுதா