சனி, 31 மே, 2008

கருவிழி இல்லாத கண்!


முக்கண்கள் ஈசனுக்கு மட்டுந்தான் என்கின்ற
மக்கன்யார் கண்டால் வசைபாடு -மொக்காய்
இருகண் முகத்தில் இடையிலொன்று கண்டேன்
கருவிழி இல்லாத கண்!

துய்த்ததைச் சொன்னேன் துணிந்து!

 பாலும் கசக்கப் பழம்புளிக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலுமிப்
பாலும் இடம்பெயராப் பார்வைஎன் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போல்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து!

இளநீராய் எண்ணி இளமுலைகள் பற்றி
உளமாறக் கண்டேன் உருசி -தளதளக்கும்
சிற்றிடையில் கோலோச்சச் சீக்கிரமே கூப்பிட்டுப்
பெற்றிட்டாள் இன்பம் பெரிது!

முக்கண்கள் ஈசனுக்கு மட்டும்தான் என்றுரைத்த
மக்கன்யார்? கண்டால் வசைபாடு! -மொக்காய்
இருகண் இவள்முகத் தொன்றிடையில் கண்டேன்
கருவிழி இல்லாத கண்!

உச்சிமுதல் கால்வரை நச்செனவே இச்சுவைக்க
மெச்சியென் மெய்யணைத்தாள் மெல்லிடையாள்! -அச்சச்சோ!
தைத்ததடா மெத்தைமுள்; தையல் சுகத்தின்முன்
கைத்ததடா பேரின்பம் காண்!

பொத்தானைத் தான்நீக்கப் பொங்கிவரும் மோகத்தால்
அத்தானைக் கட்டி அணைத்திட்டாள்! -பத்தானை
வேகத்தைக் காட்டி விடியும் வரையவளின்
மோகத்தைத் தீர்த்தேன் முனைந்து!

காட்டாறு போலத்தான் கட்டடங் காதாட
பாட்டாறு போல்பாவை பாடினாள்! -கேட்டபடி
மெத்தை முறிகிற வேகத்தை நான்காட்ட
தத்தை தவித்தாள் தளர்ந்து!

சந்தனத்தைப் பூசி சரிகைவெண் பட்டிட்ட
செந்தனத்தைக் காட்டிச் சிரித்திட்டாள்! -எந்திறத்தை
நான்காட்ட நாணி நயனத்தை மூடினாள்
தேன்கூட்டில் சிந்திற்றே தேன்!

பொங்கும் புதுநீரால் புல்லரித்தாள்; பூவையவள்
தங்கத் தளிர்வாயில் தேனெடுத்தேன்! -மங்கையில்லா
சொர்க்கம்வே றெங்காம்? சுகப்போழ்து வேறேதாம்?
தற்குறிகாள்! சாற்றிடுவீர் தான்!

அகரம்.அமுதா

வெள்ளி, 30 மே, 2008

ராதே!

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவைத் தேராதே -தேராதே
தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
தேராதே ராதேரா தே!

பொருள்:-
தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும் -வெற்றிபெறாது நம்இருவருக்கும் இடையில் பூத்தக் காதல் வெற்றியே பெறாது என்றே
தேராதே ஓர்முடிவைத் தேராதே -ஆராயாமல் ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்காதே
தேராதே தேராதே என்பாயேல் - ஆராயாமல் நம்காதல் வெற்றிபெறாது என்று சொல்வாயே யானால்
தேராதே என்நெஞ்சம் தேராதே -(அச்சொல் கேட்டால்)துன்பக்கடலில் மூழ்கிக் கிடக்கும் என்நெஞ்சம் அதிலிருந்து மீண்டுவரவும் முடியாதே! மீண்டுவரவே முடியாதே!
ராதே ராதே -ராதா! ராதா!

அகரம்.அமுதா!

வியாழன், 29 மே, 2008

தத்தித் தவித்தேன் தளர்ந்து!

ஒரு வீடியோப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அவ்வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக்கவும்.செய்தி இதுதான் உயிரோடு ஒரு மீனை அடுத்து அதன் செதில்களை நீக்கி வயிற்றைக் கிழித்துக் குடலை நீக்கி அதைத் துடிக்கத் துடிக்க அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு வானலில் (சுடுஎண்ணையில்) உடல்வரை வறுத்து எடுத்து (இப்பொழுதும் மீன் உயிருடன் தான் உள்ளது) தட்டில் வைத்துப் பரிமாறுகிறார்கள் (ஓர் ஹோட்டலில்) (சீனாவா ஜப்பானா என்பது தெரியவில்லை) அந்த ஹோட்டலில் பணிபுரியும் மனித மிருகங்கள். அதையும் கூடியமர்ந்து சில மனித மிருகங்கள் (இப்பொழுதும் மீனுக்கு உயிரிருக்கிறது) கிழித்துத் தின்கிறது. இவ்வீடியோ பதிவைப் பார்த்து அதிர்ந்தேன். அதன் காரணமாய்த் தோன்றிய வெண்பாக்களே இவைகள்.

