சனி, 5 ஜூலை, 2008

வேரை மறந்த விழுது!

பொற்றா மரையே! புகழ்நிலவே! பூம்பனியே!
கற்றார் தமைவிரும்பும் காதலியே! –நற்றமிழே!
சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான்
வேரை மறந்த விழுது!

உன்றனுக் கின்பணி ஓயாமல் செய்வதற்கே
தந்தைதாய் காக்கும் கடமையினும் -முந்திடுவேன்
வந்தோர்போ வோர்வேர் மறந்த விழுதென
நிந்திப்பி னும்பொறுப்பேன் நெஞ்சு!


அகரம்.அமுதா

10 கருத்துகள்:

  1. புரிய கடினமாக இருக்கிறது... கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்...

    பதிலளிநீக்கு
  2. விக்னேசுவரன் அவர்களே! என் வெண்பாக்கள் புரியவில்லை என்ற முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.

    முதல் பாடலின் பொருள் :- கற்றோரை ஆதரித்து அவர் நாவிலும் எழுத்திலும் நடம்புரியும் செந்தமிழே! உன்னை என் வெண்பாக்களில் சந்ததமும் தீட்டாமல் இருப்பேனானால் நான் வேரை மறந்த விழுதாவேன் என்பதாம். வேரை மறந்த விழுது என்பதன் பொருள் தமிழை ஓர் ஆலமரமாகவும் அவ்வாலமரத்தின் விழுதாக என்னையும் உவமை படுத்தியதாகும். விழுதென்றால் வேர் அற்றுப்போகிற நாட்களில் ஆலமரம் விழுந்துவிடாது தாங்கிப்பிடிக்க வேண்டுமல்லவா? தாங்கிப் பிடிக்காத விழுது இருந்தென்ன இறந்தன்ன? நான் விழுதாக இருந்து தமிழே உன்னைத் தாங்கிப் பிடிப்பேன் என்பதாகும்.

    இரண்டாம் பாடலின் பொருள்:- என் தந்தைதாயைக் காப்பாற்றும் கடமையை மறந்து உன்னைக் காப்பதே என் கோளாகக்கொண்டிருப்பேன். இதனால் ஊரார் என்னைப்பார்த்துப் பெற்றோரைக் காவா பிள்ளை என வசைபாடிடினும் பொருத்துக் கொள்வேன். என்று பொருள்.

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு அர்த்தங்களா? அருமை... இப்படி ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் கொடுத்தால் எங்களை போன்ற புரித்துக் கொள்ள முடியாதவர்கள் புரிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  4. இதுவொன்றும் பெரிய விடயமல்ல. கூர்ந்து கவனித்தால் எளிதில் விளங்கிவிடும். நன்றி

    பதிலளிநீக்கு
  5. அழகான விளக்கம். எனக்கு எப்போதுமே மரபுக் கவிதையென்றால் அலர்ஜி... ஆனால் உங்களுடைய வெண்பாவும் அதன் விளக்கமும் அருமை...

    பதிலளிநீக்கு
  6. அமுதா இரண்டு பாடலுமே அருமையப்பா. கலக்கு. தமிழும் காத்து நில், தமிழை சுவைக்க உனையீன்ற தாய்தந்தையரையும் காத்து நில்.

    பதிலளிநீக்கு
  7. காக்கத்தான் வேண்டும் கருசுமந்தோ ரைத்தமிழைத்
    தேக்கத்தான் வேண்டும் சிந்தைதனில் -ஆக்கத்தான்
    வேண்டும் கவிதை; வியந்துலகம் கேட்கத்தான்
    வேண்டும் செவியால் விரைந்து!

    பதிலளிநீக்கு