வெள்ளி, 14 மார்ச், 2014

கைக்கூலி! (வரதட்சிணை)



பெண்ணாய்ப்
பிறந்த யார்க்கும்
தரணியில்
தாலிதான்
வேலி; -அவ்
வேலியின்
வேலையைச் செய்ய
வேண்டுவதேன் கூலி?

கூலி பெற்று
குவலயத்தில்
வேலியின்
வேலையைச் செய்யும்
ஆண்கள்
ஆரும்
ஆண்கள் அல்ல
ஆண்களிற் போலி!


இன்று
ஏந்திழையர் –
வனப்பைப் பார்த்து
வருவதில்லை வரன்;
பணப்பை பார்த்து –மணம்
பண்ணுவதுதான் முறண்


ஒன்றுபோல்
ஒன்று;
இப்படி ஒன்றுதல்
இருவர்க்கும் நன்று!

ஏற்பதிகழ்ச்சி -
என்றாள் ஔவை; மீறி -
ஏற்கின் எவர்க்கும் -
ஏற்படும் கௌவை!

ஞாயிறு, 9 மார்ச், 2014

வாழ்த்துப்பா! வெண்பாவூர் செ. சுந்தரம்

வெண்பா இமயம், நல்லாசிரியர், வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் 'வெண்பாவில் என்பா விருந்து' நூல் படித்ததால் எழுந்த வெண்பாக்கள்

கனியிருக்கக் காயைக் கவர்ந்தீரே! மெய்யாய்
நனிசிறந்த வெண்பா நவில; -தனிவிருந்(து)
இவ்விருந்(து) இருக்க இமையோர் அழைத்திடினும்
அவ்விருந்துங் கொள்ளேன் அணைந்து!

தலைதந்தும் வெண்பாவைத் தாங்கும் இவர்தம்
நிலைகண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்; -முலைதந்த
அன்னையவள் அன்பைப்போல் ஆங்குறு சுந்தரனார்
வெண்பாவிற்(கு) உண்டோ விலை?

கொட்டருவி போலுமிவர் கொஞ்சுதமிழ்ப் பாவருவி
தொட்டுருவிப் போகுதடா தூநெஞ்சை; -அட்டியில்லை
பாடிக் கடன்தீர்க்கப் பாருதித்தார் போலுமதை
நாடிக் கடன்தீர்ப்போம் நாம்!

பல்லா சிரியர்இப் பாரிலுளார்; சுந்தர
நல்லா சிரியர்போல் நாட்டினரா? -வல்லிடை
மெல்லினமாய்த் தோன்றியிம் மேதினியை ஆள்கின்ற
வெல்தமிழ் வெண்பா விருந்து!

செவ்வாய், 4 மார்ச், 2014

விடுதலை நாடகம்!

"விடுவதுபோல் விடுகின்றேன்; விரைந்து வந்து
விடாவண்ணம் தடையிட்டே இடுவாய் தூக்கில்
அடிபெண்ணே!" என்பதுபோல் இங்கொ ருத்தி
அண்மித்த தேர்தலுக்காய் நாட கத்தைச்
சுடச்சுடவே அரங்கேற்று கின்றார்; மூவர்
தூக்கிற்கே தூக்கிட்ட நயன்மை மன்றும்
விடுகவெனும் ஆணைதனை விளப்பி டாமல்
விடுவதெனில் விடுகவென்ற விளைவால் அன்றோ!

தாலிகட்டி அறுத்தவரும்; தாலி தன்னைத்
தன்கழுத்தில் ஏற்காத தனிப்பெண் தானும்
வேலிகட்டி ஆளுகின்ற இந்த நாட்டில்
விடுதலையா வார்எழுவர் என்னும் பேச்சு
போலிஅதில் உண்மையில்லை; தேர்தல் தன்னில்
பூந்தமிழர் இவர்கட்குப் புகட்டிப் பாடம்
காலிகளை அடைப்பதுபோல் தட்டி தன்னில்
கருத்துடனே அடைத்திடுதல் கடமை என்பேன்!