அந்த இறுதிக் கட்ட வேளையில் அம்மீனின் நிலையிலிருந்து எழுதப்பட்டது.

நீக்கிச் செதிலையெல்லாம் நீராட்டி நீள்குடலைப்
போக்கிநெய்க் கொப்பறையின் பொங்குநெய்யில் -தூக்கியிட
வேகுதே மேனி மிகவெப்பத் தால்அய்யோ!
நோகுதே வாலின் நுனி!

துள்ளித் துடித்துத் துவண்டு வழுக்கிவிழ
அள்ளி குடலை அகற்றியுடல் -முள்ளை
ஒடித்தார்; உடல்நோவ உப்பளம்போல் என்னை
எடுத்தார் சுடுநெய்யுள் இட்டு!

சிக்குண்டேன்; நீள்வலையுள் சிக்கிநீ ராடிதன்னில்
முக்குண்டேன்; கொண்டசெதில் முற்றிலுமாய் -நீக்க
நறுக்குண்டேன்; எண்ணைப்பி சுக்குண்டேன்; மேனி
கருக்குண்டேன்; உண்டார் களித்து!

வெந்தப்புண் தன்னில்வேல் வீசுதல்போல் அய்யய்யோ!
நொந்தயென் மேனிதன்னை நோக்கியே -வந்துவந்துக்
குத்திக் கிழித்துக் கொடும்பசி யாற்றுகிறார்
தத்தித் தவித்தேன் தளர்ந்து!

அகரம். அமுதா!

புதன், 28 மே, 2008

பனித்துளிகள்!

பனித்துளிகளே! முகில்தெளிக்கும்
பன்னீர்த் துளிகளே!
அரும்புகளின் மேனிபூத்த
அம்மைக் கட்டிகளே!

நீங்கள்
பூப்பெய்தியப் பூக்களுக்கு
பூப்பெய்யும் பூக்கள்...

இரவு சிப்பியின்
திரவ முத்துகள்...

புல்வெளிக்கு வழங்கப்படும்
போலியோ சொட்டுமருந்து...

மேக விவசாயி கண்ட
சொட்டுநீர்ப் பாசனம்...

பாமரன் வீட்டுப்
பாத்திரம் நிறைக்காத
பருவ மழை...

மண்மகள் மார்பினில்
மலைப்பால் வற்றியதால்
வான்முகில் புட்டிப்பால்
வழங்கவரும் ஏற்பாடு...

விண்வெளிச் சாலையில்
விலக்குகள் எரிந்தும்
மேக விமானங்கள்
மோதிக் கொள்வதினால்
உடைந்து விழுகின்ற
உதிரித் துண்டுகள்...

இரவு நீக்ரோவின்
வெள்ளைவண்ண வாரிசுகளே!

உங்கள் அழகினிலே
உள்ளம் பறிகொடுத்து
மங்கல மலர்களெல்லாம்
மார்பள்ளிச் சூடிடுதோ?

புற்களின் மார்பினில்
இல்லாத கொங்கைக்கு
கச்சித மானதொரு
கச்சைஏன் ஆகின்றீர்?

விண்மீன்களுக்கு நிகரான
ஊர்வலம் நடத்திட
மண்ணில் மலர்களுக்காய்
முழங்கவரும் தொண்டர்களே!

நீங்கள்...
பெற்ற வெற்றிக்குப்
பின்காணத் தோன்றாத
அரசியல் வாதிகள்போல்
அதிகாலை மறைவதேனோ?


அகரம்.அமுதா

திங்கள், 26 மே, 2008

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
நீட்டி யழைத்து
நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
நிறைப்பது கவிமாலை!


வாசம் பரப்பி
வண்டை அழைப்பது
வண்ண மலர்சோலை! -என்னை
வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
மதியும் வந்தே
மங்கல வானெழுதும்! -விண்மீன்
வாழ்த்திசைப் பண்ணெழுதும்!


சோலை வந்தபின்
சில்வண் டெல்லாம்
சொக்கியா நின்றுவிடும்? –பூக்கள்
வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
உயர்த்திப் பிடித்த
உறுவில் மையெழுத்து! -மின்னல்
ஒளியோ கையெழுத்து!


