வியாழன், 29 அக்டோபர், 2009

முதல் எழுத்து!

பெண் எலியின் கருமுட்டையை எடுத்து உயிரணு தோற்றுவித்து, அதனை வேறொரு பெண் எலியின் கருமுட்டையில் செலுத்தி எலிக்குஞ்சி தோற்றுவித்துள்ளார் ஜப்பான் விஞ்ஞானி “டோமகிரோ”
-செய்தி-

இச்சோதனை, முறையே மனிதர்களுக்கும் நிகழ்த்திப் பார்க்கப் படுமாயின், அப்படிப் பிறந்த குழந்தை தன் அவலம் பாடுவதாக இக்கவிதை...

மாலையிட்டு மஞ்சம் கண்டு
மசக்கை கொள்வது –வெட்டி
வேலையென்று எண்ணிவிட்ட
டோமகிரோ நில்லடா!

தந்தையின்றி தாய்கள்கொண்டு
சனித்த பிள்ளைநான் –இந்த
விந்தைசெய்யும் எண்ணமுன்னில்
விளைந்த தேனடா?

அன்றுசெண்டில் தேனெடுத்து
வண்டு சேர்த்தது –இன்று
செண்டில்செண்டு தேனெடுத்து
சேர்த்து வைக்குது!

இயற்கையென்னும் காண்டிபத்தை
இரண்டு செய்தவா! –உறவின்
இயல்புமாற்றி இனம்பெருக்கும்
அவலம் ஏனடா?

அன்னையிருவர் ஆனதாலே
அன்பில் திளைக்கிறேன் –அன்பு
தந்தையொருவர் இல்லையென்று
தவித்து நிற்கிறேன்!

எதிர்த்தவீட்டு ஏழைப்பிள்ளை
தந்தை தோளிலே –என்னை
உதயம்செய்த தந்தையிங்கு
அன்னை உருவிலே!

மின்னலொன்று மின்னிமின்னி
மனதில் மோதுதே! –விழி
சன்னல்மீதில் சோகமேகம்
சாரல் போடுதே!

காதுகிள்ளி ஓடும்சேயைத்
தாய் அடிக்கலாம் –பிள்ளை
பாதுகாப்பு கருதிதந்தை
போர்வை நுழையலாம்!

தாயடிக்க தாயைச்சேரும்
தமையன் நானடா –என்றன்
காயம்பட்ட இதயத்திற்குக்
களிம்பு பூசடா!

சிறுவர்க்கூட்டம் வீதியெங்கும்
சிற்றல் ஆடுதே –என்னை
அருவருக்கும் பார்வைபார்க்கும்
அவலம் நேருதே!

விதவிதமாய்ப் பெயரும்சூட்ட
விழையும் அன்னைகாள் –என்றன்
முதலெழுத்து என்னவென்று
முதலில் சொல்லுங்கள்!

இடியாய்என்னுள் இதயத்துடிப்பு
இரங்கத் துடிக்கிறேன் –மரண
விடியல்தேடி வாழ்க்கைத் தீயில்
விழுந்து கிடக்கிறேன்!

புதன், 28 அக்டோபர், 2009

இத்தாலிப்பேய்!


பாவடியால் நான்வாழ்த்த பத்தினி இல்லையிவள்
தேவடியாள் ஆதலினால் செப்புகிறேன் –தீவடிவாய்
வந்த இழுதையிவள்; வண்டமிழர் கூட்டத்தைக்
கொன்று குவிக்கவந்த கூற்று.

அகரம் அமுதா

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஹைக்கூ!

தந்தையின் ஊதியம் சாம்பலாகிறது
மகனின் விரல்களில்
சிகரெட்!

புகைக்கத் தடை
பலகை எச்சரித்தும்
புகைத்தபடி வாகனங்கள்!

இரவில் தேடிவந்து
இலவச ஊசிகுத்தும்
கொசு!

விழிப்புணர்ச்சியோடிருந்தும்
கருத்தரித்து விடுகிறது
காதல்!

நாட்டின் கணிசமான குழந்தைகளைத்
தத்தெழுத்துக் கொண்டிருக்கிறது
குப்பைத் தொட்டி!

வனமெனும் கற்பினைக் காக்கும்வரை
பெய்யெனப் பெய்யும்
மழை!

மற்றவர்கள் அமர
நின்றுகொண்டிருக்கிறது
நாற்காலி!

மின்னல் தோன்றுமுன்
இடியோசை
கொலுசுச் சத்தம்!

பூமி பொய்த்தும்
வானம் விளைகிறது
விண்மீன்கள்!

உயிர்களின் மெய்களில்
எழுதப்படுகின்ற உயிர்மெய்
விதி!

ஒவ்வொரு காலையிலும்
அவளுக்காக வழிந்தபடி
பனிமலர்!

அகரம் அமுதா

திங்கள், 19 அக்டோபர், 2009

பிரிவுப் படலம்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேளை
அது தொடருமானால்
நம் திருமண பந்தத்தால்
திரிந்து போகலாம்...

கலவியின் முடிவில்
கசந்து போகலாம்...

குடும்பச் சுமைசுமந்து
கூன்விழவும் நேரிடலாம்...

இப்படியாய் அதற்கு
மரணம் சம்பவிக்க
நமக்குள்
பிரிவாற்றாமை நிகழக்கூடும்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேலை
அது தொடருமானால்
அதுவே என்
எழுதப்படாத கவிதைகளுக்கு
முற்றுப் புள்ளியாய்
அமையக்கூடும்...!

அகரம் அமுதா

சனி, 5 செப்டம்பர், 2009

அலை! இடி!

அலை!

கடலுக்கும் கரைக்கும்
நடக்கும் திருமணத்தில்
நடைபெறும்
மாலைமாற்று!

இடி!

முகில்மண மக்கள்
இணைகிற வேளை
மின்னல் கட்டில்
முறிகிற ஓசை!

அகரம்.அமுதா

சனி, 29 ஆகஸ்ட், 2009

ஏக்கவெடி!

கண்ணி வெடி,
கையெறி வெடி,
ஏவுகணை, துப்பாக்கி
என
நாளும் விதவிதமாய்
வெடித்துக் கொண்டிருக்கிறார்
தீபாவளிக்கு எனக்கு
வெடிவாங்கித் தராத
அப்பா...

அகரம்.அமுதா

சனி, 22 ஆகஸ்ட், 2009

முருகடியான் அடியான் சொன்னேன்!

வளமான பொருளைத் தேடி
..வழங்குசொற் சிலம்ப மாடி
அளவான தமிழை நாடி
..அழுதகவி என்றும் பாடிக்
குளமேவு குமுதம் போன்ற
..கோலமிகு புகழைச் சேர்த்தும்
உளமேவும் தமிழால் வாழும்
..முருகடியான் பெருமை சொல்வேன்!

நேர்த்தியாய்க் கவிதை தீட்டி
..நெஞ்சத்தை ஆளும் பாட்டன்
கீர்த்திமிகு கவியால் கம்பன்
..கிளர்த்தபுகழ் பாடும் பூட்டன்
வார்த்தகவி வயலில் நன்றாய்
..வண்ணப்பா வார்க்கும் தோட்டன்
ஈர்க்குமிடை முலையர் பாடா(து)
..இறைவனிசை பாடும் ஏட்டன்

பூவான தமிழைக் கொய்து
..புத்துவமை நாரில் நெய்து
நாவாறப் பாடும் கிள்ளை
..ஞாலத்தில் இவர்போல் இல்லை
தேவாரத் தமிழை இன்று
..செய்புலவர் சிலரே யுண்டு
ஆவாரே அவருள் என்றன்
..ஆசானே முதன்மை என்று!

பணிஓய்வு கொள்ளு கின்ற
..பருவமதை அடைந்த போதும்
பிணிஓய்வு கொள்ளத் தோன்றும்
..பேருறுதி பெற்ற நெஞ்சன்
நனிதோயும் தமிழே மூச்சாய்
..நாற்றிசையும் அதுவே பேச்சாய்த்
தனித்தாய்ந்த தமிழில் பாடத்
..தணியாத யாப்பின் தஞ்சன்!

ஒப்பில்லா என்னா சான்கை
..உவந்திரு எழுது கோலை
அப்பெரும் பிரம்மன் கேட்டே
..அடம்பிடிப் தழுது தீர்ப்பான்
முப்போகம் விளைச்சல் காணும்
..முந்நாடு நந்தம் நாடு
எப்போதும் விளைச்சல் காணும்
..என்னாசான் கைப்பொன் னேடு!

பஞ்சினால் ஆன நெஞ்சம்
..பார்வையோ கணினி யொக்கும்
அஞ்சிடா ஆண்மைத் தோற்றம்
..அடுத்தவர்க் கீயும் கைகள்
நெஞ்சுநேர் செல்லும் கால்கள்
..நீசரை ஒடுக்கும் தோள்கள்
மஞ்சுதான் மேனி வண்ணம்
..மாண்புறும் இலர்நல் லெண்ணம்!

மருவிடும் தமிழைக் காக்கும்
..மாண்பதே மாண்பா மென்றே
செருப்புகுந் தாடும் வாளாய்
..சீற்றத்தோ டெழுந்து பொங்கி
அருவியாய்ப் பொழிவார் தம்மை
..அல்லகவி என்பார் யாக்கை
குருதியால் நிறைந்த தாமோ?
..குக்கல்வாய் உமிழ்நீ ரன்றோ?

அன்பினால் அடிக்கக் கூட
..ஆகுமாம் ஆனால் கொஞ்சம்
வம்பினால் அணைக்கக் கூட
..வகைபடாப் பண்பு கொண்ட
நேஞ்சனாம் என்றன் ஆசான்
..நில்வழி நானும் நிற்பேன்
வஞ்சனைப் பேய்கள் என்னை
..வளைப்பினும் சூழ்ச்சிக் கஞ்சேன்!

