அகரம்.அமுதன்
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சனி, 27 ஜூன், 2026
வியாழன், 25 ஜூன், 2026
வண்டலைப்போல் மொத்த வளங்களையும்
காண்பவர்க்குக்
கொண்டலைப்போல் அள்ளிக் கொடுப்பவனே! –
துண்டலைகள்
சூழ்ந்திருக்கும் பூமிபோல் சூரியன்போல்
வானம்போல்
வாழ்ந்திருப்பாய் நீளாயுள் வாய்த்து!
பல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவனே! –
இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்!
ஈகைவல்லான் தாள்வாழ்க! ஈன்றெடுத்த
தாய்வாழ்க!
தோகைநல்லார் தொற்றுகின்ற தோள்வாழ்க! –
வாகைமௌலி
ஏந்தும் சிரம்வாழ்க! ஈயும் கரம்வாழ்க!
நீந்தும் நெறிவாழ்க நெஞ்சு!
‘கண்ணன் ரவி’இன்னோர் கர்ணன்
எனுமாறு
மண்ணில் பிறந்து வழங்குகிறான்; – விண்ணுலவும்
வெண்ணிலவே! தண்ணொளியை வேண்டி இரப்பாயேல்
என்றுமமா வாசை இலை!
உப்புக் கடல்நாளை உண்ணும் படியான
அப்புக் கடலாக ஆகிவிடும்; – ஒப்பில்லா
மன்னன் மணிக்கரம் பட்ட மறுநிமிடம்
தன்னுடல் உப்புத் தகர்ந்து!
குபேரனுக்கும் கொட்டிக் கொடுப்பான்; திருநீற்றுச்
சபேசனுக்கும் அள்ளித் தருவான்; – அபேதமின்றி
யார்க்கும் அளவின்றி ஈயும் குணத்தானைப்
பார்க்கெடுத்துக் காட்டும்என் பாட்டு!
பங்களா கார்வாங்கிப் பாசனநீர்க்
காவாங்கித்
திங்களை வாங்கித் திசைவாங்கிச் - செங்கமல
வாணி அருள்வாங்கி வற்றாப் பொருள்வாங்கி
ஏணியாய் யார்க்கும் இரு!
கொடுப்பதிலுன் கைகளே கோலோச்சும், தீந்தமிழ்ப்பாத்
தொடுப்பதிலென் நாப்போல்நாள் தோறும்; - நெடுநாள்
புவியரசைக் காணப் புகுந்தேன்;இவ் ஏழைக்
கவியரசை ஏறெடுத்துக் காண்!
வாழ்வித்தான் கம்பனை வள்ளல் சடையப்பன்
சூழ்ந்துசுதன் காவியம் சொன்னதற்காய்; – ஆழ்ந்த
புலமை அமுதனைப் போற்றிவாழ் விப்பாய்!
நிலத்திலுன் பேர்நிற்கும் நீடு!
இங்கொரு கண்ணதாசன் இன்னொரு வைரமுத்து
இங்கொரு வாலி எனவாவேன்; – வங்கக்
கடல்சூழ் நிலம்நோக்கும் கார்மேகா! நின்றன்
படத்தில் எழுத்தத்தா பாட்டு!
வியாழன், 18 ஜூன், 2026
133. ஊடல் உவகை!
133. ஊடல் உவகை!
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு! 1321
பேரன்பென் மேற்செலுத்தப் பேருதவி
செய்கின்ற
காரணத்தால் ஊடலைக் கைக்கொண்டேன்; – ஆரமுத
அன்பர்தம் மீதில்லை அப்பழுக்கென் றாலுமவர்
பொன்றிடாக் காதல் பொருட்டு!
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்! 1322
சின்னதோர் துன்பம் சிறகடிக்கும்
நான்போடும்
மென்பிணக்குச் சண்டை விளையாட்டில்; - அன்பர்தம்
அன்புசிறு வாட்டம் அடைந்தாலும் பின்புறும்
பொன்பெறும் நன்மதிப்பே போன்று!
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந்து அன்னார் அகத்து! 1323
செல்லச் சினங்கொண்டு செய்யும் சிறுவம்பிற்(கு)
இல்லை சுவர்க்கமும் ஈடென்பேன்; – நல்ல
நிலத்தினில் நீர்பொருந்தி நிற்றல்போல்
என்றன்
உளத்தினில் நின்றார் உடன்!
புல்லி விடாஅப் புலவினுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை! 1324
கட்டித் தழுவிஅக் கட்டவிழா வண்ணம்நான்
இட்டு நிரப்பும் எரிச்சலுள் – நெட்டி
மலங்கடிக்கும் முற்றும் வளர்ந்திருக்கும்
நெஞ்சைக்
கலங்கடிக்கும் போர்வெங் கணை!
