திங்கள், 31 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (12)



நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண –உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (111)


இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (112)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (113)


நன்றாக வாழ்ந்தகுடி நாடற்ற சிங்களர்கள்
சென்றங்கு சேர்ந்ததனால் சீரிழந்தார் –இன்றளவும்
கன்னித் தமிழினம் கண்ணீர் வடிக்கிறதே!
எண்ணிமுன் னேறும்நாள் என்று? (114)

எண்ணித் துணிந்தாய்! எடுத்தடி வைத்துவிட்டாய்!
திண்ணிய போர்மரபைத் தேர்ந்தீழ –மண்ணில்
கடற்படையும் வான்படையும் கட்டி எழுப்பித்
தடையகற்றி ஆண்டுவந் தாய்! (115)

தாயானாய் தந்தையும் தானானாய் மூத்தோர்க்குச்
சேயானாய்; பாவலர்க்குப் பாப்பொருள் –நீயானாய்;
பட்டினி பஞ்சத்தைப் பார்த்தகற்றிப் பார்புகழ
விட்டினி(து) ஆண்டாய் விழைந்து! (116)

விழைந்து* கொடுத்திடினும் வெல்ஈழ நாட்டில்
குழைந்து பெறுவார் இலரே! –உழைத்துப்
பெறுவார் பொருளன்றிப் பின்சென்றால் ஐயம்*
தருவார் எனவிழையா தார்! (117)

விழைதல் –விரும்புதல்; ஐயம் –பிச்சை.


தாங்கிப் பிடிக்க தலைவன்நீ உள்ளதனால்
ஏங்கித் தவிப்பார் எவருமில்லை; -ஆங்கெவரும்
ஐயம் இடுவதில்லை; அண்டிப் பெறுவதில்லை;
கையிரண்டை நம்பியதால் காண்! (118)

கண்டு வியந்தேற்றும் காசுள்ள நாடுகளும்
கொண்டால் இவன்போல் கொளவேண்டும் –மன்னனென
ஏற்றும் பலஇனமும், ஏக்கமுறும் சிங்களமும்
மாற்றம் நிகழ்த்தியநீ மன்!* (119)

மன் –மன்னன்.

மன்னே! மறனே! மருள்நீக்கும் மாமதியே!
அன்னே!* எமைக்காத்(து) அருள்வோனே! –உன்னால்
அறனும், அறிவும், அருள்மிகும் அன்பும்,
மறனும் வளர்த்தோம் மனத்து! (120)

அன்னே –அத்தகையவனே.
அகரம் அமுதா

வெள்ளி, 28 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (11)


உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (101)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (102)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்.

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை ‘நார்வே’ அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (103)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (104)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (105)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்*’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (106)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக் கொள்கின்ற சிங்களர்.

இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (107)

எடுத்தகுறிக் கோள்வழி ஏகா(து) அதனைக்
கெடுத்த அருளனில் கேடால் –விடுதலைப்போர்
நட்டாற்றில் தத்தளிக்கும் நாவாயைப் போலாச்சே!
எட்டாக் கனியாச்சே ஏன்? (108)

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (109)

நன்முறையில் வாழாத நாடற்ற சிங்களரைத்
தன்வலியால் வெல்லும் தகையாளா! -உன்னால்
நிலைத்திட்ட இன்ப நிறைவாலெந் நாளும்
நலங்கண்டோம் இல்லை நலிவு! (110)

அகரம் அமுதா

செவ்வாய், 25 மே, 2010

சங்கத் தமிழனைத்தும் தா!


கரையென்னும் மன்னவனைக் கட்டி அணைக்கத்
திரையென்னும் கைநீட்டித் தீதில் –நுரையென்னும்

முத்தம் இடுகின்ற மூவாக் கடலே!நல்
முத்தம் பிறக்கும் முதலிடமே! –மொத்தஉடல்

உப்பாய் விளங்கும் உவரியுனை நாடியவர்க்(கு)
உப்பிடும் வள்ளலே! ஓங்குமழைக்(கு) –அப்பனே!

நீரலையைப் பேரலையாய் நீட்டி நிலமழிக்கப்
பாரினிலே வாய்த்த பகையரசே! –நேரெதிர்த்(து)

அந்நாளில் எங்கள் அருங்குமரிக் கண்டத்தை
எந்நாளும் தோன்றா இடரலை –தன்னால்

அழித்துக் களிப்புற்(று) அருந்தமிழ் நூல்கள்
செழித்த சுவடழித்துச் சென்ற(து) –எழிலாமோ?

பண்ணுக் கினியமொழி பால்மழலைக் கேற்றமொழி
எண்ண உவகைதரும் இன்பமொழி –மண்ணுலகில்

முன்தோன்றி மூத்தமொழி முச்சங்கம் கண்டமொழி
தன்னேரில் லாத தமிழ்மொழியாம் –நன்மொழியின்

எண்ணிறந்த ஏடழித்(து) ஏதும் அறியாத
பெண்ணெனவே வீற்றிருத்தல் பேறாமோ? –கண்ணினிய

எங்கள் தமிழழித்த இன்கடலே! நீயழித்த
சங்கத் தமிழனைத்தும் தா!