திமிங்கிலம் என்னா சான்போல்
..தீந்தமிழில் நஞ்சாய் சேரும்
தமிங்கிலம் எதிர்த்து நிற்பேன்
..தமிழில்தான் கவிப டைப்பேன்
அமிழ்தமிழ் தென்றே ஓத
..அமிழ்திலும் தமிழே உண்டாம்
உமிழ்பிற மொழிக்க லப்பை
..முருகடியான் அடியான் சொன்னேன்!

அகரம்.அமுதா

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சத்துடனே வார்த்திட்ட சங்கமமாம் பாவியத்தைப்
பொத்தகமாய்க் கோர்த்துப் புழங்கவிட்டீர் -பித்துடனே

மொய்த்ததனை மோகித்து மும்முரமாய் வாசித்து
மெய்த்தமிழை நான்கண்டேன் மேன்மையெலாம் -மொய்த்தநற்

கற்பனையைக் கண்டேன் கவின்நடையும் தான்கண்டேன்
விற்றொடுத்த அம்பாய் விரைந்துவரும் -சொற்கண்டேன்

நாணமிலார் வாய்பாட்டால் நற்றமிழுக் கேற்படும்
ஊனத்தைப் போக்கும் உரம்கண்டேன் -தேனமுதம்

கொட்டும் அருவியன்றோ கோலக் கவியுன்றன்
பட்டுக் கவியெலாம் பார்த்தறிந்(து) -அட்டியின்றிப்

பக்குவமாய்ச் சொல்கின்றேன் காக்கைகளின் மத்தியிலே
குக்கூ வெனுக்குயில்நீர் குக்களிடை -நற்பிடிநீர்

சேற்றிலொரு செங்கழுநீர் தெண்ணீரில் தேன்குளிநீர்
ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சங்கமம் -பாத்தென்றல் முருகடியான் வெளியிட்ட நூல்களுள் ஒன்று.

அகரம் அமுதா

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அமுத வெண்பா! 1

உற்றக்கால் அன்றி உறாக்காலும் ஈவரே!
முற்றும் வழங்கும் முனைப்புடையார் –உற்றளவும்
தந்துதவும் ஆறு தணவீசுங் கோடையிலும்
வந்துதவும் ஊற்றின் வழி!



அகரம் அமுதா

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இராமாயணம்!

அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகையுளவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!

அகரம் அமுதா

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

குறுங்கவிதை!

செடியில் மலர்கள்...
தீண்டத்தகாத பொருளாம்
விதவைக்கு!

கற்பழிக்கப் பட்டபின்
கலகலப்பாய் எழுந்துவந்தாள்
நடிகை!

வெள்ளைக் காரிக்கும்
கருப்பாய் இருந்தது
கன்னத்து மச்சம்!

அகரம் அமுதா

புதன், 29 ஜூலை, 2009

காட்சிக்குக் கவிதை!



விண்மணிகள் கோர்த்ததுபோல் வேட்டின் ஒளிவெள்ளம்
கண்மணிகள் கண்டு களிப்புறும்; -பெண்மணிகள்
பூக்கும் சிரிப்பன்ன பூத்ததுகாண் விண்வெளியில்
ஈர்க்கும் இளநெஞ்சை ஈண்டு!

மின்னல்போற் பூத்து மிளிருமொளி பொன்கூந்தற்
பின்னல்போற் சாலம் புரிந்திடவே -கன்னலைப்போற்
பெய்ஜிங் ஒலிம்பிக் பெருஞ்சுவரைக் காட்சிகளாய்
தொய்வின்றித் தந்திடுதே தான்!
அகரம் அமுதா

வியாழன், 23 ஜூலை, 2009

இறகுப்பந்து விடுதூது!

காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!

ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு!

ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!

தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென் றியம்பு!

இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!
நண்டுறை நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில் உண்டு!

உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்
உளங்கள வாடி உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன் வந்து!


வந்தாரக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க நயந்து!

நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ தூது!

தூதாக நீயுமத் தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?
மெல்லப்போ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து!

விரைந்துநீ போய்யென் விருப்பம் உரைப்பாய்
கரந்தமனத் தாளவளின் காதில் –சுரந்துவரும்
வாயிதழின் சாற்றில் வழுக்கிவரும் சொல்லேயென்
காயத்தை வாழ்விக்கும் காற்று!

சொற்பொருள்:-ஆகம் –உடல்; தியங்குதல் –கலங்குதல்; மிறல் –பெருமை.



அகரம் அமுதா

ஞாயிறு, 19 ஜூலை, 2009

கரிகாலன் ஈற்றெடுப்பு! (1)



காவலாய் வாய்த்த கரிகாலன் மாமறத்தை
ஆவலால் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்த்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான்* தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கரிகாலா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே! தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

எழுந்த கதிர்க்கைய*! ஈழத்தில் ஆடும்
உழுவைக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில்* தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல்* களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு!* (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போல் கண்டார் கவினுலகில்* –பேணார்*
திருவில் செயலைத் திருப்பி அடித்தே
கருவில் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் உலவும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாம் தருவே! உனையிங்(கு)
உமையாள்* கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு* உவந்துலகிற்(கு) ஈந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்*
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்லிசையில் பாடேனோ பார்த்து! (10)

தாவில்லா –குற்றமில்லாத; முருகடியான் –எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்; அரி -சிங்கம்; கதிர்க்கையன் –பிரபாகரன்; உழுவைக்கொடி –புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்; பொருவில் -உவமையில்லாத; இன்னல் –இடுக்கண்; மாண்பு –பெருமை; மாணார் –பகைவர்; கவின் –அழகு; பேணார் –பகைவர்; கதிர்க்கையன் –பிரபாகரன்; உமையாள் –பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி); வேலு –பிரபாகரனின் தந்தையார்; புணரிசார் –கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை.

அகரம் அமுதா

செவ்வாய், 14 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (3)

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு! -குறள்-


முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண் செய்வார் அறிவோ -டகமுமிலார்
யானுற் றுயிருருகி வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையாற் சார்ந்து!

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்! -குறள்-

ஊரார் உரைப்பழி உற்ற உரமாக
நீராகி அன்னைசொல் வேர்பாய -பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்
கடிதோங்கிக் காய்க்குமிந் நோய்!

அகரம் அமுதா

வியாழன், 9 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (2)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து! -குறள்-

நோய்க்கு மருந்தென நூலொர் உரைத்ததெலாம்
ஆய்ந்துவிடின் யாவும் அடுத்தவையே! -நோய்கொடுத்தந்
நோய்க்கு மருந்தென நுண்ணணியாள் மாறுவதைத்
தோய்ந்தறிவில் இட்டுத் துணி!

தோய்ந்த -செறிந்த

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்! -குறள்-

பொய்கைவாய் பூத்துப் பொலியும் அனிச்சமும்
துய்ய நிறவன்னத் தூவியும் -செய்ய
உருமுலை மாதரார் ஒப்பில் அடிக்கு
நெருஞ்சிப் பழத்திற்கு நேர்!

அகரம் அமுதா

புதன், 1 ஜூலை, 2009

பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

திங்கள் உலவும் மாலையிலே!
. . . . .தென்றல் தவழும் சோலையிலே!
கங்குல் வடியும் காலையிலே!
. . . . .கரும்பு பிழிபடும் ஆலையிலே!

ஊர்திகள் செல்லும் சாலையிலே!
. . . . .ஊதியம் கிடைக்கும் வேலையிலே!
பேரிச்சை விளையும் பாலையிலே!
. . . . .பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

அகரம் அமுதா

செவ்வாய், 23 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (5)


காற்றைக் கிழித்துக் கடிவிரைந்த தோட்டாவால்
நேற்றென் கணவர் நிலம்வீழ்ந்தார் –ஆற்றொனாத்
துன்பம் தொலையுமுன் தோள்சுமந்த என்மகனும்
இன்றுநிலம் வீழ்ந்தான் இறந்து.

அகரம் அமுதா

வெள்ளி, 19 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (4)


ஊருக்குச் சோறிட்ட ஒண்டமிழன் வாய்நனைக்க
நீருக்கும் போராட நேர்ந்ததுவே –பாருங்கள்
பாரோரே! பட்டினியாற் சாகுமிவர் காண்;கண்ணில்
நீராறே ஓடும் நிறைந்து.


அகரம் அமுதா

செவ்வாய், 16 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (3)


தெம்பில்லை தேம்பியழத் தெய்வம் துணையென்றே
நம்பினோம் அஃதும் நடக்கவில்லை -எம்மினத்தைச்
சுட்டழிக்கும் சிங்களரைச் சுட்டெரிக்காச் சூரியனே!
சுட்டெரிப்ப தெங்களையேன் சொல்.


அகரம் அமுதா

சனி, 13 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (2)


கொத்தணி குண்டின் கொடுமோசை யாற்காதுஞ்
செத்த(து) அழுதழுதே சிந்தியகண் –வற்றிய(து);
ஒட்டுத் துணிபோல் உயிரும் உடலிதனை
விட்டுப்போ காதோ விரைந்து.
.
எழுந்திடக் கூட இயலாக் கிழவர்
விழுந்ததுபோல் எம்மினமும் வீழ்ந்த(து) –எழும்நாளும்
என்றோ? இனிதுகண் டின்புறும் பாரோரே!
நன்றோ?உம் மௌனம் நவில். (கவிக்கூற்று)


அகரம் அமுதா

செவ்வாய், 9 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (1)


அஞ்சி அழுந்தம்பிக் காறுதல் சொல்லவும்
நெஞ்சில் வலியில்லை; நேற்றுவரைக் –கொஞ்சி
மடியிருத்திக் காத்து மகிழ்ந்தபெற் றோரும்
வெடிவிழச் செத்தனரே வெந்து.
.
கத்தும் ஒலிகேட்கக் காசினிக்குக் காதில்லை;
பொத்தி அழவும் புரியாஇப் பிஞ்சுகளைக்
கொத்தணி குண்டின் கொடுமோசை அச்சுறுத்த
எத்தனையாய் இன்னல் இவர்க்கு! -கவிக்கூற்று-

அகரம் அமுதா

வியாழன், 4 ஜூன், 2009

தமிழ் எங்கள் தமிழ்! (4)

படிக்கா தகலின் பயன்மிகக் குன்றி
விடியா மொழியாய் விடும்!

