ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

10 ஆகஸ்ட் 2022

 

கள்கொட்டி நெய்த கவிதைகளை நானுனது

உள்பெட்டி சேர்க்கும் உளமில்லை; - நள்ளிரவு

வாதைகள் தீர்க்க வரவுமில்லை; சூதுடைய

கோதை உனதுறவு கோது!

 

கொஞ்ச வயசுமில்லை; கொஞ்சும் பவிஷுமில்லை;

கொஞ்சம் கொழுப்பெனில் குற்றமில்லை; - அஞ்சுகமே!

மெத்தைக்கு நீபழசு; வித்தைக்கு நீமவுசு;

சொத்தைக்கா நான்தருவேன் சொத்து!?

 

வயசப் படியுனக்கு வட்டமிடு கின்றாய்;

கயல்குதிக்கி றாய்பசுங் கன்றாய்; - முயல்குதித்து

ஆடை சரிகிறாய்; ஆளை அரிகிறாய்;

ஜாடையில் நீயும் சனி!

 

சிங்கப்பூர் இல்லைநீ; சீரான தொல்லைநீ;

ரங்கோலி இல்லைநீ; ராட்சஸிநீ; - வெங்காயத்

தோல்நீஉள் ளீடில்லாய்; சொல்லஓர் பீடில்லாய்;

பால்நான் படுத்தாய் பழுது!

 

ஜிம்பாடி ஏதெனக்கு? செந்தமிழே தோதெனக்கு;

லம்பாடி பெண்ணே! லடாய்எதற்கு? - எம்பாடு

நாளைக் கடப்பதற்கு; நானாய் இருப்பதற்கு;

ஆளை விடுநீ யடி!

 

தோள்மாறி இங்குவந்த தோகையே! கைகலக்க

ஆள்மாறி இங்குவந்த ஆரணங்கே! - நாள்மாறும்

நான்மாற மாட்டேன்; நடைமீற மாட்டேன்;உன்

ஊன்பொதியை நீதூக்கி ஓடு!

 

இருந்துண்ணும் எண்ணம் எனக்கில்லை கட்டில்

விருந்துண்ண நீயழைக்க வேண்டாம்; - மருந்தெனினும்

உண்ணும் விருப்பமில்லை; உன்மேல் வெறுப்புமில்லை;

கண்வளர்த்த காமம் கலை!

 

கல்மிஷம் இல்லாக் கவிஞன்நான்; என்னிடம்

சில்மிஷம் செய்யும் சிறுகரும்பே! - பல்விஷம்

என்செய்யும் என்றா எடுத்தரவைக் கொஞ்சுவது?

உன்புன் னகைசெய்யும் ஊறு!

 

கிள்ளத்தான் தோணும்; கிளுகிளுப்புக் காணும்;உடன்

அள்ளத்தான் தோணும்; அதற்காகத் - துள்ளியெழுந்(து)

அள்ளுவதும் கிள்ளுவதும் ஆகாதே நாகரீகம்;

தள்ளிநின்று கொள்நீ தவிப்பு!

 

கற்போடு நானுள்ளேன்; கால்கட்டும் போட்டுள்ளேன்;

கொற்கைமுத் தன்ன'ஒய்ஃப்' கொண்டுள்ளேன்; - மற்றொரு

மாதுதொட மாட்டேன் மனதாலும்; காரிகையே!

தூதுவிட வேண்டாம்போய்த் தூங்கு!

 

'ஷார்ப்பு'நகை, பெண்ணாய்ச் சமைந்தமுகை கொண்டேன்;ஓர்

சூர்ப்பனகை தேடேன் சுகத்திற்கு; - கூர்விழியே!

காத்திருந்து ஏமாற கால்கடுத்து நீசோர

பூத்திருந்து நீபொசுங்காய் போ!

 

கட்டில் எனக்கிருக்கக் கட்டாந் தரையெதற்கு?

தொட்டிலுள்ள போதெதற்குத் தூர்ந்தகுழி? - கட்டிப்பொன்

கைமேல் இருக்கக் களிமண்ணை ஒத்த உன்

மெய்மேலா மோகங்கொள் வேன்!?

