வியாழன், 25 டிசம்பர், 2008

கற்றல் சிறப்பு!

நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழிய
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

அகரம்.அமுதா

சனி, 20 டிசம்பர், 2008

தாலி வரம்!

திருமண முறிவு வேண்டி கணவன் நீதிமன்றம் செல்கிறான். அந்த இறுதிக்கட்ட நேரத்தில் அவன் மனைவி அவனுக்கு எழுதும் கவிதைக் கடிதமாக இக்கவிதை!

திருமணம் கசந்துவிட்டத்
திரு-மனம் நலமா?
இறந்துவிட்ட இறந்தகாலம்
திரும்பவும் வரும்?

இழக்கப்போகும் உறவெண்ணி
இறுக்கிடும் ஏக்கங்கள்...
உறவறுக்க முயலுகின்ற
உள்மனதை மாற்றுங்கள்...

அழுதழுது வடிகின்ற
கண்ணீர் கரிக்குது...
அதைக்காணும் ஊர்மனமோ
அழகாய் சிரிக்குது...

பெயர்சொல்ல முத்துப்போல
பெற்றுத்தந்தேன் வாரிசு...
அடிவழிற்றில் வளருது
ஆறுமாத நின்சிசு...

விவகாரம் முற்றிப்போக
விவாகரத்துத் தேவையா?
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால்
வீடும்சுவர்க்கம் இல்லையா?

சொந்தமாய் ஒருதுன்பம்
இருந்தாலது சுகமாகும்...
துன்பமே நீயெனினும்
வாழ்க்கையும் வரமாகும்...

முடிவுக்கு முற்றுப்புள்ளி
முழுமனதாய் வைப்போமே...
விடிவென்னும் விளக்கேற்றி
வாழ்க்கையைப் படிப்போமே...

முந்தானையில் வேண்டிக்கொண்டு
முடிந்தக்காசு இறைவனுக்கு...
முந்துகின்ற விழிநீரால்
முடிகின்றக்கடிதம் உமக்கு!

அகரம்.அமுதா

புதன், 17 டிசம்பர், 2008

வேண்டாமே இந்தப் ப(பு)கை!


நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்
புகைக்கிடங் காதல் புதிர்!

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!

காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!

புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர்
பகையில் புகையே பகை!

சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின்
பொறியைந்தும் பாழாம் புரி!

பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும்
புற்றுவைக்கும் வேண்டாம் புகை!

பஞ்சுண்(டு) எனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு சாவாய் நலிந்து!

வெண்குழலை நாடொறும் வேண்டிப் புகைத்தக்கால்
மண்குழியில் வீழ்வாய் மரித்து!

புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி
நகைப்பான் எமனும் நயந்து!

அகரம்.அமுதா

வெள்ளி, 12 டிசம்பர், 2008

தீ! சொல்!

தீ!
வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ஆட்டிப் படைத்தே அறிவழித்துக் -கூட்டினை
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ?

சொல்!
சித்தெறும்பாய் ஊர்ந்து சிறுதொழிலும் செய்யாமல்
மெத்தெனவே வீற்றிருந்தால் மேன்மையுண்டோ? -நித்தநித்தம்
தேம்புவதால் இன்பம் திரண்டிடுமோ? மண்பதையில்
சோம்புவதால் உய்வுண்டோ சொல்?

அகரம்.அமுதா

சனி, 6 டிசம்பர், 2008

அருவி!

நான்
வேர்களை முகட்டில்
விரித்து
கீழ்நோக்கி வளர்கின்ற
தண்ணீர் மரம்...

விண்ணை முட்டும்
மலையென்னும் மரத்தின்
ஒற்றை விழுது...


உடலெங்கும்
வெள்ளிச்
சலங்கைகள் கட்டி
நின்றாடும் நர்த்தகி...

குன்றுகளின்
கூந்தல்...
பாறையாம் பானைகள்
பொங்கி வழிகின்ற
பொங்கல்...

நான்நிற்பதாலேயே
ஆறுகள் நடக்கின்றன...

