புதன், 22 ஏப்ரல், 2026

 

மோடி -

 

சௌகிதார் வந்தி ருக்கேன்;

   சகஜமாய்ப் பழகும் தம்பி!

சௌக்யமா? மனதில் ஏதும்

   சலனமா? பேர்தான் என்ன

கௌசிக்கா? மனதில் என்ன

      ‘லவ்சிக்கா? உள்ள வற்றைக்

கௌரவம் விட்டு விஸ்வ

   குருவிடம் சொலமாட் டாயா?

 

கடைக்காரன் -

 

சிந்தூர்போர் போல்வி ரைந்து

   சீக்கிரம் முடிப்ப தற்கு

சிந்தையிலே ஊறுங் காதல்

   சிக்கலென்ன சிறுசா? மோடி!

எந்தவூர் ஆளு நீங்க?

   என்னவாங் கிடவந் தீங்க?

கந்துக்கே கடையைப் போட்டேன்

   காசீந்து வாங்கிக் கோங்க!




 

டிரம்ப் கூற்று!

 

அழகான பெண்ணை எல்லாம்

   அணைக்கத்தான் வேண்டும் அன்றிக்

குழிதோண்டி புதைக்கும் எண்ணம்

   கூடாது; மலர்மஞ் சத்தில்

பழகாத வித்தை யெல்லாம்

   பழகத்தான் வேண்டும் அன்றிப்

பழிதீர்த்துக் கொள்ளும் எண்ணம்

   பரவிடல் முறையா காது!

 

அப்பனே! ஈரான் தேசம்

   ஆள்வோனே! செயற்கை யான

ஒப்பனை தேவை இல்லா

   ஒண்டொடி எண்ம ரையும்

இப்பவே விடுத லைசெய்!

   இல்லாது போனால் போரில்

துப்புற வாக உன்னைத்

   துடைத்தழித் திடுவேன் நானே!




 

சுடலை -

 

லிக்கரை விற்றுக் காசை

   லவட்டியும், குடிமக் கள்தம்

நிக்கரை உருவி மானம்

   நிம்மதி இழக்கச் செய்தும்,

டக்கராய் வாழும் இந்த

   டாடியின் தாகம் தீர்க்கச்

சக்கரை இலாக்க ருப்பஞ்

   சாறுபிழிந் தீவாய் தாத்தா!

 

வியாபாரி -

 

என்னண்ணன் செட்டு நீங்க!

   என்னையா தாத்தான் றீங்க?

நன்மையே செய்யா நீங்க

   நாடாள ஏன்வ றீங்க?

கண்ணியமாச் சொல்றேன் எந்தன்

   கடைப்பக்கம் வாரா தீங்க

புண்ணியமாப் போகும் நாடு

   புலரட்டும் வீடு போங்க!




திங்கள், 20 ஏப்ரல், 2026

வெட்டொன்று துண்டிரண்டு விள்!

 

என்னுள் எழுங்காதல் என்னை விழுங்குதல்போல்

உன்னுள்தோன் றிற்றா உனைவிழுங்க?’ – என்பதனைச்

சட்டென்று சொல்லத் தடுமாறும் காரிகையே!

வெட்டொன்று துண்டிரண்டு விள்!

 

எம்மாம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்

சும்மானாச் சும்பதில் சொன்னாயா? – அம்மாடி!

ஆக்கினைகள் செய்தாயா? ஆறப் பொறுக்கலையே

ஆக்கப் பொறுத்த அகம்!

 

ஒவ்வொரு நாளுமே ஓர்யுகமாய்ப் போகிறது;

செவ்விழியாட் கெவ்வாறு செல்கிறது? – இவ்விவரம்

பித்துப் பிடித்தவென்முன் பெண்பேதை சொல்லாக்கால்

செத்துத் தொலையலாம் ச்சே!

 

யானை பிடிக்க அகலமாய் ஆழ்பள்ளம்

கானை அடைந்து கடைந்தாற்போல் – தானைப்

படைகொண்டு வந்திப் பயலைப் பிடிக்கக்

குடைந்தாயோ கன்னக் குழி!?

 

பூவுன்னைப் பார்த்தவுடன் புல்லறிக்கும்; பைந்தமிழ்ப்

பாவுன்னைப் பார்த்தவுடன் பல்லிலிக்கும்; – நாவுதிர்க்கும்

மெல்லிசை நச்சரிக்கும்; மேன்மைகளை உச்சரிக்கும்;

எல்லிநிலா பொச்சரிக்கும் இன்று!

 

முத்தான பூஞ்சிரிப்பு மோகினி என்நெஞ்சில்

பத்தா யிரம்வாலா பற்றவைத்தாள்; – நித்தநித்தம்

தீபா வளிதான்என் தேகத்தில்; காதுகளில்

பூபாளம் கேட்கும்அப் போது!

