ஞாயிறு, 13 ஜூலை, 2014

சங்கொடுவா ராமா நுசம்!

பந்திக் கிலைபோட்டுப் பார்த்துப் பரிமாற
வந்தமர்ந் துண்ணுகிறார் வாயார –சொந்தங்கள்;
அங்குரசத் தோடே அலையா ததையென்வ
சங்கொடுவா ராமா நுசம்!

வெள்ளி முளைத்ததுபோல் வெந்தநல் நெற்சோற்றை
அள்ளியிலை இட்டாய் அழகாக –சொல்லும்படி
இங்கெனக்கு வேலை இடாதே!போய் நல்லர
சங்கொடுவா ராமா நுசம்!

திங்கள், 9 ஜூன், 2014

அவள்!



அஹிம்சை முகம்
ஹிம்சை விழி
அவளுக்கு!

திங்கள், 5 மே, 2014

ஆசைக்கே ஆசையெழும்!



நாடாத கண்களுண்டோ
நறுமுகையே நீநடந்தால்…
பாடாத வாய்களுண்டோ
பைங்கிளியுன் அழகைத்தன்னால்…

வைத்துக்கொண்டே வஞ்சனைகள்
செய்கின்ற சின்னஇடை
வள்ளலென எண்ணிச்சென்று
கஞ்சனிடம் பெற்றகொடை

பிடியளவு இடையிருக்க
படியளவு மார்கனக்க
அடியெடுத்து நீநடந்தால்
அன்னமே கால்கடுக்கும்

செப்புச்சிலை உன்மேனி
சிவந்தவிழி மலைத்தேனீ
தெங்கிளநீர் இரண்டோடும்
சேர்ந்தநிறம் மருதாணி

காதளவு கண்கள்-அவை
வள்ளல்வீட்டு வாசல்கள்
கன்னியுந்தன் வாய்வார்த்தை
கஞ்சன்கொண்ட கைப்பொருள்கள்

வெடியெடுத்துப் போட்டதுபோல்
வெண்ணிலவே நீநடந்தால்
மதுகுடித்த வண்டெனவே
வந்துமனம் வட்டமிடும்

பொடியெடுத்துப் போட்டவுடன்
பூத்துவரும் தும்மலைப்போல்
அன்னமுனைக் கண்டுவிட்டால்
ஆசைக்கே ஆசையெழும்!

வெள்ளி, 14 மார்ச், 2014

கைக்கூலி! (வரதட்சிணை)



பெண்ணாய்ப்
பிறந்த யார்க்கும்
தரணியில்
தாலிதான்
வேலி; -அவ்
வேலியின்
வேலையைச் செய்ய
வேண்டுவதேன் கூலி?

கூலி பெற்று
குவலயத்தில்
வேலியின்
வேலையைச் செய்யும்
ஆண்கள்
ஆரும்
ஆண்கள் அல்ல
ஆண்களிற் போலி!


இன்று
ஏந்திழையர் –
வனப்பைப் பார்த்து
வருவதில்லை வரன்;
பணப்பை பார்த்து –மணம்
பண்ணுவதுதான் முறண்


ஒன்றுபோல்
ஒன்று;
இப்படி ஒன்றுதல்
இருவர்க்கும் நன்று!

ஏற்பதிகழ்ச்சி -
என்றாள் ஔவை; மீறி -
ஏற்கின் எவர்க்கும் -
ஏற்படும் கௌவை!

ஞாயிறு, 9 மார்ச், 2014

வாழ்த்துப்பா! வெண்பாவூர் செ. சுந்தரம்

வெண்பா இமயம், நல்லாசிரியர், வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் 'வெண்பாவில் என்பா விருந்து' நூல் படித்ததால் எழுந்த வெண்பாக்கள்

கனியிருக்கக் காயைக் கவர்ந்தீரே! மெய்யாய்
நனிசிறந்த வெண்பா நவில; -தனிவிருந்(து)
இவ்விருந்(து) இருக்க இமையோர் அழைத்திடினும்
அவ்விருந்துங் கொள்ளேன் அணைந்து!

தலைதந்தும் வெண்பாவைத் தாங்கும் இவர்தம்
நிலைகண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்; -முலைதந்த
அன்னையவள் அன்பைப்போல் ஆங்குறு சுந்தரனார்
வெண்பாவிற்(கு) உண்டோ விலை?

