புதன், 29 டிசம்பர், 2010

திங்கள், 27 டிசம்பர், 2010

சனி, 25 டிசம்பர், 2010

புதன், 22 டிசம்பர், 2010

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

வியாழன், 16 டிசம்பர், 2010

திங்கள், 13 டிசம்பர், 2010

சனி, 11 டிசம்பர், 2010

வெள்ளி, 19 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1994)

எம்மக்கள் விடுதலையே பெற்றுமதிப் பொடும்மேன்மை
இயையப் பெற்றும்
செம்மாந்து வாழ்ந்திடவே வேண்டுமெனும் குறிக்கோளைத்
தேர்ந்து பற்றித்
தம்வாழ்வை தம்முயிரைத் தந்தீகம் செய்திட்ட
தகைஞர் தம்மை
எம்நெஞ்சக் கோயிலில்வைத் தெழில்வணக்கம் செய்துய்த*
நாளாம் இந்நாள்!

எமதுவிடு தலைக்காக மதிப்பிடுதற் கொல்லாத
விலைகொ டுத்தோம்;
அமர்க்களம் ஆக்கப்பட் டெம்மண்ணில் குருதிநிறை
ஆறு பாயும்;
எமதரும் வீரரிற்றை நாளினிலும் விடுதலைக்காய்
இறப்பை ஏற்றார்;
எமதுவீ ரர்நினைவுத் தூண்களுமே விடுதலையை
வேண்டி நிற்கும்!

புதியதொரு அணுகுமுறை திட்டத்தோ டாட்சிசெயப்
போந்தார் அந்தப்
புதியவராம் சந்திரிகா அரசமைதிக் கைநீட்ட
போந்து பற்றி
எதிரிகட்கு வன்கட்டுப் பாடெதையும் விதித்திடா
தியைந்து பேச்சின்
முதற்கட்டத் தெமதீழ மக்களுறும் இடர்களுக்கே
முதன்மை தந்தோம்!

சிங்களர்தம் படையமைதி வழியிலெம் சிக்கலினைத்
தீர்க்க நத்தா*
தெங்களின்மேல் நடுவுநிலை அற்றதொரு போர்தொடுக்க
ஏகும் போக்கை
அங்கணுள சந்திரிகா அரசும்கை விட்டதுவாய்
அறிந்தோ மில்லை;
தங்க(ள்)படை நிலைக்கெதிராய்ச் செயல்படவும் விரும்பிடுவ
தாகக் காணோம்!

அரசமைதி வேண்டுவதில் அக்கறையாய் இருக்குமெனில்
அவ்வ ழித்தன்
முரசறையும் படையினையும் முடுக்கிவிடின் எளிதாகும்;
மூளும் போரை
நிறுத்துவதும், பொருள்தடையை நீக்குவதும், நீர்வழியை
நிலத்தில் சாலை
திறத்தலொடு மீள்குடிவைப் பிவையனைத்தும் படையிருப்பைப்
பொருத்த தேயாம்!

அமைதிக்குத் தடையாக அமைந்தவர்கள் நாமில்லை;
அமைதி வாசல்
தமையும்நாம் மூடவில்லை; எம்மக்கள் அன்றாடம்
சார்ந்து நிற்கும்
குமை*களைய விரும்புகிறோம்; எம்மதிப்பைப் பெறவேண்டின்
கொடுங்கோ லாளர்
அமைதியுடன் இயல்புநிலை எம்நாட்டைச் சூழ்ந்திடுமா
றமைதல் வேண்டும்!

நீண்டதொரு குருதிப்போர் கண்டுவரும் எம்மியக்கம்
நேர்ந்த போரை
யாண்டுமொரு உயர்மட்டத் தெடுத்துசெலும் தன்னாட்சிக்
கான மிக்க
நீண்டதொரு கட்டமைப்பை நிறுவியுளோம்; வலிமைமிகு
கடைக்கால் நின்றோம்;
ஈண்டெமது* கடைக்காலை இயைத்தவரைப் போச்சாவா*
திருத்தல் வேண்டும்!

ஆற்றலுடை படையாய்நாம் அமைந்ததினால் சிங்களர்தம்
அரசு பேச்சுக்
கேற்றதொரு ஆர்வத்தைக் காட்டுகிற தருந்தமிழர்
இன்னல் தீர்க்க
மாற்றமிலா அமைதிவழி தீர்வுதனை வைக்குமெனில்
மருங்கு நிற்போம்;
ஏற்றமுறு தன்னாட்சிக் கட்டமைப்பை முன்வைக்கின்
ஏற்றுக் கொள்வோம்!

சலுகைகளைப் பெறுமெளிய குழுவல்ல; விடுதலையைச்
சமைக்கு மெங்கள்
இலக்கெமது தாய்மண்ணில் மதிப்பமைதி விடுதலையும்
இயையப் பெற்றுக்
கலக்கமற வாழ்வதுவே; எம்விருப்பை நிறைவேற்றும்
கவினார் தீர்வே
நிலைக்குமொரு தீர்வாகும்; என்றுமொரு ஒப்புரவை
நிலைநி றுத்தும்!

ஒப்புரவாம் தீர்வதனை உற்றிடவே ஓரினமாய்
ஒருதே சத்தை
எப்பொழுதும் வேண்டிநெகிழ் வற்றுறுதி பூண்டவராய்
இருத்தல் வேண்டும்;
ஒப்பிலதாம் இந்நாளில் உயிரீகர் உறங்குமிடம்
ஒளியை ஏற்றி
அப்பெருமீ கர்குறிக்கோட் குப்பரிசாய் உறுதியிதை
அகத்தில் ஏற்போம்!

துய்தம் –புனிதம்; நத்தாது –விரும்பாது; குமை –துன்பம்; ஈண்டு –இவ்விடம்; பொச்சாவாது -மறவாது.

அகரம் அமுதன்

சனி, 13 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1993)

உரமிக்க போர்கள்செய் துடைத்தடிமைத் தளையகற்றி
உயிர்த்த நாட்டில்
பொருள்மிக்க விடுதலையைப் புரிந்தவரைப் போற்றுகிறோம்;
பூந்தாய் மண்ணின்
உரிமையெமக் குரியதென ஊருலகிற் குணர்த்தினரெம்
ஒப்பில் லாத
வரலாற்றுச் சிற்பிகளாம் மாவீரர் தம்நினைவால்
மலர்ந்த திந்நாள்!

அழுதுபுலம் பிடுதற்கோ அண்டிஅள றுறுதற்கோ
அல்ல இந்நாள்
எழிலுறபுத் துயிர்க்கும்நாள்; ஏற்புறுதி யால்தேச
எழுச்சி நாளாம்!
தழுவியதோர் உயர்ந்தகுறிக் கோளுக்காய்த் தன்னுயிரைத்
தந்தார் ஈகம்
தொழத்தகுமச் செயல்மறவர் தூயமறை வெளியதெனச்
சொல்வா ருண்டோ?

தீதறுநல் மாமறவர் ஈகமது விடுதலையின்
செப்ப ஒல்லா
ஆதனிக விருப்பத்தை அறைகிறது; வேட்கையுடன்
அன்னை மண்ணின்
காதலுறு விடுதலைக்காய்க் களங்கண்டே ஈகியராய்க்
கால மானார்
ஓதமுறும் ஈகைவிடு தலைவேள்வி தன்னிலெழும்
ஒளியு மாகும்!

நம்தாய்மண் தனிலுறங்கும் நல்வீரர் கல்லறைகள்
நன்கொ லிக்கும்
செம்மாந்த விடுதலையின் செம்பாடல் இங்கெமது
செருக்க ளத்தில்
அம்மாப்போ ராட்டத்தின் அரிதான இயங்குதிறன்
ஆக மாறி
எம்மாறா யிரமீகர் உறுதியுரி மையிவற்றால்
எழுந்த தன்றே!

நீண்டபெரும் போராட்டில் நேர்ந்தபல சிக்கல்கள்
நீளி டுக்கண்
யாண்டுமெமைத் தொடர்ந்தாலும் யாமெமது நிலைப்பாட்டில்
வழுவா நிற்போம்
ஈண்டெமது சிக்கல்கட் கோர்தீர்வாய் இறையாண்மை
மிக்க ஈழம்
வேண்டுமெனும் எம்முறுதி உலகிற்கும் பகைவர்க்கும்
விளங்கும் நன்றே!

தனியீழம் பெறமக்கள் தம்மாணை பெற்றபல
தமிழர் கட்சி,
‘இனிதீழம் தோற்றமுற எடுத்திடுவோம் கருவி’யென
இயம்பிச் சென்ற
நனிகுழுக்கள் இவையிரண்டும் இரண்டகமே இழைத்துளன;
நாமே ஏற்ற
தனியீழக் குறிக்கோளைத் தடம்பிறழா துறுதியுடன்
தாங்கி நின்றோம்!

தமிழீழக் குறிக்கோளைச் சார்வதிலே வெற்பனைய
தடைகள் உண்டு;
நமதுகுறிக் கோட்கெதிராய் நடக்கின்ற வலிகளையும்
நாம றிந்தோம்;
எமைச்சூழ்ந்த மண்டலத்து வல்லரசின் நுண்ணுத்தி
யாலே தோன்றும்
சுமைமிக்க குறுக்கீட்டைத் துணிந்தெதிர்த்தோம்; விளிவினிலும்
சுணங்கா நின்றோம்!

அனைத்துலகின் கொள்கைக்குள் அடங்கியதே எமதுவிழை(வு)
அதுவு மன்றித்
துணையெனவே நயன்மையெங்கள் மருங்கிருக்க உறுதியுடன்
தொடர்ந்தோம் போரை
எனைத்துமொரு தன்னுரிமை தனிநாடு பெறுந்தகுதி
எமக்கு முண்டாம்
அணைந்துறுதிப் பற்றதனை அகமேற்றால் விடுதலையை
அடைய ஒல்லும்!