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து! 1325
தப்பே சிறிதுமிலை தாரத்தின் மீதெனினும்
தொப்பென்று போட்டுத் தொலைவிருத்தல் – ‘அப்பப்பா!
போதாத காலமிது போ’வென்னும்
போதுமிதில்
ஏதோஓர் இன்பம் இருக்கு!
உணலினும் உண்டது அறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது! 1326
உண்பதைக் காட்டினும் உண்ட உணவுநன்றாய்க்
கண்டசெறி மானம் களிப்பாகும்; – மண்டையில்வை!
பொன்நிமிட வேர்வைப் புதுப்புணல் ஆடுதலின்
சின்நிமிட ஊடல் சுகம்!
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்! 1327
கொண்ட பிணக்கத்தின் கொண்டை பிடித்தங்கு
மிண்டாமல் தோற்றாரே வென்றார்;இவ் – உண்மை
உடுக்கை இடைமீதே ஒட்டியுற வாடும்
படுக்கையில் காணப் படும்!
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வியர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு! 1328
வட்டச் சிறுநெற்றி வாய்க்கால் வழிந்தோட
ஒட்டிக் கலந்தின்பம் உய்வேனோ? - முட்டத்தான்
முன்னேறு கின்ற முயலிரண்டு கொண்டாளை
இன்னொருபொய்ச் சண்டை இழுத்து!
ஊடுக மன்னோ ஒளியிழை யாய்இரப்ப
நீடுக மன்னோ இரா! 1329
ஏற்ற இறக்கமெலாம் ஏய்ந்தவணி யாள்மனதை
மாற்ற முயன்றிடுவேன் மன்றாடி – ஆற்றல்
திரட்டித்தான் ஆங்கு திமிரட்டும் பெண்மான்;
இரட்டிப்பா கட்டும் இரவு!
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்! 1330
காதலுக் கின்பமக் காதலர் போடும்பொய்
மோதலி னாலே முளைவிடும்; – மோதலுக்குக்
கூடுதல் இன்பத்தைக் கூட்டும் உடலையுடல்
மூடுவ தாலே முகிழ்ந்து!
23-07-2025
132. புலவி நுணுக்கம்!
132. புலவி நுணுக்கம்!
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு! 1311
பொதுமகளிர்க் கெல்லாம் புதுவகையில் தோன்றி
மதுமயக்கம் ஊட்டும்நின் மார்பைப் – பதுமைநான்
ஊறெடுத்த போதும் ஒதுங்கி முகம்புதையேன்;
ஏறெடுத்தும் பாரேன் இனி!
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து! 1312
சண்டை தொடராமல் சற்றே தணிதற்குத்
தொண்டை கனைத்தவர் தும்மினார்; – மண்மீதில்
நீண்ட நெடுங்காலம் நீர்வாழ்க! என்றுநான்
வெண்டுவேன் என்று விளித்து!
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று! 1313
மாலை நிலாப்பொழுதில் வாச மலர்கொய்து
மாலை அணிந்து வலம்வந்தேன்; – சேலைமீன்
ஆரிடம் காட்ட அணிந்துள்ளீர் சொல்கென்றென்
பேரிலே வைத்தாள் பிணக்கு!
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று! 1314
ஆங்குறு காதலர்கள் காதலினும் மேலதிகம்
ஈங்குநாம் வைத்துள்ளோம் என்றவுடம்
-பூங்கொடி
யாள்விம்மிச் சண்டையிட்டாள் யாரை
விடவுமெனும்
கேள்வி தனைத்திருப்பிக் கேட்டு!
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்! 1315
இப்பிறப்பில் உன்னை இணைபிரியேன்
நானென்றேன்
அப்பொழுதே கண்ணீர் அலர்ந்தழுதாள்; – அப்படியேல்
பிற்பிறப்பிற் சேரப் பிரியமெனக்
கில்லையென்ற
கற்பிதத்தைத் தன்மனத்தே கண்டு!
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்
என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்! 1316
தழுவாமல் என்றனைத் தள்ளித் தனிவைத்(து)
அழுதாள்பூங் கூந்தல் விழுதாள்; – ‘பொழுதுமுனை
எண்ணுகிறேன் நான்’என்றேன்; என்னைமறந்
தால்தானே
எண்ண முடிந்திடும் என்று!
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று! 1317
‘அச்’சென்று நான்தும்ம
அச்சுவெல்ல வாயெடுத்து
‘நச்’சென்று வாழ்த்திய
நங்கைபின் – ஒச்சினாள்;
எண்ணுவோள் நான்இங் கிருக்க எவளும்மை
எண்ண,நீர் தும்மினீர் என்று!
தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று! 1318
தும்மல் மறைத்துநான் கம்மென் றிருப்பினும்
விம்முவாள் நெஞ்சம் வெதும்புவாள்; – அம்மணி
ஆரோ உமைநினைக்க அஃதை எனக்குமறைத்
தீரோவென் றேதிட்டித் தீர்த்து!
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று! 1319
இப்படித்தான் மற்றை இடைச்சிய ரோடும்,இச்
செப்படி வித்தைகள் செய்வீரோ –
செப்பென்பாள்;
பொன்மகளின் நெஞ்சப் புகைச்சலைத்
தீர்க்கும்என்
அன்பில் குளிர்ந்தும் அவள்!
நினைத்திருந்து நோக்கினும் காயும்
அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று! 1320
புத்தி முழுதுமவள் பொன்னுருவச்
சிந்தனையில்
முத்துமுகம் பார்த்து முகிழ்ந்திருக்க, – அத்தைமகள்
யாரை மனதெண்ணி என்றன் முகம்பார்த்தீர்?
பேரைச்சொல் என்பாள்அம் பெய்து!
131. புலவி!
131. புலவி!
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது! 1301
மென்பஞ்சே போலிருக்கும் என்நெஞ்சே!
ஊடலினால்
அன்பர் வருத்தம் அடையட்டும் – முன்புபோய்க்
கட்டி அணைக்கக் கருத்தி நெருங்காமல்
எட்டித்தான் கொஞ்சம் இரு!
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்! 1302
தேவையறித் துப்பைத் தெளித்தால் உணவுநம்
நாவைக் கடக்கும் நலமாக; – தேவைக்கு
மேலிட்டால் கெட்டு விடுமுணவைப் போலூடல்
மேலதிகம் ஆக விடேல்!
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்! 1303
மென்மேற் சுமையேறி வேதனை தான்கூடிப்
புன்மை அடைந்து பொசுங்கிடுவார்; – தன்னினிய
பொய்க்கோபம் காட்டப் புகுவார்க்(கு) அதைத்தீர்த்து
வைக்காமல் விட்டு விடின்!
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று! 1304
மென்சண்டை போடுகிற மெல்லியலார் கோபத்தை
முன்நின்று தீர்க்க முயலாமை, – வன்காய்வில்
வாடிக் கிடக்கின்ற வள்ளிக் கொடிவேரைத்
தேடி அரிவதெனத் தேர்!
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து! 1305
பூங்கணைபோற் கண்ணுடைய பூவையரின் நெஞ்சத்து
நீங்காத ஊடல் நிலைசிறப்பே; – பாங்கான
பீடது பெற்றுநற் பேரது சேர்ந்தநல்
ஆடவர்க்(கு) அஃதே அழகு!
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருங்காயும் அற்று! 1306
செல்ல வருத்தமும் சின்ன பிணக்கமும்
இல்லாத காதல் இளைத்திளைத்துப் – பல்பதிக்கத்
தோதற்ற வெம்பழம்போல் தொத்தற் கருங்காய்போல்
ஏதற்கும் ஆகா(து) இறும்!
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவது அன்றுகொல் என்று! 1307
ஆசைக் கலவியின் ஆயுள்நீ ளாதோவென்(று)
ஓசை உளத்தே ஒலிப்பதனால் – பூசையின்
முன்நிகழு கின்ற முறைப்பில் முகங்காட்டும்
துன்பம் சிறிது துளிர்த்து!
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி! 1308
துன்பம் அடைந்து துடித்துத்
துடிதுடித்துப்
பின்பும் வருத்தம் பெருக்குவதேன்? - இன்னதுதான்
தாக்குகிற தென்றறிந்து தானே முனம்நின்று
போக்குகிற அன்பரிலாப் போது!
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது! 1309
உண்ணும் படிச்சுவை உண்டாகும், அந்நீரும்
தண்ணென்ற நீழற்கீழ்த் தானிருந்தால்; – கொண்டபெரும்
ஊடலும் அன்புடையா ரோடு நிகழுமெனில்
நீடலுண்டு இன்பம் நிறைந்து!
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவம் என்பது அவா! 1310
சண்டை தணிக்கச் சமரசம் செய்யவழி
கண்டார் இலையந்தக் காதலரைத் – தண்டாமல்
ஒசை எழுப்பி உறவாட உந்திடுதே
ஆசையி னாலே அகம்!
ஆளெல்லாம் கூடி அமர்ந்து மகிழ்ந்திருந்து
மீளாத யாவினையும் மீட்டெடுக்க -
நாளெல்லாம்
தேனலைபோல் வந்து செவிகள் நிறைத்திடும்
வானலை தந்தவர்க்கென் வாழ்த்து!
தூக்களைப் பற்றி நீங்கள்
தூக்கிய தூக்கு கொஞ்சம்
தூக்கலே; வரிசை கட்டித்
தூக்களும் தூக்கச் சொல்லி
தூக்கவே மகிழ்ச்சி பொங்கித்
தூக்கமே அற்றுப் போன
தூக்களை நானும் கொஞ்சம்
தூக்கித்தான் பார்த்திட்டேனே!