விடுக அயன்மை; விருப்ப மொழியாய்த்
தொடுக தமிழ்க்குச்செய் தொண்டு!

தொண்டென்ப வேறில்லை தொல்நூல்கள் பாராட்டும்
பண்டு கலைகள் படி!

பிடியாய் முனையைப் பிடிப்பரோ? வாளின்
பிடியாந் தமிழைப் பிடி!

பிடியொன்று மானள்ளும் பெற்றிபோல் நாடிப்
படிதமிழைக் கண்ட படி!

படியார் பயன்படார் பைந்தமிழை ஊன்றிப்
படியார் இனத்துட் பதர்!

பதர்மொழி கற்கப் பறப்பார் மனதைப்
புதராக்கித் தூர்ப்பார் புழு!

புழுவென்றால் பொங்குவர் பூந்தமிழைக் கற்க
எழுகென்றால் ஏற்கார் இழுக்கு!

இழுப்பாய் தமிழ்த்தேரை இந்நிலம் வாழ்த்து
மிழற்றிக் கவிபாடு மே!

மேடுபோய் முட்டி மிகமிரண்டுப் பின்வாங்கும்
மாடுபோல் ஆகாய் மதி!


அகரம் அமுதா

புதன், 27 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (3)

உயர்வுக்கு முத்தமிழால் ஒன்னாதே என்னும்
மயர்வகற்றிக் கற்றபதே மாண்பு!

மாண்பு தமிழ்க்கல்வி மற்றை மொழிக்கல்வி
வீண்பெருமை வேண்டாம் விடு!

விடுத்தார் தமிழறிஞர் வேண்டி விருப்புற்(று)
எடுத்தோமா தமிழ்வழி ஏடு!

ஏடழித்த முன்னோர் இடரெதிர்த்து வாழ்தமிழின்
பீடழிக்காய் தாய்தமிழிற் கல்!

கற்றாரின் மேலாம் கலாதார் வினவிவிடின்
பற்றார் அயன்மொழியைப் பாய்ந்து!

பாய்ந்தோடு கின்றாய் பலமொழிகள் கற்க
தாய்தமிழை ஏனோ தவிர்த்து!

தவறுணந்து பேணத் தலைப்படு தாயை
எவருன்போல் கொன்றார் இயம்பு!

புட்டிப்பால் ஆகும் பிறவெல்லாம் பூந்தமிழே
முட்டிப்பால் உண்ணும் முலை!

முலையிலாள் முன்னழகும் முத்தமிழிற் கல்லாக்
கலையழகும் குன்றும் கடிது!

கடிது தமிழென்பார் கண்ணிலார் தேடிப்
படித்தயலைக் காப்பார் பரிந்து!


அகரம் அமுதா

வியாழன், 21 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (2)

மனமொன்றிப் போற்று மணித்தமிழை; நாளை
இனமுன்னைப் போற்றும் இசைந்து!

இசைமகள் தேடி இணைவாய்; வேண்டா
வசைமகள் நாடும் வழு!

வழுவமைதி இந்நாள் வரைவிலகி நின்ற(து)
எழுஅமைதி ஏனோ? இழுக்கு!

இழுக்குவரின் சாவர் இசைசான்றோர்; நீயும்
பழக்குன்னைப் பைந்தமிழ்நூல் பார்த்து!

பார்த்தால் வருமோ பழிநற் குறள்கற்றுத்
தேர்ந்தால் எழுமோ திமிர்!

திமிர்வகற்றி நாலடியுந் தேர்ந்துசிலம் போதி
நிமிர்வெய்தல் வேண்டும் நிலைத்து!

நிலையா உலகில் நினையழிக்கும் நூற்கள்
மலையாக் குவியும் மலிந்து!

மலிந்த சுவடிகள் மாண்பென நாடாய்
பொலிந்தநன் னூலுட் புகு!

புகுவாய் கவிக்கம்பன் பூந்தோட்டத் தேனை
வெகுவாய்ப் பருக விரை!

விரைந்தோடி ஒளவை வியத்தகு சித்தர்
உரையறிந்து போற்றி உயர்!


அகரம்.அமுதா

சனி, 16 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (1)

கதிரே உலகின் கருப்பை; தமிழே
முதிர்மொழிக் கெல்லாம் முதல்!

முதலாந் தமிழை மொழிக! உளதோ
அதனிற் சிறந்த அமிழ்து!

அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து
தமிழினும் உண்டோ தலை!

தலையே உடலின் தலைமை; தமிழே
உலகின் மொழிகட்(கு) உயிர்!

உயிராம் உயர்தமிழ் ஓம்புக; அன்றேல்
உயிரை மயிர்போல் உதிர்!

உதிக்கும் அறிவும்; உயர்தமிழை ஓம்ப
மதிக்கும் உலகும் மகிழ்ந்து!

மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்
இகழப்பா; தீர்ப்பாய் இடர்!

இடர்வரின் வீழ்த்தி எழுவாள்; தமிழாம்
மடவரல் என்பேன் மலைத்து!

மலைப்பே மிகினும் மலையாதச் செய்யிற்
களைகள் களைதல் கடன்!

கடமை; தமிழைக் கடைபிடி; இன்றேல்
மடமை; புதராம் மனம்!


அகரம் அமுதா

ஞாயிறு, 10 மே, 2009

குழுமத்தில் வந்து குதி!

அன்புடன் குழுமத்தில் உள்ள ஓரிழையான "வெண்பா விலாஸ்" கொடுத்த "குழுமத்தில் வந்து குதி"  என்ற ஈற்றடிக்கு நான் எழுதியது.

"அன்புடன்" என்றுபேர்கொண் டார்த்து நடைபோட்டு
விண்மண் வியக்க விரியிணையத் -தின்பால்
உழுவத்தின் நேர்தன் உழைப்பால் உயரும்
குழுமத்தில் வந்து குதி!

எழுமீற்றுச் சீர்க்கே எழிலார்"பா" தன்னைப்
பழுதின்றிப் பாடுகிற பண்போ -டொழுக்க
விழுப்பத்தில் தேர்ந்து விளங்கும்நம் வெண்பாக்
குழுமத்தில் வந்து குதி!


அகரம்.அமுதா

செவ்வாய், 5 மே, 2009

ஈற்றடி இந்தா எழுது!

சாற்றடி நான்கிலும் சத்துள்ள நற்கருத்தை
ஏற்றடி என்பேனே என்தங்காய்! -ஆற்றடி
மாற்றடி ஏழை மனத்துயரை வெண்பாவின்
ஈற்றடி இந்தா எழுது!

குறிப்பு:-
"வெண்பாவால் ஏழை மனத்துயரை ஆற்றவும் மாற்றவும் செய்க" என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்க.


அகரம்.அமுதா

வெள்ளி, 1 மே, 2009

பாட்டிற்கு ஒரு கோட்டை!

ஏடெடுத்து மக்கள் இடர்தீர் வகைபாடிப்
பீடெடுத்து நின்றான் பிறந்து!

கதைக்கும் பொருந்தும் கருத்திட் டிழிந்தோர்
பதைக்கும் கவிசெய்தான் பார்த்து!

மூடப் பழக்கம்முன் னேற்றத் தடையென்றுச்
சாடிச்சாக் காடீந்தான் சார்ந்து!

கடமையைக் கூடஅருங் காதலிற் சொன்னான்
மடமையை ஏறி மிதித்து!

திரைப்பாட்டிற் சுந்தரம்பொற் சின்னஞ் சிறார்க்கும்
உரைப்பாட்டுச் செய்தார்யார் ஒப்பு!

எதுவுடைமை என்றே அறியா தவர்க்கும்
பொதுவுடைமை சொன்னான் புரிந்து!

சின்ன வயதெனினும் செய்து திரைக்கீந்த
சின்னூறு பாட்டுஞ் சிறப்பு!

நாட்டிற் கொருகோட்டை நல்லரசு சுந்தரமே
பாட்டிற் கொருகோட்டை பார்!


அகரம் அமுதா

வியாழன், 30 ஏப்ரல், 2009

அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

மெய்போய் துளைத்திட்ட வில்லம்பால் தன்மகவும்
எய்போல் கிடக்குதென்(று) ஏற்றினாள் -ஐயமற
அன்னையவள் கூறுவமை ஆகினேன் ஐய!உம்
அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

அகரம்.அமுதா

சனி, 25 ஏப்ரல், 2009

அவள்!

மயில்நடை கற்க மரமடக்கம் கற்கக்
குயிலோ எனில்தேன் குரலே -பயில
முகில்வண்ணம் வேண்டி முறையிட மன்றல்
அகில்வேண்டி நிற்கும் அணங்கு!


அகரம்.அமுதா

திங்கள், 20 ஏப்ரல், 2009

சொன்னது நீதானா சொல்!

மௌனத்தால் கொன்றென்னை மௌனத்தால் வென்றென்னை
மௌனத்தால் நம்காதல் வாழவைத்தாய் -மௌனத்தால்
சொன்ன மொழிமாற்றித் தோகை உனைமறக்கச்
சொன்னவள் நீதானா சொல்!

அகரம்.அமுதா

புதன், 15 ஏப்ரல், 2009

உள்ளிருள் நீக்கும் ஒளி!

அடிதோய் இருளை அகற்றா விளக்கைக்
கடிதேற்றி வைப்பதனால் கங்குல் -மடிந்திடுமோ?
நள்ளிருள் நீக்குவது ஞாயிறாம்; தீங்குறளே
உள்ளிருள் நீக்கும் ஒளி!

