இன்னிசை வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்னிசை வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 நவம்பர், 2008

வாழ்த்தும், ஏற்பும்!


யர்திரு நெல்லைக்கண்ணன் அவர்கள் என் வலைப்பூவைப் படித்து என்னைப் பாவால் பாராட்டியமையும் அதனை ஏற்று நான் பதிற்பா வடித்தமையும்.


வெண்பாவில் விளையாடும் உங்களையே
      வியப்போடு பார்க்கின்றேன் நலமே சேர்க
கண் போல தமிழ் உங்கள் துணையிருக்க
      கணக்காக வெண்பாவில் ஆடுகின்றீர்
பெண்ணாரே வெற்றியெல்லாம் உங்களுக்கு
      பிறை நுதலான் தந்து நிற்பான் வெல்க நீரே
பண்பாரே போற்றுகின்றேன் உம்மை எந்தன்
      பைந்தமிழால் புகழேந்தி போல வெல்க!

அன்புடன் நெல்லைக்கண்ணன்

இனி என் பாடல்:-

வழக்கம்போல் வந்து மடிக்கணினி ஏந்தித்
தயக்கமாய்ப் பின்னூட்டம் தான்பார்த்தேன்; ஆ!ஆ!ஆ!
என்ன வியப்பிதுவோ? என்கண்பொய் சொல்லியதோ?
சின்னவன் கூட்டிற்கு மன்னவனா வந்து
மலர்தூவி வாழ்த்தியது!? மாலைப் பொழுதா

அலரா முகையை அணைத்துப்பா ராட்டியது!?
மேகமா கானலை மெத்தப் புகழ்ந்தது!?
காகமாம் என்னைக் கருதியதோ பூவை!?
பழுத்தப் பழமா படுபிஞ்சை நாடி
வழுத்தி விருத்த வகைசெய் துவந்தது!?

நெல்லைக் கடலிந்த நெத்திலியை வாழ்த்தியதை;
வெள்ளி உவந்தெழுத்து விட்டிலை ஏற்றியதை;
கூரை ஒழுக்கைக் குலவருவி கொஞ்சியதை;
ஊரை எழுப்பியுரைத் தாலும்ஊர் ஒப்பாதே!
ஆகா! பயன்செய்தேன் ஆர்க்கும் தமிழ்க்கடலே

பாகாய் உவந்துருகிப் பாராட்டும் போழ்தினிலே!
மானென்றே எண்ணி மறுமொழி இட்டிருந்தீர்
ஆணென்பேன் என்னை அகவையிறு பத்தெட்டு!
முன்னம் பழகாத மோகினியின் முன்னிரண்டு
தென்னங்காய் கண்டால் திறமழியும் காளையர்போல்

மன்னவனே உன்னெழுத்தை மாந்திக் களிகொள்ளும்
பொன்னளி நான்என்பேன் பொய்யில்லை உண்மையிது!
நாட்டிற்கே ஏற்றதொரு நற்கருத்தைக் கூறுபழம்
பாட்டிற்குப் பாட்டால் பகருகிறீர் பாகுரைகள்!
பாக்கள் படைத்திடலாம் பாருள்ள பாவலர்கள்;

பாக்-கள் பிழிந்தருளும் பாங்கறிந்த பாவலன்நீ!
முன்னம் சிறுவயதில் முன்மாலைப் பொழுதினில்
சின்னத் திரையில்இச் சின்னவன் உன்பேச்சைக்
கண்ணிமையா நின்றுக் கருத்தூன்றிக் கேட்டதெல்லாம்
எண்ணுகையில் என்நெஞ்சம் ஏந்திசையில் பண்பாடும்!

அப்போதே உன்சுவைஞன் ஆகினேன்; என்பேச்சில்
எப்போதும் ஏற்ற இடம்பிடிக்கும் நாயகன்நீ!
உற்ற வலைநிறுவி ஒப்பில்லாப் பாப்புனைந்து
கற்ற வரைக்கவரும் கல்விக் கடல்உன்
எழுத்தெண்ணி வாசித் தெழுமின்பத் தாலே

கொழுத்தநற் சேவலைப்போல் கொக்கரித்தேன்; கொக்கரித்து
முன்னூட்டம் தன்னை முழுதாய்ப் படித்தாலும்
பின்னூட்டம் போடப் பெரிதாற்றல் இல்லையெனும்
தாழ்வு மனப்பான்மை தாக்கியதால் அய்ய!உனை
வாழ்க! எனவாழ்த்த வாயின்றி நின்றேன்;

தருவே! தகையே! தமிழே!என் பாட்டின்
கருவே! கனியே! கருத்தே! உனைப்புகழ
நேரமின் மையாய் நினைக்கவில்லை; முற்றுரைக்கும்
தீரமின் மையால் தெரிந்து!

அகரம்.அமுதா

புதன், 6 ஆகஸ்ட், 2008

தன்நோய்க்குத் தானே மருந்து!

மாலைப் பொழுது; மலர்கள் மலர்ந்தாடும்
சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன்
உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும்;
தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப்
பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக்

கூத்தாடி நிற்கும்; குழலொலியைத் தன்குரலில்
ஏற்றிக் குயில்கூவும் எங்கோ இருந்தபடி;
சேற்றில் கயல்தேடிச் சென்றிருந்த நாரைகள்
கூட்டை அடைந்துவிடும் கொள்கையால் சிறகடித்துக்
காட்டைக் கலைத்துவிடுங் காற்றைப் பெருக்கிவரும்;

அங்கோர் அணில்கிளையில் ஆடும் அருங்கனியைத்
தங்கையில் ஏந்தித் தனதுபசி ஆறும்;
கதிரும் களைத்துக் கனிந்த பழம்போல்
உதிரும்; வானும் உதிரத்தைக் கக்கிவிடும்;
அந்தப்பொன் அந்தியிலே அங்கோர் மரக்கிளையில்

வந்துக்குந் திக்கொண்ட வண்ணப் பசுங்கிளிதன்
பெட்டை வரவைப் பெரிதும் எதிர்பார்த்துக்
கட்டைபோல் ஆடாது கண்ணிமையும் மூடாது
எண்ணப் பறவையது எங்கெங்கோ சென்றுவர
வண்ணப் பறவையிது வாடி மிகநொந்துச்

சின்னநுனி மூக்கின் சிவப்பழகுப் பெண்கிளியை
முன்னம் அருகிருந்து முத்தமிட்ட காட்சிகளும்,
கன்னங்கள் என்கின்ற கண்ணாடிக் கோப்பையிலே
தென்னங்கள் ஊற்றித் தினங்குடித்த காட்சிகளும்,
கண்ணின்முன் தோன்றக் கருத்தில் கடுங்காமம்

புண்ணில்வேல் பாயுதல்போல் போந்து துயர்செய்ய
தேறாது நெஞ்சமெனத் தேர்ந்த பெருங்கிளியின்
மாறாத மோகமதை மாற்றி விடாய்தீர்க்க
வந்த பெடைகண்டு வாரி அணைத்துமுத்தம்
தந்து தழுவித் தனதேக்கம் தீருமட்டும்

நோக்கும் பெடைதந்த நோய்க்கப் பெடையேநோய்
தீர்க்கும் மருந்தாம் தெரி!

அகரம்.அமுதா