 

கண்ணுளியைக் கொண்டு கருத்தை ஒருங்கமைத்து

மண்ணுளியை யார்தான் வடித்தெடுப்பார்; - பெண்ணலநீ

பேசும் சிலையென்று பேத்தும் கவிதையெனில்

ஏசும் தமிழே எதிர்த்து!

 

படிதாண்டி நீவரலாம்; பாவலன்நான் வெண்பா

அடிதாண்ட மாட்டேன் அறிவாய்; - அடிபோடி!

வீட்டில் ருசிக்க விருந்திருக்கப் போவேனோ

ரோட்டுக் கடை'டிஷ்'க்கு ரோந்து!?

 

ரம்பைநூல் விட்டாள் ரகசியமாய்; ஊர்காண

அம்பைநூல் விட்டாள் அவசரமாய்; - 'தொம்'மென்று

வீழாத நான்,நீ விரிக்கும் வலையிலா

பாழாவேன் உள்ளம் பசித்து!?

 

மேய்ச்சல் நிலம்தேடி மேய்வது உன்இஷ்டம்;

காய்ச்சல் நிலம்நான் கடந்துபோ; - ஏய்பெண்ணே!

காற்சட்டைப் பையிரண்டும் காலி; இலைபாராய்!

மேற்சட்டைப் பையிலொன்று மே!

 

ஃபேஸ்புக்கில் மேய்வதுன் ஃபேஷன்; உனக்கந்த

ரேஸில் கிடைக்கலாம் ரேஷன்;என்ன - டேஷுக்(கு)

எனைவளைக்கத் தேடுகிறாய்? எத்தனையோ பேருண்(டு)

உனையணைக்கப் போயங்(கு) உலவு!

 

'தொழில்'செய்ய ஃபேஸ்புக் தொழில்நுட்பம் ஏற்ற

வழியெனநீச் சுற்றி வரலாம்; - விழிகளால்

காதல் வலைவீச காமக் கதைபேச

ஏதடி நேரம் எனக்கு?

 

நாற்பதைத் தொட்டவன்நான்; நப்பாசை விட்டவன்நான்;

நாற்றிசையில் நற்பேரை நட்டவன்நான்; - தோற்பை

வியப்பையெலாம் விட்டேன் வெகுநாள்முன்; சின்ன

வயசிருக்கும் ஆளை வளை!

 

சைக்கிளே போதும் சவாரிநான் போக; ரேஸ்

பைக்கெலாம் வேண்டாம் பறக்க;இரு - கைக்கொள்ளாப்

பிஞ்சுமாங் காய்களை பிய்த்துச் சுவைப்பதற்குப்

பஞ்சமா நாட்டில் பயல்!?

 

புதன், 12 ஆகஸ்ட், 2026

 நடை*சாத்தும் முன்பாக நாடிப்போய்ப் பெட்டிக்

கடைசாத்தும் முன்பாக‍க் காளி – அடைத்தவெண்

சீரெட்டை வாங்கிச் செருகினாள் தன்வாயில்

நீரெட்டும் கண்ணோடு நின்று! 01

 

நடை – கோயில் கதவுகள்

 

நெஞ்சம்புண் ஆன நிலமாளும் மாகாளி

பஞ்சு சிகரெட்டைப் பற்றவைத்தாள்; – கொஞ்சமாய்

வட்டவட்ட வெண்புகையை வாயார விட்டால்தான்

எட்டும் மன‍அமைதி என்று! 02

 

ஆடல் அரசி அகில திராவிட

மாடல் அரசை விழுத்தியவள் – கூடல்ல

கோயில் கருவறை கூண்டென்று கூவினாள்

வாயில் சிகரெட்டை வைத்து! 03

 

மாண்ட சமஸ்கிருத மந்திரத்தால் காதிரண்டும்

ஈண்டு செவிடாகி இற்றதென்றாள்; – வேண்டுதலால்

தோள்கள் கனத்ததென்றாள்; தொண்டை அடைத்ததென்றாள்;

தாள்கள் கடுத்ததென்றாள் தாய்! 04

 

