ஞாயிறு, 5 ஜூலை, 2026

 

அழகாய் இளம்பெண்ணை ஆங்குநாம் கண்டால்

பழக மனமே பறக்கும் –அழகலவே

என்பவர் எண்ணித் துணிக; இளம்பருவம்

தன்னில் இதல்ல தவறு!

 

-

சரியாக ஒன்றரை ஆண்டுக்குமுன் இத்தளத்தின் அமைப்பாளர்களுள் ஒருவரான வரதராஜன் அவர்களின் திருமணத்தின் போது, பெண்பார்த்துவிட்டு வந்த அன்று, பெண்ணைப்பற்றி நான் வெண்பாவில் வினவ, அதற்கு அவர் வெண்பாவிலேயே பதிலுரைக்க என பத்துப் பதினைந்து வெண்பாக்கள் எழுதியதாக நினைவு…

 

அந்தப் பதிவுகள் அனைத்தையும் அவரே அன்று எடுத்துச் சென்றுவிட்டார். எனக்கு நினைவில் உள்ளவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். இவற்றின் தொடர்ச்சியை வரதன் அவர்கள் இங்குப் பதிவிட்டால் அனைவருக்கும் வெண்பா விருந்து வைத்தாற்போல் அமையும்…

 

 

பெண்பார்க்கப் போனாயே போவார் வருவார்தம்

கண்பார்க்கு மாறுநற் கட்டழகோ – நண்பா!உன்

எண்ணத்தில் அந்நேரம் ஏற்பட்ட சிந்தனையை

வெண்பாவில் வைப்பாய் விரைந்து!

 

போதை விழிகண்டேன் பொற்கலைகள் கட்டழகில்

பாதை மறந்தேன் பருவமகள் –பேதையுளம்

மட்டும் புரியா மயக்கத்தில் ஆழ்த்தியெனைச்

சுட்டாள் அதுவும் சுகம்!

 

சுகப்போதை தந்து துயில்மறக்கப் பண்ணி

அகத்தைக் களவாண் டவளின் –தகவுரு

மாநிறமோ மால்நிறமோ மங்கை இதழ்சுவைக்கத்

தேனுறுமோ சொல்க தெளிந்து!

 

தெரிந்த நிறமெல்லாம் தீயணைத்த வண்ணம்;

புரியா துழல்கின்றேன் பொன்எண்ணம் –அறிந்ததைச்

சொல்லத் துடிக்கின்ற சொர்க்கமகள் கண்பார்த்து

அள்ளத் துடிக்கின்றேன் ஆம்!

1 ஜூலை, 2021

 

வரதன்:-

அண்ணாந்துப் பாத்தே அளந்திருக்கேன் சூரியனை

கண்ணேதும் ஆகல்ல கண்மணியே -- சின்னவிழி

ஒன்னமட்டும் பாத்தா ஒடம்பெல்லாங் கூசுதுன்னுக்

கண்ணாடி போட்டிருக்கேன்  காண்.

 

அகரம் அமுதன்:-

ரோட்டுல போமுடில; லோலோன்னு பின்னாடி

ஆட்டினு வந்துடுறான் ஆணழகன்; - நீட்டுல

பாஸானா மட்டும்லௌவ் பண்லான்னு லாவந்தா

லூஸாவான் பாய்ஸ்பல பேர்!

 

வரதன்:-

நீட்டுல பாசானா நீயெல்லாம் பொண்ணுன்னு

ரோட்டுலயா சுத்துவேன் ரோந்துக்கு ? -- ஹாட்டில்லா

ஏசிகார் உள்ள  எனக்கான ஏஞ்சலோட

பேசிட்டே போவேன் பிறகு.

 

அகரம் அமுதன்:-

'ஒன்ஸ்'போகக் கூட ஒழுங்கா அறியாநீ

பென்ஸ்ஸுல போவியா பெண்கூட? - என்னழகுக்(கு)

ஊராளும் மன்னவன் ஓடிவந்து பெண்கேட்பான்

தாராள மாகப்பொன் தந்து!

 

1 ஜூலை, 2021 

மே 8 2020

 

அமுதன்:-

அஞ்சுவட்டிக் கும்வாங்கி அந்தப்பெண் ணைச்சேர்வேன்;

கொஞ்சநஞ்சப் பேரழகா கூர்மார்பு? - இஞ்சியிஞ்சாய்

மேலுதட்டால் ஓர் முறையும் கீழுதட்டால் ஓர் முறையும்

தோலுடுத்த மாரளப்பேன் தொட்டு!

 

ஏடி வரதராசன்:-

காணென்று காட்டக் கருத்தயிதழ் முத்தமிட்டுத்

தேனெடுத்து மட்டும் திரும்பிவா ---- ஏனென்றால்

பத்துவட்டிக் கும்வாங்கிப் பார்ப்பேன்பின்; உன்வாய்ப்பல்

குத்திவிட்டால் ஆமே குறை!

 

அமுதன்:-

பத்துவட்டிக் கும்வாங்கிப் பாயில் இடம்கேட்டால்

ஒத்துக்கொள் ளாளந்த ஒண்டொடி; - வித்தகன்என்

ஆட்டத்தைக் கண்டால் அடுத்தோர் இடம்நாடும்

நாட்டம் எழுமோ? நவில்!

 

ஏடி வரதராசன்:-

யாராட்டம் வேண்டாமல் இங்குவந்து சேர்ந்தாளென்(று)

ஓராமல் இங்கே உளராதே -- ஊரான்

கடைவந்த தெல்லாம் கணக்கிட்டால் நாமும்

விடையில்லா பாய்மேல் வினா.

 

அமுதன்:-

கலைமகள் காணந்தக் காரிகை; நீயோ

விலைமகள் என்பது வீணே; - முலைமகள்

நிற்கும் வியப்புக் குறியாம்; வினாவென்ற

தற்குறி உன்சொல் தவறு!

 

மே 8 2020

1/9/2020

 

1/9/2020

 

ஏடி வரதராசன்:-

பாய விரிச்சாச்சி பைய படுத்தாச்சி

வாயழாம கண்ணீர் வடிச்சபடி --- மேயநான்

காலையில எங்கபோக காசுபணந் தேடியின்னு

மூலையில குந்திகிட்டேன் முன்.

 

அகரம் அமுதன்:-

முதுக வளச்சி முனைப்பா ஒழச்சா

எதுவும் கெடக்கும் எளிதா; - பொதுவாக

ஓர்கதவு மூடினாமற் றொன்று தெறக்கும்பார்;

சோர்வெதற்கு? நன்றாகத் தூங்கு!

 

ஏடி வரதராசன்:-

வளஞ்ச முதுவின்னும் வானம்பாக் கல்ல

களச்சே நகருது காலம் - களத்துல

கால்வச்சா எல்லாங் கணக்கா சருக்குதே

நாள்பூரா நாசந்தா னா?

 

அகரம் அமுதன்:-

துணிஞ்ச வனுக்கில்ல துக்கம்; அறிவ

அணிஞ்ச வனுக்கில்ல அழிவு; - கணிச்சிநாஞ்

சொல்லுறன் சோகத்தத் தூக்கியெறி; நீகூட

வெல்லுற காலம் வரும்!

 

கலங்காதே கண்கள் கடந்துவிடும் இஃதும்;

மலங்காதே நெஞ்சம் மகனே! - விலகாம

காளை வயதிதில் கஷ்டம் தொடர்ந்தாலும்

நாளை நமதென்றே நம்பு!

 

ஏடி வரதராசன்:-

பாடுபட்டுப் பாடுபட்டு பஞ்சந்தான் நாங்கண்டேன்

ஊடுபூரா கந்துவட்டி சீட்டுதான் --- கோடுபோட்டு

காசோட வாழ  கனவு; கடங்கேட்டா

பூசி மொழுகணும் பொய்.

 

அகரம் அமுதன்:-

"வேர்வைக்கும் வெற்றி,எந்த வேர்வைக்கும்; நாளைக்கே

ஊர்வைக்கும் உன்னைத்தன் உள்ளத்தில்" - வார்த்தையிது

வாலி உரைத்தது வாட்டம் விடுத்துநீ

சோலியைப் பாராய் தொடர்ந்து!

 

கதுப்பில்கை வைத்துக் கலங்கிக் கிடந்தால்

ஒதுங்குமா ஏழ்மை? உரைப்பேன் - இதுகேள்!

முயல்ஆமை போட்டிமுயல்தோற்று நிற்க

முயலாமை காரணம் முன்பு!

 

1/9/2020

11 ஜூலை, 2021

 

ஊரின் சிறப்பு

________________

அகரம் அமுதன்:-

காரூர நீரில் கயலூர முப்போகம்

ஏரூரப் பச்சை எழிலூரப் - பாரூரில்

நின்றாளும் முத்தமிழ் நேராம் அகம்புறம்

குன்றா வகரஞ்சீ கூர்!

