செவ்வாய், 23 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (5)


காற்றைக் கிழித்துக் கடிவிரைந்த தோட்டாவால்
நேற்றென் கணவர் நிலம்வீழ்ந்தார் –ஆற்றொனாத்
துன்பம் தொலையுமுன் தோள்சுமந்த என்மகனும்
இன்றுநிலம் வீழ்ந்தான் இறந்து.

அகரம் அமுதா

வெள்ளி, 19 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (4)


ஊருக்குச் சோறிட்ட ஒண்டமிழன் வாய்நனைக்க
நீருக்கும் போராட நேர்ந்ததுவே –பாருங்கள்
பாரோரே! பட்டினியாற் சாகுமிவர் காண்;கண்ணில்
நீராறே ஓடும் நிறைந்து.


அகரம் அமுதா

செவ்வாய், 16 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (3)


தெம்பில்லை தேம்பியழத் தெய்வம் துணையென்றே
நம்பினோம் அஃதும் நடக்கவில்லை -எம்மினத்தைச்
சுட்டழிக்கும் சிங்களரைச் சுட்டெரிக்காச் சூரியனே!
சுட்டெரிப்ப தெங்களையேன் சொல்.


அகரம் அமுதா

சனி, 13 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (2)


கொத்தணி குண்டின் கொடுமோசை யாற்காதுஞ்
செத்த(து) அழுதழுதே சிந்தியகண் –வற்றிய(து);
ஒட்டுத் துணிபோல் உயிரும் உடலிதனை
விட்டுப்போ காதோ விரைந்து.
.
எழுந்திடக் கூட இயலாக் கிழவர்
விழுந்ததுபோல் எம்மினமும் வீழ்ந்த(து) –எழும்நாளும்
என்றோ? இனிதுகண் டின்புறும் பாரோரே!
நன்றோ?உம் மௌனம் நவில். (கவிக்கூற்று)


அகரம் அமுதா

செவ்வாய், 9 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (1)


அஞ்சி அழுந்தம்பிக் காறுதல் சொல்லவும்
நெஞ்சில் வலியில்லை; நேற்றுவரைக் –கொஞ்சி
மடியிருத்திக் காத்து மகிழ்ந்தபெற் றோரும்
வெடிவிழச் செத்தனரே வெந்து.
.
கத்தும் ஒலிகேட்கக் காசினிக்குக் காதில்லை;
பொத்தி அழவும் புரியாஇப் பிஞ்சுகளைக்
கொத்தணி குண்டின் கொடுமோசை அச்சுறுத்த
எத்தனையாய் இன்னல் இவர்க்கு! -கவிக்கூற்று-

அகரம் அமுதா

வியாழன், 4 ஜூன், 2009

தமிழ் எங்கள் தமிழ்! (4)

படிக்கா தகலின் பயன்மிகக் குன்றி
விடியா மொழியாய் விடும்!

விடுக அயன்மை; விருப்ப மொழியாய்த்
தொடுக தமிழ்க்குச்செய் தொண்டு!

தொண்டென்ப வேறில்லை தொல்நூல்கள் பாராட்டும்
பண்டு கலைகள் படி!

பிடியாய் முனையைப் பிடிப்பரோ? வாளின்
பிடியாந் தமிழைப் பிடி!

பிடியொன்று மானள்ளும் பெற்றிபோல் நாடிப்
படிதமிழைக் கண்ட படி!

படியார் பயன்படார் பைந்தமிழை ஊன்றிப்
படியார் இனத்துட் பதர்!

பதர்மொழி கற்கப் பறப்பார் மனதைப்
புதராக்கித் தூர்ப்பார் புழு!

புழுவென்றால் பொங்குவர் பூந்தமிழைக் கற்க
எழுகென்றால் ஏற்கார் இழுக்கு!

இழுப்பாய் தமிழ்த்தேரை இந்நிலம் வாழ்த்து
மிழற்றிக் கவிபாடு மே!

மேடுபோய் முட்டி மிகமிரண்டுப் பின்வாங்கும்
மாடுபோல் ஆகாய் மதி!


அகரம் அமுதா