புதன், 17 ஜூன், 2026

 

எனக்குள் அவள்!

 

பூமேல வண்டமர்ந்தாற் போலஅவள் நெனப்பு – என்

புத்திக்குள்ள படமோட்டும் பொன்முகத்து வனப்பு!

 

தேனள்ளித் தெளிக்குமவள் தெத்துப்பல் சிரிப்பு – இள

மான்துள்ளிக் குதிப்பதுபோல் வார்த்தைகளின் விரிப்பு!

 

அவள்வீட்டுக் கதவுக்கும் கண்முளைக்கும் புதுமை

அடஅந்தப் புதுமைக்குக் காரணம் அப்பதுமை!

 

காற்றாகப் பறக்குமவள் கால்தடத்தைத் தேடி – ஒரு

கற்பூரம் ஏற்றலன்னா மனம்போகும் வாடி!

 

அவள்தொட்ட காகிதப்பூ மணம்வீசும் வீசும் – அட

அதைக்கண்டு பொறுக்காம அல்லிபுறம் பேசும்!

 

என்னுதட்டில் ஓடுது ஒருமுத்த ஆறு – அதில்

உள்நீச்சல் அடிக்கஅவள் உதடுகொள்ளும் வீறு!

 

பல்குத்த அவளுக்கென் மீசைநுனி தோது – அவ

ஆசைகளை மாட்டிவைக்கும ஆங்கர்என் காது

 

வாடையது மடல்திறந்து வாசமள்ளித் தெளிக்க – உடன்

தேடியங்கு வண்டுவந்து தேன்கடலில் குளிக்க…

 

அவநெனப்பு வந்துவந்து ஆனைவெடி வெடிக்க – தெனம்

சிவனேன்னு இருப்பதுபோல் எப்படிநான் நடிக்க?

 

போல்லாத கடவுள்ஏன் பொம்பளைய படைச்சான் – அவ

இல்லாத இடையின்மேல் இன்பத்த வைச்சான்?

 

ஏஞ்சல்யார்? என்றே எனைக்கேட்டால் இங்குள்ள

நாஞ்சிலார் என்றேதான் நான்மொழிவேன்; - ஊஞ்சலாய்

அன்னவர் நாவை அழகுதமிழ் ஏற்றாடல்

தென்னவர்க்குச் சொன்னேன் தெளிந்து!

 

வான்போற் புகழும் வசையும் ஒருசேரத்

தான்பெற்ற போதும் தலைக்கனக்கான்; - தேன்பெற்ற

தீஞ்சுவை போலும் சினேகன் திரைப்பாடல்

நாம்சுவைக்கு மாறீந்தான் நன்று!

 

நான்பொறந்த ஊர

நான்வளர்ந்த மண்ண

நாலுவரி பாடப்போறேன் கேட்டுக்கோ

சொந்தஊரைப் பற்றி

தப்புக்கணக் கிருந்தா

கையெடுத்து கன்னத்துல போட்டுக்கோ

சந்தனமும் ஈடில்ல பாத்துக்கோ – நீ

சொந்தஊரு மண்ணெடுத்துப் பூசிக்கோ!

 

ஏலேலோ ஏத்தப் பாட்டும்

எசபாடும் குயிலின் பாட்டும்

நாத்துக்கே நடனம் சொல்லி

நடந்துவரும் தென்றல் காத்தும்

கண்ணாடி போன்ற குளத்தில்

பெண்களின் நீர்விளை யாட்டும்

எங்கஊர் இளவட் டங்க

எடுத்தாளும் தமிழா கட்டும்

நீயும் காணவேணும் – கண்டா

அங்கு வாழத்தோனும்

 

தாய்மடிக்கு அடுத்த படியா

சொர்க்கமுன்னா பொறந்த ஊரு

புரியலையா? சிலகா லங்கள்

பொறந்தமண்ண பிரிஞ்சிப் பாரு

பொறந்தவீட்டுப் பெருமை பேசும்

பொம்பளையும் நானும் ஒன்னு

பொறந்தஊர விட்டுப் பிரிஞ்சா

பில்கேட்சே ஆயினும் மண்ணு

சொர்க்கம் கூடபாழு - நீ

சொந்த ஊரில்வாழு

 

 

 

 

 

எங்கஊரு கத்தரிக் காய்க்கு

இணைசொல்ல காயி இருக்கா?