மாந்தநெறி எனுமச்சில் மண்ணுலகம் சுழலவில்லை;
மக்கள் மேன்மை
சார்ந்தஅற நெறி,உரிமை பேணவில்லை; தம்நயன்மை
சாற்றி முன்வைத்
தேந்திடுவர்; பொருள்,வணிகம் இவையுலகின் ஒழுங்குறவை
இயற்ற வாய்மை
சார்ந்தஎங்கள் நன்னெறியைத் தரணியுடன் பட்டேற்கத்
தயங்கு மன்றே!

எமக்கிணக்க மானதொரு நற்சூழல் நானிலத்தில்
எழலாம்; அன்று
நமதினிய நயன்*மிக்க குறிக்கோளை நானிலமும்
நத்தக் கூடும்;
நமதுபெரும் போராட்டம் உண்மையிலிவ் உலகத்தை
நம்பி இல்லை;
எமதுவெற்றி எம்முறுதி முயற்சிவலி இவற்றைச்சார்ந்
திருக்கக் காண்பீர்!

அறநெறிசார் நயன்மையொன்றே வெற்றிதரா; வலிமைமிகும்
அருங்கோட் பாட்டில்
உறுதிமிக உடையவராய் உயிர்குடிக்கும் போர்த்தொழிலில்
உறப்பு* மிக்க
திறமைமிகப் பெற்றவராய்த் திகழ்ந்திடவும் வேண்டும்நம்
தேசம் தன்னின்
முறைமையுறும் ஒத்தேற்புக் காய்நாமே போராடல்
முறைமை ஆகும்!

சிங்களரின் இனப்பகைமை அரசுநயன் மைவழியில்
சிக்க லைத்தீர்த்
திங்கணுறும்* எனவெதிர்பார்த் திடவொல்லா; வன்முறையின்
திசையில் சென்றே
இங்குள்ள சிக்கலினை எதிர்கொள்ளப் பார்க்கின்ற
திரக்க மற்ற
தங்க(ள்)படை அணுகுமுறை யால்நாற்பான் ஆண்டாயெம்
சிக்கல் நீளும்!

ஆதனிகம் –ஆன்மீகம்; ஓதம் –பெருமை;நுண்ணுத்தி –தந்திரம்; சுணங்காது –சோராது; விழைவு –விருப்பம்; எனைத்தும் –முழுதும்; நயன் –நீதி; உறப்பு –செறிவு; இங்கண் –இவ்விடம்.

அகரம் அமுதன்

வியாழன், 4 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1992)

இன்றுமா வீரர் நாளாம்;
இத்தரை வரலாற் றில்நேர்
ஒன்றிலாப் பாவி யம்மாய்
உயர்ந்துநம் விடுத லைப்போர்
நின்றிடச் செய்த வீரர்
நெடுதுயில் கொள்வ தெண்ணி
நன்றுநாம் நெஞ்சில் வைத்து
நற்றொழு கைசெய் நாளே!

தன்னின மீட்சி ஒன்றே
தன்குறிக் கோளாய்க் கொண்டு
தன்னுயிர் மேல தாக
தழுவிய குறிக்கோ ளுக்காய்
இன்னுயிர் ஈந்தார் கொள்கை
இளவல்கள்; விடுத லையே
மன்னுநற் பேறாம்; மாந்த
வளர்ச்சியும் பொருளும் அஃதே!

இத்தரை பிறந்த நாளாய்
எழுந்தபோர் புரட்சி யெல்லாம்
தத்தமை அடிமை கொண்ட
தளைகளை உடைக்க வன்றோ!
வைத்தழி செய்தும், தாழ்த்தி,
வகையுற சுரண்டி வாழ்ந்தும்
மெத்தவே எதிரி யாகி
மனிதனை மனிதன் தின்றான்!

விரிந்தயிப் பார்மி சைத்தன்
விடுதலை அற்று வாழ்வோர்
இருக்கிற நாள்வ ரைக்கும்
இருந்திடும் விடுத லைப்போர்;
ஒருவரின் விடுத லையை
ஒழித்திட ஒருவர் ஏகின்
அறங்கெடும்; இனம்கு லங்கள்
அரும்பிடும்; மோதல் மூளும்!

தன்னுரி மையி ழந்து
தரணியில் தவிக்கும் மக்கள்
தன்னிலோர் பிரிவாம் நாமும்
தகைந்து*போ ராடு கின்றோம்!
இன்றுபோ ராடு கின்ற
ஏனையோர் போரின் மேலாய்
ஒன்றிநம் போர்க்கு ரல்பா
ரொலித்திடல் கண்டு கொள்வீர்!

எங்கணும் காண ஒல்லா
ஈகமும் ஈவும் செய்த
எங்களின் வீரர்க் கீடாய்
இங்காரு மில்லை; வீரம்
பொங்கிடும் பாவி யத்தைப்
புரிந்தனர்; ஒடுக்கப் பட்டோர்க்
கெங்களின் போராட் டம்மே
ஈடுகாட் டான தன்றே!

இறப்பினுக் கஞ்சி டாத
எழில்மிகும் உறுதிப் பாடும்
மறவ(ர்)தம் வலியும் எங்கள்
மற்போர்க்கு வளமை சேர்க்கும்
உறப்பிலாப் பகைவர் போல
உதவிகேட் டலையாப் போக்கால்
அறக்கழி வாளர் கூடி
அடக்கியும் நிமிர்ந்து நின்றோம்!

எமைநெருக் கடிகள் சூழ
எம்விடு தலைப்போர் மிக்க
அமைவுறும் இக்கட் டுக்கள்
அடைந்தெதிர் நோக்கி நிற்கும்;
அமைதியின் கதவ டைத்தே
அடுகளத் தேகும் மாணார்
தமிழினத் துன்பம் தீர்க்கத்
தகவுடன் தீர்வு காணார்!

என்றுமில் லாத போரை
எடுத்தனர்; உக்கப் போரை
நன்றுநாம் எதிர்கொண் டாடி
நலித்தனம்; பேரி ழப்பை
என்றுமில் லாவ கையில்
எதிரிகண் டானெம் மண்ணில்
என்றுமே வன்க வர்புக்
கிடமிலை உணர்த்தி விட்டோம்!

போரினால் பொருளி ழந்தும்
பெரும்நெருக் கடிக ளுற்றும்
நேரிலாப் புலிப்ப டைமுன்
நின்றிட ஒல்லாப் போழ்தும்
சீரிலாப் படைந டத்தித்
திருவிலா வன்க வர்பே
தீர்வெனச் சிங்க ளர்கள்
தீவிரம் காட்டு கின்றார்!

கருவிகொண் டெமைய டக்கக்
கருதிடும் பகைவர் போக்கில்
ஒருசிறு மாற்ற மில்லை;
உணர்ந்தினப் பகையாம் சேற்றில்
இருந்திடும் அவரால் எம்மின்
இச்சையை நிறைவு செய்ய
ஒருதீர்வுந் தோன்றா தென்ற
உண்மைநாம் உணர்தல் வேண்டும்!

நாற்பதாண் டிற்கும் மேலாய்
நடக்குமெம் விடுத லைப்போர்
ஏற்புறும் அமைதிப் போராய்
எழுந்துபின் ஆய்தப் போராய்
மாற்றமுற் றெத்த னையோ
வழிதனில் நயன்மை கேட்டும்
மாற்றலர்க் கெம்கு ரல்தம்
மனந்தொட்ட தாகக் காணோம்!

காலமும் எமது மக்கள்
கண்டபே ரவலத் தொடு
மாளவும் அழிவு மாக
வருத்ததின் சுமையால் மக்கள்
சாலமும் குருதி சிந்திச்
சாகிறார்; இவையெல் லாமும்
ஆளுமச் சிங்க ளர்தம்
அகந்தொட்ட தாகக் காணோம்!

ஈவிரக் கமிலான்; போரை
ஏற்பவன்; எமது நாட்டின்
ஆவியைப் பறித்து மக்கள்
அழிவினைக் குறிக்கோ ளாக்கிக்
கூவிடும் பகைவர் நெஞ்சம்
குறைகளைந் தெமக்கு நீதி
மேவிடக் காண்பா ரென்று
மிழற்றிட ஒல்லா தன்றே!

இந்நிலை யில்நாம் போரை
ஏற்பதைத் தவிற வேறு
நன்னிலை கண்டோ மில்லை;
நடைபெறும் போரின் போதும்
திண்ணிய அமைதி வாசல்
திறக்கிறோம்; அமைதி தன்னை
உன்னியே எதிரி வந்தால்
உறவுற அணிய மாவோம்!

வன்முறை மீது காதல்
வளர்த்தனர் எதிரி; என்றும்
நன்முறை அற்ற போரை
நத்தினர் படையெம் வாயில்
நின்றுபோர் முரசு கொட்டி
நிலத்திலெம் மினம ழிக்கத்
தன்னுயிர், குருதி சிந்தத்
தகையிலார் அணிய மானார்!

நெருக்கடிச் சூழ லில்நம்
நிலத்தினை இனத்தைக் காக்கக்
குருதியைச் சிந்தி வென்று
கொள்கிற துய்த மான
உரிமையே விடுத லையாம்;
ஓர்பொருள் அல்ல அஃதை
அருவிலை பேசு தற்கே!
அயர்வுறா தெதிர்த்து நிற்போம்!

பேரிடர் உற்றும்; நாளும்
பெருநெருக் கடிகள் கண்டும்
நீரெனக் குருதி சிந்தி
நிற்குமெம் மக்க ளாலும்
வீரரின் ஈகத் தாலும்
விதிர்த்திடா தெதிர்த்து நின்றோம்;
பாரினில் வரலா றேயெம்
பயனுறு வழிகாட் டாகும்!