அல்வழி நீக்கும் அறிவுசால் நல்வழியும்
இல்வழி வீடருளும் இன்குறளும் -சொல்வழி
தொல்லை பலநீக்குந் தொன்னூலாம் நாலடியும்
உள்ளிருள் நீக்கும் ஒளி!

தன்னை வருத்தித் தவங்கிடந்து பெற்றெடுத்து
உன்னை மடிசுமந்(து) ஓம்பிவளா் -தந்தையவா்
சொல்லுக் கிணையுண்டோ? தொல்லுலகில் வேறுண்டோ
உள்ளிருள் நீக்கும் ஒளி?


அகரம் அமுதா

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

இட்டவடி நோவும் அவட்கு!

சீர்பதி னைந்தும் அகவையாம் சேர்மோனை
மாராம் வழங்கெதுகை பின்னழகே நேர்தனிச்சீர்
கட்டழகுக் கூந்தல் கருதுதளை தட்டிவிடின்
இட்டவடி நோவும் அவட்கு!

நூலாடை யால்மேனி நோகும் எனத்தெரிந்தே
பாலாடை கட்டிவிட்டுப் பார்த்திருத்தேன்! -பாலாடை
பட்டவிடம் நோகப் பரப்பியப்பூ மெத்தையிலே
இட்டவடி நோகும் இவட்கு!


அகரம் அமுதா

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

உழவின்றி உய்யா துலகு (2)!

கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்;
தஞ்சைநிலம் எல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருந்தால்
உழவின்றி உய்யா துலகு!

பற்றாக் குறையென்றே பஞ்சப்பண் பாடுகிறார்;
முற்றாக நீரை முடக்குகிறார்; -அற்றார்
புழங்கவும்* நீர்வழங்கார் போக்கால் வயல்காய்ந்
துழவின்றி உய்யா துலகு!

வழங்கும் மனமின்றி வைத்ததனைக் காத்துப்
புழங்கும்* வகையறியாப் புல்லர் -முழக்கம்
பழுதன்றி வேறில்லை பாரதமே! காண்பாய்
உழவின்றி உய்யா துலகு!

வியலாய்* முகில்வழங்கும் நீரை வழங்க
வியலா தெனமறுப்பார் வீணர் -வயற்குக்
கொழுநீரும்* இன்றேல் கொழுவூண்றிக் கீறும்
உழவின்றி உய்யா துலகு!

புழங்குதல் -கையாளுதல்; வியல் -மிகுதி; கொழுநீர் -பெருகும் நீர்


அகரம் அமுதா

திங்கள், 30 மார்ச், 2009

உழவின்றி உய்யா துலகு (1)!

பலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்
நிலையால் பசிப்பிணியும் நீங்கிடுமோ? நாடி
உழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;
உழவின்றி உய்யா துலகு!

மாரி பொழிந்திட; மன்னன் குடிநடத்த;
வாரி வழங்குகையார் வந்தீய; -ஊரில்
இழவின்றி* யாவரும் ஏற்றமுற் றாலும்
உழவின்றி உய்யா துலகு!

வாழ வகையாய் வயலழித்து நாடாக்கிப்
பாழும் தொழில்பலவாப் பல்கிடினும் -கூழும்
பழஞ்சோறும் இன்றிப் பசிநீங்கா தென்றும்
உழவின்றி உய்யா துலகு!

சோலைகளைச் சாலைகளாய்த் தோற்றுவித்துப் பாலைகளை*
வேலைத் தளம்செய்யும் வீணர்களால் -நாளை
பழனம்* அழிந்து பயிர்செய் தொழிலாம்
உழவின்றி உய்யா துலகு!

இழவு -வறுமை, கேடு; பாலை -பயிர்த்தொழில் முடிந்தபின் தரிசாய்க் கிடக்கும் நிலம்; பழனம் -வயல்


அகரம்.அமுதா

புதன், 25 மார்ச், 2009

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அமெரிக்காவுடன் இந்தியா அணுவொப்பம் செய்தபோது:-

மின்சாரத் தேவைக்காய் மேற்கின் அடிவீழ்தல்
தன்மானப் போக்கா? தகுமோதான்? -நன்காய்ந்(து)
உணர்ந்தேயிவ் வொப்பம் உதவா தெனத்தேர்ந்(து)
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

நம்பி அவருறவை நாமேற்றுப் பின்னாளில்
வெம்பி விழுவதுவும் வேண்டாமே! -தெம்பால்
திணவெடுத்தத் தோளர்தம் தீயுறவுக் கஞ்சி
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

வல்லார் வகுத்ததே வாய்க்கால் எனவானால்
இல்லாரின் சொல்லோ எடுபடும்? -வல்லார்
பிணக்கின் இலார்க்குப் பெருந்துயரே மிஞ்சும்;
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

மேற்கு கிழக்கென்று மேதினியைத் துண்டாக்கி
மேற்கு கிழக்கையாள விட்டுவிட்டோம் -மேற்கை
இனியும்நாம் நம்பும் இழிநிலை ஏனோ?
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!


அகரம்.அமுதா

வெள்ளி, 20 மார்ச், 2009

ஒரு கொள்கையாளனின் குமுறல்கள்!

திரைகடல் ஓடியும்
திரவியம் தேடென்ற
பரம்பரைப் பாட்டிற்குத் தன்னை
பக்குவம் செய்து கொண்டு
இரவு பகலென்றும் பாராமல்
இனிதே உழைத்துயர
திரைகடல் கடக்கும்
தோழர்கள் ஏராளம்!

விழியில் எதிர்பார்ப் புக்களோடும்
வண்ணக் கனவுகளை
மொழியில் ஏற்றியும் வரும்
மனிதர் எண்ணிக்கை தாராளம்!

சூழ்கின்ற வறுமைக்கு மெல்ல
சூடுவைக்கும் நோக்கோடு
ஆழிதனைக் கடக்கும்
ஆடவரும் ஏராளம்!

ஒவ்வொரு குணவான்களும்
ஒன்றுசேரும் பாலைவனம்
வெவ்வேறு திசைப் பறவைகள்
வந்துபோகும் வேடந்தாங்கல்

காலும் அறையுமெனக்
காணிகள் இருந்தபோதும்
நாளும் அதையெண்ணி
நானும் நாடுகடந்தேன்

பாலும் தோற்கும் மனம்
படைத்த பெற்றோருக்காய்
வேலும் தோற்கும் அல்லி
விழித் துணையாளுக்காய்

சிந்திய வியர்வைத் துளிக்காய்
சிலநூறு கைக்குவரும் -அதைச்
சிந்தாமல் சிதறாமல் அனுப்ப
சிறகடித்துக் கடிதம்வரும்

தளிர்கள் அனுப்ப முகத்தில்
தழும்பேறி வரும்மடல்
குளிருக்கும் வெயிலுக்கும்அதுவே
குடையாய் எனைக்காக்கிறது

தொலைதூர உறவுகளுக்குத்
தகர்க்கப்பட்ட மனதினூடே
தொலைபேசி உரையாடல்
தேனினும் தமிழினும் இனிது

நலமா? சுகமா? என
நாலுவரி கேட்டுமுகக்
களையோடு கண்ணுறக்கம்
கனவுகளும் சிறகடிக்கும்

மலரெனப் பூக்கும்முகம்
மறுநாளே மாறிவிடும்
தளிரெனத் தழைக்கும் இன்பம்
தாரகையாய்ச் சிறுத்துவிடும்

களிறுடல் இளைத்துவிடும்
கனவுகளும் குறைந்துவிடும்
பிளிறுகின்ற யானைப்போலே
பாவிமனம் படுத்திவிடும்

காலமது எடுத்துச் சொல்லும்
கட்டளைக்கு அடிபணிந்து
நாளமதை முறுக்கேற்றி
நாளுமெனை வதைக்கின்றேன்

காலமது கறைந்தபின்னும்
கோலமது களையவில்லை
சாலளவு ஆசைகளோ -ஏழ்மைச்
சாக்கடையில் மூழ்கியதே!


அகரம்.அமுதா

ஞாயிறு, 15 மார்ச், 2009

அம்மாவுக்கு!

பத்துத்திங்கள் சுமந்தீன்று
பாசத்தைப் பொழிந்தஉன்றன்
கண்ணோரக் கதகதப்பில்
காலம்பல வாழ்ந்திருந்தேன்

சிறுவன்என் கைகளிலே
சிறகுகளைக் கட்டிவிட்டு
திரவியம் தேடிவரத்
திரைகடல் தாண்டவெச்சே!

தனிமரமா ஆகிவட்ட
தவிப்பினில் நானிருக்க
"மறந்துட்டியா?" என்றுகேட்டு
மடலொன்று வரைந்தவளே!

உதட்டோடு முத்தமிட்டு
உயிரோடு சேர்த்தணைத்துத்
திகட்டாத அன்புவெச்ச
தாயுன்னை மறப்பேனா?

தடத்தில்தாள் பதியாதுன்
தளிர்த்தோளில் தடம்பதித்து
நடைபயின்று நான்வளர்ந்த
நாட்களை மறப்பேனா?

வயிற்றினில் சுமந்துகொண்டே
வேலைவெட்டி செய்தஉன்னை...
வாயோடு வயிற்றைக்கட்டி
வளர்க்கப் பாடுபட்டஉன்னை...
காலங்கள் மறந்திடலாம்- என்றன்
நாளங்கள் மறந்திடுமா?
நெஞ்சமதை மறந்துவிட்டால்
நல்லகதி சேர்ந்திடுமா?

கடையாணி உடைந்துவிழ
கடைக்குட்டி வண்டிக்குக்கீழ
உடையாத மனமுடைந்து
மூர்ச்சையற்றுப் போனதந்தை

அறியாத சிறுவன்நான்
தெரியாமல் தவறுசெய்ய
திட்டினால் திருந்தேனென்று
தூணில்கட்டித் தோலுரித்தார்

கேள்விப்பட்டு ஓடிவந்து
"கோ"வென அழுதுகோண்டு
இரத்தக்கண்ணீர் வடித்தஉன்னை
இராக்கனவும் மறந்திடுமா?