எங்கூரு புழுதி போல

சந்தனமும் மணந்து கெடக்கா?

 

சுற்றிஉண்டு குடிசைகள் நூறு

 

 

 

எங்கஊரு கத்தரிக் காய்க்கு

இணைசொல்ல காயி இருக்கா?

நெய்யொழுக சமச்சிக் கொடுக்க

ரெடியாக தாயி இருக்கா!

 

 

வானுயர்ந்த சோலைகள் இல்ல

மேகம்முட்டும் வீடுகள் இல்ல

திசையளக்கும் தெருக்களும் இல்ல

தேவைக்குமேல் பொருட்களும் இல்ல

பாதிக்குமேல் படிச்சவ னில்ல

பட்டறிவில் இளைச்சவ னில்ல

ஒழைச்சிப்பொழைக்க அறிஞ்ச கூட்டம்

உயரமட்டும் தெரிஞ்ச தில்ல

ஆனா எங்கஊரு

அழகான சிங்கப்பூரு

 

 

என் ஊர்

 

என்ஊரைச் சுத்திப் பார்க்கிறேன்

ஏராளம் மாற்றம் பார்க்கிறேன்

ஏரூரும் நிலங்கள் யாவையும்

வீடாச்சே விழிகள் வேர்க்கிறேன்

எருதும் ஏரும் காணல

எதுவும் பேசத் தோனல

கடையில் அரிசி வாங்கி சமைக்கும்

பழக்கம் வந்தது ஊருல

 

வெள்ளாறு இப்போ வெறிச்சோடி வாட

வெள்ளாடே! கூறு என்னாச்சு ஓடை

தேன்குயில் ஏன்தான் கூவல

தென்றல் காற்றும் வீசல

தென்னந் தோப்புக்கு என்ன ஆச்சு

திருடு போச்சா தெரியல?

 

எஞ்சோட்டு மான்கள் எங்கேதான் போச்சு

எல்லார்க்கும் எப்போ கல்யாணம் ஆச்சு

யாரது சிட்டா பறப்பது

தாவணி யால்முகம் மறைப்பது

குட்டியூண்டா பார்த்த அவளா

குமரிப் பொண்ணா நிற்பது?

 

என்தந்தை மீசை நரைசூடும் காட்சி

என்தாயின் தோலில் சுருக்கத்தின் ஆட்சி

கையும் காலும் ஓடல

கண்ணை இமைகள் மூடல

கடந்த காலம் திரும்ப வருமா

கவலையில் தூக்கம் கூடல

 

 

என் ஊர்

 

நாலாயிரம் பெருமையுண்டு நானெடுத்துச் சொல்ல

சீகூரு போலசொர்க்கம் தேசமெங்கும் இல்ல

வேலுகம்பு வெட்டரிவா நாங்கஎடுப்ப தில்ல

எல்லயில ஐயனாரு காவல்காச்ச சொல்ல…

 

குமரிப் பெண்கள்

குறும்புக் கண்கள்

குறைவில்லாம பெற்றஊர்

காட்டில் வீட்டில்

களத்து மேட்டில்

காதல்பாடம் கற்றஊர்

 

பறவைக் கூட்டம்

இரைகள் தேட

புஞ்சைநஞ்சை கொண்டஊர்

ஊறவு மக்கள்

வந்து போக

திருவிழாக்கள் கண்டஊர்

 

ஈரம் வீரம்

இரண்டும் இங்கே

இம்மியளவும் குறையாஊர்

வசதி கொஞ்சம்

வாய்த்த போதும்

வறுமைக்கோடு மறையாஊர்

 

 

கல்வி கற்ற

கார ணத்தால்

சாதிச்சண்டை மறந்தஊர்

என்னைப் பெற்ற

கார ணத்தால்

இன்னும்கொஞ்சம் சிறந்தஊர்!