வீரரின் குருதி யாலே
விளைந்தயிவ் விடுத லைப்போர்
சீரெலாம் உற்றும் துய்தம்
சேர்த்துமீ கத்தால் தேசம்
பேருரு வாக்கம் பெற்றும்
பெட்புடை உறுதி பெற்றும்
தேரிடச் செய்தார் அந்தச்
சிற்பியர் வணங்கு வோமே!

தகைந்து –துணிந்து; ஈகம் –தியாகம்; ஈவு –அர்ப்பணிப்பு; ஈடுகாட்டு –உதாரணம்; உக்கம் –உக்கிரம்; மாற்றலர் –பகைவர்; சாலவும் –மிகவும்; மிழற்றுதல் –சொல்லுதல்; ஒல்லாது –முடியாது; அருவிலை –பேரம்; துய்தம் –புனிதம்.

அகரம் அமுதன்

புதன், 27 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1991)

இந்தநாள் நமது வீரர்
இன்னுயிர் ஈகம் செய்து
நந்தமிழ் இனத்தைக் காக்க
நடுகற்க ளான தெண்ணிப்
புந்தியில் அவரை வைத்துப்
போற்றுவோம்! குறிக்கோ ளுக்காய்த்
தந்தனர் உயிரை அந்தத்
தகைஞரை வணங்கச் செய்வோம்!

வியர்வை,கண் ணீர்செந் நீரால்
விளைந்தயிவ் விடுத லைப்போர்
வியத்தகு குறிக்கோள் வாழ்வில்
மிகுப்பல இடுக்கண் துய்த்தும்
அயர்வுறா வீரர் கண்ட
அம்கன விவையெல் லாமும்
இயல்புறு வெளிப்பா டாக
இயைந்ததால் பிறந்த தன்றோ?

செருக்களில் எம்போல் பாரில்
தேர்வுகள்* எதிர்பா ராத
திருப்பங்கள் நிறைந்த போரைத்
திறமுடன் கண்டா ருண்டோ?
நெருக்கடி நிறைந்த தாயும்
நீண்டதும் கடின மாயும்
இருக்கிற செலவை* எங்கள்
இயக்கமே தொடரக் காண்பீர்!

ஏற்பிலா இரண்ட கத்தோ
டேமாற்றம் எம்மைச் சூழக்
கூற்றெனப் பகைவர் பாயும்
கொலைக்களம் ஒருபு றம்மும்
வேற்றவர் வன்க வர்பை
விரட்டிட மறுபு றம்மும்
ஆற்றொணா அழிவின் எல்லை
அடைந்துமே மீட்சி கண்டோம்!

அப்பெரும் புயற்கு வெற்பாய்
அசைவுறா நெஞ்சத் திட்பம்
மெய்ப்புறு தூண்க ளாக
மிசையெழுந் தியக்கம் தாங்க
இப்பெரும் போரில் நந்தம்
இணையிலா வீரர் செய்த
செப்பரும் செயலால் அன்றோ
செருவிடை நிமிர்ந்து நின்றோம்!

உளத்திடம் ஊன்று கோலாய்
உதவிட; சூழ்ச்சி வென்று
விளிவிலாக் குறிக்கோள் ஒன்றே
விடுதலைச் செலவில் வெற்றி
அளிப்பதைத் துய்த்த றிந்தே
அறைகிறேன்; செந்நீ ராலும்
விளிவொடு* துன்பத் தாலும்
விளைதலே விடுத லையாம்!

தின்னுணா தடையோர் பக்கம்
செருப்படை* இன்னோர் பக்கம்
இன்னொரு நெருக்க டிக்குள்
எமைவிட முனையும் மாணார்*
சென்றுயாழ் நாட்டைச் சூழ்ந்து
செய்தடை யாலே ஊனுக்
கென்றுமில் லாப்பஞ் சத்தை
எம்மக்கட் கியற்றி னாரே!

இடக்குகள் இயற்றி எம்மை
இடுக்கணுள்* தள்ளி நாளும்
அடக்குமு றையாம் தீயில்
அமுக்கினார்; இறப்பின் நீழல்
படுத்துறங் கிடுமெம் மையிப்
பட்டினி என்ன செய்யும்?
விடுதலைப் பசியுற் றார்க்கு
வேறொரு பசியுண் டாமோ?

அடுகளக் கருவி ஏந்தி
அமைதிசை கையுங் காட்டும்
கெடுமனச் சிங்க ளர்காள்!
கிளர்ந்தெழும் அமைதி யோடே
அடுகளப் போருக் கும்நாம்
அணியமே;* இரண்டில் எத்தை
நெடுமனத் தேற்கின் றாயோ
நேரதை நாமேற் கின்றோம்!

எழுந்தயிப் போராட் டத்தில்
எம்பக்க நயன்மை தன்னைத்
தொழுதுநாம் பார்க்குச் சொல்லத்
தோதான வாய்ப்பை நல்கி
அழுத்தமும் மேலாண் மையும்
அடக்குமுறை கட்டுப் பாடும்
ஒழிந்தநற் பேச்சுக் கென்றால்
உரை;அணிய மாக உள்ளோம்!

போர்வெறி கொண்டோ மில்லை;
போய்இனப் பகையும் உள்ளோம்;*
பாரந்த சிங்க ளர்நம்
பகைவராய்க் கருத வில்லை;
நேரவர் நாட்டை நாங்கள்
நெஞ்சினில் ஒத்தேற் கின்றோம்;
நேரவர் பண்பாட் டைநாம்
நேசித்தோம்; இடறி யற்றோம்!

அங்கவர் வாழு தல்போல்
அழகுறும் ஈழ நாட்டில்
மங்கலம் பொங்க நாமும்
வாழவே விரும்பு கின்றோம்
இங்குதே சியயி னம்மாய்
எழுவதைப் பொருத்தி டாத
சிங்களர் ஒத்தி சைவைச்
செப்பும்நாள் அமைதி தோன்றும்!

தன்படை வலியால் எம்மின்
தாயக சிக்கல் தீர்க்க
உன்னினார்;* ஒல்லா* தென்னும்
உணர்விலார்; மேலும் மேலும்
வன்கவர் பாலெம் மண்ணை
வளைக்கவே விரும்பு கின்றார்
முன்பொரு பெரும்ப டைபோல்
முகமுடை படுவா ரன்றோ?

என்னுயிர் ஈழ மக்காள்!
இப்பெரும் செலவில்* நம்மை
நண்ணிடும் சோர்வு; நாளும்
நனிசுமை நமைய ழுத்தும்
தன்குறிக் கோளை உன்னித்
தகைவுடை உறுதி யோடு
நின்றிடின் நமையெ திர்க்க
நேரெதிர்ப் படுவார் இல்லை!

நெஞ்சினில் உறுதி பூண்டு
நேரெதிர்த் தடுக ளத்தில்
துஞ்சிய மறவர் வாழும்
தூயகல் லறையொ லிக்கும்
விஞ்சரும் விடுத லைப்பா
விளம்பிடும் உறுதி தன்னை
விஞ்சிய கருவி இல்லை
விரைந்துமனத் தேற்போ மாக!

அகரம் அமுதன்

வியாழன், 21 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1990)

தன்னுயிர் ஈந்தும் செந்நீர்
தனையீந்தும் ஈழம் காத்துப்
பின்னவர் பின்பற் றித்தம்
பெருமறம் நாட்டு தற்கு
மன்னிய நடுகல் ஆன
மறவரைப் போற்ற நாமும்
உன்னிய நாளே இந்த
உயர்திரு நாளாங் கண்டீர்!

இறுதியை அடைந்த வீரர்
இழப்(பு)அவர் பின்ன வர்க்கே
உறுதியை ஈந்தும் வீர
உணர்வினை ஈந்தும் நெஞ்சில்
கருதிய செயல்மு டிக்கும்
கடமையை ஈந்தும் தங்கள்
இறுதியைப் பொருளு டைத்தாய்
இயற்றி‘நல் லுயிரன்’ ஆனார்!

தன்னின விடுத லைக்காய்த்
தன்னில மீட்புக் கும்மாய்
இன்னுயிர் ஈயும் வீரர்
இணையிலாக் கொள்கை யாளர்!
தன்னலம் பேணா வாழ்வும்
தமருக்காய் வாழாப் பெட்பும்
மன்னிய அவர்தஞ் சீர்க்கு
மற்றொன்றும் ஈடே இல்லை!

விடுதலை வீரர் என்றும்
விளிவதில்; நிகழும் சாவைச்
சடுதியில் சரித்தி ரம்மாய்ச்
சமைக்கிறார்; கொள்கைத் தீயாய்
அடுத்தமா மறவர் நெஞ்சில்
அமர்கிறார்; இனத்தின் மேன்மை
எடுத்துரை சின்ன மாக
எழுகிறார்; புகழ்பே றுற்றார்!

ஓரியர் படைத னையும்
உலகினிற் பெரும்ப டையாம்
ஆரியர் படைத னையும்
அடுகளத் தெதிர்த்து நின்று
வேரிறச் செய்வ கையால்
வியத்தகு வரலா றானோம்!
சீரிய எம்தி றத்தைத்
திசையெலாம் எட்டச் செய்தோம்!

சொல்லரும் இன்னல் கண்டும்
துவண்டிடா மனத்திட் பத்தால்
மெல்லரும் வலிகள் தாங்கி
விடுதலை ஒன்றே கோளாய்
வெல்லரும் படையை வெல்ல
விரைவதும் வென்று வீழ்ந்தும்
கல்லுரு வான வீரர்
கவின்சொலச் சொற்கள் உண்டோ?

என்னுயிர்த் தோழர் எம்மின்
எழிற்றள பதிகள் நெஞ்சில்
மன்னுபோ ராளி கள்தாம்
மறப்போரில் மடிதல் கண்டே
என்னுயிர் சோரும்; தம்மின்
இன்னுயிர் ஈக ரைநாம்
உன்னவே சோரும் நெஞ்சம்
உறுதியோ டுரனும் வைகும்!