சர்க்கரை வெண்பா!

 

முன்போல் இருக்க முடிகிறதா? சர்க்கரைநோய்

தின்கின்ற தென்னை, தெரிகிறதா? – என்நெஞ்சே!

சீக்கோடு மேலும் சிரம‍ப் படவேண்டாம்

நாக்கோடு வைக்காதே நட்பு!

 

தட்டிலே காண்கிற லட்டையே மேயாதே;

வெட்டியாய் அல்வாவை வேண்டாதே; – சட்டியில்

தீனி பலவிதம் தேடாதே; ரத்த‍த்தில்

சீனி அதிகமாச் சே!

 

வாயால் விழுங்கியதைக் காலால் கரைப்பதற்குள்

ஓயாமல் நான்நடந்து ஓய்ந்துவிட்டேன்; – தேயாத

தொப்பையே! செய்யாதே தொந்தரவு; வீண்கொழுப்புக்

குப்பையை எங்கேனும் கொட்டு!




செவ்வாய், 14 ஏப்ரல், 2026

 

பேரன்பு கொண்ட
பெருங்கோபக் காரனிவன்;
கூரம்பு போற்துளைக்கும்
கொள்கையினன்; - ஈரம்
நிறைந்தவன் தீரம்
நிறைந்தவன் வீரம்
நிறைந்தவன் வெம்புலிக்கு
நேர்!



நரை!

 


 

நான்பெற்ற இந்தநரை

நாற்பதில் கண்டநரை

போராடி ஆனவரை

தோற்றதால் வந்தநரை

 

பஞ்சுக்குப் போட்டியாய்ப்

பால்வண்ணம் கொண்டநரை

மல்லிகைக்குப் போட்டியாய்

மல்லுக்கு நின்றநரை

 

காலம் வெளுத்தில்

கண்விழித்துக் கொண்டநரை

வண்டி இழுத்தோய்ந்த

மாட்டின்வாய் தள்ளும்நுறை

 

பேருக்குப் பித்தநரை

தோன்றுகையில் ஒத்தைநரை

இளமைக்கு மூடுவிழா

இன்றுள்ள மொத்தநரை

 

வீடுபழ சாச்சென்று

வெள்ளை அடித்தநரை

வழுக்கைக்கு வாய்ப்பினை

வழங்காத வைரநரை

 

பாதியில் கைவிட்ட

கருமைபோல் இந்தநரை

வீதியில் எனைவிட்டு

விலகாது உள்ளவரை

 

எண்பதிலென் அப்பாவுக்(கு)

எட்டியெட்டிப் பார்த்தநரை

நாற்பதிலென் மண்டையில்

நங்கூரம் இட்டநரை

 

வெள்ளிக்குப் போட்டியாய்

வெண்நிறம் வாய்த்தநரை

நெற்றி வயற்பரப்பில்

நின்றாடும் மேய்ச்சல்நிரை

 

மூப்பெனும் நூலுக்கு

முன்னுரை கண்டநரை

சீப்புடன் நட்போடு

சினுங்கிடும் செல்லநரை

 

இளமையெனும் மணவாளன்

இறந்தொழிந்து போனதனால்

வெள்ளாடை ஏற்கின்ற

விதவையோ இந்தநரை?

 

நல்லெண்ணை குளியலிட்டும்

தேங்காய்நெய் தடவிவிட்டும்

பார்த்துப் பராமரித்தும்

பல்லிளிப்ப தென்னமுறை?

 

வட்டமாய்ப் பின்மண்டை

வழுக்கை விழுந்தெனக்குச்

சொட்டையெனும் பேர்வழங்காத்

தோழமைதான் இந்தநரை

 

நரையே! உனைக்குறை

நாலுபேர் சொல்லிடலாம்;

நன்றி சிறிதுமின்றி

நான்குறை சொல்வேனா?

 

கறுப்பாய் இருந்தாலும்

வெளுப்பாய் இருந்தாலும்

இருக்கின்றாய் என்பதே

இன்பம்தான் இன்றுவரை

 

இனிமேல் நரைப்பதற்கு

இடமின்றி நரைத்தநரை

மூசை நரைத்தாலும்

ஆசைக்கு இல்லைநரை

 

முத்தான பூஞ்சிரிப்பு மோகினி என்நெஞ்சில்

பத்தா யிரம்வாலா பற்றவைத்தாள்; – நித்தநித்தம்

தீபா வளிதான்என் தேகத்தில் காதுகளில்

பூபாளம் தான்கேட்கும் பூத்து!