‘என்னுள் எழுங்காதல் என்னை விழுங்குதல்போல்
உன்னுள்தோன் றிற்றா உனைவிழுங்க?’ – என்பதனைச்
சட்டென்று சொல்லத் தடுமாறும் காரிகையே!
வெட்டொன்று துண்டிரண்டு விள்!
எம்மாம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்
சும்மானாச் சும்பதில் சொன்னாயா? – அம்மாடி!
ஆக்கினைகள் செய்தாயா? ஆறப் பொறுக்கலையே
ஆக்கப் பொறுத்த அகம்!
ஒவ்வொரு நாளுமே ஓர்யுகமாய்ப் போகிறது;
செவ்விழியாட் கெவ்வாறு செல்கிறது? – இவ்விவரம்
பித்துப் பிடித்தவென்முன் பெண்பேதை
சொல்லாக்கால்
செத்துத் தொலையலாம் ச்சே!
யானை பிடிக்க அகலமாய் ஆழ்பள்ளம்
கானை அடைந்து கடைந்தாற்போல் – தானைப்
படைகொண்டு வந்திப் பயலைப் பிடிக்கக்
குடைந்தாயோ கன்னக் குழி!?
பூவுன்னைப் பார்த்தவுடன் புல்லறிக்கும்; பைந்தமிழ்ப்
பாவுன்னைப் பார்த்தவுடன் பல்லிலிக்கும்; – நாவுதிர்க்கும்
மெல்லிசை நச்சரிக்கும்; மேன்மைகளை
உச்சரிக்கும்;
எல்லிநிலா பொச்சரிக்கும் இன்று!