உயிரினும் மேல தாய
உயிர்த்தயிந் நாட்டை யெண்ணி
செயிர்க்களம் சென்று மாண்ட
செயல்மல்லர் தம்மை ஈன்றோர்
அயிர்த்திடா தடைவீர் பெட்பை!
அவர்மரித் தாரில் லைநம்
உயர்சரித் திரமே யானார்!
உயிர்த்தெழும் விதையும் ஆனார்!

அடிமைவி ளங்கு டைத்தே
அடல்தனித் தமிழர் காணும்
மிடிமைவி ரட்டி வாழ
விடுதலை ஒன்றே ஆறாம்!
விடிதலை வேண்டும் போரில்
விளிதலும் இயற்கை யன்றோ?
மடிந்தநம் வீரர் வீழ்ந்து
மணிவிதை ஆனார் வாழ்க!

நல்லுயிரன் –சிரஞ்சீவி; மல்லர் –வீரர்; பெட்பு –பெருமை; மிடிமை –துன்பம்.

அகரம் அமுதன்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1989)

இன்றிந்நாள் தமிழீழ எழுச்சிக்காய்க் களங்கண்ட
எழிலார் வீரர்
பொன்றியதை நினைவுறுத்தும் புகழ்க்குரிய பொன்னாளாய்ப்
பொலியக் காண்பீர்
பொன்றுந்தன் மறவரினைப் போற்றுகின்ற மாமரபைப்
புவிமேல் நாமும்
பின்பற்றி இந்நாளைப் பெட்புமிகும் நன்னாளாய்ப்
பிறங்கச் செய்வோம்!

இன்றுவரை ஆயிரத்தை எட்டிவிட்டார் தம்முயிரை
ஈந்த வீரர்
என்பதனால் தனித்தனியே எழில்மறவர் நினைவுறுநாள்
எடுத்தல் நன்றோ?
அன்றுமுதன் முதலாய்த்தன் ஆருயிரைக் களப்போரில்
அளித்த சங்கர்
பொன்றியயிந் நாளினையே புகழ்மறவர் நாளாகப்
பொலியக் காண்போம்!

உயிரீகம் செய்தாருள் உயர்ந்தோர்யார்? தாழ்ந்தோர்யார்?
உரிமைப் போரில்
உயிரீகம் செய்தவரை ஒப்புரவாய்க் கண்டிடவும்
ஒருவர் செய்த
உயிரீகம் மேலதெனும் உரைதோன்றா வகையுறவும்
ஒருசார் பின்றி
உயரியயிந் நாளினையே உயிர்துறந்த மாவீரர்க்
கோர்ந்து கண்டோம்!

ஈரமிகு தமிழீழம் ஈன்றெடுக்கப் பிறந்திட்ட
சேய்கள் தம்முள்
வீரமிகு மாமறவர் விளைவதில்லை என்னுமுரை
விரிக்கும் வாய்கள்
சோரமிகப் பலமறவர் தோன்றிவிட்டார் தமிழீழம்
தோன்றும் காலம்
தூரமிலை எனப்பார்க்குச் சொல்லுமிந்த நன்னாளைத்
தொழுவோம் வாரீர்!

அகரம் அமுதன்

புதன், 22 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (15)


தொடரும் துயரைத் தொலைத்துத் தமிழர்
கடல்சூழ்ந்த நாட்டில் களிக்க -அடல்தனிக்
கோனே! மறவா! கொலைவாள் எடுத்து
வானே புறங்காட்ட வா! (141)

வாவந்தெம் மக்கள் வருந்தும் நிலைமாற்றித்
தாவன்று தெவ்வர் தலைகொய்து -நீவென்று
பாயும் புலிப்படையைப் பார்வியக்க நீநாட்டி
சீயம் தலைதாழச் செய்! (142)

செய்யுள்அச் சீயரின் செந்நீரைப் பாய்ச்சிநாம்
செய்வோம் விளைச்சலைச் சீர்மையுடன் -மெய்யாய்
தமிழர்க் குனைவிட்டால் தக்கதுணை இல்லை
அமிழ்கின்றார் துன்பத்தில் ஆங்கு! (143)

ஆங்குத் தவிக்கும் அருந்தமிழர்க்(கு) ஆறுதலாய்த்
தாங்கிப் பிடிக்க தலைவா!வா! –ஈங்குன்
நெடுந்தோள் நிமிர்ந்தி நெடுவான் வியக்க
அடுவெங் களத்தை அடை! (144)

அடையார்*க் கழிவை அளிக்கும் உரஞ்சேர்
படையாள் பவனே! பரிதுன்* –குடைக்கீழ்
எமையாள் பவனே! எதிரிக் கழிவை
உமையாள் மகனே! உணர்த்து! (145)

உணராப் பதர்கட்(கு) உணர்த்தல் தகுமோ?
துணவாய்* அவரைத் துணிப்பாய்* –தினவால்
திமிருமத் தீயோரைத் தீய்த்துத் தமிழர்
நிமிருமந் நாளை நினை! (146)

நின்போல் எமைக்காக்க நேரொருவன் இல்லையெமை
முன்போல் நலங்காக்க முன்னேவா! –பின்போய்ப்
பகைவர் அழிய படைதோற்று விப்பாய்;
இகல்*நீக்கும் நீயெம் இறை! (147)

இகல் –பகைவர்.


இறைஞ்சி* வருவோர்க்(கு) இனிதருளும் வேந்தே!
நிறைகெட்ட காடையரை நீக்கி –அறைமுரசுக்
கையா! எனையாள் அரசே! எழிற்கதிர்க்
கையா! கடைக்கண்ணைக் காட்டு! (148)

காட்டிக் கொடுத்த கயவன் அருளன்*
நீட்டி உறங்கிடல் ஞாயமோ? –நாட்டிலவன்
வீணாய் உலவுவதும் வேண்டாமே! கொன்றொழித்துக்
காணாப் பிணமாக்கல் காப்பு! (149)

காப்பிட்டுக் காடையரைக் காலன் இடனனுப்பக்
கூப்பிட்டோம் எங்கள் குறைதீர்ப்பாய் –கூப்பிட்டோர்க்(கு)
ஏவலாள் ஆனவனே! எல்லாளா! தாள்பணிந்தோம்
காவலாய் வந்தெம்மைக் கா! (150)

அடையார் –பகைவர்; பரிது –பெரிது; துணவு –விரைவு; துணித்தல் –வெட்டுதல்; இறைஞ்சுதல் –வணங்குதல்; அருளன் –கருணா.

அகரம் அமுதன்

சனி, 18 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (14)


சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (131)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (132)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (133)

நெஞ்சில் வலியோடும் நீர்வழியும் கண்ணோடும்
எஞ்சிய எம்மவரை ஈழத்தே –கஞ்சியின்றி
முள்வேலி யுள்ளடைத்து மூடர் கொலைபுரிந்தார்
அல்லும் பகலோடும் அங்கு! (134)

அங்கெமது மக்கள் அடையும் துயர்சொன்னால்
பொங்கும் விழிநீர் புனலாறாய் -சிங்களர்
போலப்போர்க் குற்றம் புரிந்தார் எவருமில்லை
காலக் கணக்கேட்டில் காண்! (135)

காணாக் கொடுமைபல கண்முன்னே கண்டுமதைக்
காணா துலகம் கடப்பதனால் -நாணாத
நாயனைய காடையர்கள் நாளும் நடத்துகிறார்
தீய செயல்பலவுந் தேர்ந்து! (136)

தேரலரால் எம்மவர் செத்து மடிகின்றார்
நேரிழையார் கற்பிழந்து நிற்கின்றார் -சீரிழந்த
சிங்களப் பேடிகளால் செந்தமிழச் சேய்களும்
தங்கள் உயிர்விட்டார் தாழ்ந்து! (137)

தாழம் இழந்து தவிக்கும் தமிழரைச்
சூழும் இடுக்கண் சொலவொணுமோ? -ஆழம்
தெரியாமல் கால்விட்ட சிங்களர்தஞ் சென்னி
அரியா தகல்வதோ அன்று! (138)

அன்மைச் செயல்செய் தகங்குளிரும் தெவ்வரால்
புன்மை அடைந்து புழுங்குகிறார் -இன்னமும்
எத்தனை தீத்துயர் எம்மவர் காண்பதோ?
புத்தனே கொஞ்சம் புகல்! (139)

புகலிகளாய் ஓரியர் போந்தவந் நாள்தொட்டு
அகதிகளாய் எந்தமிழர் ஆங்கே -நுகர்துயரம்
கொஞ்சமோ? இந்தக் கொடுமைகளைக் காண்பார்கண்
துஞ்சுமோ கீழிமை தொட்டு! (140)

சிரித்த பிழைப்புப் பிழைப்போர் –எள்ளத்தக்க வாழ்க்கை வாழ்கின்ற சிங்களர்; அனுராத புரம் –அனுராதபுரம் வான்படைத் தளத்தைக் குறிக்கிறது.


அகரம் அமுதன்

ஆசிரியர் போற்றுதும்!


அஞ்சில் எமைவளைத்து
அமுதனைய கல்வியினை
நெஞ்சில் நிறைக்கின்ற
நேர்த்தியெலாம் கற்றவரே!

பேசரிய மாண்பெல்லாம்
பிள்ளைகள் எமைச்சேர
ஆசிரிய பணிசெய்யும்
அன்பின் தெய்வங்காள்!

பொற்போடு எமைநடத்திப்
புகழ்மணக்கும் கல்வியினைக்
கற்போடு கற்பிக்கும்
கடமையிற் பெரியோரே!

குன்றளவு கொடுத்தாலும்
குறையாத செல்வத்தை
இன்றளவும் எமக்களித்து
இன்புறும் வள்ளல்காள்!