விலாநோகத் தன்னை வெறுந்தோளில் தூக்கி

உலாப்போகும் பக்தர்க்கு உதவத் - தலாஓர்

தகரடப் பாவும் தரஇயலா நோவில்

சிகரெட்டை ஊதுகிறாள் சிட்டு! 05

 

வெண்சங்கை வாயூத வேண்டியவள் ஊதுகிறாள்

வெண்சுருட்டைத் துன்பகல வேண்டிஅவள்; – நண்பகலில்

நட்டநடு வீதியிலே நான்குபேர் பார்க்கையிலே

வெட்டவெளி யோடுபுகை விட்டு! 06

 

புண்பட்ட நெஞ்சைப் புகையைவிட்டு ஆட்டென்று

பண்பட்ட மாந்தன் பகர்ந்ததைத்தான் – பெண்ணணங்கு

உண்மை எனநம்பி ஊதுகிறாள் மூவுலக

மண்காக்கும் வேலை மறந்து! 07

 

சாராயம் உண்ணுகிற சாமியுண்டு; வெண்சுருளை

ஆராய்ந்து பற்றவைத்தாள் அன்னையின்று; – வாராத

பெட்டிக் கடைதேடிப் பேரழகு தேவிவந்த

மட்டில் அதுவாச்சே மால்!* 08

 

மால் – வணிக வளாகம்.

 

முகைசூடும் தாயின் நகைசூடும் வாயில்

புகைசூடும் காட்சிப் புதுமை – மிகையாகும்

இந்தச் செயலென்று ஏசுவதும் பேசுவதும்

சிந்தை இலாதார் செயல்! 09

 

காக்கும் கடவுளுக்கும் காயம் படும்நெஞ்சில்

ஏக்கம்சின் னேரம் எழும்,இரவுத் - தூக்கம்

தொலையும், கனவு கலையும், இதயம்

குலையும் அணலாய்க் கொதித்து! 10

 

ரம்போட்டு நெஞ்ச ரணத்தினை ஆற்ற‍ஒரு

தம்போட்டால் ஆகும் தவிடுபோடி; – தம்மாத்தூண்டு

அற்ப மனிதரை ஆட்கொண்ட செய்கைகளைப்

பொற்பத‍த்தாள் கற்றதெங்கே போய்!? 11

 

ஆளும் இறைவி அறிவிக்கப் போந்ததெல்லாம்

நீளும் உயிர்வாழ்வில் நிம்மதிக்காய் – நாளும்

அடுப்பூதும் பெண்ணும் அலுப்பகல வேண்டின்

எடுத்தூத லாம்சிகரெட் என்று! 12



வியாழன், 6 ஆகஸ்ட், 2026

 


விசாரணைக்குக் கூப்டா வெளிக்கிவருதுன்னு

உசாராத் தப் பித்த உதயா! – மிசாவையே

பாத்தோன் மவனே!உன் பாட்டனை நேரொத்தாய்

பாத்ரூம் புதுங்கிப் படுத்து!

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

 

25/10/2012

 

இன்றல்லோ கலைஞன் இறந்தநாள் செந்தமிழர்

இன்றல்லோ நிம்மதியாய் வாழும்நாள் –இன்றல்லோ

அன்முறைகள் நீங்கி அரசிய லாளர்கள்

நன்முறையில் நாடாளும் நாள்!

 

கனிமொழி பாடுவது போல

17/11/12

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்

எந்தைதெற் காண்டான் யாம்வடக் காண்டோம்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்

இரட்டை இலையின் மாதரார்

எம்மாட்சி கொண்டார்யாம் சிறையிலும் உளமே

 

உன்னைத்தான் கேட்கிறேன்!

3/12/12

ஒட்டாதா தமிழர் நாவில்

      ஒண்டமிழ்? ஒட்டி னாலும்

எட்டாதா புகழ்,பேர் என்னும்

      இன்னிலை? எட்டி னாலும்

கொட்டாதா குறையாச் செல்வக்

      குவியல்கள்? கொட்டி னாலும்

கிட்டாதா தமிழர் நாட்டில்

கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?