அருவிக் குழந்தை
ஆறே மங்கை
ஆழி மூப்பாகும்! -கரைக்கு
அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
கயமை சமூகம்
கண்டிடு கவிதையிலே -அவைதான்
கவிதைகள் என்பவனே!


இயற்கைக் கவிஞன்
எழுதாக் கவிகள்
எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
இடுகிறாய் பிடிநெருப்பு!

அகரம்.அமுதா

வெள்ளி, 23 மே, 2008

அன்னை பாரதம்!

எம்மதமும் சம்மதமாம்
இந்தியாவின் தேர்தலில்...
மும்மதத்தில் குத்துவெட்டு
முடியவில்லைக் கூக்குரல்...

கத்தியின்றி இரத்தமின்றிப்
பெற்றெடுத்த பாரதம்...
முற்றுமின்று இரத்தமின்றி
ஓடவில்லை ஆறெதும்...

காடுவெட்டி நாடுசெய்து
கண்டதுதான் என்னவோ?
வீடுகட்டி வாழும்கீழ்மை
விலங்குகள்நாம் அல்லவோ!

வாக்களித்து வாக்குவாங்கி
வாழ்க்கைபெற்ற பேர்களே!
வாக்களித்தோர் வாழ்வினிலே
வளர்ச்சியில்லை பாரிலே...

கள்ளமின்றிப் பள்ளமேடு
கடந்துசெல்லும் ஆறுகள்...
கல்லைக்கொண்(டு) அணையெழுப்பக்
கழயெலாம் பாலைகள்...

அன்னையென்று பாரதத்தை
அன்றுத்தொட்(டு) இன்றுமே
சொன்னதெல்லாம் போதுமடா
சொன்னசொல்லைக் காப்போமே!

அகரம்.அமுதா

புதன், 21 மே, 2008

திரைகடல் போகிறேன்!

நெஞ்சம் வளர்த்தே இடையகம் தேயும்
நிலவே! திரைகடல் போய்வரவா?
கஞ்சன் வழங்கிய தானம் போன்ற
கனிமொழி யே!நான் போய்வரவா?

பனிமல ரே!பூம் பஞ்சணை யே!உன்
பார்வையின் எல்லை கடந்திடவா?
கனிமர மே!பொன் ஊஞ்சலு மே!நல்
கற்பக மே!விடை கொடுத்திடுவா!

எல்லா நதியும் மலையில் தோன்றிக்
கடலில் தானே முடிகிறது –உன்
பொல்லா நதியோ விழியில் தோன்றிப்
பொதிகையில் சென்றேன் முடிகிறது?

குளத்தில் தானடி தாமரை மேவும்- செங்
குமுதத் தில்ஏன் இருகுளங்கள்?
நிலத்தில் வீழும் மின்னல் போலென்
நெஞ்சில் உன்னால் கலவரங்கள்!

அழுதது போதும் அடியே பெண்ணே!
வழிகின்றக் கண்ணீர் வற்றவிடு
விழுதென வழிகிற தெந்தன் விழிநீர்
செழுமடல் இதழால் ஒற்றியெடு!

பிரிவுத் துயரம் எனக்கும் உண்டு
பிரிவே உறவுக்கு வழிவகுக்கும்- இதழ்
பிரியா மொட்டுகள் மணப்பதுமில்லை
பிரிந்தால் தானடி மலர்மணக்கும்!

ஆண்டுகள் இரண்டு போனால் வருவேன்
அதுவரை அன்பே! வாழ்ந்துவிடு- உன்
சாண்முழ மல்லிகை நிலைக்கணும் அதனால்
எனையும் கொஞ்சம் வாழவிடு!


அகரம்.அமுதா

சனி, 17 மே, 2008

மரணமே முழுமையாய்!

வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
திக்குறங்கும் இரவிலாநன் பகலிலாஉன் பாடு?
நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!

பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
அத்துளைகள் வழிபுறத்தில் வெளியேறாக் காற்றை
எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
ஒத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்!
ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 11 மே, 2008

மனம்!

எண்ண வலையில் இரையைத் தேடி
உண்டுக் களித்து மீளாப் பறவை...
ஆறறி வென்னும் சாரதி சொல்லை
மீறி நடந்து மீளும் குதிரை...

கற்பனை யென்னும் சிற்பம் செதுக்க
சிற்றுளி கொண்டே சனித்த பாறை...
தைத்திடும் முள்ளெனத் தைத்திடும் வேளை
பிய்த்தெறிந் திடினும் பிழைத்தெழும் கோரை...

ஒன்றை விட்டே ஒன்றில் தாவி
ஒன்றைப் பற்றி ஓடிடும் தேனீ...
சஞ்சல மாம்அலை தாவி யெழுந்தால்
கொஞ்சமும் நிலையின்றிக் குதித்திடும் தோணி...