ஈன்றோரின் மேலாக
எம்நெஞ்சில் நிறைபவரே!
சான்றோராய் எமைமாற்றும்
சாதனைகள் புரிபவரே!

எச்செல்வம் அளித்தாலும்
எச்சமின்றித் தீர்வதுண்டு
மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்
விளிவின்றி வளருமன்றோ!

அன்னையே தெய்வமென்றும்
அன்பே தெய்வமென்றும்
கன்னின்றோர் தெய்வமென்றும்
கதைகள்பல உண்டெனினும்
பள்ளிக் கூடமெனும்
பண்பட்ட கோயிலின்
உள்ளே எழுந்தருளும்
உயர்தெய்வம் நீங்களன்றோ!

தாய்சொல்ல முதன்முதலிற்
சேய்பேசும் அம்மொழியே
தாய்மொழியாம் என்றெவரும்
சாற்றும் மொழியினையும்
சேய்நாங்கள் தப்பின்றிச்
செப்புதற்குக் கருத்துடனே
ஆய்ந்தறிந்து ஊட்டுகின்ற
அன்னையரும் நீங்களன்றோ!

தரிசை சீர்செய்து
தக்கபடி ஏர்நடத்தி
வரிசை பிடித்துவிதை
வார்த்திடுவர் வேளாலர்
அறிவு நீர்பாய்ச்சி
அகந்தைக் களையகற்றி
செறிவுடையோ ராய்எம்மைச்
செய்உழவர் நீங்களன்றோ!

சிலையின் இறுதிநிலை
சீர்மிகு கண்திறப்பாம்
விளையும் பயிரெமக்கோ
விழிதிறப்பே முதல்நிலையாம்...
எண்ணோடு எழுத்தென்னும்
இருகண்கள் திறக்கின்ற
திண்ணிய பணிசெய்யும்
சிற்பியரும் நீங்களன்றோ!

அன்றாடம் எமைநாடி
அறிவு புகட்டுமுமை
இன்றிந்நாள் எம்நெஞ்சில்
இருத்திப் புகழ்கின்றோம்!

வாழ்நாள் முழுவதையும்
மாணவர் எமக்களித்து
வீழ்நாள் இலாக்கல்வி
விளைக்கும்நீர் வாழியவே!

அகரம் அமுதன்

சனி, 11 செப்டம்பர், 2010

மனம்போன போக்கில்…

கட்டுப்பா டொன்றில்லாக் காட்டாறாய்
        ஓடுகிறாய் கவின்நெஞ் சே!மார்
தட்டிப்போர் வீரனெனத் தாவிக்கு
        தித்தாடித் தருக்கி யேசீர்
கெட்டுப்போ எனஎன்னைச் சிலநேரம்
        தூண்டிப்பின் கிளர்ந்தெ ழுந்து
சுட்டுப்போ கின்றாயே! தொடருமுன்
        விளையாட்டால் தூக்கங் கெட்டேன்!

அகமெனும் பெயரினிலே அமர்ந்தென்னுள்
        நாளும்நீ ஆடு கின்ற
நிகழ்பட ஆட்டத்தில்* நீயியக்குப்
        பிடி*யானேன்; நினைவ கத்தில்*
தகவுடன் காட்சிகளைத் தக்கபடி
        சேமிக்கும் தரவு மாகி
நிகழ்படக் காட்சிகளாய் நிதம்காட்டும்
        ஒளிச்சுருளே!* நீதான் நானா?

மேனியெனும் வன்பொருளில்* விரும்பியிறை
        வன்நிறுவும் மென்பொ ருள்நீ
தீனியென எனைத்தின்னும் தீநுண்மி*
        ஆகின்றாய் சிலநே ரத்தில்
மேனியினைக் காக்கின்ற நச்செதிர்ப்பி*
        யாயறிவு மிளிர்ந்த போதும்
நானிதுநாள் வரையுன்றன் நல்சூதம்*
        முழுதறியேன் நவிலு வாயோ?

ஆய்ச்சியர் தம்மிருகை அன்னவறி
        வும்நீயும் அமர்ந்தி ழுக்க
தேய்புரிக் கயிறானேன்; தேரியநல்
        வழியிலெனைச் செலுத்த வேண்டி
ஆய்ந்திறை வன்னென்னுள் அமைத்திட்டான்;
        ஆனாலும் அறிவும் நீயும்
வாய்க்கிற பொழுதெல்லாம் வாய்ச்சண்டை
        புரிகின்றீர் வலியைத் தந்தீர்!

நன்னூல்கள் பலநாடி நான்கற்க
        நல்லறிவு நவின்ற போதும்
கண்ணாளன் முன்போகக் கண்ணாட்டி
        பின்செல்லும் காட்சி போல
முன்னாலே நீபோக நானுன்னைப்
        பின்தொடர்தல் முறைமை ஆமோ?
உன்னாலே என்னுயர்வு தாழ்வெல்லாம்
        என்பதனை உணர்ந்த துண்டா?

மான்போன போக்கிலிரா மன்போக,
        மனம்போன வழியில் சீதை
தான்போக நேர்ந்ததனால் நிகழ்ந்ததன்றோ!
        மாரீச தார்வேந் தென்னும்
மான்சாக இராவணன்தன் மனம்போன
        வழிபோன வகையா லன்றோ?
ஆன்போன வழிபோகும் அதன்கன்றாய்
        நானுன்பின் அலைந்தேன் கெட்டேன்!

ஓருருவம் இல்லாத உள்ளுணர்வே!
        நீயென்னுள் ஒளிந்து கொண்ட
பேருருவம் என்பேனா? பெரும்பிழைகாண்
        என்பேனா? பிழைபொ றுத்து
நீருருவம் காட்டுகிற நினைச்சரியே
        என்பேனா? நீயென் னொத்த
நேருருவம் கொண்டதனால் நெருங்கியுற
        வுறுவேனா? நீங்கு வேனா?

பொறை,காதல், மகிழ்ச்சி,யிரண் டகம்,வெகுளி,
        ஆசை,யன்பு பொருந்தப் பெற்ற
நிறைகுடமே! உன்னுள்தான் நிறைந்தவுணர்
        வுகள்பலவாம்! நின்னால் நானும்
நிறைகுடமாய் நிமிர்கின்றேன்; நேரெதிராய்ச்
        சிலநேரம் நின்னால் தானே
குறைகுடமா னேனென்னுள் குறைகுறைய
        நிறைநிறையக் குறிக்கோள் ஏற்பாய்!

நிகழ்பட ஆட்டம் –video game; இயக்குப்பிடி -jaystick; தரவு –data; ஒளிச்சுருள் –film role; வன்பொருள் –hard disk; நிறுவுதல் -install; மென்பொருள் –soft ware; தீநுண்மி –virus; நச்செதிர்ப்பி –Anti virus ; சூதம் -சூது.

அகரம் அமுதன்

சனி, 10 ஜூலை, 2010

அந்தி ஓவியம்!



கொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய்,
வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால்
அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும்
படிக்கு நடந்ததென் ன? (1)

நடந்து கடந்த நலிவால் கதிரும்
கிடந்து சிவந்து கிழிய –படர்குருதி
அம்மா!அவ் அந்தியென்பர்! அன்(று)!அச் சிவப்பழகு
செம்மாந்த வானின் சிரிப்பு! (2)

சிரிக்கும் சிலையின் செழிப்பொடு செம்மண்
பரப்பின் நிறமும் படர்வான் -விரிப்பழகை
அன்ன மெதுநடையார் அங்கை மருதாணி
என்னல்செவ் வந்திக் கெழில்! (3)

எழுமந்திப் போழ்தின் எழில்சொல்ல ஒல்லா(து)
அழுமென்றன் உள்ளம் அடடா! –தொழுகின்றேன்
விண்ணில் நிறங்களின் வெற்றித் திருவிழா
கண்முன் தெரிகின்றக் கால்! (4)

காலைக் கதிர்வளர்ந்து மாலை தனில்முதிரச்
சோலைப் பழச்சிவப்பாய்த் தோற்றமுறும் –ஆலைபடு
செங்கரும்பின் தீஞ்சாறாய்ச் சிந்தும் நிறப்பொழிவால்
அங்கரும்பும் அந்தி அழகு! (5)

அன்றொருத்தி பிய்த்தெறிந்த அம்கொங்கை யால்மதுரை
நின்றெரிந்த காட்சியினை நேரொக்கும் –என்றென்றும்
கீழ்வானம் பிய்த்தெறியும் செங்கதிரால் மேல்வானம்
பாழ்பட்டு வெந்தழிதல் பார்! (6)

பாராண்ட பத்துத் தலைவேந்தோ கிழ்வானம்?
சீரான் இராமன்போல் செங்கதிரைப் –போராடி
மீட்ட உடன்தீயின் மேலேற்றிப் பார்க்கிறதே!
மீட்டுவந்த மேல்வான மே! (7)

மேனி கருகாமல் மேலெழுந்த சீதையைப்போல்
வானில் கதிர்காலை வந்தொளிரும் –கானில்
கடுந்தீயை மூட்டுகின்ற காற்றெனவே மேகம்
தொடுமந்தித் தோற்றத்தில் தோய்ந்து! (8)

தோயும் குருதியுடன் தொப்பென்று வீழ்கின்ற
காயும் கதிரவனைக் கண்டவுடன் –தாயும்
கழுகதன் குஞ்சுமெனத் திங்களும் மீனும்
எழுகின்ற அந்தி எழில்! (9)

எழிலந்தி வானத்தில் ஈழத்தைக் காய்ச்சி
வழிந்தோட விட்ட வகையாய்ச் –சுழித்தோடும்
தேன்பாகின் ஆறாய்த் தெறிக்கும் நிறம்தேவர்
கோன்பாருக்(கு) ஈந்த கொடை! (10)

அகரம் அமுதன்

திங்கள், 28 ஜூன், 2010

பந்து!