பாறைகள்
என்
விளையாட்டு பொம்மைகள்...

நீங்கள்
கற்களை உரச
தீ பிறக்கும்
நான் உரச
மணல் பிறக்கும்!

நான் விழுகையில்
என் வீரிடலை
சங்கீதம் என்று
சாற்றுகிறீர்கள்

என் பேதைப்பருவத்தை
அருவி என்று
ஆர்க்கிறீர்கள்

மங்கைப் பருவத்தை
ஆறு என்றுக்கூறி
அணைக்கிறீர்கள்

என் மூப்பை
கடல் என்றுக்
கட்டியம் கூறுகிறீர்கள்

என்றேனும் நீங்கள்
எண்ணியதுண்டா
அலைகள் யாவும்
எழுந்துநிற்கத் தோற்று
வழுக்கி விழுகின்ற
அருவிகளே என்பதை?

அகரம்.அமுதா

திங்கள், 1 டிசம்பர், 2008

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!


(மும்பையைப் பத்துப்பேர்கள் கொண்ட தீவிர வாதிகள் தாக்குதலைக் கண்டித்து எழுதப்பட்டது.) -26.11.2008-


அக்குளில் அழுக்கி னைப்போல்
       அண்டியே துன்பு றுத்தும்
குக்கலின் என்பு டைத்துக்
       கொடுங்குளிர் காய வேண்டும்!
மக்களை மாய்க்கு மந்த
       மதியிலார் போக்கால் பாரில்
சிக்கலே மிகுவ தாலே
       தீயரை ஒறுக்க வெண்டும்!

செப்படி வித்தை காட்டிச்
       செருவிடை மார்நி மிர்த்தி
எப்படை எதிர்த்த போதும்
       எறும்பென ஊதித் தள்ளும்
முப்படை நமக்கு முண்டு!
       முன்னரண் தாண்டி வந்து
தப்படி வைப்பின் அன்னார்
       தாள்களை யொடிக்க வேண்டும்!

தந்தைக்குப் பிறந்தா லன்றோ
       தருக்குவான் நேரில்! மாட்டு
மந்தைக்குப் பிறந்த கூட்டம்
       மறைந்தன்றோ தாக்கும்!? முற்றும்
சிந்திக்கும் திறனில் லாத
       தீயரைப் பிடித்து வந்து
தந்திக்கு முன்பு தைத்துத்
       தலைதனை இடர வேண்டும்!

சோற்றிலே கல்கி டந்தால்
       சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வ ளர்ந்தால்
       நன்மையோ? பெருகி யோடும்
ஊற்றிலே நஞ்சி ருந்தால்
       உண்ணுதற் காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்து பட்ட
       கொடியரைக் கொல்ல வேண்டும்!

வேவுகொள் துறையே! நீயுன்
       வேலையை முடுக்கி விட்டு
வேவுகொள்; அன்றி நீயும்
       மெத்தென வீற்றி ருப்பின்
சாவுகொள்; எல்லை தாண்டித்
       தருக்கிடும் பேடி தம்மைக்
காவுகொள்; நாட்டின் ஆண்மை
       காவல்கொள்; விழிப்பி னைக்கொள்!

பஞ்சுமாப் பொதியிற் றீயைப்
       பதுக்கிடும் தன்மை போலக்
கொஞ்சமா சூழ்ச்சி செய்தார்?
       கொடுமனப் போக்கால் நாளும்
நஞ்சுமா நெஞ்சர் ஆடும்
       நாடகம் அறிந்த பின்னும்
அஞ்சுமா இந்தி யாதான்?
       அயருமோ எல்லைக் காவல்?

அணுக்கமாய் எடுத்து ரைப்பாய்!
       அறிவிலாப் பேய்ம னத்தர்
இனக்கமாய் வாரா விட்டால்
       இடியெனப் பொருது! போ!போ!
சுணக்கமேன்? இந்தி யாவே!
       தூமனம் துயில்தல் இல்லை;
மணக்குமோ காகி தப்பூ?
       மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

அகரம்.அமுதா