பெற்றபிள்ளை அறிவுகெட்டு
பேசிய பேச்சையெல்லாம்
ஒற்றைநொடிப் பொழுதுக்குள்ள
பெற்றவள்நீ மறந்திடுவாய்...

அத்தனையும் கனவோடு
அம்புமழை பொழியுதம்மா...
நித்தநித்தம் நினைவிலாட
நித்திரையும் போனதம்மா...

"நான்பிறந்த அப்புறந்தான்
நெல்லுசோற்றைக் கண்டோ"மென்ற
தித்திக்கும் செய்திசொல்லி
திருட்டிசுற்றிப் போட்டவளே

நெல்லுசோற்றை விட்டுத்தள்ளு
நேசமனம் கொண்டவளே
நான்பொறந்த அப்புறம்நீ
நல்சோறு தின்றதுண்டா?

அறுவை சிகிச்சைசெய்து
அம்மாநீ கிடக்கயிலே
அன்புமுகம் பார்ப்பதற்கு
அருமைமகன் நான்வரலே

கருணையுள்ள தாய்மனசு
அதற்கும் கலங்கவில்லே
நினைத்தால் அழுகைவரும்
நதியூறும் கன்னத்திலே

மூன்று அகவையில்நான்
உன்நெஞ்சில் உதைக்கையிலே
உதைத்த காலைச்சுற்றி
முன்னூறு முத்தம்வைப்பாய்

பதினாறு அகவையில்நான்
படுத்திய பாவத்திற்குப்
பிணத்திற்கும் சாபம்சேரும்
பிணந்தின்னி விலகியோடும்

ஆத்தா! அடிஆத்தா!
நான்செத்தாக் கொள்ளிவை
முந்திக்கொண்டு போயிட்டின்னா
பெயரன்கிட்டச் சொல்லிவை!


அகரம்.அமுதா

செவ்வாய், 10 மார்ச், 2009

கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

மாந்தர் மனத்துன்கண் மாசைப் புறமகற்றி
ஆந்தனையும் ஒப்புரவை ஆங்கமைப்போம்; -சாந்தனையும்
உண்டிக்காய்ச் செய்தொழிலில் தாழ்வே(து) உயர்வேது?
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழியக்
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

ஆயிரமாய் நூல்தேடி அன்றாடம் கற்றாலும்
ஆய்ந்தறியாக் கல்வியினால் ஆவதுண்டோ? -தோய்ந்தறிவும்
நன்கமைய வேண்டின் நறும்பொருள் சேர்நூலைக்
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

தீய்க்குதென்பார் ஆளனிலார்; செக்க(ர்)வரப் பொய்மறைத்தே
மாய்க்குதென்பார் ஆளனுளார்; மாய்ப்பதுவும் -தீய்ப்பதுவும்
தண்ணுற்றே வானில் தவழும் தளிர்நிலவா?
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

துன்பத்தைக் கண்டு துவளாதே! காலத்தால்
இன்பத்தை நல்கி இடம்பெயரும்; -மண்பதையில்
விண்ணற்ற கொப்புலங்கள் வெள்ளணையப் பொய்மறையும்;
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!


அகரம்.அமுதா

வியாழன், 5 மார்ச், 2009

வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!


அகரம்.அமுதா --- பாவலர்.இறையரசன் --- கவிஞர். இறை.மதி

இருவரி தீங்குறட்(கு) ஏற்றி இவர்செய்
அரும்பொருள் கண்டுமிக ஆர்த்தேன் -விரும்பி
இறையரசன் பண்ணிலுரை ஈந்த முறைபோல்
திறம்படச் செய்தார்யார் செப்பு!

ஞாலத்தை நன்களந்த நாலடிமேல் மால்கொண்டு
கோலெடுத்துத் தீட்டிவிட்டார் கொள்கையுரை -சாலமில்லா(து)
ஓங்கு பகுத்தறிவை உள்வைத்(து) ஒலித்திட்டார்
மாங்கனியுள் சாறுள்ள வாறு!

பாராளும் முப்பாற்கும் பாகன்ன நாலடிக்கும்
பேராளும் பாட்டிலுரை பெய்திட்டார் -நேராய்
இறையரசன் செய்திட்ட இன்பணி போற்றி
உரையரசன் என்றே உரை!

சூழ்ந்த பகையால் துவண்டொழிந்து போகாமல்
ஆழ்ந்த கலைவளங்கள் அத்தனையும் -தோய்ந்த
அமுத மொழியாய் அகிலத்தில் வாழும்
தமிழ்போல் வாழ்க தளிர்த்து!

பல்லாண்(டு) அவர்வாழப் பண்ணாளும் பைந்தமிழ்ச்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே -இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்(க)!

அகரம்.அமுதா

சனி, 28 பிப்ரவரி, 2009

கதி -திக!

‘கதி’யென் றியம்புவார் கம்பனை; இந்தச்
சதிவீழ தக்கஉரை சாற்றிக் -‘கதி’யைத்
‘திக’என மாற்றித் திருக்குறட்பின் கம்பன்
தகுமெனச் சொல்வோம் தகைந்து!

எக்காலும் போற்ற எடுத்துரைத்தான் வள்ளுவர்ஓர்
முக்கால் அடியில் முதுமொழிகள் -எக்கவியும்
இக்கவிக்(கு) ஈடில் எனுங்கருத்தை மேடைதொறும்
மக்களுக்குச் சொல்வோம் மதித்து!

ஈந்தவனைப் பாடா தெலியோர் நலம்வாழச்
சாந்துணையும் நற்பாக்கள் சாற்றிவைத்தார் -வேந்தனையும்
பாட்டுக்குள் போற்றாப் பெருமதியோன் வள்ளுவரை
ஏட்டுக்குள் வைப்போம் இழைத்து!

செந்தமிழ் பெற்ற திருவாந் திருக்குறள்
எந்தமொழி பெற்ற திதுபோன்று -செந்தமிழர்க்(கு)
ஊனாகும் ஒப்பில் உயர்குறள் பூவிதழ்மேற்
தேனாகும் என்போம் தெரிந்து!

ஏடெடுத்த எண்ணில் எழிற்கவிஞர் எக்காலும்
பீடெடுத்து வாழ்ந்ததுவாய்ப் பேரில்லை -நாடெடுத்(து)
ஓதுகுறள் ஓதுவதால் ஓங்கும் அறிவெனிலோர்
தீதில்லை கண்டோம் தெரிந்து!



அகரம்.அமுதா

புதன், 25 பிப்ரவரி, 2009

உளறல்!

உளறல் எனுமோர் உயர்தமிழ்ச் சொல்லுக்(து)
உளநற் பொருளும் உரைக்கின் -குளறல்;
உதவாக் குழறல்; உரைதடு மாறல்;
பிதற்றல் எனலாம் பெரிது!

கட்டித் தழுவிநாற் கால்சேர யாக்கையிரண்(டு)
ஒட்டி உறவாடி உய்கையில் -மெட்டி
தளர்ந்து தவித்துத் தளிர்க்கொடியாள் செப்பும்
உளறல் மொழிக்குண்டோ ஒப்பு?

அகரம்.அமுதா

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வீணை வருடும் விரல்!


காலத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
ஞாலத்தை ஆள்கணினி நற்பயன்மேல் -மாலுற்றே
காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
வீணை வருடும் விரல்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

துன்பத் தீர்ப்பு!

(திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டபத் தீநேர்ச்சியில் வாழ்விழந்த மணப்பெண் சுபஸ்ரீயின் நிலைநின்று எழுதியது!)

திருமணம் என்னும் தேரில் ஏறுமுன்
தீக்குழி மூழ்கிய நிலவுயிவள்!
நறுமணம் வீசுமுன் நாராய்க் கிழிந்த
நிமலன் தோட்டத்து மலருமிவள்!

செண்டுகள் சூடியப் பெண்டிவள் வாழ்வும்
சதுரங்க மேடை ஆகியதே!
அன்றொடு தலைவன் தலைதகர்ந் தேகினும்
சதுரங்க ஆட்டம் தொடர்கிறதே!

விழியில் தீட்டிய மையின் அளவோ
மேக மந்தையின் ஒருபாதி!
விழிகள் ஊற்றியக் கண்ணீர் மட்டும்
சிரபுஞ்சி மழையில் சரிபாதி!

ஜதிகள் போடும் சலங்க சோகச்
சாசனம் எழுதி வாசிக்கும்!
திதியும் வைப்பதோ திருமண நாளில்
இந்நிலை வேண்டாம் வேசிக்கும்!

சதியே செய்யும் விதியே! என்னை
சந்தித்த வேளை சரிதானா?
விதியைத் தலையில் எழுதிய இறைவன்
விதிக்குத் தப்பித் திருப்பானா?

அகரம்.அமுதா

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஊதிவத்தி!

வேர் கிளை
இலை விடாத
விருட்சம் நீ...

உன்
வெள்ளை விழுதுகளோ
வான்நோக்கி எழுகின்றன...

நீ பூத்தநெருப்பில்
மணம் அவிழ்கிறது
எந்த வண்டிற்காக?

விழிப்பில் கறைகின்ற
கனவுபோல
காற்றில் கறைகிறது
நீ பரப்பும் மணம்!

மலரிதழ்கள் அல்லாத
மகரந்தம் தாங்கிய
மலர்க்காம்பு நீ...

புகை ஓவியம் தீட்டும்
அதிசயத் தூரிகை...

குறள் வெண்பாவினும்
குறுகிய வெண்பா...

எந்த மீன்களுக்காய்
நீ
புகைத் தூண்டில்
வீசுகிறாய்?

நீ
நின்று தவமிருக்க
சாம்பல் புற்று
உன்னை
முழுமையாய்ச் சூழ்ந்து
முற்றுகையிடுகிறதே!

உனக்குப்
பலரறிய அவையில் வைத்துத்
தீ மகுடம்
சூட்டுகிறோம் நீயோ
கூந்தல் அவிழ்க்கிறாய்
திரௌபதியைப் போல...