பையன்கள் ஆடினர் பந்து!
பாப்பா பார்த்தனள் வந்து!
பந்தை வளைக்குள் நந்து
பாய்ச்சுமுன் பிடித்திட முந்து!

வியாழன், 24 ஜூன், 2010

புகழைத் தேடு!

தம்பி! தம்பி! ஓடிவா!
தங்கக் கம்பி ஓடிவா!
எம்பிக் குதித்து ஓடிவா!
எவரும் மெச்ச பாடிவா!

பள்ளிப் படிப்பை நாடிவா!
படித்தால் உயரலாம் ஆடிவா!
வெள்ளி நிலாவே! ஓடிவா!
விரும்பிப் புகழைத் தேடிவா!

ஞாயிறு, 20 ஜூன், 2010

குறளே வெண்பாவாக! (4)

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு! -குறள்-


உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளியதைக்
கண்டால் களிசெய்யா கள்ளதுவே! -கண்டிடினும்
பூமனத்தில் எண்ணிடினும் பொங்கி எழுந்தாடும்
காமத்திற் தோன்றும் களிப்பு!

அகரம் அமுதா

சனி, 12 ஜூன், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (13)



மனத்தில் உரனும், மதியில் தெளிவும்,
நினைப்பில் நெறியின் நிறைவும், –முனைந்தே
உயரும் உழைப்பும், உதவும் குணமும்
இயல்தமிழர்க்(கு) ஊட்டினாய் இங்கு! (121)

இங்ஙனம் நாட்டை இனிதுற ஆளவும்
சிங்களர் நெஞ்சம் தியங்கினார்* –எங்ஙனம்
மாத்தமிழர் மாள வழியொன்று காண்பதெனக்
காத்திருந்தார் உள்ளம் கரந்து! (122)

தியங்குதல் –கலங்குதல்.

கரப்பில்* மனத்தனுனைக் கண்டு கலங்கித்
திறத்தில் இழிந்தோர் திகைத்தார் –உரத்தில்*
உனக்கிணை இல்லாதார் ஓர்ந்து* பிறரைத்
தனக்குத் துணைகொண்டார் தாழ்ந்து! (123)

கரப்பில் –குற்றமில்லாத; உரம் –வலிமை; ஓர்ந்து –உணர்ந்து.

தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (124)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (125)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (126)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (127)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (128)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.


ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (129)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (130)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.
அகரம் அமுதா

செவ்வாய், 8 ஜூன், 2010

கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

அகரம் அமுதா

வெள்ளி, 4 ஜூன், 2010

யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!

யார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி
யோர்சொற்கள் விழற்கிறைத்த நீரே!
யார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி
யோர்போலே நடந்ததன்றி வேறே?
(யார்சொல்லிக்)
நூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்
நூதனமாய்ப் பார்த்தெள்ள விழையும்!
வாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து
வருந்திப்பின் துன்பத்தில் புதையும்!
(யார்சொல்லிக்)
மாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த
மடமையினைச் சுட்டுவோர்மேல் உமிழும்!
தேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்
தீண்டத்தகார் என்றுவசை பொழியும்!
(யார்சொல்லிக்)
ஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை
அறிந்துரைப்போர் வாழ்வினிலே சிக்கல்
சூழ்ந்திழைக்கப் புகுமிவரா மக்கள்? –இல்லை
தோற்றத்தால் வளர்ச்சிபெற்ற மாக்கள்!
(யார்சொல்லிக்)
தானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்
தன்னலமே பேணிபொருள் ஈட்டும்!
மானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த
வஞ்சகரின் பைந்நிறைய தேட்டம்!
(யார்சொல்லிக்)
வாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்
வைத்துவளர் பொய்மையினால் இழியும்!
நாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை
நல்லாரை ஏய்த்திடவே விழையும்!
(யார்சொல்லிக்)
தன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்
தன்மதத்தின் வளர்ச்சிகண்டு வேர்க்கும்!
பொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்
புல்லர்களால் தடம்புரளும் நாக்கும்!
(யார்சொல்லிக்)

திங்கள், 31 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (12)



நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண –உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (111)


இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (112)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (113)


நன்றாக வாழ்ந்தகுடி நாடற்ற சிங்களர்கள்
சென்றங்கு சேர்ந்ததனால் சீரிழந்தார் –இன்றளவும்
கன்னித் தமிழினம் கண்ணீர் வடிக்கிறதே!
எண்ணிமுன் னேறும்நாள் என்று? (114)

எண்ணித் துணிந்தாய்! எடுத்தடி வைத்துவிட்டாய்!
திண்ணிய போர்மரபைத் தேர்ந்தீழ –மண்ணில்
கடற்படையும் வான்படையும் கட்டி எழுப்பித்
தடையகற்றி ஆண்டுவந் தாய்! (115)

தாயானாய் தந்தையும் தானானாய் மூத்தோர்க்குச்
சேயானாய்; பாவலர்க்குப் பாப்பொருள் –நீயானாய்;
பட்டினி பஞ்சத்தைப் பார்த்தகற்றிப் பார்புகழ
விட்டினி(து) ஆண்டாய் விழைந்து! (116)

விழைந்து* கொடுத்திடினும் வெல்ஈழ நாட்டில்
குழைந்து பெறுவார் இலரே! –உழைத்துப்
பெறுவார் பொருளன்றிப் பின்சென்றால் ஐயம்*
தருவார் எனவிழையா தார்! (117)

விழைதல் –விரும்புதல்; ஐயம் –பிச்சை.


தாங்கிப் பிடிக்க தலைவன்நீ உள்ளதனால்
ஏங்கித் தவிப்பார் எவருமில்லை; -ஆங்கெவரும்
ஐயம் இடுவதில்லை; அண்டிப் பெறுவதில்லை;
கையிரண்டை நம்பியதால் காண்! (118)

கண்டு வியந்தேற்றும் காசுள்ள நாடுகளும்
கொண்டால் இவன்போல் கொளவேண்டும் –மன்னனென
ஏற்றும் பலஇனமும், ஏக்கமுறும் சிங்களமும்
மாற்றம் நிகழ்த்தியநீ மன்!* (119)

மன் –மன்னன்.

மன்னே! மறனே! மருள்நீக்கும் மாமதியே!
அன்னே!* எமைக்காத்(து) அருள்வோனே! –உன்னால்
அறனும், அறிவும், அருள்மிகும் அன்பும்,
மறனும் வளர்த்தோம் மனத்து! (120)

அன்னே –அத்தகையவனே.
அகரம் அமுதா

வெள்ளி, 28 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (11)


உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (101)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (102)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்.

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை ‘நார்வே’ அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (103)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (104)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (105)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்*’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (106)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக் கொள்கின்ற சிங்களர்.

இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (107)

எடுத்தகுறிக் கோள்வழி ஏகா(து) அதனைக்
கெடுத்த அருளனில் கேடால் –விடுதலைப்போர்
நட்டாற்றில் தத்தளிக்கும் நாவாயைப் போலாச்சே!
எட்டாக் கனியாச்சே ஏன்? (108)

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (109)

நன்முறையில் வாழாத நாடற்ற சிங்களரைத்
தன்வலியால் வெல்லும் தகையாளா! -உன்னால்
நிலைத்திட்ட இன்ப நிறைவாலெந் நாளும்
நலங்கண்டோம் இல்லை நலிவு! (110)

அகரம் அமுதா

செவ்வாய், 25 மே, 2010

சங்கத் தமிழனைத்தும் தா!


கரையென்னும் மன்னவனைக் கட்டி அணைக்கத்
திரையென்னும் கைநீட்டித் தீதில் –நுரையென்னும்

முத்தம் இடுகின்ற மூவாக் கடலே!நல்
முத்தம் பிறக்கும் முதலிடமே! –மொத்தஉடல்

உப்பாய் விளங்கும் உவரியுனை நாடியவர்க்(கு)
உப்பிடும் வள்ளலே! ஓங்குமழைக்(கு) –அப்பனே!

நீரலையைப் பேரலையாய் நீட்டி நிலமழிக்கப்
பாரினிலே வாய்த்த பகையரசே! –நேரெதிர்த்(து)

அந்நாளில் எங்கள் அருங்குமரிக் கண்டத்தை
எந்நாளும் தோன்றா இடரலை –தன்னால்

அழித்துக் களிப்புற்(று) அருந்தமிழ் நூல்கள்
செழித்த சுவடழித்துச் சென்ற(து) –எழிலாமோ?

பண்ணுக் கினியமொழி பால்மழலைக் கேற்றமொழி
எண்ண உவகைதரும் இன்பமொழி –மண்ணுலகில்

முன்தோன்றி மூத்தமொழி முச்சங்கம் கண்டமொழி
தன்னேரில் லாத தமிழ்மொழியாம் –நன்மொழியின்

எண்ணிறந்த ஏடழித்(து) ஏதும் அறியாத
பெண்ணெனவே வீற்றிருத்தல் பேறாமோ? –கண்ணினிய

எங்கள் தமிழழித்த இன்கடலே! நீயழித்த
சங்கத் தமிழனைத்தும் தா!

அகரம்.அமுதா

வெள்ளி, 21 மே, 2010

சிலையோ? கொடியோ?


சிலையோ? கொடியோ? செழுமாங் கனியோ?
கலைமான் உருவோ? கடல்மீன் வகையோ?
இலையோ எனநான் வினவும் இடைமேல்
மலையோ? மலரோ? மறைத்தாய் அணங்கே!

நாட்டைப் பிடித்து நலிக்கும் வறுமைக்
கோட்டின் பிடியில் கொடியாம் இடையே
மாட்டி உழல மணிமார் பகமோ
மேட்டுக் குடிபோல் மிகவாழ் கிறதே!