அகரம்.அமுதா

வெள்ளி, 21 மே, 2010

சிலையோ? கொடியோ?


சிலையோ? கொடியோ? செழுமாங் கனியோ?
கலைமான் உருவோ? கடல்மீன் வகையோ?
இலையோ எனநான் வினவும் இடைமேல்
மலையோ? மலரோ? மறைத்தாய் அணங்கே!

நாட்டைப் பிடித்து நலிக்கும் வறுமைக்
கோட்டின் பிடியில் கொடியாம் இடையே
மாட்டி உழல மணிமார் பகமோ
மேட்டுக் குடிபோல் மிகவாழ் கிறதே!

அடிமேல் அடிவைத் தகலும் பொழுதிற்
கொடிமேல் கனிகள் குலுங்கும் அழகில்
அடியே! எனைநான் மறந்தேன் இழந்தேன்
பொடிமண் விழுந்த புழுவாய் நெலிந்தேன்

இருநீள் விழியால் இவன்தோள் அளக்கும்
அருமாங் கனியே! அழகின் அழகே!
தருவாய் உனையென் தளிர்க்கை சேர்ப்பாய்
கருவாய் உனையென் கவியில் வார்ப்பாய்!


அகரம் அமுதா

ஞாயிறு, 16 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (10)



நன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்
வன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி
பொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண
வெங்கொடுமை தீர்த்தாய் விரைந்து! (91)

வன்புணர்ச்சி –கற்பழிப்பு.

விரிகடல் பேரலை விண்ணில் எழுந்து
கரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்
அகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்
முகங்கொடுத்து நின்றாய் முனைந்து! (92)

திரை –அலை.

முனைநாள் குமரி முழுதும் அழித்தும்
தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (93)

பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (94)

பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.

உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (95)

குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (96)

ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (97)

ஆழி –கடல்; மேழி –ஏரு.

முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (98)

மாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற புனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.

சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (98)

சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (100)

அகரம்.அமுதா

திங்கள், 3 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (9)



நலிந்த இனத்தின் நயன்மைதனைப் பேண
வலிந்தபோர் செய்வோர் வருந்த -களத்தில்
சுழன்றாடும் தோளா சுமைதாங்கி ஆனாய்
எழுமீழம் உன்னால் இனிது! (81)

இனிப்போர் அதுவே எமைக்காக்கும் என்று
நனிநுண் அறிவால் நவின்றாய் -தினித்தார்
நமையந் நிலைக்கந்த நஞ்சின் கொடியார்
நிமைப்போதும் சூழ்ச்சிவழி நின்று! (82)

நின்போலே காடையரை நேரெதிர்க்கக் கற்றவர்யார்?
முன்னாள் தமிழ்மறத்தை முன்னெடுக்க -உன்போலே
கோனொருவன் உண்டோ குவலயத்தே? உன்றனையே
நானிலமும் வாழ்த்தும் நனி! (83)

நன்கெம்மைக் காத்து நலஞ்சேர்க்கும் நாயகனே
பொன்கொம்பில் பூத்த புதுமலரே! -என்கண்ணில்
வந்துலவும் அம்கனவே! மள்ளன் இவனென்றே
இந்தவுல கேற்றுமுனை யே! (84)

ஏம்பல் எமக்களிக்கும் எல்லாளா! மன்றல்சூழ்
ஆம்பல் மலரொத்த அம்நகையோய்! -சாம்பல்
பொடிபூ சிறைவனெனப் போய்நஞ்சை ஏற்ற
படையுன் படையென்னும் பார்! (85)

பாரில் புலிப்படைபோல் பாராளும் மாப்படையை
யாரிங்கே நாட்டியவர் யானறியேன் -சீரிளங்கும்
ஆளர் படையும் அணங்கையர் தம்படையும்
ஆளப் படைத்தநீ ஆண்! (86)

ஆண்பெண் இருபாலர் ஆங்குன் படைப்பிரிவில்
மாண்புடனே சேர்ந்தீழ மண்காத்தார் -யாண்டும்
பழகும் வகையும் பழுதில்லாக் கற்பும்
அழகுப் படையின் அணி! (87)

அணிந்தாயே கற்பதனை ஆன்ற அணியாய்
பணிந்தோமே உன்தாள்கள் பாராய்! -இணைந்தோமே
உன்னணியில் இன்றமிழர் ஓர்ந்தாங் கெமைக்காத்த
பின்னணியில் நீகாண் பெரிது! (88)

பெரிதோ இமயம்? பெரியோயுன் போலே
அரிதோ அமிழ்தும்? அழகுக் -கரிகாலா!
நீழற் குடையே! நெடுந்தோளா! நீயன்றோ
ஈழத்தை ஆளும் அரசு! (89)

அரிய பிறப்பே! அரசுக் கரசே!
கரிய நிறக்காலா! கற்பிற் -பெரியவளாம்
கண்ணகியின் ஆண்பாலாய்க் கண்முன்னே நிற்பவனே!
நண்ணுநா! நீவாழ்க நன்கு! (90)

அகரம் அமுதா