அகரம்.அமுதா

வியாழன், 5 பிப்ரவரி, 2009

சுவடுகள்!

இலக்கின் காற்புள்ளி...
இலட்சியத்திற்கு
பிள்ளையார் சுழி...
========
========

தூரிகையின்றித்
தீட்டிய ஓவியம்...
மையூற்றாமல்
மெய்யெழுதும் காவியம்...
========
========

பயண அஞ்சல்
இலக்கை அடைய
அஞ்சல் தலையும்...
அதிலிடும் முத்திரையும்...
========
========

பாதப் பதிப்பகம்
வெளியிடும் பதிப்பு...
பாதைகள் எல்லாம்
நூல்களின் தொகுப்பு...
========
========

இளமையின் மீது
நம்பிக்கை வைத்து
இலக்குகளை
ஊதியமாய் வழங்கும்
பயணங்கள்
முதுமையிடம் மட்டும்
ஊண்று கோல்களின்
சாட்சிக் கையொப்பத்தையும்
கேட்டுப் பெறுகிறது...!

அகரம்.அமுதா

வெள்ளி, 30 ஜனவரி, 2009

பூங்கா!

நரகத் திடையே
துறக்கம் போல
நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
சிரிக்கும் பூக்களைத்
திருடா திருக்கத்
திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்!

சின்னப் பூக்கள்
சிரிக்கும் அழகில்
சிந்தும் தேனின் சுவைகண்டு -இதழ்க்
கன்னம் வைத்துக்
கவின்மலர்த் தேனைக்
கவர்ந்து போகும் பொன்வண்டு!

திங்கள் தவழும்
தென்றல் உலவும்
சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
தங்கும் பூங்கா
தன்னைச் சார்ந்து
தங்கிக் களிப்பார் தனிமையிலே!

விரித்த பாய்போல்
விளங்கும் பாதை
விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
இருக்கும் மனம்விடுத்(து)
இடையிடை மறைவில்
இருக்கும் வகையால் உளமுவக்கும்!

அமைதி தேடி
அலையும் கூட்டம்
அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
அமைதி தேட
அமைத்த பூங்கா
அமைதி இழந்து தவிக்கிறது!

மாலை வந்தால்
மக்கள் வந்து
மலிவார் அமைதிப் பறிபோகும் -சிலர்
மாலை வந்தால்
மனத்துயர் விடுத்து
மறுபடி கிளப்ப இரவாகும்!

பின்னல் தலையில்
பிஞ்சுப் பூக்கள்
பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
புன்னகை சிந்தும்
பூக்களை மெல்லப்
பூவிரல் நாடிப் பறிக்கிறது!

சிரித்து மகிழ்ந்து
சிலபொழு திருந்து
செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
வருத்தும் நினைவின்
வளர்முளை கிள்ளி
மறக்கச் சிலபேர் வருகின்றார்!

போகாப் பொழுதைப்
போக்கித் தொலைக்கப்
பூங்கா சேரும் சிலருண்டு -உடல்
வாகாய் விளங்க
வடிநற் காற்று
வாங்க வருவார் சிலருண்டு!

முந்தியை விரித்து
மூலையில் படுத்து
மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
குந்திய இடத்திற்
கொஞ்சிக் குலவிக்
குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்!

ஓவ்வொரு மரமும்
ஓவ்வொரு கல்லென
உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
அவ்வவர் துணையொடு
அண்டிக் களித்து
அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்!

கொணர்ந்த பொருளைக்
குதப்பித் தின்றுக்
குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
மணக்கும் பூங்கா
மணத்தைக் குளைக்க
வாயிற் புகையொடு சிலர்வருவார்!

நகைக்கும் பூங்கா
நாடி மகிழ்ந்து
நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
புகைக்கும் அரங்கெனப்
புகைத்தாற் பூங்கா
புகழ்தனை இழந்து காடாகும்!

விழுப்ப மெல்லாம்
விளங்கும் ஒழுக்கம்
வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
ஒழுக்கக் குறைகள்
ஒழித்து விழுப்பம்
உயர்ந்து விளங்க யார்காவல்?

சீருடை அணிந்த
சிறார்கள் போலச்
சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
பேருடை தன்னின்
பெரும்புகழ் குறைத்தல்
பிழையெனச் சாடி முடிக்கிறது!


அகரம்.அமுதா

செவ்வாய், 20 ஜனவரி, 2009

அகவற்பா!

"தருமபுரத்தில் மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: கவச பீரங்கி ஊர்தியை களத்தில் இறக்கினர் புலிகள்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்"

-செய்தி- 19/1/2009

கொக்கென நின்றாற் கொத்துதற் கன்றோ
பொக்கெனச் சிரித்துப் பொருதுதல் நன்றோ
கொணர்ந்த கருவியைக் கொடுத்துப்
பிணமாய்ச் சாயும் பெருமைசிங் களர்க்கே!


பொருள்:-
ஆடாதும் அசையாதும் தூண்போல் கொக்கு நிற்பது ஓடுமீன் ஓட உருமீன் வரவுக்காக அல்லவா! கொக்கின் அத்தன்மையைச் சிரித்து வம்பளத்தல் மீன்களுக்கு நன்முடிவாக அமையுமா என்ன? இறுதியில் மீன் அழிவது உறுதியன்றோ! எதிரியை வீழ்த்த ஏந்திய போர்க்கருவியை எதிரியின் எதிர்ப்பைக் கையாள முடியாது தோற்று எதிரியின் கைகளில் போர்க்கருவியையும் அவர்காலடியில் தன் உயிர்விட்ட உடலையும் ஒப்படைக்கின்ற பெருமை இவ்வுலகில் சிங்களர்களுக்கு மட்டுமே உண்டு.

தற்காப் புணர்ந்து தானாய் அகல
முற்போய் வென்றதாய் மொழிவீர் கேள்மின்
இடுமயி ராலெழு மெழிலே
நெடுமயி ரெழிலின் நேரெனல் நகையே!


பொருள்:-தற்காத்துக் கொள்வதற்காகப் பின்வாங்கியோரை நேரெதிர்த்து வென்று இடங்களை மீட்டதாய்ச் சொல்லும் சிங்களரே! கேளுங்கள். செயற்கையாகப் பொருத்தப் பட்ட இடுமயிரால் உண்டாகும் அழகு, இயற்கையாக நீண்டு வளர்ந்த கூந்தலின் அழகிற்கு நிகரானது என்பது சிரிப்பிற்குறிய செயலாகும்.
(அத்தகைய தன்மையுடையதே தங்களது வெற்றியும் என்றதாம்.)

தீட்டுங் கருவியும் தீட்டா மதியும்
வாட்டுமென் றறியா வழுவுடைச் சிங்கள!
மாற்றான் கொடுத்த மதியால்
ஏற்றம் எட்டுணை என்பது மிலதே!


பொருள்:-
பட்டை தீட்டப்பட்ட கூர்மையான கருவியைச் செலுத்துதலும், பகுத்தாயும் பட்டறிவில்லாக் குறையறிவைப் பயன்படுத்திச் செயலில் இறங்குவதும் இரண்டுமே ஒருசேரத் துன்பம் தருவன என்பதைக் கூடப் பட்டறியும் அறிவில்லாத சிங்களரே! மூளையைப் பயன்படுத்தும் ஆற்றலில்லாதோர்க்கு வேற்று நாட்டுப்படைகள் கொடுக்கும் போர்முறையால் எள்ளளவும் முன்னேற்றம் அடைவதரிது என்பதை அறிவீராக.

புற்றீசல் போல்உம் புறப்பா டெனினும்
வெற்றீசற் கியாரே வெருளுவர் விதிர்ப்பர்
கற்றூண் அஞ்சா கரந்துறை
புற்றர வஞ்சும் புயலிடி தனக்கே!


பொருள்:-புற்றீசல் படையெடுத்தால் அஞ்சி நடுங்குவர் உளரோ? அத்தகையதே உமது படையெடுப்பு. பெருமழையினூடு பேரிடி வீழின் பாதுகாப்பு நிறைந்த புற்றில் வாழ்ந்தாலும் பாம்பு அஞ்சவே செய்யும். மாறாகப் பாதுகாப்பில்லாது தனித்துநிற்கும் கற்தூண் ஒருபோதும் அஞ்சாது.

பின்னடை வென்னும், பிதற்றும், பெரிதும்
முன்னடை வென்னும், முனையும், முனிவுறு
களிற்றின் கையுறு கதலியாய்
நளிவிழந் துழன்று நமனிடஞ் செலவே!

பொருள்:-
புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்பார். அதனையே தொடர்ந்து பிதற்றவும் செய்வார். தமக்கே முன்னடை வென்பார். மேலும் முன்னேற ஊக்கங்கொள்வார். இம் முன்னகர்வு எதற்காகவெனில் சினத்தின் மிகுதியால் பெருமரத்தையே பிடுங்கும் ஆற்றல் படைத்த மதயானையிடம் அகப்பட்டு சீரழியும் வாழைமரம் போலத் தம்படையின் செறிவிழந்து, நிலைகுலைந்து, உயிர்விட்டுக் காலனிடம் செல்வதற்காகவே இத்தனை ஆரவாரமும் செய்கிறார்.

அகரம்.அமுதா

புதன், 14 ஜனவரி, 2009

நேர்காணல்!

(நான் வெண்பா எழுதக்கற்றுக் கொண்ட புதிதில் எனக்கெழுந்த ஐயங்களை வெண்பாவில் வினவியதும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்கள் வெண்பாவில் விடையறுத்ததும்!)

கேள்வி:-
ஊரோடே ஒப்புரவாய் ஒன்றிக் கிடவாமல்
பேரார் தனித்தமிழைப் பேசுகிறீர் -காரேபோல்
நெஞ்சிருண்ட நீசர்கள் நிந்திக்கும் வாய்ச்சொல்லுக்(கு)
அஞ்சா(து) அருவியென்(று) ஆர்த்து!