அடிமேல் அடிவைத் தகலும் பொழுதிற்
கொடிமேல் கனிகள் குலுங்கும் அழகில்
அடியே! எனைநான் மறந்தேன் இழந்தேன்
பொடிமண் விழுந்த புழுவாய் நெலிந்தேன்

இருநீள் விழியால் இவன்தோள் அளக்கும்
அருமாங் கனியே! அழகின் அழகே!
தருவாய் உனையென் தளிர்க்கை சேர்ப்பாய்
கருவாய் உனையென் கவியில் வார்ப்பாய்!


அகரம் அமுதா

ஞாயிறு, 16 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (10)



நன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்
வன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி
பொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண
வெங்கொடுமை தீர்த்தாய் விரைந்து! (91)

வன்புணர்ச்சி –கற்பழிப்பு.

விரிகடல் பேரலை விண்ணில் எழுந்து
கரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்
அகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்
முகங்கொடுத்து நின்றாய் முனைந்து! (92)

திரை –அலை.

முனைநாள் குமரி முழுதும் அழித்தும்
தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (93)

பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (94)

பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.

உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (95)

குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (96)

ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (97)

ஆழி –கடல்; மேழி –ஏரு.

முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (98)

மாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற புனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.

சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (98)

சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (100)

அகரம்.அமுதா

திங்கள், 3 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (9)



நலிந்த இனத்தின் நயன்மைதனைப் பேண
வலிந்தபோர் செய்வோர் வருந்த -களத்தில்
சுழன்றாடும் தோளா சுமைதாங்கி ஆனாய்
எழுமீழம் உன்னால் இனிது! (81)

இனிப்போர் அதுவே எமைக்காக்கும் என்று
நனிநுண் அறிவால் நவின்றாய் -தினித்தார்
நமையந் நிலைக்கந்த நஞ்சின் கொடியார்
நிமைப்போதும் சூழ்ச்சிவழி நின்று! (82)

நின்போலே காடையரை நேரெதிர்க்கக் கற்றவர்யார்?
முன்னாள் தமிழ்மறத்தை முன்னெடுக்க -உன்போலே
கோனொருவன் உண்டோ குவலயத்தே? உன்றனையே
நானிலமும் வாழ்த்தும் நனி! (83)

நன்கெம்மைக் காத்து நலஞ்சேர்க்கும் நாயகனே
பொன்கொம்பில் பூத்த புதுமலரே! -என்கண்ணில்
வந்துலவும் அம்கனவே! மள்ளன் இவனென்றே
இந்தவுல கேற்றுமுனை யே! (84)

ஏம்பல் எமக்களிக்கும் எல்லாளா! மன்றல்சூழ்
ஆம்பல் மலரொத்த அம்நகையோய்! -சாம்பல்
பொடிபூ சிறைவனெனப் போய்நஞ்சை ஏற்ற
படையுன் படையென்னும் பார்! (85)

பாரில் புலிப்படைபோல் பாராளும் மாப்படையை
யாரிங்கே நாட்டியவர் யானறியேன் -சீரிளங்கும்
ஆளர் படையும் அணங்கையர் தம்படையும்
ஆளப் படைத்தநீ ஆண்! (86)

ஆண்பெண் இருபாலர் ஆங்குன் படைப்பிரிவில்
மாண்புடனே சேர்ந்தீழ மண்காத்தார் -யாண்டும்
பழகும் வகையும் பழுதில்லாக் கற்பும்
அழகுப் படையின் அணி! (87)

அணிந்தாயே கற்பதனை ஆன்ற அணியாய்
பணிந்தோமே உன்தாள்கள் பாராய்! -இணைந்தோமே
உன்னணியில் இன்றமிழர் ஓர்ந்தாங் கெமைக்காத்த
பின்னணியில் நீகாண் பெரிது! (88)

பெரிதோ இமயம்? பெரியோயுன் போலே
அரிதோ அமிழ்தும்? அழகுக் -கரிகாலா!
நீழற் குடையே! நெடுந்தோளா! நீயன்றோ
ஈழத்தை ஆளும் அரசு! (89)

அரிய பிறப்பே! அரசுக் கரசே!
கரிய நிறக்காலா! கற்பிற் -பெரியவளாம்
கண்ணகியின் ஆண்பாலாய்க் கண்முன்னே நிற்பவனே!
நண்ணுநா! நீவாழ்க நன்கு! (90)

அகரம் அமுதா

வியாழன், 22 ஏப்ரல், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (8)


களப்பில்* உணவின்றிக் கண்ணீர் வழிய
அளப்பில்* தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பி*ப்
பிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்
கறு*க்கொண் டவர்க்கியார் காப்பு? (71)

காணலரால்* எம்மவர் காணி* இழந்துநலங்
காணக் கடந்தார் கடல்நீரை; –தோணி
கவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே
தவித்தும் இறந்தார் தனித்து! (72)

தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (73)

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து*! (74)

நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)*
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (75)

காணக் கிடைக்காக் கவினே!* உனையேயெம்
மாண*த் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (76)

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (77)

உவட்டும்* உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தா(ய்)இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (78)

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (79)

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (80)

களப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில் தடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு அஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி; காணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்; இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்; நயத்தல் –விரும்புதல்; அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்; கவின் –அழகு; மாணம் –மாட்சிமை; உவட்டுதல் –அருவருக்கத்தக்க; மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்; குழுமாடு –காடையர்.

அகரம் அமுதா

புதன், 14 ஏப்ரல், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (7)



இடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா!
அடிபட்(டு) அடிபட்(டு) அழிந்தோம் –உடைபட்(டு)
அடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;
எடுப்பார்கைப் பிள்ளையுமா னோம்! (61)

நோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;
நோக்கில் தெளிவன்றோ நோய்தீர்க்கும்? –போக்கொன்றே
ஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை
மோதி மிதித்தாய் முனைந்து! (62)

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (63)

ஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.

ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!
ஓரியர்க்குப் பாடம் உரைத்தவனே! –ஆரியர்க்கும்
நெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்
பற்றியடி வைக்கின்றோம் பார்த்து! (64)

ஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.

பாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்
மாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்
வந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்
நொந்தகுடி ஆனதனை நோக்கு! (65)

நோன்பிருந்து பெற்ற நிகரில்லாய்! சிங்களர்
ஊன்பிளந்து நொய்தின்* உயிர்குடித்தாய்! –வான்பிறந்த
காலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்
ஞாலத்தில் வாழ்ந்திடவே நன்கு! (66)

நொய்தின் –விரைவாக

நன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்
சென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்
ஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்
காரகற்றும் வெய்யவனே காண்! (67)

ஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை; வெய்யவன் –கதிரவன்.

காணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு
கோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாண*க்
குறையுடையார் தேடியெம் குட்டி மணி*யின்
உறுப்பரிந்து கொன்றனரே ஓர்ந்து! (68)

மாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களரை எதிர்த்த முதன்மையானவர்களுள் ஒருவர்.

ஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி
சீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)
ஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே
ஆரியரின் சூழ்ச்சியினால் ஆங்கு! (69)

ஆங்கண்* தமிழர் அமர்வழிய*த் தீயிட்டுத்
தூங்கா விழியராய்த் துச்சிலின்றி* –ஈங்கிருந்(து)*
ஏதிலி*போல் ஏகென்றார் காடையர்*; இப்பாரோர்
காதிலிபோல் நின்றார் களித்து! (70)

ஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்; ஈங்கு -இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.

அகரம் அமுதா

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஆறுதல் பரிசு!

வா! என்கண்ணே!
இச்சை அழுக்ககற்ற
முத்தத்தில் நனைத்து
உதடு துவை!

சூடான யாக்கை
ஆற்றுப் படுத்து!

உன் உளச்சுமையை
என்மீதும்
என் உடற்சுமையை
உன் மீதும்
வா!
சற்றே இரக்கிவைப்போம்!

உள்ளே உள்ளதை
உதடு மறைப்பினும்
நனைந்த நைலான் புடவையாய்
விழிகள் காட்டிக் கொடுத்துவிடும்

இன்றைய கோரிக்கைகள்
என்னென்ன?
பட்டியலிடு!

முன்னிரவு கோரிக்கைகளைப்
பின்னிரவில் மனம்
பரிசீலிக்கும்

பலமுறை
நிராகரிக்கப் பட்ட கவிதை
என்றேனும்
பிரசுரிக்கப் படுவதில்லையா!?

கோரிக்கைகள்
நிராகரிக்கப் படினும்
சோர்ந்து விடாதே!
முயற்சி செய்!

வா! என் கண்ணே!
உன்
இத்தனை நாள் பொறுமைக்கு
முத்துமாலை –மன்னிக்கவும்
முத்தமாலை ஆறுதல் பரிசாக!

அகரம் அமுதா

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

தமிழும், தமிழரும்!

நெஞ்சினில் மறத்தை நட்டுவ ளர்த்தும்
நேர்மையின் வழிதனில் சென்ற
மஞ்சினை ஒத்த வண்டமிழ் மக்கள்
மானமே உயிரெனக் கொண்டு
விஞ்சிய கல்வி மிகுப்புகழ் செல்வம்
விளங்கிட பாரினில் முந்நாள்
அஞ்சிய பேர்கட் கருள்மழை பொழிந்தே
அழகுற வாழ்ந்தனர் நன்றாய்

காய்ச்சிய இரும்பைக் கைதனில் எடுத்துக்
கண்முனம் நேரெதிர் நன்று
பாய்ச்சிட வரினும் பகையெனக் கருதாப்
பாங்குடன் நெஞ்சினை நிமிர்த்தும்
மாட்சிமை படைத்த தமிழரின் வாழ்வில்
வளர்ச்சியைக் கண்டுபொ றுக்கா
ஏச்சுடை பலர்தம் இரண்டகப் போக்கால்
இடர்பல உற்றனர் கண்டீர்!

