செவ்வாய், 27 நவம்பர், 2012

தமிழர்க்கும் புலியென்று பேர்!

தமிழர்க்கும் புலியென்று பேர் -இன்பத்
தமிழீழத் தாயகம் உயிருக்கு நேர்
தமிழர்சொல் "யாதும்நம் ஊர் -என்று
சாற்றிய அவர்கென்று வாய்க்குமோர் ஊர்?
தமிழர்தொல் மரபினம் பார் -புலித்
தலைவனின் நிழல்தனில் மறம்படிப்பார்
தமிழர்மெய் அன்பிற்கு வேர் -உயர்
தாயகம் காத்திடச் செய்குவர் போர்

தமிழர்க்குப் புகழென்று பேர் -அந்தப்
புகழ்யாவும் புலிப்படை ஈட்டிய சீர்
தமிழர்நல் ஈகைக்குக் கார் -எவர்
தறுக்கினும் நொறுக்கினும் அடிபணியார்
தமிழரைப் புறங்கண்டதார்? -வெஞ்
சமரிலும் விழவிழ உயிர்த்தெழுவார்
தமிழர்வன் சூழ்ச்சிவெல்வார் -தங்கள்
தாய்நிலம் மீட்டவர் ஆட்சிசெய்வார்

அகரம் அமுதன்

திங்கள், 26 நவம்பர், 2012

கானா பாடல்! 1

வெண்ண தெரளயில தாழி உடைஞ்சதுபோல்
பக்கம்நீ வந்தா பேசத் தோனவில்ல
கள்ளச் சிரிப்புக் காட்டி உள்ள நெருப்ப மூட்டி
உசுரோட என்னைக் கொல்லும் ஜாதிமுல்ல
என்னாச்சி என்னாச்சி எனக்கிப்போ என்னாச்சி
என்தேசம் எங்கும் இப்போ அவளின் ஆட்சி
புண்ணாச்சி புண்ணாச்சி என்நெஞ்சம் புண்ணாச்சி
பூவுன்னு நெனச்ச ஒண்ணு முள்ளாப் போச்சி

பிறைவட்ட வானவில்லு
பெண்ணாகப் பிறந்ததேன்
வந்தெந்தன் கண்ணில்பட்டு
மறைஞ்சதேன் மறைஞ்சதேன்?
ஆறாப்பு போகயிலே மாராப்பு போட்டவளே
எட்டாப்பு போகயிலே சிட்டாப் பறந்தவளே
பத்தாப்பு போகயிலே மத்தாப்பாச் சிரிச்சவளே
முத்தாய்ப்பா என்னைப்பாத்து மொறச்சவளே
வண்ணக் குளத்துமீனே
வாடாத ரோசாப்பூவே
வருவாய்நீ என்றிருந்தேன் வரவில்லையே


எட்டுவச்சி நடக்கும்குயில்
எட்டுமாஎன் நெஞ்சத்துக்கு
பொட்டுவச்சிப் போகும்மயில்
கிட்டுமாஎன் கைகளுக்கு
நாத்தாக அவயிருந்தா காத்தத்தூது விட்டிடலாம்
உறவாக அவயிருந்தா பறவைய அனுப்பிடலாம்
கரும்பாக அவயிருந்தா எறும்பநான் அனுப்பிடுவேன்
இரும்பாக இருக்காளே நான் என்னசெய்வேன்
கண்ணே கருமணியே
காதல் கடுதாசியே
காந்தத்தைத் தூதனுப்பும் மரபில்லையே

சனி, 24 நவம்பர், 2012

படப்பா! 58



தேவதைக்கு
பிரத்தியேக ஆடையென்று எதுவுமில்லை

நேற்று தாவணியில்
இன்று சுடிதாரில்
நாளை சேலையில் வரலாம்

ஆமாம்!!!
உனக்கு
சேலைகட்டத் தெரியுமா?

செவ்வாய், 13 நவம்பர், 2012

காதல் வரும்


என்னைப்பார் கவிதை வரும் -என்
கண்ணைப்பார் காதல் வரும்
முன்னழகைப்பார் மோகம் வரும் -என்
பின்னழகைப்பார் மோட்சம் வரும்

ஞாயிறு, 4 நவம்பர், 2012

கடலா? கொலை மடலா?




 

சிலையைப்போல் அமைதி காக்கும்
திரனெல்லாம் பெற்றும் வெந்நீர்
உலையைப்போல் கொதித்தெ ழுந்துன்
உப்புநீர் அலைக்கை நீட்டி
மலையைப்போல் உறுதி கொண்ட
      மக்களைத் தாக்கி எச்சில்
இலையைப்போல் கிழித்து வீசி
      எறிந்ததேன் கடலே! வண்ண

முலையூட்டும் தாயின் மார்பில்
மிதித்திடும் பிள்ளை போல
அலைநீட்டிக் கரையை நீயும்
அன்றாடம் மிதிக்கும் போதும்
இலையீது வன்மம் என்ற
ஏமாப்பில் வாழ்ந்தி ருந்தோம்
தலைமீதே ஏறி நின்று
தாண்டவம் இட்ட தேனோ?