 

ஏடி வரதராசன்:-

காவலுக்கு ஐயனார்; காளை மணிச்சத்தஞ்

சேவலுக்கே கேட்டுச் சிறகடிக்கும்; -- பூவனம்போல்

முத்தானக் கோலத்தில் மொய்க்குமாம் வண்டினங்கள்

அத்தனையும் அத்தியூரில் ஆம்.

 

2

வளம்

_______

அகரம் அமுதன்:-

தலையால் இடறித்தன் தாள்விழ வைக்கும்

மலையொத்துத் தோன்றும் மரங்கள்; - குலைநடுங்கிச்

செல்லும் முகில்கள் சிரம்தாழ்த்திச் சென்றகதை

சொல்லும் எமதூர் சுணை!

 

ஏடி வரதராசன்:-

மன்னன் அரண்மனைபோல் மக்களுக்கும் உண்டாம்;சேய்

விண்மீன் பறித்தே விளையாடும்; -- வெண்புறாக்கள்

மாடத்தில் நின்றே மழைமுகிலை உள்ளிழுத்துக்

காடகலப் பெய்விக்கும் காண்.

 

3

வீரம்

______

அகரம் அமுதன்:-

ஆனைகட்டிப் போரடித்த அந்நாளில் எம்முன்னோர்

ஆனை அடித்துப்போர் ஆக்கினார்; - மானைப்போல்

காட்டு வரிப்புலியை வீட்டில் வளர்த்ததைத்தான்

நாட்டில் கதைப்பர்அந் நாள்!

 

ஏடி வரதராசன்:-

முன்வந்து நிற்க முரண்பிடிக்கும் நாற்படையும்

என்னூர்பேர் கேட்டால் இளைத்தஞ்சும் -- வண்ண

விடியற் கதிர்போல் வியன்மாந்தர் வாழக்

குடிலல்ல எல்லாம் குகை.

 

4

ஊராரின் மனம்

__________________

அகரம் அமுதன்:-

செம்பாதி தந்த சிவனும் எமைக்கண்டே

தம்பாதி தந்தான் தளிர்க்கொடிக்கு; - இம்மையில்

தாரமொன் றென்ற தசரதன் மைந்தனைப்

பாரணிந்த தெங்களின் பண்பு!

 

ஏடி வரதராசன்:-

தண்ணீர்மீன் துள்ளித் தரைமேல் விழப்பார்த்துக்

கண்ணீரே சிந்துங் கவின்மனத்தார் -- என்னூரில்

மாட்டுக்கும் பேர்வைத்து மார்பணைப்பர்; அஃறிணையைக்

கேட்டாலே சொல்லுமையா கேள்.

 

5

பெண்களின் அழகு

______________________

அகரம் அமுதன்:-

கூந்தல் உதிர்த்தபூ கோடிபெறும்; பொன்மஞ்சள்

சாந்தரைத்த கல்விலைவிண் தாண்டிவிடும்; - சார்ந்துவிலை

காண்பாரும் இன்னவிலை என்றறியார் எம்பெண்டிர்

தூண்தொடை தொட்ட துணிக்கு!

 

ஏடி வரதராசன்:-

தேக்கன்னப் பேரெழிலின் தேர்கூந்தல் சேரு(ம்)வரை

ஈக்கள் அமராது இனங்காக்கும் – பூக்கள்

அலைத்தென்றல் வீச இலையொளிந்து நிற்கும்

குலையா திதழ்காத்துக் கொண்டு.

 

அகரம் அமுதன்:-

இம்மா நிலத்தாரும் இன்கண் இமைக்காத

அம்மா நிலத்தாரும் ஆர்த்துரைப்பர்; - சும்மாஎம்

சுந்தரிகள் கொப்பளித்துத் துப்பியநீர் தீர்த்தமென்று

வந்தருந்திச் சென்றவர லாறு!

 

ஏடி வரதராசன்:-

செம்பொன் நிறப்பெண்கள் சென்றுவிட்டால் ஆலயத்துள்

கும்பலுடன் ஐயர் குழம்பியந்த --- அம்பாள்

சிலையோ எனவெண்ணிச் சிந்தைமாறிப் பெண்முன்

மலைத்தோதி நிற்பார் மறை.

 

6

ஈகை

______

அகரம் அமுதன்:-

மயிலுக்குத் தோகை வழங்கியஎம் பெண்கள்

குயிலுக்கும் கீதம் கொடுத்தார்! - பயின்றநல்

வீரத்தைத் தந்ததெல்லாம் வேந்தர்க்கே எம்ஆண்கள்

ஈரத்தை நீருக்கே ஈந்து!

