திங்கள், 20 ஏப்ரல், 2026

வெட்டொன்று துண்டிரண்டு விள்!

 

என்னுள் எழுங்காதல் என்னை விழுங்குதல்போல்

உன்னுள்தோன் றிற்றா உனைவிழுங்க?’ – என்பதனைச்

சட்டென்று சொல்லத் தடுமாறும் காரிகையே!

வெட்டொன்று துண்டிரண்டு விள்!

 

எம்மாம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்

சும்மானாச் சும்பதில் சொன்னாயா? – அம்மாடி!

ஆக்கினைகள் செய்தாயா? ஆறப் பொறுக்கலையே

ஆக்கப் பொறுத்த அகம்!

 

ஒவ்வொரு நாளுமே ஓர்யுகமாய்ப் போகிறது;

செவ்விழியாட் கெவ்வாறு செல்கிறது? – இவ்விவரம்

பித்துப் பிடித்தவென்முன் பெண்பேதை சொல்லாக்கால்

செத்துத் தொலையலாம் ச்சே!

 

யானை பிடிக்க அகலமாய் ஆழ்பள்ளம்

கானை அடைந்து கடைந்தாற்போல் – தானைப்

படைகொண்டு வந்திப் பயலைப் பிடிக்கக்

குடைந்தாயோ கன்னக் குழி!?

 

பூவுன்னைப் பார்த்தவுடன் புல்லறிக்கும்; பைந்தமிழ்ப்

பாவுன்னைப் பார்த்தவுடன் பல்லிலிக்கும்; – நாவுதிர்க்கும்

மெல்லிசை நச்சரிக்கும்; மேன்மைகளை உச்சரிக்கும்;

எல்லிநிலா பொச்சரிக்கும் இன்று!

 

முத்தான பூஞ்சிரிப்பு மோகினி என்நெஞ்சில்

பத்தா யிரம்வாலா பற்றவைத்தாள்; – நித்தநித்தம்

தீபா வளிதான்என் தேகத்தில்; காதுகளில்

பூபாளம் கேட்கும்அப் போது!

சர்க்கரை வெண்பா!

 

முன்போல் இருக்க முடிகிறதா? சர்க்கரைநோய்

தின்கின்ற தென்னை, தெரிகிறதா? – என்நெஞ்சே!

சீக்கோடு மேலும் சிரம‍ப் படவேண்டாம்

நாக்கோடு வைக்காதே நட்பு!

 

தட்டிலே காண்கிற லட்டையே மேயாதே;

வெட்டியாய் அல்வாவை வேண்டாதே; – சட்டியில்

தீனி பலவிதம் தேடாதே; ரத்த‍த்தில்

சீனி அதிகமாச் சே!

 

வாயால் விழுங்கியதைக் காலால் கரைப்பதற்குள்

ஓயாமல் நான்நடந்து ஓய்ந்துவிட்டேன்; – தேயாத

தொப்பையே! செய்யாதே தொந்தரவு; வீண்கொழுப்புக்

குப்பையை எங்கேனும் கொட்டு!




செவ்வாய், 14 ஏப்ரல், 2026

 

பேரன்பு கொண்ட
பெருங்கோபக் காரனிவன்;
கூரம்பு போற்துளைக்கும்
கொள்கையினன்; - ஈரம்
நிறைந்தவன் தீரம்
நிறைந்தவன் வீரம்
நிறைந்தவன் வெம்புலிக்கு
நேர்!



நரை!

 


 

நான்பெற்ற இந்தநரை

நாற்பதில் கண்டநரை

போராடி ஆனவரை

தோற்றதால் வந்தநரை

 

பஞ்சுக்குப் போட்டியாய்ப்

பால்வண்ணம் கொண்டநரை

மல்லிகைக்குப் போட்டியாய்

மல்லுக்கு நின்றநரை

 

காலம் வெளுத்தில்

கண்விழித்துக் கொண்டநரை

வண்டி இழுத்தோய்ந்த

மாட்டின்வாய் தள்ளும்நுறை

 

பேருக்குப் பித்தநரை

தோன்றுகையில் ஒத்தைநரை

இளமைக்கு மூடுவிழா

இன்றுள்ள மொத்தநரை

 

வீடுபழ சாச்சென்று

வெள்ளை அடித்தநரை

வழுக்கைக்கு வாய்ப்பினை

வழங்காத வைரநரை

 

பாதியில் கைவிட்ட

கருமைபோல் இந்தநரை

வீதியில் எனைவிட்டு

விலகாது உள்ளவரை

 

எண்பதிலென் அப்பாவுக்(கு)

எட்டியெட்டிப் பார்த்தநரை

நாற்பதிலென் மண்டையில்

நங்கூரம் இட்டநரை

 

வெள்ளிக்குப் போட்டியாய்

வெண்நிறம் வாய்த்தநரை

நெற்றி வயற்பரப்பில்

நின்றாடும் மேய்ச்சல்நிரை

 

மூப்பெனும் நூலுக்கு

முன்னுரை கண்டநரை

சீப்புடன் நட்போடு

சினுங்கிடும் செல்லநரை

 

இளமையெனும் மணவாளன்

இறந்தொழிந்து போனதனால்

வெள்ளாடை ஏற்கின்ற

விதவையோ இந்தநரை?