கொட்டருவி போலுமிவர் கொஞ்சுதமிழ்ப் பாவருவி
தொட்டுருவிப் போகுதடா தூநெஞ்சை; -அட்டியில்லை
பாடிக் கடன்தீர்க்கப் பாருதித்தார் போலுமதை
நாடிக் கடன்தீர்ப்போம் நாம்!

பல்லா சிரியர்இப் பாரிலுளார்; சுந்தர
நல்லா சிரியர்போல் நாட்டினரா? -வல்லிடை
மெல்லினமாய்த் தோன்றியிம் மேதினியை ஆள்கின்ற
வெல்தமிழ் வெண்பா விருந்து!

செவ்வாய், 4 மார்ச், 2014

விடுதலை நாடகம்!

"விடுவதுபோல் விடுகின்றேன்; விரைந்து வந்து
விடாவண்ணம் தடையிட்டே இடுவாய் தூக்கில்
அடிபெண்ணே!" என்பதுபோல் இங்கொ ருத்தி
அண்மித்த தேர்தலுக்காய் நாட கத்தைச்
சுடச்சுடவே அரங்கேற்று கின்றார்; மூவர்
தூக்கிற்கே தூக்கிட்ட நயன்மை மன்றும்
விடுகவெனும் ஆணைதனை விளப்பி டாமல்
விடுவதெனில் விடுகவென்ற விளைவால் அன்றோ!

தாலிகட்டி அறுத்தவரும்; தாலி தன்னைத்
தன்கழுத்தில் ஏற்காத தனிப்பெண் தானும்
வேலிகட்டி ஆளுகின்ற இந்த நாட்டில்
விடுதலையா வார்எழுவர் என்னும் பேச்சு
போலிஅதில் உண்மையில்லை; தேர்தல் தன்னில்
பூந்தமிழர் இவர்கட்குப் புகட்டிப் பாடம்
காலிகளை அடைப்பதுபோல் தட்டி தன்னில்
கருத்துடனே அடைத்திடுதல் கடமை என்பேன்!

திங்கள், 24 பிப்ரவரி, 2014

இளங்குமரனார் அருளிய வாழ்த்துமடல்!

  

திருவள்ளுவர் தவச்சாலை,
அல்லூர் 620 101,
திருச்சி மாவட்டம்,
16.03.2012

பேரன்புப் பாவலரே,

வணக்கம். வாழிய நலனே; தாங்கள் நேரில் வழங்கிய 'அமுதன் குறள்' நூலை இன்று படிக்க வாய்த்தது.

யாப்பும், அதன் கோப்பும், பொருள் சீர்த்தியும் போற்றும் பொலிவின. தங்கள் படைப்புத் திறனும் பண்பாடும் வேட்கையும் பைந்தமிழ் நலங்களாம்!

தொடர்ந்து அணிபல சூட்டத் தக்க துலக்கம், துலக்கமாகிறது அமுதன் குறளால்!

இன்ப அன்புடன்,
இரா.இளங்குமரன்

புதன், 12 பிப்ரவரி, 2014

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!

‘அ’கரம் தொடங்கி ‘ன’கரம் ஈறாய்
அகிலம் தோன்றிய அருந்தமிழே!
‘ண’கரம் ‘ந’கரம் ‘ன’கரம் வேறாய்
நாவில் நடமிடும் நறுந்தமிழே!

‘ர’கர ‘ற’கரம் ஒலிபிற ழாமல்
பகர இனிமை தருபவளே!
‘ழ’கர ‘ள’கரத் தனிச்சிறப் பாலே
இளமை குன்றாத் திருமகளே!

வல்லினம் மெல்லினம் இடையினம் மூன்றால்
வளப்பம் குறையா வண்டமிழே!
சொல்லிலும் பொருளிலும் சுடர்மிகு வல்லமை
தோன்றிட இங்குறு தொல்தமிழே!

ஒன்றா? இரண்டா? மூன்று தமிழாய்
உலகில் முதலாய்ப் பிறந்தவளே!
நன்றாய் முதலிடை கடைச்சங் கத்தில்
நாவலர் நாவிற் சிறந்தவளே!

ஒருசொல் பலபொருள் பலசொல் ஒருபொருள்
உடையாய்! உளதோ உனக்கீடு?
பொருந்திய எழுத்துச் சொற்பொருள் யாப்பணி
பொலியவென் நெஞ்சே! பண்பாடு!