பதில்-
காகம் கணக்கில்லைக் காசினியில்; கண்ணுடைய
தோகை விரிப்பதெது தொல்புவியில்? -மேகமதைக்
கண்டாடும் மாமயில்போல் கன்னித் தமிழனங்கைக்
கொண்டாடல் எம்முடைய கோள்!

கேள்வி-
தோகை மயிலுக்கோ சோறிட்டு வைக்கின்றார்?
காகத்திற்(கு) ஈந்தன்றோக் காக்கின்றார்? -தோகையில்லா
காகமதே ஒற்றுமைக்குக் காசினியில் ஏற்றயின
மாகவன்றோ போற்றிடுகின் றார்?

பதில்-
இரப்பார்க்கொன் றீயார் இரும்பு மனத்தார்;
கரப்பார்க் கிரங்கிக் களிப்பார்; -மரப்பாவை
காக்கைக்(கு) உணவீந்து கண்ணவிவார்; மாந்தரைப்போல்
யாக்கை எடுத்த விலங்கு!

கேள்வி-
பூவனையச் செந்தமிழைப் போற்றிக் களிப்பதனால்
ஆவதென்ன? வேற்றுவரின் ஆங்கிலமோ -டேவடவர்
தாய்மொழியும் வந்து தமிழில் கலப்பதனால்
தாழ்வேதும் வந்திடுமோ தான்?

பதில்-
காற்றில் கரிகலந்தால் காயம் கெடுமன்றோ?
சோற்றோடு கல்லைச் சுவைப்பீரோ? -ஏற்ற
அமுத மொழியிருக்க ஆங்கிலத்தோ டாரியத்தை
நமதாக்கல் நன்றோ நவில்!

கேள்வி-
அழியாத் தமிழை அகிலத்தே நாட்ட
வழியுண்டோ? செய்யுள் மரபைப் -பழிக்கும்
புதுக்கவிதைப் பாரில் புரையோடல் போக்கி
சதுராடிச் சாய்க்கவழி சாற்று!

பதில்-
முறையாய்த் தமிழறியா மூடர் புதுக்கவிதைக்
கறையானின் புற்றாய், களராய் -நிறைவதனால்
செந்தமிழுக் கென்ன சிறப்புண்டு? வெந்தவிதை
எந்தநிலம் ஏற்கும் இயம்பு?

கேள்வி-
பட்டுபோற் செய்யுள் பலநூறு யாப்பதனை
இட்டமோ டேற்றீர் இருக்கட்டும் -மட்டமா
என்ன புதுக்கவிதை? யாண்டுமதை ஏற்காமல்
திண்ணமோ(டு) ஏன்எதிர்க்கின் றீர்?

பதில்-
மட்டமோ? மேலோ? மரபோ? புதுவரவோ?
திட்டுவதென் நோக்கில் தினையில்லை -சட்டமிடா(து)
எப்பொருளும் வாழும் இயல்பில்லை என்பதைத்தான்
செப்புகிறேன் செம்பொருளைச் சேர்!

நான்:-புவியரசே! பூந்தமிழைப் போற்றுகின்ற சிங்கைக்
கவியரசே! கன்னற் கனிச்சொற் - சுவையரசே!
சேய்யான் தெரியாமற் செய்யும் பிழைபொறுக்கும்
தாயாம்நீர் சொன்னால் சரி!

அகரம்.அமுதா

வெள்ளி, 9 ஜனவரி, 2009

இனியும் பொறுத்தல் இழுக்கு!


எலிகள் எதிர்த்தா இமயம் சரியும்
புலியே விரைவாய்ப் பொருது!

வாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு
வீழ்ந்திடினும் பேறாம் விரும்பு!

சிறப்பே வரினும் சிறுமையுறாய்; சிங்களரை
இறப்பே வரினும் எதிர்!

இறுதி வரினும் எதிர்கொள்வாய்; ஈழம்
உறுதி எனப்பொரு(து) ஊர்ந்து!

நூற்றுவரை ஐவர் நுதிவென்றார்* சிங்களராம்
கூற்றுவரைத் திண்மதியாற் கூறு!

கனியும் பொழுதென்று காவாய்; துணிவாய்
இனியும் பொறுத்தல் இழுக்கு!

நஞ்சும் படையாய் நடைசெயினும் மோதா(து)
அஞ்சும் படையா அவண்!

கடுப்பைக் கிளப்பிக் களிக்கின்றார் கீழோர்
இடுப்பை ஒடித்தல் இசை!

கவலை அளிக்கிறதே! கண்ணிரொடு செந்நீர்த்
திவளை தெரிக்கிறதே சேர்ந்து!

செந்தமிழ் நூற்களைத் தீக்கீந்த சிங்கள
மந்திகளின் மார்பிளத்தல் மாண்பு!

அருஞ்சொற்பொருள்:-

நுதி -அறிவுக்கூர்மை(நுதிவென்றார் -அறிவுக்கூர்மையால் வென்றார் (மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் தொகைநிலை), அவண் -அவ்விடம், கண்ணிரொடு -கண்ணீரோடு (காய்ச்சீர் நோக்கிக் குறுகிற்று)

அகரம்.அமுதா

புதன், 7 ஜனவரி, 2009

தமிழன் துணிந்தால்...!

தனக்கென்று நாடொன் றில்லாத்
      தமிழனே! இன்னல் என்ப(து)
உனக்குற்றால் அன்றி நெஞ்ச
      உணர்வுறா உயிர்ப்பி ணம்மே!
கணக்கற்றோர் ஈழ நாட்டிற்
      களங்கண்டுச் சாகும் போதும்
‘எனக்கென்ன?’ என்று நீயும்
      இருப்பதே மாட்சி யாமோ?

நம்மினம் உரிமை யற்று
      நளிவெய்தித் தாழக் கண்டும்
நம்மினம் இடமொன் றின்றி
      நானிலம் அலையக் கண்டும்
நம்மினம் வாழ்க்கை யற்று
      நமனிடஞ் சேரக் கண்டும்
கம்மென இருப்ப தாநீ?
      கண்ணில்தீ கனலச் செய்வாய்!

தமிழரென் றினமொன் றுண்டேல்
      தனியவர்க் கோர்நா டெங்கே?
தமிழரென் றினமொன் றுண்டேல்
      தனித்தமிழ் ஆட்சி எங்கே?
தமிழரென் றொன்று பட்டுத்
      தனியீழம் பேணு கின்றார்
தமிழரென் றுணர்வுண் டென்றால்
      தகைந்*தவர்க் குதவ வேண்டும்!

குமிழினம்* ஒன்று பட்டால்

      குடிகொளும் வங்கம் என்றால்
துமியினம்* ஒன்று பட்டால்
      தோன்றும்பா கிசுத்தான் என்றால்
உமியினம் ஒன்று பட்டால்
      உயிர்பெரும் இசுரேல் என்றால்
தமிழினம் ஒன்று பட்டால்
      தரணியே கைவ ராதா?

துயில்சேயுங் கிள்ளி விட்டுத்
      தொட்டிலும் ஆட்டும் வஞ்சம்
பயில்நெஞ்சத் திந்தி யாதன்
      படைவலி இலங்கைக் கீந்தும்
இயம்பிடும் ‘பேசித் தீர்ப்பீர்!’
      எந்தமிழ் இனத்தைக் கொல்ல
முயன்றெம்மின் வரிப்ப ணத்தில்
      முடிக்கிறார் தடுத்தோ மாநாம்?

இழுதை*போல் இன்னல் செய்தே
      இன்புறும் கீழ்ம னத்தர்
கழுதைபோல் உதைத்த போதும்
      கலங்கிடா உரனும் பெற்றோம்!
பழுதை*போல் கடித்த போதும்
      பதுங்கிடோம்! தடைகள் இட்டுப்
பொழுதையார் நிறுத்தக் கூடும்?
      புலிக்குமுன் பூசை ஒப்பா?

பொடாச்சட்டம் பொருதும் போதும்
      புத்தீழம் புலரக் காண்போம்!
தடாச்சட்டம் தாக்கும்போதும்
      தனியீழம் தழைக்கச் செய்வோம்!
இடாச்சட்டம் எதிர்த்த போதும்
      இனிதீழம் எழுக என்போம்!
எடா!*சட்டம் என்ன செய்யும்?
      இன்றமிழன் துணிந்தா னென்றால்!


அருஞ்சொற்பொருள்:- தகைந்து -துணிந்து; குமிழ் -நீர்க்குமிழ்; துமி -நீரின் நுண்துளி; இழுதை -பேய்; பழுதை -பாம்பு; எடா -ஏடா என்ற விளியின் குறுகல்


அகரம்.அமுதா!

திங்கள், 5 ஜனவரி, 2009

பாவலர் இறையரசன்!


அகரம்.அமுதா + பாவலர் இறையரசன்
பாவலர் எனக்கு யாத்த வெண்பா!

வேங்கையின் வால்பிடித்தல் வெண்பா எழுதலென்பார்!
பாங்குடன் அப்பாப் பயிற்றுவிக்க -ஈங்குலகில்
வெல்லுங் கணினிவழி வென்ற அமுதாவே
வெல்நா லடிப்பா வியந்து!

பாவலருக்காக நான் யாத்த அறுசீர் விருத்தம்!

இலஞ்சியெழும் இளங்குவளை எழில்பழிக்கும்
        இருகண்கள் இழைத்த பார்வை
பொலஞ்சிறைப்புள் ளரசெனவே பொலியுமுறிப்
        புன்னகையோ புரிமின் னற்கீற்(று)
அலங்கலுறு நனைமலராய் அலர்மீசை நன்நெஞ்சர்,
        அமிழ்தனையர் அவர்தந் சீரிற்
புலர்ந்துவரும் பூங்கவிக்குப் புயல்வானிற்
        பொலிகதிரே பொருவாங் கண்டீர்!