 

என் ஊர்!

 

அகரம் சீகூர் எனும்பெயர் அமைந்த

அழகிய சொர்க்கம் தான்என்ஊர்

தகரம் என்னைத் தங்கம் ஆக்கி

சாதனை படைத்த ஓர்பொன்னூர்

வடக்கினில் ஆறும் தெற்கினிலே

வகையாய் ஏரியும் இருக்கிறது

கிழக்கில் மேற்கில் அமைந்திருக்கும் – வயல்

கிளிப்பச்சை பயிர்களை வளர்க்கிறது

 

திருமாங் கனிகள் சிரிக்கும் தோப்பும்

தென்னை பனையும் அங்குண்டு

சிறுவாய் அணில்கள் சுவைக்கிற பழத்தில்

சிறுவர் களுக்கும் பங்குண்டு!

ஆலம் விழுது தரையிறங்கி

ஊஞ்சல் ஆட உதவிடுமே

ஆரும் கேட்க ஆளில்லை – கிளைமேல்

அமர்ந்து ஒருகிளி கதைவிடுமே!

 

உறவைச் சொல்லி உரிமை பேசி

ஒருஆண் காதல் வலைவிரிப்பான்

அறிவைப் பேணும் ஆடவன் எவனோ

அவனைப் பெண்ணும் மணம்முடிப்பாள்

உழைப்பால் எங்கள் உடல்வடிக்கும்

வியர்வை கறைக்கும் கல்லையடா

பகிர்ந்து உண்ணும் பழக்கத்தால் – அங்கு

பட்டினிச் சாவே இல்லையடா!

 

பல்லவி :-

 

சாமி செத்துப் போச்சா?

வானம் இத்துப் போச்சா?

அப்பாவுக் கென்னானது? – அட

என்நெஞ்சம் புண்ணானது – இது

மெய்தானா? – வெறும் பொய்தானா? – இனி

நான்என்னாவேன்? – இது மெய்தான் என்றே ஆனா(ல்)?

 

சரணம் :- 1

 

ஒம்பாச நேசம் ஒங்கோப தாபம்

எண்ணாத நாளேது? – நீ

இல்லாம நானேது?

நீசெஞ்ச தியாகம் நீபட்ட பாடு

எல்லாம்என் நெஞ்சோடு – இனி

என்னாகும் என்பாடு?

வெண்ணிலா தேயலாம் வானம் தேயுமா?

கண்கள மூடினால் காட்சி தோன்றுமா?

உனக்கேதும் ஆனா

      நான்ஆவேன் வீணா!

 

சரணம் :- 2

 

ஒந்தேகம் வாட்டும் எஞ்சோகம் கூட்டும்

நோயின்று தீராதா? – அந்த

நோய்க்கேநோய் வாராதா?

ஒந்தோளில் ஏறி ஊர்கோலம் போன

      அந்நாளும் அரும்பாதா? – அந்த

      சந்தோஷம் திரும்பாதா?

சாமியே வாடினா யாரு தஞ்சம்?

பூமியே ஆடினா ஏது மிஞ்சும்?

துடுப்பில்லா ஓடம்

கரையெங்கே சேரும்?

 

சரணம் :- 3

 

கம்பீர மாக நான்பார்த்த அப்பா

கம்பூன்றும் வயசாச்சா? – அந்த

கம்பீரம் பழசாச்சா?

ஒன்னோட ஆச நீவச்ச மீச

நரையின்று விழுந்தாச்சா? – தோலில்

சுருக்கங்கள் சூழ்ந்தாச்சா?

மன்மத தேவன மிஞ்சப் பார்க்கும்

நீவரும் தோரண யார்க்கு வாய்க்கும்?

விழுந்தாயா நோய்க்கை?

      இதுதானா வாழ்க்கை?

 

       எனக்குள் அவள்!