 

ஏடி வரதராசன்

காணென் கரமென்றால் கண்டு குறிசொல்லார்

ஆணென்றும் பெண்ணென்றும் அத்தியூரார்க்(கு) -- ஏனென்றால்

ஈகையெனும் ஒன்றால் இருகரமும் ஈந்தீந்து

ரேகை அழிந்திருக்கும் இங்கு.

 

7

காதலின் தூய்மை

____________________

அகரம் அமுதன்:-

கட்டிவந்த சேலை கசங்காமல் வீடடைய

எட்டிநின்று காதல் எழில்வளர்ப்போம்; - தொட்டாடக்

கண்ணுக்கும் எல்லையுண்டு; கண்ணொடுகண் பேசுவதெம்

மண்ணுக்கே உண்டான மாண்பு!

 

ஏடி வரதராசன்:-

நம்பி அமரும் நறுமலர்கள்; பெண்றலையில்

தும்பி மதுவைத் துணிந்தெடுக்கும்; --- எம்மூரில்

தேகம் இணையாத தேன்சுத்தக் காதலுக்கு

மேகமில்லா வானுவமை மேல்.

 

அகரம் அமுதன்:-

இன்றளவும் வெண்ணிலா இன்னுடல் தேய்வதும்

பொன்னுடல் மேற்கறை பூப்பதும் - அன்றொருத்தி

முன்னின்று காதல் மொழிவதற்குத் தூதாகத்

தன்னை அனுப்பாத தால்!

 

ஏடி வரதராசன்:-

வேல்போல் விழியென்றும் வில்போல் புருவமென்றும்

பால்போல் தமிழிற்பண் பாடியதேன் -- கேள்கேள்கேள்

எட்டிநின்றே காதலம்பை எய்து வதைத்தமையால்

கட்டிவைத்தான் அன்றே கவி.

 

8

அறுசுவை

____________

அகரம் அமுதன்:-

அம்மி மணக்க அடுத்த தெருமணக்கக்

கும்மி அரைத்த குழைசாந்தை - எம்பெண்கள்

இட்டுச் சமைத்த இளவாட்டுக் கால்சூப்புக்(கு)

எட்டூர் கிடக்கும் இளைத்து!

 

ஏடி வரதராசன்:-

எஞ்சியதை ஆக்குகின்ற ஏழை எனும்போதும்

அஞ்சறைக்குள் கையால் அளந்தெடுத்து --- வஞ்சியிவள்

ஆக்கிப் பரிமாற ஆங்குலவும் வாசனைக்கே

நாக்கூற நிற்பான் நளன்.

 

9

சேய்மை

__________

அகரம் அமுதன்:-

விண்ணிடம் ஓர்நாள் விடுப்புமடல் தந்துவிட்டு

மண்ணிறங்கி எங்கள் மனைக்குவந்(து); - உண்ண

நிலாச்சோறு கேட்டு நிலவுவந்து நிற்கச்

சிலாகித்(து) அளிப்பர் சிறார்!

 

ஏடி வரதராசன்:-

ஆழ்குளத்தில் நீச்சல் அடிக்குங்கால் பிள்ளைகளும்

காழ்ப்பின்றி மீன்குஞ்சு கற்குமதை; -- மூழ்கிவிட்டால்

கொக்குகளே தோற்றார் குறிப்பெழுதும்; தாம்பாகும்

அக்குளத்துத் தாமரைத்தண் டாம்.

 

10

கலவி

_______

அகரம் அமுதன்:-

ஓய்வளிப்போம் நான்முகனுக் கோய்வளிப்போம் மாதவனுக்

கோய்வளிப்போம் ஆதிசிவ ஓட்டனுக்கும்; - ஓய்வளியோம்

மாதம் முழுதும் மலர்க்கணை ஏந்துமதன்

தூதனுப்பும் காதல் தொழிற்கு!

 

ஏடி வரதராசன்

அன்றிற்புள் எல்லைக்குள் ஆங்காங்கே காவலாகி

விண்கதிரோன் வந்தால் விரட்டிவிடும்; -- தண்மதிக்குத்

தேன்கலக்கும் வேலைசெய்யும் தேனீக்கள்; கட்டிலுக்கும்

நாண்பூட்டப் போமோ நகரந்து.

 

11 ஜூலை, 2021