புதன், 2 மார்ச், 2016

நான்!

துன்பங்கள் யார்படினும்
துடிக்கின்றவன் -பிறர்
கண்ணீரைக் கவிதையாய்
வடிக்கின்றவன்!

கொடுமைக்கு அறம்பாடி
முடிக்கின்றவன் -அதன்
குரல்வளை நெரித்துயிர்
குடிக்கின்றவன்!

வன்முறை யார்செயினும்
வெடிக்கின்றவன் -அந்தப்
புன்முறை போய்மாளப்
பொடிக்கின்றவன்!

பெயருக்கா எழுதுகோல்
பிடிக்கின்றவன்? -என்றன்
எழுத்தாலே இனப்பகை
இடிக்கின்றவன்!

பகடி வெண்பா!

தனிமரமே உன்றன் தனிமை அகற்ற
கனிவனமே வாய்த்த கதைசொல்! -இனிமைமிகு
வண்ணமுகம் கண்டேன் மயலுற்றேன் என்போலும்
பெண்ணவளும் பெற்றாள் பிணி!

மாவதை செய்யும் மதனம்பில் தப்பிக்க
தேவதை உன்றனைத் தேர்ந்தனளோ? -பூவமளிப்
போர்க்கும் பொருந்தும் பொலிவினன் என்றேதான்
பார்த்துடன் பட்டாள் பசித்து!

எண்ணம் உரைக்க எளிதில் உணர்த்திட
மண்ணில்வாய்ப் பேச்சுக்கு மாற்றுண்டோ? -கண்மொழி
கற்றுத் தெளிந்தால் கதையளக்கும் வாய்ப்பேச்சு
வெற்றுப் பகட்டென்பாய் வெந்து!

நின்றுதான் பேசிமிக நெஞ்சம் உணர்த்துதல்
ஒன்றுதான் கண்ணின் உயர்வாமோ? -நன்றுகேள்
ஐம்புலனிற் கட்புலனே போய்த்தீண்டி இன்பீயும்
மொய்ம்புடைய தென்பேன் முனைந்து!

உரியமொழி பேசி உணர்த்தற்(கு) உரிய
கரியவிழிக்(கு) இன்னோர் கவின்சொல்! -உரியவரைத்
தன்னுள்ளே வைத்துத் தனதேக்கம் தீர்க்குமே
அன்னியர் காணாத வாறு!

 இல்லாள் உடன்நீ இணையப்போம் அவ்விரவில்
நல்லாள் நயனமிடும் கட்டளைஎன்? -பொல்லா
மதனம்பு பாய்ந்தெனக்கு மையல் வழங்க
மதனுக்கிம் மங்கை விழி!

என்றுமில்லாப் பேருவகை இன்றுநீ கொண்டவகை
மென்றுமுழுங் காமல் மிழற்றாழோ? -இன்றுவரைக்
கொல்லரவம் போலென்னைப் பல்லிரவும் கொன்றதுபோய்
நல்லுறவும் வந்த நயப்பு!

நெருநல் வரைநீ நிதமும் அடைந்த
வெருவல் தனித்தா விலகும்? -புருவப்
பெருவில் அணங்கின் மருவில் எனைக்கண்(டு)
உருவில் அணங்கன் உடன்!