அணிவகைகள் அணிவகுக்க, அம்பொருவும்
        பொருத்தென்ன, அமைய மையென்(று)
அணங்கெதுகை மோனைமுரண் அடிதோறும்
        இழைதொடையும் அடம்பி டிக்க
நணியிருந்து செம்பொருளும் நன்கமைய
        இறையரசர் நவிலும் பாட்டில்
உணர்விழப்பர், உளங்களிப்பர் ஒண்புலவர்;
        மாற்றமெதும் உரைப்பார் உண்டோ?

அருஞ்சொற்பொருள்:-பொலம் -பொன், சிறை -சிறகு, புள்ளரசு -பருந்து, பொலிபார்வை -விலங்குகின்றபார்வை (பொலிதல் -விலங்குதல், சிறத்தல்), முறி -தளிர்; புரி -சுருள், இலஞ்சி -வாவி, அலங்கல் -பூமாலை, நனை -தேன்,

பொரு -உவமை, அணங்கெதுகை -வருந்தெதுகை(அணங்குதல் -வருந்துதல்), நணி -அணிமையான,

அகரம்.அமுதா!

சனி, 3 ஜனவரி, 2009

உய்யும் தமிழினமென் றோர்!

எதிர்வரும் 2009பிப்ரவரி 9-ம் நாளுக்குள் பிரபாகரனைப் பிடித்துவிடுவோம். -ராசபக்சே


-செய்தி- 2/1/2009


ஈழமா மங்கை எழிலாள்மேற் காதலுற்ற
வேழமே! விட்டில் வெரும்படை -சூழமாத்

தீச்சுடர் நாணுமா? செய்யும் புதுக்கவியால்
வீச்சுடைப் பாமரபு வீழுமா? -மாச்சுதை*

பிள்ளைச் சிறுகைக்குப் பேர்ந்திடுமோ? பேச்செனுங்
கிள்ளையது பூசை*வரக் கீச்செனுமே! -ஒள்ளொளி*

மிக்கதோர் சூரியனை வீழ்த்திட நக்கியுண்ணுங்
குக்கலால்* ஆமென்றாற் கொள்வரோ? -பக்கலிற்*

காணுங் கனவாற் கதையாமோ? திண்ணைவாழ்
வீணர் உரையால் விளைவதென்ன? -பேணும்

பொருவிற்* றமிழ்மேற் பொருதும் வடவர்
திருவில் மொழியாய்ச் சிறியர் -பொருதிடினும்

வெற்றி உனதன்றி வீணர்க் கமையாதே!
சற்றும் எலிப்படைபார்த் தஞ்சுமா -புற்றரவு?

ஆற்றைத் தளைகொள்ள ஆகலாம் வீசுபுயற்
காற்றைத் தளைகொள்ளக் கற்றவர்யார்? -கூற்றிற்கே

நாட்குறித்தாற் கூடி நகையாரோ நானிலத்தார்?
தேட்கொடுக்கிற் கைவைக்கச் சேர்ந்தவர்யார்? -வாட்பிடியை

விட்டு நுனிவாள் விரும்பிப் பிடித்திடுவார்க்(கு)
எட்டுணையும்* வெற்றி எழுந்திடுமோ? -முட்ட

வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடும்
இழுக்குடையார் எங்கும் இருப்பர் -சழக்கடையாய்!*

நொச்சி*யது போய்விடினும் நோவில்லை முல்லை*யுண்டு
கச்சையது போயினுமென் கைகளுண்டே -அச்சமிலை

தெய்வம் இருக்குதெனத் தேர்ந்து வருங்காலம்
உய்யும் தமிழினமென் றோர்!

அருஞ்சொற் பொருள்:-சுதை -மின்னல்; பூசை -பூனை; ஒள்ளொளி -மிகுந்தஒளி; குக்கல் -நாய்; பக்கல் -பகல் என்பதன் நீட்டல் விகாரம்; பொருவில் -உவமையில்லாத; எட்டுணையும் -எள் துணையும் (புணர்ச்சியான் இயன்றது); சழக்கு -தளர்ச்சி; நொச்சி -கிளிநொச்சி; முல்லை -முல்லைத்தீவு .

அகரம்.அமுதா!

வியாழன், 1 ஜனவரி, 2009

நேர்காணல்!

முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டிய சிறப்பு நேர்காணல்!

நேர் காண்பவர்:- அகரம்.அமுதா


ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்
சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ!
-மாற்றுநீர்
முந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்
பின்பற்று கின்றோம் பெரிது!

கள்ளுக் கடையை அரசுடைமை ஆக்கினீர்
பள்ளிகளை ஆக்காப் பரிசென்ன?*
-கள்ளுக்
குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்
குடிமகனாய் வாழ்தல் குறை!

கோடியிலே நீன்றீர் கொடிபிடித்துக் கோல்*பிடித்துக்
கோடிகளைச் சேர்க்கும் கொடுமையென்ன?
-கூடடைந்து
தேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ!
நானுமதைச் செய்தேன் நயந்து!

திட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்
சட்டங்கள் ஏனிங்கே சல்லடையாய்?
-கொட்டமடித்(து)
ஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி
தேடி அமைத்த திவை!

"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்
திரைவாழும்" என்றவர்யார் செப்பும்!
-உரைக்குங்கால்
தாழுமென் றெண்ணித் தவிப்பதேன்? நன்றாய்நான்
வாழத் தமிழ்வாழும் வந்து!

தமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)
அமிழ்வதேன் ஆங்கிலத்தை அண்டி?
-நமக்கெதிரி
இந்தியன்றி ஆங்கிலம் இல்லையப்பா! ஆங்கிலத்தில்
சிந்திக்கின் சேரும் சிறப்பு!

நாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்
தாய்மொழியோ நாய்மொழிபோல் நாறிடுதே!
-தாய்மொழியாய்
ஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்
நீங்கிவிடும் இந்த நிலை!

சன்டி.வி யார்டி.வி? என்டி.வி உன்டி.வி
என்றடித்துக் கொள்ளும் இழிவுமேன்?
-பொன்முட்டை
போடுகிற வாத்தப்பா! போக விடலாமா?
கூடும் வரைகறத்தல் கோள்!

தொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்
அலைக்காட்சி காண்பதென்(று) ஆங்கே?
-உலைக்கரிசி
ஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்
மற்றதைப் போவார் மறந்து!

திரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்
தரவு*ண்டோ சொல்வீர் தகைந்து!*
-திரவிடம்
பேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்
வேசியே போலும் விரைந்து!

கொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்
கொள்கை உமக்குமெனக் கொள்வதுண்டா?
-கொள்கையெலாம்
தொண்டர்க்கே யன்றித் தொகுத்த த
லைவனுக்கும்
உண்டென்பார் யாரே உரை!
தீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்
கூட்டிணி வைத்தலுமோர் கொள்கையோ?
-கூட்டணியே
கொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்?
கொள்கை புதையின் குழி!

வாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)
ஏக்கமுறச் செய்தல் இசையாமோ?
-வாக்கிற்கு
வாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்
மேற்கொண்டு கேட்பதெல்லாம் வீண்!


இன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்?
ஒன்னுமா* இந்த உணர்வலைகள்?
-என்னபண்ண?
வண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு
நண்ணுவார்* இந்த நகைக்கு!

வேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்
யோசனையென் நாட்டின் உயர்வுக்கு?
-யோசனையா?
சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
தேதிக் கொருகட்சி செய்!


புற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்
உற்றிடுமோ இந்நா(டு) உயர்வனைத்தும்? -அற்றமறந்(து)
ஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்
தீங்கிலை நாட்டிற்கு தேர்!

மத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்?
நத்திப் புலி*க்காய் நவிலீரோ?
-சித்தம்*
பரிசுவரும் என்றால் பணிப்பேன்*; பணிக்கேன்*
துரிசு*வரும் என்றால் துணிந்து!

ஈழம் தமிழர்க்கே என்றெடுத் தோதாமல்
மேழம்*போல் ஏன்வெறும்வாய் மெல்லுகிறீர்?
-ஏயம்*
எனக்கருதி விள்ளா* திருந்திட்டேன் நீயும்
‘எனக்கென்ன?’ என்றே இரு!

ஐந்துமுறை ஆண்டும் அலுப்பிலையோ? நாடிதனை
ஐந்நூறும் ஆளும் அவாஉண்டோ?
-பைந்நிறைந்தும்
நெஞ்சு நிறைவில்லை நேரெனக்குப் பின்னென்றன்
சந்ததியும் நாடாளும் சார்ந்து!

நக்கல் நயப்பேச்சும் சிக்கல் செழும்பேச்சும்
மிக்குடையாய்! வாழும் மிடுக்*குரை!
-மக்களாம்
மந்திகளால் வாழும் வகையுற்றேன் வேறென்ன?
தொந்திவளர்க் கின்றேன் தொடர்ந்து!

அருஞ்சொற் பொருள்:-

நொதிப்பழச் சாற்றுநீர் -பழங்களை நொதிக்கவைத்து உண்டாக்கும் பழக்கள்; பரிசு -பண்பு; கோல் -செங்கோல்; தரவு -இலாபம்; தகைந்து -துணிந்து; ஒன்னுதல் -பொருந்துதல்; நண்ணுதல் -பொருந்துதல்; புலி -விடுதலைப் புலிகள்; சித்தம் -திண்ணம்; பணித்தல் -ஆணையிடுதல்; பணிப்பேன் -ஆணையிடுவேன்; பணிக்கேன் -ஆணையிட மாட்டேன்; துரிசு -துன்பம்; மேழம் -ஆடு; ஏயம் -தள்ளத்தக்கது; விள்ளுதல் -சொல்லுதல்


அகரம்.அமுதா

கல்!

குழவியில்கல்; கோள இளமையில்கல்; கோலூன்
கிழமையில்கல்; நூல்பல தேர்ந்து -முழுவதும்
கல்;ஆர்த் திராப்பகல் காணா தியன்றுகல்;
கல்லாதான் காயமோர் கல்!


அகரம்.அமுதா!