சனி, 29 ஆகஸ்ட், 2009

ஏக்கவெடி!

கண்ணி வெடி,
கையெறி வெடி,
ஏவுகணை, துப்பாக்கி
என
நாளும் விதவிதமாய்
வெடித்துக் கொண்டிருக்கிறார்
தீபாவளிக்கு எனக்கு
வெடிவாங்கித் தராத
அப்பா...

அகரம்.அமுதா

சனி, 22 ஆகஸ்ட், 2009

முருகடியான் அடியான் சொன்னேன்!

வளமான பொருளைத் தேடி
..வழங்குசொற் சிலம்ப மாடி
அளவான தமிழை நாடி
..அழுதகவி என்றும் பாடிக்
குளமேவு குமுதம் போன்ற
..கோலமிகு புகழைச் சேர்த்தும்
உளமேவும் தமிழால் வாழும்
..முருகடியான் பெருமை சொல்வேன்!

நேர்த்தியாய்க் கவிதை தீட்டி
..நெஞ்சத்தை ஆளும் பாட்டன்
கீர்த்திமிகு கவியால் கம்பன்
..கிளர்த்தபுகழ் பாடும் பூட்டன்
வார்த்தகவி வயலில் நன்றாய்
..வண்ணப்பா வார்க்கும் தோட்டன்
ஈர்க்குமிடை முலையர் பாடா(து)
..இறைவனிசை பாடும் ஏட்டன்

பூவான தமிழைக் கொய்து
..புத்துவமை நாரில் நெய்து
நாவாறப் பாடும் கிள்ளை
..ஞாலத்தில் இவர்போல் இல்லை
தேவாரத் தமிழை இன்று
..செய்புலவர் சிலரே யுண்டு
ஆவாரே அவருள் என்றன்
..ஆசானே முதன்மை என்று!

பணிஓய்வு கொள்ளு கின்ற
..பருவமதை அடைந்த போதும்
பிணிஓய்வு கொள்ளத் தோன்றும்
..பேருறுதி பெற்ற நெஞ்சன்
நனிதோயும் தமிழே மூச்சாய்
..நாற்றிசையும் அதுவே பேச்சாய்த்
தனித்தாய்ந்த தமிழில் பாடத்
..தணியாத யாப்பின் தஞ்சன்!

ஒப்பில்லா என்னா சான்கை
..உவந்திரு எழுது கோலை
அப்பெரும் பிரம்மன் கேட்டே
..அடம்பிடிப் தழுது தீர்ப்பான்
முப்போகம் விளைச்சல் காணும்
..முந்நாடு நந்தம் நாடு
எப்போதும் விளைச்சல் காணும்
..என்னாசான் கைப்பொன் னேடு!

பஞ்சினால் ஆன நெஞ்சம்
..பார்வையோ கணினி யொக்கும்
அஞ்சிடா ஆண்மைத் தோற்றம்
..அடுத்தவர்க் கீயும் கைகள்
நெஞ்சுநேர் செல்லும் கால்கள்
..நீசரை ஒடுக்கும் தோள்கள்
மஞ்சுதான் மேனி வண்ணம்
..மாண்புறும் இலர்நல் லெண்ணம்!

மருவிடும் தமிழைக் காக்கும்
..மாண்பதே மாண்பா மென்றே
செருப்புகுந் தாடும் வாளாய்
..சீற்றத்தோ டெழுந்து பொங்கி
அருவியாய்ப் பொழிவார் தம்மை
..அல்லகவி என்பார் யாக்கை
குருதியால் நிறைந்த தாமோ?
..குக்கல்வாய் உமிழ்நீ ரன்றோ?

அன்பினால் அடிக்கக் கூட
..ஆகுமாம் ஆனால் கொஞ்சம்
வம்பினால் அணைக்கக் கூட
..வகைபடாப் பண்பு கொண்ட
நேஞ்சனாம் என்றன் ஆசான்
..நில்வழி நானும் நிற்பேன்
வஞ்சனைப் பேய்கள் என்னை
..வளைப்பினும் சூழ்ச்சிக் கஞ்சேன்!

திமிங்கிலம் என்னா சான்போல்
..தீந்தமிழில் நஞ்சாய் சேரும்
தமிங்கிலம் எதிர்த்து நிற்பேன்
..தமிழில்தான் கவிப டைப்பேன்
அமிழ்தமிழ் தென்றே ஓத
..அமிழ்திலும் தமிழே உண்டாம்
உமிழ்பிற மொழிக்க லப்பை
..முருகடியான் அடியான் சொன்னேன்!

அகரம்.அமுதா

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சத்துடனே வார்த்திட்ட சங்கமமாம் பாவியத்தைப்
பொத்தகமாய்க் கோர்த்துப் புழங்கவிட்டீர் -பித்துடனே

மொய்த்ததனை மோகித்து மும்முரமாய் வாசித்து
மெய்த்தமிழை நான்கண்டேன் மேன்மையெலாம் -மொய்த்தநற்

கற்பனையைக் கண்டேன் கவின்நடையும் தான்கண்டேன்
விற்றொடுத்த அம்பாய் விரைந்துவரும் -சொற்கண்டேன்

நாணமிலார் வாய்பாட்டால் நற்றமிழுக் கேற்படும்
ஊனத்தைப் போக்கும் உரம்கண்டேன் -தேனமுதம்

கொட்டும் அருவியன்றோ கோலக் கவியுன்றன்
பட்டுக் கவியெலாம் பார்த்தறிந்(து) -அட்டியின்றிப்

பக்குவமாய்ச் சொல்கின்றேன் காக்கைகளின் மத்தியிலே
குக்கூ வெனுக்குயில்நீர் குக்களிடை -நற்பிடிநீர்

சேற்றிலொரு செங்கழுநீர் தெண்ணீரில் தேன்குளிநீர்
ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சங்கமம் -பாத்தென்றல் முருகடியான் வெளியிட்ட நூல்களுள் ஒன்று.

அகரம் அமுதா

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அமுத வெண்பா! 1

உற்றக்கால் அன்றி உறாக்காலும் ஈவரே!
முற்றும் வழங்கும் முனைப்புடையார் –உற்றளவும்
தந்துதவும் ஆறு தணவீசுங் கோடையிலும்
வந்துதவும் ஊற்றின் வழி!



அகரம் அமுதா

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இராமாயணம்!

அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகையுளவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!

அகரம் அமுதா

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

குறுங்கவிதை!

செடியில் மலர்கள்...
தீண்டத்தகாத பொருளாம்
விதவைக்கு!

கற்பழிக்கப் பட்டபின்
கலகலப்பாய் எழுந்துவந்தாள்
நடிகை!

வெள்ளைக் காரிக்கும்
கருப்பாய் இருந்தது
கன்னத்து மச்சம்!

அகரம் அமுதா