 

கூடாதா தமிழர் கூட்டம்?

      கூடிப்போர் முரசு கொட்டக்

கூடாதா? வந்தாண் டேய்க்கும்

கொள்ளையர் கூட்டம் அஞ்சி

ஓடாதா? தமிழர் ஆட்சி

ஓங்காதா? அதனை என்பா

பாடாதா? பாடும் காலம்

      பக்கத்தில் வந்தி டாதா?

 

கிழவியே! கிளியே! நாளும்
கிடந்துநான் கொஞ்ச நாணும்
அழகியே! அமுதே! தேனே!
அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
விழுங்கவும் ஒல்லா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டி னுள்ளும்,
உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
ஏங்கினேன் எங்குச் சென்றாய்?

 

எழுத்தின் கண்கள்வழி

எண்ணியதைப் படம்பிடித்து –உள்ளம்

உறுத்தும் நினைவுகளை

உடுத்திக்கொண்ட கடிதமிது

 

இறவா திருந்திருந்தால்

இதுகடிதம் என்றிருப்பேன் –நம்

உறவின் ஆழம்நீ

உணருமுன் இறந்திருப்பேன்

 

சின்னஞ் சிறுவயதில்

சேர்ந்தே வளர்ந்திட்ட –ஏழ்மை

என்னும் பாம்பென்னுள்

எங்கெங்கோ புற்றுவைக்க…

 

கைவைத்த மேலாடை

அங்கங்கே கிழிந்திருக்கும் –கிழிசல்

தைத்த நூலிணைத்தால்

புத்தாடை கிடைத்திருக்கும்

 

கொந்தும் ஏழ்மையெனைக்

கொல்லாமல் விட்டுவைக்க –நீதான்

வந்துநீர் வார்த்தாய்என்

வறுமைக்கு வறுமைவைத்தாய்

 

ஊண்வேண்டும் போதெனக்கு

உதவும்கை யானவனே -அன்று

நான்கொண்ட புண்ணிரண்டைக்

கண்ணிரண்டாய்ச் சமைத்தவனே!

 

வாழ்க்கை வானத்தில்

வளர்பிறையாய் வளர்ந்தேன் –நீ

சூழ்ந்து செங்கதிராய்ச்

சுடர்தந்த காரணத்தால்…

 

என்நலம் உன்நலமாய்

எப்போதும் எண்ணியதால் –நண்பா

தன்நலம் என்னவென்றே

அறியாத தூயவன்நீ

 

பெண்பார்த் தெனக்குப்

பேசி முடித்தவனும் –அதன்

பின்குடும்பம் நான்நடத்த

பேருதவி செய்தவனும்

 

ஏழை எனதெழுத்தை

ஏந்திப் பிடித்தவனும் -என்

ஊழை உடைத்து

ஓங்குபுகழ் நட்டவனும்

 

நீதான் நீதான்

நெஞ்சமெல்லாம் நீயேதான் –என்

தாயின் மறுவுருவாய்த்

தரணிவந்த தேவேதான்!

 

எழுத்தெனது; எழுது

கோலுனது; கருத்தெனது; -அதை

எழிலுறத் தாங்கும்

ஏடுகள் உனது!

 

எல்லாம் கொடுத்தாய்

எல்லாம்தான் கொடுத்தாய் –என்

இல்லாமை இயலாமை

இல்லாமற் பொடித்தாய்!

 

எல்லாம் கொடுத்தவுனக்கு

என்னநான் கொடுக்க? –உன்னிடம்

இல்லாத ஒன்றைநான்

எங்குக்கண்டு பிடிக்க?

 

நெஞ்சம் இவ்வாறு

நினைந்து புலம்புகையில் –நீஎன்

மஞ்சத்தில் படுத்து

வஞ்சம் இழைத்துவிட்டாய்

 

தன்கை கொண்டெனது

தாரத்தைத் தொட்டவனே –இன்றளவும்

தங்கை எனவழைத்த

தாள்கொண்டு சுவ

 

எனையே கேட்டிருந்தால்

எடுத்துக் கொடுத்திருப்பேன்