சனி, 13 ஜூன், 2026

 

மாலை நிலாப்பொழுது; மங்கை உனதருகில்;

காலை வரையில்நாம் கண்விழிப்போம்; - சேலைக்குள்

இன்பத்தேள் கொட்டும் எழிலை எனக்குரைத்(து)

இன்பத்தேன் வெண்பா எழுது!

 

நெஞ்சுப் பொதிகள்; நெலியும் இடைசுமக்கும்

பஞ்சுப் பொதிகள்; படர்ந்ததன்மேல் – கொஞ்சித்

துயிலக் கொடுத்துவைத்தோய்! தோட்டுக் கலந்தழிப்பாய்

மயிலின் மனத்து மயல்!

 

கன்னம் கடித்துக் கனியிதழ்த் தேன்குடித்துப்

பின்னம் இளநீர் பெரிதுண்க; - முன்னம்

அசலைப் பருகி அனுதினமும் ஆங்கே

பசலை வளர்ந்த படி!

 

கடைக்கண் வழியுன் கவினைப் பருகி

உடைக்கண் எனைநான் ஒளிக்க; - இடைக்கண்

அடைக்கலம் தேடியுன் ஐவிரல் தாவும்

படைக்கலம் போலும் பறந்து!

 

நோகும் எனவெண்ணி நோகாமல் சிற்றிடை

தாகம் தணிக்கத் தலைப்படா(து) - ஆகம்

நொறுக்கி எடுத்துமயல் நோய்தீர்த்து மீண்டும்

பொறுக்கித் தொடுத்துப் புதுக்கு!

 

வள்ளல்நான் வந்து வழங்கும் பொழுதும்நீ

கொள்ளல் விடுத்துக் குறிவைத்துக் – கொள்ளை

அடிக்கத் துடிக்கும் அழகை வியந்து

நடித்துச் சிவக்கும் நகில்!

 

தும்பைப்பூ உள்ளம் துளங்குந் தளிரிடையாள்

வம்பைப்பூ வென்றுன் விழிவண்டு –நம்பிப்போய்த்

தேடும்; செழுந்தேனைச் சேர்க்கும்; பொழுதெலாம்

கூடும்; மறந்துதன் கூடு!

 

மொழுமொழு கன்னத்தை முத்தமிட; வேர்வை

வழுவழு தேகம் வடிக்கும்; –கொழுகொழு

வம்புகள், ‘தம்மோடு வம்புகள் செய்’யென்ன

இம்மென்று செல்லும் இதழ்!

 

கடித்துவைக்கும் பல்லால் கனிந்தவிரு கன்னம்

தடித்துவைக்கும்; அஃதேபோல் தானும் –வெடித்துவைக்கும்

வண்ணம் விளையாட வம்பழைக்க ஏகும்தன்

எண்ணம் பலித்த எயிறு!

 

பக்கம் அமர்ந்தாளைப் பற்றி இழுத்தணைத்(து)

ஒக்கலில் கைகள் உறவாடும்; –அக்கணம்

தாரம் அவளும் தளிர்வாயைத் தந்திடுவாள்

தாரம் சதிராடத் தான்!

 

நல்லதேன் எங்கென்று நாடி மிகச்சுவைத்(து)

அல்லதேன் இங்கென் றடுத்தயிடம் –செல்லாதோ

வேரிமிக மண்டுண்ட மேகலையாள் தெள்நறவை

வாரிமிக மொண்டுண்ட வாய்!

 

மகிழம்பூ மேனி வனப்பை மறைக்குந்

துகிலை அகற்றித் தொடங்கும்; -நகிலமதைப்

பற்றிக்கொண் டோர்கை பதம்பார்க்க மென்மருங்கில்

தொற்றிக்கொண் டோர்கை தொழில்!

 

வில்லாய் வளைந்துதன் மென்னரம்பை நாணாக்கிக்

கொல்லும் கணையாகக் கொங்கையினை –நல்லாளும்

ஏந்திப் பிடிப்பாள்; எதிர்கொண்(டு) இடைவாளை
ஊன்றத் தணிவாள் உளம்!

 

 

இல்லா இடையில் இருக்கின்பம்; பேரின்பம்

இல்லா இறையில் இருத்தல்போல்; -அல்லெலாம்

அஃதை அடைய அவளும் இசையாளோ

எஃகனையாய்! உன்னோ டியைந்து!

 

செண்டதனைச் சூடிவந்து செம்மா துளைநிற்கும்;

கண்டதனைத் தொட்டமர்த்திக் காணாத -கண்டதுபோல்

தாவா தழைப்பாய் தளிர்க்கொடியைப் பஞ்சணையில்

நோவா தணைப்பாய் நுசுப்பு!

 

இருட்டுக்குள் இன்னோர் இருட்டான கூந்தல்

இருட்டுக்குள் நீசெயும் இன்பத் -திருட்டுக்குச்

சாட்சியாய் நிற்கும் வதனநிலா; சாமத்துக்

காட்சியைக் கண்விழித்துக் கண்டு!