 

நல்லெண்ணை குளியலிட்டும்

தேங்காய்நெய் தடவிவிட்டும்

பார்த்துப் பராமரித்தும்

பல்லிளிப்ப தென்னமுறை?

 

வட்டமாய்ப் பின்மண்டை

வழுக்கை விழுந்தெனக்குச்

சொட்டையெனும் பேர்வழங்காத்

தோழமைதான் இந்தநரை

 

நரையே! உனைக்குறை

நாலுபேர் சொல்லிடலாம்;

நன்றி சிறிதுமின்றி

நான்குறை சொல்வேனா?

 

கறுப்பாய் இருந்தாலும்

வெளுப்பாய் இருந்தாலும்

இருக்கின்றாய் என்பதே

இன்பம்தான் இன்றுவரை

 

இனிமேல் நரைப்பதற்கு

இடமின்றி நரைத்தநரை

மூசை நரைத்தாலும்

ஆசைக்கு இல்லைநரை

 

முத்தான பூஞ்சிரிப்பு மோகினி என்நெஞ்சில்

பத்தா யிரம்வாலா பற்றவைத்தாள்; – நித்தநித்தம்

தீபா வளிதான்என் தேகத்தில் காதுகளில்

பூபாளம் தான்கேட்கும் பூத்து!


உறவு!


விழுதெனவே நமைத்தாங்க
விழைவதுதான் உறவு - நாளும்
பழிபேசிப் பரிகசிக்கும்
பண்பதுவா உறவு?
இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு - வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?
இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு - கையில்
இருப்பிருக்க இன்புறவை
இணைவதுவா உறவு?
வற்றிவிட்ட குலத்துடனே
வாழும்புல் உறவு - தண்ணீர்
முற்றுமின்றேல் எழுந்தோடும்
புள்ளினமா உறவு?
காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு - நெஞ்சில்
மாசைவைத்து முகத்தளவில்
மலருவதா உறவு?
அகத்தளவில் கலந்திருக்க
அமைவதுதான் உறவு - இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?
கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு - வானில்
இருளகன்றால் ஒளிந்துகொள்ளும்
விண்மீனா உறவு?
கண்ணிமையாய் அருகிருந்து
காணவேண்டும் உறவு - அன்றிப்
புண்ணெனவே வலிதந்தால்
பூணவேண்டும் துறவு!

வியாழன், 9 ஏப்ரல், 2026

 'கண்டு புடிச்சான்

அமெரிக்கா வைக்கொலம்பஸ்'
என்று படிக்கும்
எவன்கேட்டான்? - கொண்டுபோய்
அங்காரும் காணவே
ஆகா வகையினில்
இங்கார் ஒளிச்சுவச்சான்
என்று?



நாமாய்ப்போய்ச் சொல்வோம்நம் நெஞ்சு!


பூனை கூற்று!

யாரது என்ஆளா?
என்னையெதிர் பார்த்தாளா?
ஓரவிழி நீர்சொரிஞ்சே
ஓஞ்சாளா? – மாரனிட்ட
அம்புக்கே தேஞ்சாளா?
அங்கங்கள் தீஞ்சாளா?
ம்முக்கே மாஞ்சாளா
மாது!?

ஊருக்குப் போறாளா?
உத்தரவு கோராளா?
பேருக்கும் என்னிடம்
பேசாளா? – யாருக்கோ
காத்திருக் கின்றாளா?
கண்கள் எனக்காய்த்தான்
பூத்திருக் கின்றாளா
பூ!?

இங்கமர்ந்து நானிருக்க
என்னையெதிர் பார்க்காமல்
அங்கெ(ன்)னவே டிக்கை
அவளுக்கு? – பொங்கிவரும்
காதலை நான்சொல்ல
காம்பவுண்ட் ஏறிவந்தால்
வேதனைசெய் கின்றாளே
வீற்று!

சிறுக்கிமகள் நெஞ்சைச்
திருடிவிட யாரும்
குறுக்குவழி வந்துவிடக்
கூடும் – பொறுத்திருந்து
ஏமாந்து போக
இனியும் தயாரில்லை
நாமாய்போல் சொல்வோம்நம்
நெஞ்சு!