திங்கள், 29 செப்டம்பர், 2008

வட்டநிலாச் சுட்டவடு!

தென்றல்போல் என்சிந்தை
தீண்ட விழைகிறாள் -வண்ண
மின்னல்போல் விழிவிழுந்து
ஏனோ ஒளிகிறாள்!

பூமயங்கும் பூவிழிகள்
பேசு கின்றன –அதில்
பூமணமும் பாமணமும்
வீசு கின்றன!

பூங்காந்தள் விழிசொல்வ
தென்ன மந்திரம்? –எனை
ஏகாந்தம் சூழ்ந்துக்கொள்ள
என்னக் காரணம்?

தென்றலெனத் தேடிவந்து
தீண்டும் நினைவுகள் -அது
கொண்டவுயிர் கொண்டுப்போகும்
காலன் கயிறுகள்!

கண்ணழர்ந்து தூங்கையிலும்
கவிதை சொல்கிறேன் -நாளும்
உண்ண(அ)மர்ந்து உண்ணாமல்
எழுந்து கொள்கிறேன்!

சிந்தையுற்ற அன்னையெனை
சினந்து கொள்கிறாள் -கையில்
மந்திரித்தக் கயிறெடுத்து
கட்டி விடுகிறாள்!

மணிக்கட்டில் கயிறுறுத்த
வெட்டி எறிகிறேன் -அவள்
பொன்கூந்தல் குழலெடுத்துக்
கட்டிக் கொள்கிறேன்!

சிந்தையெலாம் உற்றநிலா
தொலைந்து போனதே -இன்று
அந்தநிலா இன்னொருவன்
சொந்த மானதே!

வட்டநிலாச் சுட்டவடு
மறந்து பார்க்கிறேன் -அது
முடிவதில்லை என்றபோது
இறந்து பார்க்கிறேன்!

அகரம்.அமுதா

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

வான்புகழ் வள்ளுவர்!

அதி-காரம் இல்லா(து) அதிகாரம் செய்தவ்
வதிகாரத் துட்பொருள் ஆளும் -விதத்துடனே
குற்றமதில் சற்றேனும் காணொண்ணா முப்பாலே
சித்தத்திற் கேற்றநூல் செப்பு!

அறமுண்டாம்; வாழப் பொருளுண்டாம்; சேர்ந்தில்
லறங்காண இன்பமும் உண்டாம் -திறத்துடனே
நாம்குறளைக் கற்க நலமுண்டாம் பொய்யில்லை
தேம்பா திருக்குறளில் தேர்!

எப்பாலும் ஏற்கும்பால் எப்பாலென் றார்ப்பாரேல்
முப்பாலாம் என்றேநீ முன்மொழி -அப்பாலில்
செப்பாமல் வள்ளுவனார் விட்ட நெறியிலையாம்
தப்பாமல் ஊர்க்கிதை ஓது!

தமிழ்க்குடியைப் பாரறியத் தக்க வழிகண்(டு)
அமிழ்தினிய முப்பால் அளித்தார் –நமதினிய
தேன்தமிழ்ச் சொல்லெடுத்துச் செய்யுள் பலசெய்து
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து!

அகரம்.அமுதா

வியாழன், 18 செப்டம்பர், 2008

உறவு!

விழுதெனவே நமைத்தாங்க
விழைவதுதான் உறவு –நாளும்
பழிபேசிப் பரிகசிக்கும்
பண்பதுவா உறவு?

இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு –வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?

இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு -கையில்
இருப்பிருக்க இன்புறவே
இணைவதுவா உறவு?

வற்றிவிட்ட குலத்துடனே
வாடும்புல் உறவு -தண்ணீர்
முற்றுமின்றி போகஓடும்
புள்ளினமா உறவு?

காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு -நெஞ்சில்
மாசைவைத்து முகத்தளவில்
மலருவதா உறவு?

அகத்தளவில் கலந்திருக்க
அமைவதுதான் உறவு -இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?

கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு -வானில்
இருளகன்றால் ஒளிந்துகொள்ளும்
விண்மீனா உறவு?

கண்ணிமையாய் அருகிருந்து
காக்கவேண்டும் உறவு -அன்றிப்
புண்ணெனவே வலிதந்தால்
பூணவேண்டும் துறவு!

அகரம்.அமுதா

வியாழன், 11 செப்டம்பர், 2008

தமிழென்னை இணைந்ததாலே!

நெல்லெடுத்துப் பால்மழலை எழிற்றைக் கீறும்
      நேர்த்தியென நிறைந்ததடா தமிழ்என் நெஞ்சில்
புல்லெடுத்துக் கூடுகட்டும் குருவி யைப்போல்
      புகழ்மொழியில் அதனால்தான் பாட லுற்றேன்!
வில்லெடுத்துப் போர்புரிந்த வேந்தர் போற்றி
      வியனுலகில் வளர்த்திட்ட தமிழை தேனை
அல்லொடுக்கும் ஒளிவழங்கும் பகலோன் தாயை
      அமுதனிவன் அமுதெனவே பருக லுற்றேன்

அன்புமனம் வேண்டுமெனில் அன்னை போதும்;
      அருங்கலைகள் கற்கவெனில் ஆசான் போதும்;
இன்பநலம் துய்க்கவெனில் இல்லாள் போதும்;
      இணைபிரியா திருக்கவெனில் நண்பன் போதும்;
விண்சென்றும் புகழ்நிற்க ஈகை போதும்;
      விளம்பிவிடின் இங்குரையாய் விரித்த யாவும்
ஒன்றாகி ஓருருவாய் நிற்க வேண்டின்
      ஒண்டமிழ் அன்னையவள் மட்டும் பொதும்!

கொண்டபொருள் அத்தனையும் கொள்ளை போகக்
      கொடுத்திடினும் சிரித்தலன்றி அழுதற் கில்லை!
தொண்டையிலே நஞ்சிறங்கத் துன்ப மெல்லாம்
      தொடர்ந்திடினும் மகிழ்தலன்றித் துடித்தற் கில்லை!
மண்டையிலே இடியிறங்கி வருத்தும் போதும்
      மார்தட்டி எதிர்த்தலன்றி மருள்த லில்லை!
அண்டமெலாம் ஆள்தமிழென் அகத்தை விட்டே
      அகன்றுவிடின் மரித்தலன்றி உயிர்த்த லில்லை!

நன்றென்றும் தீதென்றும் பகுத்துப் பார்க்கும்
      நல்லறிவைப் பெறவில்லை! மனங்கள் தோறும்
சென்றங்கு மறைந்திருக்கும் சூழ்ச்சி தன்னை
      சிலநொடியில் பேச்சினிலே தெரிந்தே னில்லை!
உண்டென்று சொல்லுமிறை உணர்ந்தே னில்லை!
      உழைத்துழைத்துக் களைத்திட்டேன் உயர்ந்தே னில்லை!
என்றாலும் அதுபற்றிக் கவலை யில்லை
      எழிலன்னைத் தமிழென்னை இணைந்த தாலே!

அகரம்.அமுதா

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

சுமை தாங்கி!

அஞ்சலம் முத்துசாமி அன்னையாய் வாய்ப்பதற்கே
என்னதவம் செய்துவிட்டேன் என்றறியேன்! -கண்ணுக்
கிமையாய்க் கனிவோ டிருந்தவளைக் காத்துச்
சுமைநானே தாங்கியா வேன்!

வேலுமகன் முத்துசாமி ஏறனையார் என்தந்தைத்
தோளுக்கு நான்சுமையாய்த் தோன்றிவிட்டேன்! -நாளும்
இமைவருத்திக் காத்தவரை இன்பநலம் சூழச்
சுமைநானே தாங்கியா வேன்!

அகரம்.அமுதா