 

அகலில் திரியை அழுந்தவே தூண்டித்

தகுநெய் விடத்தீ தணித்துச்  –சுகச்சுடர்

சிந்திக் கிடப்பாளின் சிந்தை உனைமீண்டும்

பந்திக் கழைக்கும் பரிந்து!

 

காலில் ஒன்றிரண்டைக் காணாமல் கட்டிலது

நூலில் அமைந்தயிடை நூதனப்போர் -சோலிதனில்

மிச்சத்தைச் செய்கும் மிடுக்கோடு நீர்முயல

அச்சத்தை வைகும் அகம்!

 

உயிர்நெடில் ஓரேழும் உம்கலவிப் போரில்

பயின்றுவரப் பக்கத் தறையில் –துயின்றுவரும்

பெற்றோர் விழிக்கப் பெறுவரோ வென்றவற்றைக்

குற்றொலிக்கச் செய்வாள் கொடி!

 

முலைமுகம் போந்து முதுகினில் தோன்ற

தலைவனை ஆரத் தழுவிக் –கலைமுகம்

காட்டும் நகக்குறியைக் கன்னி அவள்பதித்தல்

ஈட்டுமின் பத்தின்எல் லை!

 

 

இன்னும் ஒருமுறை ஏலுமோ என்னன்பே!

முன்னம் புரிந்த முறையெலாம் –என்பவளைப்

பின்னும் ஒருமுறை பேரவா கொண்டணைக்கச்

சின்னம் சிலிர்ப்பாள் சிவந்து! கன்னம் சிவப்பாள் கனிந்து!

 

பஞ்சணையில் தூங்கல் பழுதென்று தான்கொண்ட

நெச்சணையில் துஞ்ச நெருங்கிவரும் -மஞ்சனைத்தன்

வட்டவளைக் கையால் வளைப்பாள்; கசங்கும்மார்

வட்டவளைத் திட்டும் வரிந்து!

 

பொத்துவாள் அங்கையாள் பூமுகத்தைப் பொய்யாகக்

குத்துவாள் கொங்கைகளைக் கொண்டுன்னை –முத்தவாள்

கொண்டுநீ இச்சுறுத்த கோதை உடல்கொதித்(து)

அண்டிப் புரிவாள் அமர்!

 

சிந்தும் வியர்வை; சிலிர்த்துக் குழையும்;நீ

தந்துநிற்கும் இன்பத் தழுவலால் –கொந்தடங்கும்;

அத்தியூர் வாழ்வரதா! ஐந்தாம் பிறையன்ன

நெத்தியூர் கின்ற நிலா!

 


கோட்டென்ன சூட்டென்ன கோவணமும் நாடாளும்

ஓட்டைவாய் மூடிக்கொண்(டு) ஒத்து!

செவ்வாய், 9 ஜூன், 2026

 



ஒப்பாரி வைப்பதில் ஒப்பாரில் லாதவர்

இப்பாரில் கொத்தூஸ் எனச்சொல்வேன் – தப்பாமல்

மாதக் கணக்கில் வயிற்றிலும் வாயிலும்

ஆதங்கிக் கின்றார் அடித்து!

திங்கள், 8 ஜூன், 2026

 

வேகம் அழகே அவேகம் அதைவிட

ஆகச் சிறந்த அழகாகும்; - தாகமுடன்

மெட்டுக்கு நன்றே விரைவாய் எழுதுவது;

கட்டிலுக்கு வேறு கதை!

ஞாயிறு, 7 ஜூன், 2026

 


குபேரனும் உன்முன் குசேலனே; ஆட்டன்

சபேசன்போல் ஓட்டாண்டி தானே? - அபேஸ்பண்ண

வாய்ப்பளித்தால் உன்னறிவை வாகாய் லவட்டுவேன்;

போய்த்தொடேன் உன்பொருளைப் போ!


வெள்ளி, 5 ஜூன், 2026

 

பன்னுக்குப் பாவெழுத பட்டினியில் வாடவில்லை

ஃபன்னுக்குப் பாவெழுதும் பாவலன்நான்; - ஜின்னுக்கோ

ரம்முக்கோ பாடும் ரகமில்லை; கோல்டுபில்டர்

தம்முக்கே பாடா தவன்!

வியாழன், 4 ஜூன், 2026

காவியமே செய்வார் கவி!

காவியமே செய்வார் கவி!

 

ஓவியன் கூற்று –

 

கண்ணைச் சிமிட்டாமல், கைகால் அசைக்காமல்,

பெண்ணே!என் நெஞ்சைப் பிசையாமல், – வண்ணவிதழ்

ஓரம் பிதுக்காமல், ஓதி ஒதுக்காமல்

பாரம் பதுக்காமல் பார்! 01

 

காவியமாய்த் தீட்ட கவிஞனல்ல வண்ணமய

ஓவியமாய்த் தீட்ட உடன்பட்டேன்; – பூவினமே!

அச்சுஅசல் மாறாமல் அப்படியே தாள்வரைந்து

உச்சிகுளிர் விப்பேன் உனை! 02

 

வட்டமாய்க் கண்கள், வளைந்தநெற்றி, பொன்கன்னம்,

திட்டமாய் மூக்கதன்கீழ் தேனிதழ்கள்; – சிட்டே!நீ

பொய்க்கால் குதிரையினி; பூரித்த ஓவியம்தான்

மெய்க்கால் குதிரையினி மேல்! 03

 

பிக்காசோ என்னிடம் பெய்ண்டிங் பயில்வதற்குப்

பக்கார்டி தந்தான் பரிசுதிக்கு – முக்காடி

ஆற்றல் திரட்டி அவன்வேண்டு கோட்கிணங்க

நூற்றளித்தேன் மோனலிசா நோட்ஸ்! 04

 

சித்தன்ன வாசல் சிவப்புக்கோட் டோவியங்கள்

அத்தனையும் என்முன்னோர் ஆக்கியதே; – இத்தனைக்கும்

காப்பிரைட்ஸ் கேட்டு கலகம்யாம் செய்ததில்லை

ஹேப்பியாய் ஊர்க்களித்தோம் ஹிஃப்ட்! 05

 

டைட்டானிக் ஃபில்ம்மில்ஜேக் டாவ்சன் வரைவானே

லைட்டொளியில் ரோஸ்உருவை லைவ்வாக, – லைட்டாய்நான்

கற்பித் ததைத்தான் கனகச் சிதமாக

முற்றளித்தான் கேமரா முன்! 06

 

ஜேக் டாவ்சன், ரோஸ் – டைட்டானிக் படத்தின் கதாநாயக நாயகியின் பாத்திரப் பெயர்கள்.

 

தான்வனைந்த பெண்ணையே தாரமாய்க் கொண்டானே

நான்முகன் நம்பிக்கு நான்பேரன்; – நான்வரைந்த

பெண்ணைமணப் பேனென்ற பேரச்சம் தேவையில்லை

கண்ணைக் கசக்காமல் காட்டு! 07

 

அங்க இலட்சணங்கள் அத்தனையும் அப்படியே

இங்கோ வியத்தில் இறக்குகிறேன் – பங்கயமே!

ஓவியமா? நீயா? உசத்தி எதுவென்று

காவியமே செய்வார் கவி! 08

 

கூந்தல் அருவி குளித்தேகும் தென்றல்உன்

நாந்தினில் ஆடும் நடனத்தைக் - காந்தம்போல்

ஏந்திநான் தீட்டும் எழிலைநீ கண்டாயேல்

நீந்துவாய் கற்பனையில் நெஞ்சு! 09

 

நாந்து – முதுகு(பேச்சுவழக்கு)

 

சித்தன் நிலையைச் சிவன்நிலையை நீயடைவாய்;

புத்தன் நிலைக்குமே போய்விடுவாய்; – மொத்த

உலகப் புகழ்படைத்த ஓவியத்தின் மேலென்(று)

இலகி இரண்டுவைப்பாய் இச்! 10





 

அண்ணன் விக்டர்தாஸ் அவர்களின், 'சக்தி எனத்தொடங்கி சிவம்' எனமுடியும் வெண்பாக்கள்கண்டு வாழ்த்தியொரு வெண்பா நான்செய்ததும் பதிலுக்கவர் ஒருவெண்பா செய்ததும்.... 11-2017

நான் :-

வெண்பா வடிவே! விரசத் தமிழ்செய்யா

ஒண்பா விடிவே! உனதரும் - பண்பாலென்

உள்ளங் கவர்ந்த உயர்கவியே! உன்தமிழ்

வெள்ளங் கலந்தேன் வியந்து!

 

அவர் :-

 

வெண்பா அரங்கில் விளையாடும் வித்தகனே

அன்பால் புகழுகிறாய் ஆகட்டும்-உன்பாவில்

உள்ளம் கரைந்தவன்நான் உள்ளே உறைந்தவன்நான்

துள்ளுகிறேன் உன்அன்பைத் துய்த்து.

புதன், 3 ஜூன், 2026

 


குழந்தை குடோனா? கொழுந்தன் விடானா?

அழகிக்கும் வேலை அதானா? – பழகினால்

பாலும் புளிக்கும்; படுக்கை புளிக்காதா?

மேலும் சிலபெறலா மே!

 

கொடியிடையா? கொப்பரையா? கொட்ட ஒலிக்கும்

துடியிடையா? தோற்பறையா? தோழா! - பிடியிடையா?

பீப்பாயா? பிள்ளை பெறும்மெஷினா? பேரிளம்

பாப்பா வயிறெதுவப் பா!?