நீரலை என்று நாமும்
நினைத்ததைப் பொய்யாய் ஆக்கி
நீரலை அல்ல ஈது
நீவீசும் வலையே என்று
பாரவர்க் குணர்த்தத் தான்நீ
      பாய்ந்துவந் தாயோ? நன்றாய்ப்
பாரவர் பட்ட துன்பம்
      பற்பல பலவே யன்றோ?



தண்ணீரால் ஆன ஆழி
தரைதனிற் கண்டோம்; உப்புக்
கண்ணீரால் ஆன ஆழி
கன்னத்திற் காண வைத்தாய்;
உண்ணீருக் காகா உன்னை
உலகினில் முக்காற் பங்காய்ப்
பண்ணிய கார ணத்தால்
பாழ்செயல் புரிந்திட் டாயோ?



வாரிதி என்றோம் உன்னை;
வளம்பல கொண்ட நீயும்
வாரியே தருவாய் என்ற
வாஞ்சையில்; ஆனால் நீயோ
வாரிதின் றாயே எங்கள்
வளங்களை; உயிரை; ஈது
சீரிலாச் சிறப்பு மில்லாச்
செய்கையென் றுணர்ந்த உண்டா?

வேலையென் றுன்னை நாமும்
விளித்திட நீயோ வெட்டி
வேலைகள் செய்யத் தானே
விழைந்தனை; அலைகள் என்னும்
வாலையே ஆட்டு கின்ற
வல்வெறி நாயே! நீஆன்
தோலையே போர்த்து நின்று
துயர்தரும் நரியே யன்றோ?



நீருள(து) ஈரம் இல்லை;
நினைக்கடல் ‘அம்மா’ வென்றிங்(கு)
ஆருரைத் தாரோ? அந்த
      அறிவிலிச் செயலைச் சுட்ட
பேருடற் பேயே! நீயும்
பெயர்ந்துவந் தாயோ? உப்பு
நீருடல் நோயில் வீழ
      நீயழி வெய்தி டாயோ?

உப்பிட்ட பேரை என்றும்
உள்ளுதல் எங்கள் பண்பாம்;
உப்பிட்ட நீயோ எங்கள்
உயிர்கொளல் என்ன பண்பாம்?
உப்பிட்டுத் தின்றால் தோன்றும்
உணர்ச்சி;உன் உடலம் எங்கும்
உப்புள்ள போதும் கொஞ்சம்
      உப்புக்கும் உணர்ச்சி உண்டா?



கடலென்றோம் உன்னை; நீயோ
காலனை ஒத்தாய்; உப்பு
உடலென்றோம்; உடனி ருந்தே
உயிர்க்கொல்லி யானாய்; தண்ணீர்த்
திடலென்றோம்; நிலப்ப ரப்பைத்
தின்னநாள் பார்த்தாய்; முந்நீர்க்
குடமென்றோம்; சாக்கா டீந்து
குடமுடைக்கும் குறிக்கொள் கொண்டாய்!

கானா பாடல்! 5


ஒத்தசடை வளவிபோட்டு
உறலுகுத்தும் பெண்மயிலே
செத்தநின்று சேதிசொல்லு கண்ணாலே –நாம
சந்திப்போம் ஓடைக்கரை பின்னாலே –நீ
குத்துகிற உலக்க –வேலி
கொம்பைப்போல இருக்க –அதில்
சுத்துகிற கொடியா –நீ
சுத்தித்தானே இருக்க –நான்
பல்லுபோன பொக்க –அடி
ஒன்னப்பாத்து சொக்க

கொட்டப்பாக்கு இடிச்சிருக்கு
கொழுந்து வெத்தலை துடைப்பதற்குக்
கையால மறைச்சிக்கிட்டு முந்தானை
கொடுத்துப்புட்டு பக்கம்நில்லு செந்தேனே –உன்
பார்வைதான் சுண்ணாம்பு –நான்
பருவக்காளை நம்பு

பித்தம்முற்றிப் போனதால
ஒத்தநரை தலைமேல
சத்தியமாப் பிறைவளரும் தானம்மா –அப்படி
வளர்ந்ததுதான் என்வழுக்கை பாரம்மா –சுற்றி
வீசும் காற்று சூறை –அதில்
விழுந்ததெந்தன் கூரை

கிட்டப் பார்வை எனக்கில்ல
தூரப் பார்வை வந்ததில்ல
மாராப்புப் போட்டிருக்கும் அம்மாடி –உன்னை
மெல்லத் திறந்து பார்ப்பதற்கே கண்ணாடி –நான்
ஸ்டைலில் ரஜினி காந்து –நீ
தொட்டா ஒட்டும் கோந்து

போகவேணும் காசிப்பக்கம்
புறப்பாடு உந்தன் கக்கம்
புறப்பாடு உந்தன் கக்கம் ஆனாக்க –என்
பூமனசு நிறையாதோ தானாக –உன்
ஊசிக் கழுத்தில் பாசி –நான்
போகவேணும் காசி

எஃகுடம்பு எனக்கிருக்கு
அஃகுநடை தான்வழக்கு
முக்காலிக்கு மூனுகாலு வேணுமடி –நான்
முக்காலும் உணர்ந்தமதி வாணனடி
இரைத்த கிணறுதான்டி –தண்ணீர்
ஊறும் கொண்டுவா தோண்டி!