காப்பியன் வள்ளுவன் கம்பனைத் தந்து
காசினி யில்சிறப் புற்றாய்நீ
பூப்பினில் நறுந்தேன் பீய்ச்சிடும் பூவுனை
மோப்ப விழையும்நான் நற்றேனீ

காலை கடும்பகல் மாலை இரவிலும்
காதல் தானுன் மீதெனக்கு
தோளின் மீதே தொற்றிக் கொள்ளத்
தடையா தோஇப் போதுனக்கு?

நாரும் பூப்போல் நாறும்; பூவை
நாடின் என்பார் அதுபோலே
நேரில் தமிழை நேர்ந்தேன்; இன்பம்
நேருள தோசொல் இதுபோலே?

செவ்வாய், 21 ஜனவரி, 2014

வீணை விறகாச்சே!


வீணை விறகாச்சே!

ஈழத் தமிழச்சி, ஊடகவியலாளர் இசைப்பிரியாவைக் காடையப் பேடிகள் கற்பழித்துக் கொலைசெய்த காட்சி சேனல் 4-ல் ஒளிபரப்பானபோது...

'புலி'கண்டால் வயிற்றினிலே
புளிகரைக்குஞ் சிங்களரே!
கிலிபிடித்து நிற்கின்ற
கிளியென்னைப் பிடித்தவரே!

சாவுக் கஞ்சி
சமராடுந் துணிவின்றிப்
பூவுக்குக் குறிவைக்கும்
போர்த்தொழில் கற்றவரே!

ஆடை கிழித்தென்றன்
அங்கங்கள் மொய்ப்பவரே!
பாடையில் ஏற்றும்முன்
பதம்பார்க்கத் துடிப்பவரே!

அம்மணமாய் எனையாக்கி
ஆனந்தம் கொள்பவரே!
அசிங்கத்தை அரங்கேற்ற
ஆரூடம் பேர்ப்பவரே!

வெம்பியழும் எனைக்குதற
வெறிபிடித்து நிற்பவரே!
தேம்பியழும் எனைச்சிதைக்க
தினவெடுத்துச் சூழ்பவரே!

கைகள் இரண்டிருந்தும்
கைவிலங்கு பூட்டியதால்
மெய்மறைக்க முடியாமல்
மேனி கூசுகின்றேன்...

தேம்பி அழுதே
திரள்கின்ற கண்ணீரைத்
தேக்கி அதிலென்
தேகம் மறைக்கின்றேன்...

காற்றையே ஆடையாய்க்
கட்டப் பார்க்கின்றேன்...
கூற்றையே அழைத்தென்னைக்
கூட்டிப்போ என்கின்றேன்...

உங்களைப்போல் கூற்றிற்கும்
உள்ளம் கிடையாதோ?
மங்கை நான்தேடும்
மரணம்வரத் தடையாதோ?

எச்சில் இலையாகி
இழிந்துநான் போகும்முன்
எமனேறும் எருமையேனும்
எனைமுட்டிச் சாய்க்காதோ?

ஈசனோ புத்தனோ
ஏசுவோ அல்லாவோ
இச்சமயம் எனைக்காக்க
இங்குவரக் கூடாதோ?

பாஞ்சாலி துகிலிழக்கப்
பதறிய கண்ணனே!
ஏஞ்சாமீ? துகிலிழந்த
எனக்குதவ மாட்டாயா?

புத்தனுக்குப் பயந்து
போயொளியப் பாக்குறியா?
குத்தமிழைப் பாரோடு
கூட்டுச்சேரப் போகிறியா?

எச்சில்கள் என்மேல்
இச்சை கொள்கிறதே...
ஈழப் புலித்தலைவா!
இதைத்தடுக்க வாராயா?

தமிழனா(ய்)ப் பொறந்தா(ல்)
தப்பா? அதனினும்
தமிழச்சியா(ய்)ப் பொறந்தா(ல்)
தண்டனை கற்பழிப்பா?

இடுப்பிலே கொம்பு
முளைத்த விலங்குகள்
எதிரே வந்து
எனைமுட்டிச் சாய்க்கிறதே...

படுக்கைக் கிழுக்கப்
பலகைகள் நீள்கையிலே
உடுக்கை இழந்தஎனக்(கு)
உதவவொரு கையிலையே...

உள்ளூர் தெய்வங்களோ
உலகத் தமிழர்களோ
உள்ளம் பதறலையே...
ஓடிவந்து தடுக்கலையே...

விரியன் பாம்பொன்று
விழுந்து கடிக்கிறதே...
சனியன் ஒன்றென்னை
சாப்பிட்டு முடிக்கிறதே...

