புதன், 29 ஜூலை, 2009

காட்சிக்குக் கவிதை!



விண்மணிகள் கோர்த்ததுபோல் வேட்டின் ஒளிவெள்ளம்
கண்மணிகள் கண்டு களிப்புறும்; -பெண்மணிகள்
பூக்கும் சிரிப்பன்ன பூத்ததுகாண் விண்வெளியில்
ஈர்க்கும் இளநெஞ்சை ஈண்டு!

மின்னல்போற் பூத்து மிளிருமொளி பொன்கூந்தற்
பின்னல்போற் சாலம் புரிந்திடவே -கன்னலைப்போற்
பெய்ஜிங் ஒலிம்பிக் பெருஞ்சுவரைக் காட்சிகளாய்
தொய்வின்றித் தந்திடுதே தான்!
அகரம் அமுதா

வியாழன், 23 ஜூலை, 2009

இறகுப்பந்து விடுதூது!

காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!

ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு!

ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!

தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென் றியம்பு!

இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!
நண்டுறை நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில் உண்டு!

உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்
உளங்கள வாடி உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன் வந்து!


வந்தாரக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க நயந்து!

நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ தூது!

தூதாக நீயுமத் தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?
மெல்லப்போ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து!

விரைந்துநீ போய்யென் விருப்பம் உரைப்பாய்
கரந்தமனத் தாளவளின் காதில் –சுரந்துவரும்
வாயிதழின் சாற்றில் வழுக்கிவரும் சொல்லேயென்
காயத்தை வாழ்விக்கும் காற்று!

சொற்பொருள்:-ஆகம் –உடல்; தியங்குதல் –கலங்குதல்; மிறல் –பெருமை.



அகரம் அமுதா

ஞாயிறு, 19 ஜூலை, 2009

கரிகாலன் ஈற்றெடுப்பு! (1)



காவலாய் வாய்த்த கரிகாலன் மாமறத்தை
ஆவலால் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்த்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான்* தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கரிகாலா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே! தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

எழுந்த கதிர்க்கைய*! ஈழத்தில் ஆடும்
உழுவைக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில்* தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல்* களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு!* (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போல் கண்டார் கவினுலகில்* –பேணார்*
திருவில் செயலைத் திருப்பி அடித்தே
கருவில் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் உலவும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாம் தருவே! உனையிங்(கு)
உமையாள்* கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு* உவந்துலகிற்(கு) ஈந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்*
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்லிசையில் பாடேனோ பார்த்து! (10)

தாவில்லா –குற்றமில்லாத; முருகடியான் –எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்; அரி -சிங்கம்; கதிர்க்கையன் –பிரபாகரன்; உழுவைக்கொடி –புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்; பொருவில் -உவமையில்லாத; இன்னல் –இடுக்கண்; மாண்பு –பெருமை; மாணார் –பகைவர்; கவின் –அழகு; பேணார் –பகைவர்; கதிர்க்கையன் –பிரபாகரன்; உமையாள் –பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி); வேலு –பிரபாகரனின் தந்தையார்; புணரிசார் –கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை.

அகரம் அமுதா

செவ்வாய், 14 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (3)

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு! -குறள்-


முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண் செய்வார் அறிவோ -டகமுமிலார்
யானுற் றுயிருருகி வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையாற் சார்ந்து!

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்! -குறள்-

ஊரார் உரைப்பழி உற்ற உரமாக
நீராகி அன்னைசொல் வேர்பாய -பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்
கடிதோங்கிக் காய்க்குமிந் நோய்!

அகரம் அமுதா

வியாழன், 9 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (2)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து! -குறள்-

நோய்க்கு மருந்தென நூலொர் உரைத்ததெலாம்
ஆய்ந்துவிடின் யாவும் அடுத்தவையே! -நோய்கொடுத்தந்
நோய்க்கு மருந்தென நுண்ணணியாள் மாறுவதைத்
தோய்ந்தறிவில் இட்டுத் துணி!

தோய்ந்த -செறிந்த

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்! -குறள்-

பொய்கைவாய் பூத்துப் பொலியும் அனிச்சமும்
துய்ய நிறவன்னத் தூவியும் -செய்ய
உருமுலை மாதரார் ஒப்பில் அடிக்கு
நெருஞ்சிப் பழத்திற்கு நேர்!

அகரம் அமுதா

புதன், 1 ஜூலை, 2009

பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

திங்கள் உலவும் மாலையிலே!
. . . . .தென்றல் தவழும் சோலையிலே!
கங்குல் வடியும் காலையிலே!
. . . . .கரும்பு பிழிபடும் ஆலையிலே!

ஊர்திகள் செல்லும் சாலையிலே!
. . . . .ஊதியம் கிடைக்கும் வேலையிலே!
பேரிச்சை விளையும் பாலையிலே!
. . . . .பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

அகரம் அமுதா