பண்போ டன்பு பாசம் பற்றெனும்
பண்ணெழு திடவே படைத்த ஏடு...
செய்தமுன் வினைக்காய் வினைப்பயன் பெற்றிட
மெய்யெனும் கையது ஏந்திய ஓடு...

ஆசை என்னும் வேசையை நாடிப்
பூசை நடத்திப் புலம்பிடும் போகி...
பற்றாம் தூசைப் பற்றி யெடுத்து
முற்றும் அகற்றி முனகிடும் யோகி...

மறதி யென்னும் மருந்தைப் பூசி
விரைந்து ஆறிட விளைந்த காயம்...
நினைவாம் கணைகள் நிமிடமும் பாய்ந்து
கணத்தில் தைக்கக் கடவுளின் சாபம்...!

அகரம்.அமுதா

செவ்வாய், 6 மே, 2008

கைவளைக்கும் இல்லை கனிவு!


காமன் வதைபட கட்டில் முறிபட
மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும்
சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே!
சட்டெனமா மன்பிரிந்த தால்!

கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்;
ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர்
மேனியுடை என்னை வெறுத்துப் புறம்நழுவத்
தேனினிய சொல்திக்கு தே!

மானுலவும் கண்கள் வடிவிழந்து காணும்; எண்
சாணளவு மேனி தளர்ந்துவிடும்; -தேனுலவும்
வாலெயிறு நீர்நஞ்சாய் மாறிவிடும் என்தலைவன்
தோளிரண்டில் தொத்தாதக் கால்!

வதைத்தோடும் பால்நிலா வஞ்சிக்கும் தென்றல்
எதைத்தூது நான்விட்டால் ஏற்பான்? -சதைச்சிலையாய்
ஆனேனே! அம்கனவில் கண்டு விழிக்குங்கால்
காணேனே கண்ணொடுகொண் கன்!

கற்-பனையா என்மேனி? காமன் விடுகணைகள்
கற்பனைக்கெட் டாத்துயரம் காட்டிடுதே! -நற்றலைவன்
என்னருகி ருப்பானேல் மண்ணுலக சொர்க்கத்தைக்
கண்ணருகில் காட்டானோ கண்டு?


வல்வரவைச் சொல்லி வகைமோசம் செய்தவனின்
சொல்தவறிப் போனதனால் தூக்கமின்றி -மெல்லமெல்ல
மெய்யிளைக்கும்; மென்புன்ன கையிளைக்கும்; பெய்வளையென்
கைவளைக்கும் இல்லை கனிவு!


அகரம்.அமுதா

சனி, 3 மே, 2008

பேற்றேனே துன்பம் பெரிது!


ஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்!

-செய்தி-

(எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!)

காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்
சாமப் பொழுதுகளில் சீரழிந்(து) –ஊமையாய்
இன்றுவரை வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்?

தொட்டில் உறவைத் துளிர்த்துவரும் காமத்தால்
கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் -இட்டமில்லாத்
தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்
என்றனுக் கிந்தநிலை ஏன்?

கட்டிப் பிடித்தான் கனியிதழை மென்றிட்டான்
தொட்டுச் சுவைத்தான் துடியிடையை -எட்டிப்
படுத்தாலும் பாழ்செய்தான் பக்கமிருந் தின்பம்
கொடுத்தாலும் செய்தான் கொலை!

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டுத் துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!

அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கழுத்தி
என்னுமிழுக் கேற்பட்ட தென்னாலே! -என்விதி
ஏட்டிலே காணா எழுத்தாச்சே! என்கதை
நாட்டிலே காணா நடப்பு!

வெங்கானம் தானேகி வெந்து தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!

அன்பைப் பொழிந்துநாளும் அன்னையவள் மஞ்சத்தில்
தன்னை வருத்தித் தவம்கிடந்து -முன்னம்
கொடுத்தான் உயிரைக் கொடுத்தவன்பின் கற்பைக்
கெடுத்தான் அருகில் கிடந்து!

தான்பெற்ற பெண்ணென்னை தாரமென் றெண்ணியென்
ஊன்மீது மோகவெறி உற்றவனை -யான்பெற்ற
சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப விழைந்திடுமே!
தாய்வழிப் பாட்டனைத் தான்!

அப்பனை ஆசையால் ஆளன் எனஅழைக்க
எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் -அப்படியே
கற்பனையும் காணக் கடவுவதோ? அய்யோநான்
முற்பிறப்பில் செய்தவினை யோ?


அகரம்.அமுதா