 கூவம் ஒன்றிந்த
கைங்கையில் கலக்கிறதே...
பாவக் கடலொன்று
புண்ணியத்தை விழுங்கிடுதே...

இடியே வந்தென்றன்
மடியில் இறங்கிடுதே...
நொடியில் என்கற்பு
நோய்பட்டு இறந்திடுதே...

கொடிய இருட்டொன்று
விடியலை மேய்கிறதே...
கடிய விஷமென்றன்
காயத்தில் பாய்கிறதே

உயிரில்லை என்றாலும்
உடல்கிடந்து துடிக்கிறதே...
இதயம் துடிக்கவில்லை
துடிப்பதுபோல் நடிக்கிறதே...

 தாயே! கண்ணகியே!
தமிழ்மதுரை எரித்தவளே!
திருகி முலையெறிந்து
தீயரைச் சரித்தவளே!

களையிழந்து கற்பிழந்து
கதறுமெனக்(கு) உதவாயோ?
முலையெறிந்து ஊரெரிக்கும்
மருமத்தை உரைக்காயோ?

சொல்லால் சுடவும்என்
சொல்லுக்கு வலிவில்லை...
தள்ளி விடவும்என்
தேகத்தில் தெம்பில்லை...

கற்பென்னும் திண்மையைக்
கறைபடியச் செய்பவரே!
அற்புதம் என்றனை
அற்பமாய்க் கொய்பவரே!

தட்டிக் கேட்கயெம்
தலைவன்வராக் காரணத்தால்
கட்டிப் போட்டென்னைக்
கற்பழிக்கும் காமுகரே!

பூமகள் என்றனைப்
புலிமகளா? என்பவரே!
கலைமகள் என்றன்
களையழித்துக் களிப்பவரே!

போட்டாப் போட்டியிட்டுப்
பூந்தேனைச் சுவைப்பவரே!
தோட்டா ஒன்றால்என்
உயிர்சுவைக்கக் கூடாதா?

போச்சு! எல்லாம்போச்சு!
போகலையே உயிர்மட்டும்...
ஆச்சு! பொறுத்தாச்சு!
அடங்கலையே இவர்கொட்டம்...

வீணையை விறகாக்கி
வெறிதீர்க்கும் வீணர்களா!
ஓவியத்தைச் சிதைச்சுத்தான்
ஊரையாளப் போறிகளா?

அழுக்கை என்மீது
அப்பிவிட்ட இழுதைகளா!
சுமையை என்மடியில்
இறக்கிவைத்த கழுதைகளா!

இன்னும் பசியெடுத்தா(ல்)
என்னோட பிணமிருக்கு...
கண்ணகிபோல் சினந்தெரிக்க
கற்பு(இ)ங்கே எனக்கிருக்கு?

புதன், 15 ஜனவரி, 2014

கதிர்விடு தூது! 2


மண்ணும் வளர்நிலவும் மற்றனைத்துக் கோல்களும்
விண்ணும் வெளிச்சப்பால் வேண்டிடஉண்ணா

முலையே! முலையூட்ட முன்வந்தாய்; உன்றன்
கலையை அவித்துக் கருத்தாய்இலையென்னா(து)

அன்னையும் ஆனாய்;நீ அப்பனும் தானானாய்;
அன்னையப்பன் ஆன அருளரசே! –முன்னாளில்

குந்திக்குப் பிள்ளை கொடுத்தவனே! பால்வெளியில்
குந்தி அரசாளுங் கொற்றவ!நீகுந்தும்

இருக்கை குறிஞ்சி; இளைப்பாறும் பூங்கா
பொருவில்லா முல்லை; புகழ்சார்மருதமுன்

பாராளும் மன்றம்வெம் பாலை பகைவரைநீ
பொராடி வெல்கின்ற போர்க்களமே; –நீராடி

நீமகிழ நெய்ததுறை நெய்தல்;நீ துஞ்சுதற்கு
மாமுகிலே பஞ்சுமெத்தை; வான்கட்டில்; –பூமியே

பட்டத் தரசி; பருவவேட் கையால்நீ
தொட்டுத்தொட் டுத்துய்க்கும் தோகையர்மற் -றெட்டுக்கோல்;

நாற்றிசையும் நாற்படையா ஐம்பூதம் நல்லமைச்சா
ஆர்க்கும் இடியே அணிமுரசா –வேற்படையும்

வாளுமே விண்மீனா வானமே வெண்குடையா
நீளுமிப் பால்வெளியே நின்நாடா – ஆளும்

(தொடரும்)