 

ஓர் அனாதைச் சிறுவனின் அவலப் புலம்பல்கள்

 

எங்குசென்றாள்? என்தாய் எங்குசென்றாள்? என்னை

இங்குள்ள தொட்டியிட்டு எங்கேதான் சென்றாள்?

 

பொன்தட்டில் நெய்சோறும் பருகப் பழச்சாறும்

விண்கட்டில் மீதேறி விளையாட வெண்ணிலவும்

 

பட்டோடு துணிவகையும்@ பலநிறத்தில் அணிமணியும்@

கேட்டேனோ? அழுதேனோ? கத்திழுயிர் எடுத்தேனோ?

 

தப்பாய்ப் பிறந்தேனோ? தவறேதும் செய்தேனோ?

அப்பன் யாரென்று அடம்பிடித்து அழுதேனோ?

 

குப்பைத் தொட்டியென் தொட்டில் ஆனதே...

இப்போது அன்னைமடி கனவாகிப் போனதே...

 

ஆவொன்று கன்றுக்கு அமுதூட்டி விளையாட

‘கோ’வென்று மனமழுவும் கண்ணீரும் சேர்ந்தழுவும்!

 

கிளியொன்று குஞ்சுக்கு தின்பண்டம் ஊட்டுகையில்

விழியில் நீர்பெருகும்! விசனத்தில் நெஞ்சுருகும்!

 

திருவோடு கையோடு@ சாண்வயிறு பசியோடு@

தெருவோடு எனைக்கண்;டால் ஊர்வாசல் அடைத்துவிடும்!

 

நாயீன்ற குட்டிக்கும் நாலுவீட்டில் சோறுண்டு...

ஊருலகில் எனக்கின்று உறவென்று யாருண்டு?

 

மார்கழி குளிருக்கவள் மாராப்பை நெனச்சபடி

எச்சில் இலையை எடுத்தேநான் போத்துகிறேன்

 

தென்னை மரத்தடியோ தெருவோரக் கிணற்றடியோ

தாய்மடி தானென்று தலைவைத்துத் தூங்குகிறேன்

 

பத்தினிப் பெண்மையவள்... பனிமலரின் மென்மையவள்...

பட்டினிக் கிடக்கையிலும் பார்க்கவரா தெய்வமவள்...

 

தூக்கம் விழிசேராத் தூரத்தில் தொலைகிறதே!

ஏக்கம் என்னுள்ளே எரிமலையாய்க் கனல்கிறதே!

 

ஓடி நானொளிய ஒளிந்தயெனை அவள்தேட…

பாடி அவளழைக்கப்  பறந்துவந்து நான்சேர…

 

கொத்தும் கிளிபிடிக்க கோபத்தில் அதுகடிக்க…

கத்தி நானழுக கண்டுஅவள் கண்ணொழுக…

 

மணக்கும் பன்னீரில் மணிக்கணக்கில் நீராட்டிச்

சுணக்கம் ஏதுமின்றித் தூயவள் பார்த்திருக்க…

 

விளையாட நான்செல்ல… உணவூட்ட அவளழைக்க…

களிசேர்க்கும் இவையனைத்தும் கனவுகளின் ஏக்கங்கள்!

 

இளமைக் காலங்கள் இருந்தும் என்னுள்ளே

வளமை சேர்ப்பிக்க வருங்காலம் வருவாளோ?

 

இருக்கும் வேளையிலே இடைவெளி வளர்ப்பவள்

இறக்கும் பொழுதேனும் இருந்தென்னைப் புதைப்பாளோ?

 

ஆக்கப் பொறுத்தமனம் ஆறப் பொறுத்திருக்கும்...

தீய்க்கும் நினைவுகளோ தின்றென்னை முடித்திருக்கும்!

 

எனக்கொரு வரம்கிடைத்தால் மகளாக அவள்கேட்பேன்

அவளைப்போல் வீசாமல் ஆருயிராய்க் காத்திருப்பேன்

 

நான்ஏங்கும் பாசத்தை அவள்மீது உதிர்த்திருப்பேன்

எனக்கான அவளைக்கேட்டு எமன்வரினும் எதிர்த்திருப்பேன்!