செந்தமிழ் அழிப்பைத் திறம்பட புரிந்தால்
சிதைகுவர் தமிழரென் றாங்கே
வந்தவர் எண்ணி வடமொழி புகுத்தி
வளர்தமிழ் சிதைத்தனர் நன்றாய்
இந்தபே ரிடரால் கன்னடம் தெலுங்கோ(டு)
இன்மலை யாளமும் தோன்ற
முந்தைய தமிழர் கன்னடர் தெலுங்கர்
முகிழ்மலை யாளரும் ஆனார்!

எஞ்சிய தமிழர் இன்றமிழ் வளர்ப்பை
இடையறா தியற்றிய தாலே
நஞ்சினை முறிக்கும் மூலிகை அன்ன
நறுந்தமிழ் வளர்ந்ததென் றாலும்
அஞ்சிடும் வகையில் ஆங்கில வரவால்
அருந்தமிழ் அழிவதும் நன்றோ?
எஞ்சிய தமிழர் தமிங்கில ரானால்
எப்படி வாழ்ந்திடும் தமிழும்?

கனித்தமி ழோடு பலமொழிச் சொற்கள்
கலந்துகி டப்பது கண்டு
தனித்தமி ழாளர் தணிந்திடாப் பற்றால்
தடுத்திட முனைந்தனர் அஃதை
நனிமிக நெருங்கி ஏற்றிடல் வேண்டும்
ஏற்றுந டப்பதி னாலே
இனித்தமிழ் வாழும் தமிழரும் வாழ்வர்
இவ்வுல கேற்றிடு மாறே!

அகரம் அமுதா

வியாழன், 1 ஏப்ரல், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (6)



என்றென்றும் காடையர்க்கே ஏற்றதை ஈந்துநமைக்
கொன்றொழிப்ப தாரியரின் கோளன்றோ! -என்றும்
இழிசெயலுக் கஞ்சியவா! இல்லை இவர்தம்
இழிசெயலை எண்ணிடவோர் எண்! (51)

எண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்
கண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்
தேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்
வாடிக் கலங்கலைநீ என்று! (52)

எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்
முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி
உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்
துள்ளல் ஒழித்தாய் துடைத்து! (53)

துடைத்தழிக்கத் தோன்றிய தூயா! உலகம்
நடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி
ஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே
தூற்றிக் களிக்கும் தொடர்ந்து! (54)

துடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,
மடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்
குண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்
செண்டள்ளி*த் தூவும் சிரித்து! (55)

சிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்
இருப்பிடம் ஏகாரோ? ஏய்ப்போர் –இருக்கின்ற
நாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்
பாழ்பட்டுப் போகிறதே பார்! (56)

பார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்
நீர்சூழ்ந்த நாட்டில் நிலைகெட்டு? –தீர்வொன்றை
நாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே
தேம்பிப்பின் ஓடும் தெறித்து! (57)

தெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை
உறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்
சுட்டப் பிறந்த சுடர்கதிரே! இங்கவரை
நெட்டி நெரித்தாய் நிமிர்ந்து! (58)

நிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்
எமைக்காக்கும் ஈழத்(து) இறையே! –குமை*செய்
கொடுஞ்சிங் களரின் குடலை உறுவி
நெடுவான் எறிந்தாய் நிலைத்து! (59)

நிலைத்த புகழின் நிறையே! இகலைக்
களையப் பிறந்த கதிரே! –களத்திற்(கு)
அழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே
இழைத்தார் இமையா(து) இடர்! (60)

எனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்; இகல் -பகை; துடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு; தெறுநர் –பகைவர்; நிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான காலஅளவு; குமை –அழிவு, துன்பம்.

அகரம் அமுதா

ஞாயிறு, 28 மார்ச், 2010

தமிழ்!



கிழவியே! கிளியே! நாளும்
        கிடந்துநான் கொஞ்சத் தூண்டும்
அழகியே! அமுதே! தேனே!
        அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
        கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
        தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
        உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
        கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
        கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
        விழுங்கவும் ஒன்னா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
        தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
        திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டு னுள்ளும்,
        உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
        ஏங்கினேன் எங்குச் சென்றாய்?

அகரம் அமுதா

வெள்ளி, 26 மார்ச், 2010

உயிர்விடு தூது!

தூரத்துத் தேய்பிறைக்கு –என்
துயர்சொல்லும் ஓர் கடிதம்
உயிர்சுமந்த கடிதமல்ல –என்
உயிர்கறைந்த கடிதம்!

அடுக்கிவைத்த ஆசைகளால்
அரும்பும்கண் ணீரெடுத்து
அடிநெஞ்சின் துயரத்தை
அணிந்துகொண்ட கடிதமிது!

தனியே அமர்ந்துகொண்டு
தன்னிலை மறந்துவிட்டு
தலைமகள் நலங்காண
தலைவன்? எழுதுகிறேன்!

சங்கடம் உனக்கிருக்கும்
காரணம் பிணக்கிருக்கும்
பிணக்குகள் இருந்தபோதும்
படிக்கவும் மனமிருக்கும்

கண்ணீர் கரையுடைத்துக்
கடித்ததை நனைக்கவேண்டாம்
காரணம் இருக்கிறது –கடிதம்
கண்ணீரில் எழுதியது!

வார்த்தெடுத்த சிற்பமென
வளர்ந்துவரும் நிலவுமென
மொட்டவிழ்ந்த மலர்சூடி
மங்கைநீ நடந்துவர

காமம் தலைக்கேறும்
காதல் சிறகடிக்கும்
கற்பனை மரம்தழைத்துக்
கவிதைப் பூப்பூக்கும்

புதுப்புது இரவு –அதில்
புதுப்புது கனவு
புதுப்புது கவிதை –தந்தது
புது உறவு

புத்துயிர் பெற்றவனாய்ப்
பூத்திருந்த வேளையிலே
வறுமை உருவெடுக்க
வளைகுடா சேர்ந்துவிட்டேன்

“காதலா! சென்றுவா!
காலனே வரினும்கலங்கேன் –நான்
கடைவிழு உறங்கேன்” என்றாய்
கனவுகளை மறந்துவிட்டு
இரவுதனை இழப்பதற்கா?
காதலனை மறந்துவிட்டு
காசுள்ளவனை மணப்பதற்கா?

உன்திருமண செய்திகேட்டு
உயிர்துறந்த சடலம் –நான்
உன்விழியுள் புதைந்து
உயிர்தேடும் படலம்!

புனைந்தேன் புனைந்தேன்
புதுப்புது கவிதை
அத்தனைக்கும் உயிரில்லை
தின்றுதீர்த்தது கழுதை!

நீ
மாற்றான் தோட்டத்து
மல்லிகை அல்ல –என்
மனத்தோட்டத்தில் பூத்து
மாற்றானிடம் மணம்போனவள்

நெஞ்சில் உனைச்சுமந்து
நிசத்தில் சுமையாய்ஆனேன்
நினைவலைகள் அறுந்துவிட
நித்திரை மறந்துபோனேன்

அன்றென்னைக் காணாஉன்னிடை
இளைத்தது ஓரளவு
இன்றுன்னைத் தொலைத்து
இளைத்தேன் நூலளவு

இறுதிமூச்சை உரையில்வைத்து
உத்தமிக்கு அனுப்புகிறேன்
சத்தமின்றி முத்தம்தந்து
திருப்பியதை அனுப்பிவிடு!

அகரம் அமுதா

செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழன்னை!

போக்கிலி ஆரியக் கூட்டம்
      பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்
தீக்கிரை யாக்கிய போதும்
      சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!
மாக்கடல் பேரலை யோடும்
      மண்ணதிர் உற்ற பொழுதும்
தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து
      தழைத்தனை பார்மிசை நன்றே.

தொல்காப் பியமாய்ப் பிறந்து
      திருக்குற ளாகத் தவழ்ந்து
ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்
      உயர்கம் பனாலே உயர்ந்தாய்
பல்காப் பியமும் பிறங்கப்
      பைந்தமி ழாகிச் சிறந்த
தொல்தமிழ் அன்னையே!வாழி!
      தூநறைச் சுவையென வாழி!

அகரம் அமுதா

ஞாயிறு, 21 மார்ச், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (5)



நன்றகற்றித் தீதினையே நத்துகின்ற நாய்மனத்தர்
சென்றுதவி செய்வார் திருடர்க்கே -தொன்றுதொட்டுச்
செந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரை
செந்தழலுக் கீதல் சிறப்பு! (41)

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (42)

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (43)

எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்
பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து
விடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்
கொடுமைபல காணல் கொடிது! (44)

கொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்
துடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்
கொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்
மடிவதனைப் பார்ப்பார் மகிழ்ந்து! (45)

மகிழ்நன்* முனமே மனையாளை வாரித்
துகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்
உமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்
அமிழ்வார் உலகத் தவர்! (46)

தவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி
அவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை
எதிப்பார் இலரே எழுகதிர்க் கையா!
மதிப்பார் அவரை மனத்து! (47)

மனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்
குணமென்ப தில்லாத கூட்டம்! –நிணமே
உடலான காடையர் ஊரழித்தல் கண்டும்
தொடர்ந்தவர்க்குச் செய்வரே தொண்டு! (48)

தொண்டு கிழந்தமிழ்த் தோன்றால்! இவற்றையெலாம்
கண்டு மனம்வெடித்த காவலா! –பண்டு*தமிழ்
மாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்
போய்மறையச் செய்தாய் புலர்ந்து! (49)

புலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்
உலம்பு*தோள் மன்னா உரைத்தாய்! –கலங்கிக்
கருத்தழிந்த மாணார் கரவா ரியரை
இரப்பார் ‘படையருள்க’ என்று! (50)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம், தாவு –தப்பு, குற்றம், மகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை, நிணம் –கொழுப்பு, பண்டு –பழமை; மறு –குற்றம், புலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற; கரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்.
 
அகரம் அமுதா