போய்வா கணநொடியே! போகாதேன் நிற்கின்றாய்?
வாய்ச்சண்டை போட்டேனோ வைகின்றாய்? - நோய்பரப்பும்
ஈப்போலேன் மொய்க்கின்றாய்? ஏன்கண்ணில் தைக்கின்றாய்?
ஆஃப்மோடில் வைக்கின்றாய் ஆப்பு! 01
நொய்நொய் எனக்காதில் நொட்டைச்சொல்
சொல்கின்றாய்;
மொய்மொய் எனவென்னை மொய்க்கின்றாய்; – செய்செய்
எனவென்னைச் செய்கின்றாய்; ஏன்கொல்லு
கின்றாய்?
மனமென்ன கல்லாஉன் மாட்டு!? 02
சென்ற நொடிபோலே செல்லா தருகினில்
நின்றென்னைக் கொல்வது நீதியல்ல; - ஒன்றன்பின்
ஒன்றாய் நகரும் உனக்கிம்மாம் ஆங்காரம்
நன்றல்ல; எட்டி நட! 03
படுக்கிறாய் பாய்போட்டு; பாவைவரும் நேரம்
தடுக்கிறாய் தாழ்போட்டு; தங்கிக் – கெடுக்கிறாய்;
சீண்டிச் சிரிக்கிறாய்; சீவன் பறிக்கிறாய்;
நோண்டி எடுக்கிறாய் நுங்கு! 04
நேசக் கிழத்தி நெடுநேரம் காணவில்லை;
மோசம் எனதுநிலை; மூச்சுமில்லை; - வாசற்
படிதாண்டாப் பத்தினிபோல் பக்கம்நிற் காமல்
நொடியே!நீ போவாய் நொடிந்து! 05
ஒருகணம் கூட ஒருயுகம்போல் போனால்
வருங்கணம் எப்படியாய் வாய்க்கும்? – பெருங்கணத்தை
எண்ணஎண்ண தேகம் இளைக்கும்; மறுபடியும்
உண்ணஉண்ண சோரும் உளம்! 06
பார்வை குறைவிருக்கா? பாதச்
சுளுக்கிருக்கா?
யார்ஒருவர் இங்குனக்காய் ஏங்கிருக்கா? – பேர்த்தெறிய
நாக்கிருக்கா? மூக்கிருக்கா? நாடி நரம்பிருக்கா?
சீக்கிருக்கா? சீக்கிரமாய்ச்
செல்! 07
இப்போது நீசெல் இளையவள் வந்தவுடன்
தப்பாது மொய்வைத் தழைக்கின்றேன்; – அப்போது
தங்கிவிருந் துண்டு தவிசில் துயில்கொண்டு
மங்கலப் பேருகமாய் மண்டு! 08
நொடிக்குள் யுகத்தை நுணுக்கி நகர்த்தத்
துடிப்பாய் அருகிருக்கும் தோறும்; – வெடித்து
யுகமாய் விரிவாய் யுவதியரு கின்றேல்;
நுகரஒண்ணா நீபெரும் நோய்! 09
காலக் கடிகாரம் காலொடிந்து நின்றதுபோல்
சாலம் புரிகின்ற சாத்தியத்தைச் – சீலமுடன்
சேவையாய் நீயிருந்து செய்யலாம்; இப்பொழுது
பூவை வரும்வரைக்கும் போ! 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக