புதன், 13 ஜூன், 2012

சனி, 9 ஜூன், 2012

படப்பா! 57





என் காதலை
சொல்லச் சொன்னேன்
தன் காதலை
சொல்லிச் செல்கிறதே
அந்தத்
திருட்டுக் குருவி

வியாழன், 7 ஜூன், 2012

படப்பா! 56








முகத்திற் படிந்த
கூந்தலை ஒதுக்கத்தெரிந்த
உன்னால்
நாணத்தை ஒதுக்கத்தெரியவில்லையே

உன்னை நினைக்க மட்டுமே
தெரிந்து
மறக்கத் தெரியாத
என்னைப்போல

செவ்வாய், 5 ஜூன், 2012

அமுதன் குறள்! 3


காற்றுவர ஆடும் கனிமரத்தில் பேயுளதாய்ச்
சாற்றுகதை சொன்னால் சிரி. (11)

ஆ*வின்பால் வேண்டாம்; அழுதுஅடம் செய்தேனும்
தாயின்பால் உண்டு தழை. (12)

தாய்ப்பால் தவிர்த்தல் தளிருடலில் நோய்தொற்ற
வாய்ப்பாகும் தாய்ப்பால் பருகு. (13)

நிலாக்காட்டி அன்னை நினைக்கொஞ்சி ஊட்டும்
நிலாச்சோற்றை உண்பாய் நிமிர்ந்து. (14)

அன்னை மொழியும் அவள்தரும் இன்னமுதும்
உன்னை வளர்க்கும் உரம். (15)


தாய்பிசைந்(து) ஊட்ட தளிர்வாய் மலர்ந்துணவைப்
போய்ப்புசித்(து) உற்றபசி போக்கு. (16)

பிஞ்சுக்கை நீட்டிப் பிசைந்த உணவள்ளிக்
கொஞ்சியுன் தாய்க்கும் கொடு. (17)

எச்சில் உணவெனினும் ஈன்ற மகவூட்ட
மெச்சியுண் ணாளோ மிளிர்ந்து. (18)

உன்தாய் வெகுளாள்; உணவைஉண் ணும்நேரம்
சிந்தா மணியேநீ சிந்து. (19)

சுவையுண(வு) ஊட்டுங்கால் அன்னை நவிலும்
செவியுணவும் உண்ணல் சிறப்பு. (20)


                                         12.பசு 

சனி, 2 ஜூன், 2012

அமுதன் குறள்! 2


                                நூல்!

அருமைக் குழந்தாய்! பெரியவன் ஆனால்
உறக்கம் தொலையும் உறங்கு. (1)

பகலில் உறங்கும் பழக்கம் குறைப்பாய்
இரவோ(டு) உறங்கி எழு. (2)

உறங்கும் பொழுதும் விழிப்போ(டு) இருப்பாய்
உறக்கம் உடலுக்(கு) உணர். (3)

தாலாட்டுப் பாடத் தளிர்வாய் இதழ்மலர்ந்து
காலாட்டிக் கேட்டுக் களி. (4)

கருவில் விளைந்த கனியே! அழகாய்
முறுவல் உதிர்த்து முகிழ். (5)

குதலை* மொழியும் குலாவு* நகையும்
மதலை* உனக்கிவை மாண்பு. (6)

முந்தானைத் தூளியில் முப்போழ்(து) இருந்தாடி
தந்தையின் கைப்பிடித்துத் தத்து. (7)

பாட்டி கதைகூற பாட்டனார் பாவிசைக்கக்
கேட்டு விழியுறக்கம் கொள். (8)

பொய்ம்மைக் கதைகேட்டுப் போழ்தைத் தொலைக்காதே!
மெய்ம்மை அறிதலே மேல்! (9)

உலகிலே இல்லாத ஓர்பேய்க் கதைக்கும்
கலங்காமல் ‘பொய்’என்றே சொல். (10)


                     6.குதலைமழலைச்சொல்; குலாவுதல்வயப்படுத்துதல்;  மதலை -குழந்தை