வாயாலே தின்றதைக் காலால் கரைப்பதற்குள்
ஓயாமல் நான்நடந்து ஓய்ந்துவிட்டேன்; – தேயாத
தொப்பையே! செய்யாதே தொந்தரவு தீக்கொழுப்புக்
குப்பையை எங்கேனும் கொட்டு!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
பசித்த வயிற்றுடன் பாமர மக்கள்
நசிந்து நசிந்துருகும் நாளில் - புசிக்கப்
பழச்சாறோ பாகோ பசும்பாலோ அல்ல
பழங்கஞ்சி ஆகுமென் பாட்டு!
எனது கவிதை இடுப்புக்கு வேட்டி;
தனதென் றணிகிற சட்டை; - மனதுக்கு
நாளும் இதம்தரும் நல்லதோர் உள்ளாடை;
தோளுக் கிடுகிற துண்டு!
இம்மாம் குறுஞ்செய்தி ஏன்தான் அனுப்புகிறாய்?
சும்மாகை காலைச் சுருட்டிவை; – அம்மாவின்
காய்ச்சல் தணிந்த கணமேநான் அங்கிருப்பேன்
போய்ப்படுப்பாய் இந்தஇராப் போது!
எதிர்வீட்டுப் பார்வதியை ஏறெடுத்துப்
பார்க்க
அதிகாலை வாசலின் அண்டைக் – கதிரை
எடுத்திட்டுக் குந்தி இலித்தாயேல் வந்து
நடுமண்டை யில்வைப்பேன் நங்!
சம்பளம் தந்துவிட்டேன்; சஞ்சாயம் செய்துவிட்டேன்;
நம்மாலே ஏலுவதை நல்கிவிட்டேன்; – நம்பாமல்
அங்கவள் வேலைபற்றி அங்கலாய்த்துத்
தூதுவிடாய்
ரிங்டோனில் வேலைக்கா ரிக்கு!
பூக்காரி முன்னாலே புன்னகைத்தால், வீடுவரும்
பாற்காரி முன்னாலே பல்லிலித்தால், – காய்க்காரி
கண்டவுடன் கண்ணடித்தால் கண்டபடி
ஜொல்வடித்தால்
தண்டனை உண்டுந் தனுக்கு!
போரடித்தால் கூலிங்காய்ப் போய்வாங்கி
வந்துநீ
பீரடித்தாய் என்றறிந்தால் பிய்த்திடுவேன்; – நேரத்தில்
தூங்கி எழவேண்டும்; தூங்காமல் பான்படம்பார்த்(து)
ஏங்கிவிழ வேண்டாம் இளைத்து!
பார்வையில் நன்றாய்ப் படுமாறே உன்பொருளை
நேர்வைத்து விட்டுத்தான் நேற்றுவந்தேன் – பேர்பொறித்த
ஜட்டியைத் தேடுகிற சாக்கில் துணிகளைக்
கட்டிலில்போ டாதே கலைத்து!
தாய்வீட்டில் ரெண்டுநாள் தங்க முடிகிறதா?
ஓய்வொழிச்சல் அற்றிருக்க ஆகிறதா? – காய்ந்து
வதங்காதே நாளைநான் வந்தவுடன் வைப்பேன்
இதழுக்கு மேலிரண்டு இச்!