வியாழன், 18 ஜூன், 2026

133. ஊடல் உவகை!

 

133. ஊடல் உவகை!

 

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு! 1321

 

பேரன்பென் மேற்செலுத்தப் பேருதவி செய்கின்ற

காரணத்தால் ஊடலைக் கைக்கொண்டேன்; – ஆரமுத

அன்பர்தம் மீதில்லை அப்பழுக்கென் றாலுமவர்

பொன்றிடாக் காதல் பொருட்டு!

 

 

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்! 1322

 

சின்னதோர் துன்பம் சிறகடிக்கும் நான்போடும்

மென்பிணக்குச் சண்டை விளையாட்டில்; - அன்பர்தம்

அன்புசிறு வாட்டம் அடைந்தாலும் பின்புறும்

பொன்பெறும் நன்மதிப்பே போன்று!

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீர்இயைந்து அன்னார் அகத்து! 1323

 

செல்லச் சினங்கொண்டு செய்யும் சிறுவம்பிற்(கு)

இல்லை சுவர்க்கமும் ஈடென்பேன்; – நல்ல

நிலத்தினில் நீர்பொருந்தி நிற்றல்போல் என்றன்

உளத்தினில் நின்றார் உடன்!

 

புல்லி விடாஅப் புலவினுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை! 1324

 

கட்டித் தழுவிஅக் கட்டவிழா வண்ணம்நான்

இட்டு நிரப்பும் எரிச்சலுள் – நெட்டி

மலங்கடிக்கும் முற்றும் வளர்ந்திருக்கும் நெஞ்சைக்

கலங்கடிக்கும் போர்வெங் கணை!

 

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து! 1325

 

தப்பே சிறிதுமிலை தாரத்தின் மீதெனினும்

தொப்பென்று போட்டுத் தொலைவிருத்தல் – அப்ப‍ப்பா!

போதாத காலமிது போவென்னும் போதுமிதில்

ஏதோஓர் இன்பம் இருக்கு!

 

உணலினும் உண்டது அறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது! 1326

 

உண்பதைக் காட்டினும் உண்ட உணவுநன்றாய்க்

கண்டசெறி மானம் களிப்பாகும்; – மண்டையில்வை!

பொன்நிமிட வேர்வைப் புதுப்புணல் ஆடுதலின்

சின்நிமிட ஊடல் சுகம்!

 

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்! 1327

 

கொண்ட பிணக்கத்தின் கொண்டை பிடித்தங்கு

மிண்டாமல் தோற்றாரே வென்றார்;இவ் – உண்மை

உடுக்கை இடைமீதே ஒட்டியுற வாடும்

படுக்கையில் காணப் படும்!

 

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வியர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு! 1328

 

வட்டச் சிறுநெற்றி வாய்க்கால் வழிந்தோட

ஒட்டிக் கலந்தின்பம் உய்வேனோ? - முட்டத்தான்

முன்னேறு கின்ற முயலிரண்டு கொண்டாளை

இன்னொருபொய்ச் சண்டை இழுத்து!

 

ஊடுக மன்னோ ஒளியிழை யாய்இரப்ப

நீடுக மன்னோ இரா! 1329

 

ஏற்ற இறக்கமெலாம் ஏய்ந்தவணி யாள்மனதை

மாற்ற முயன்றிடுவேன் மன்றாடி – ஆற்றல்

திரட்டித்தான் ஆங்கு திமிரட்டும் பெண்மான்;

இரட்டிப்பா கட்டும் இரவு!

 

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்! 1330

 

காதலுக் கின்பமக் காதலர் போடும்பொய்

மோதலி னாலே முளைவிடும்; – மோதலுக்குக்

கூடுதல் இன்பத்தைக் கூட்டும் உடலையுடல்

மூடுவ தாலே முகிழ்ந்து!

 

23-07-2025

132. புலவி நுணுக்கம்!

 

132. புலவி நுணுக்கம்!

 

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு! 1311

 

பொதுமகளிர்க் கெல்லாம் புதுவகையில் தோன்றி

ம‍துமயக்கம் ஊட்டும்நின் மார்பைப் – பதுமைநான்

ஊறெடுத்த போதும் ஒதுங்கி முகம்புதையேன்;

ஏறெடுத்தும் பாரேன் இனி!

 

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து! 1312

 

சண்டை தொடராமல் சற்றே தணிதற்குத்

தொண்டை கனைத்தவர் தும்மினார்; – மண்மீதில்

நீண்ட நெடுங்காலம் நீர்வாழ்க! என்றுநான்

வெண்டுவேன் என்று விளித்து!

 

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று! 1313

 

மாலை நிலாப்பொழுதில் வாச மலர்கொய்து

மாலை அணிந்து வலம்வந்தேன்; – சேலைமீன்

ஆரிடம் காட்ட அணிந்துள்ளீர் சொல்கென்றென்

பேரிலே வைத்தாள் பிணக்கு!

 

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று! 1314

 

ஆங்குறு காதலர்கள் காதலினும் மேலதிகம்

ஈங்குநாம் வைத்துள்ளோம் என்றவுடம் -பூங்கொடி

யாள்விம்மிச் சண்டையிட்டாள் யாரை விடவுமெனும்

கேள்வி தனைத்திருப்பிக் கேட்டு!

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்! 1315

 

இப்பிறப்பில் உன்னை இணைபிரியேன் நானென்றேன்

அப்பொழுதே கண்ணீர் அலர்ந்தழுதாள்; – அப்படியேல்

பிற்பிறப்பிற் சேரப் பிரியமெனக் கில்லையென்ற

கற்பித‍த்தைத் தன்மனத்தே கண்டு!

 

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்! 1316

 

தழுவாமல் என்றனைத் தள்ளித் தனிவைத்(து)

அழுதாள்பூங் கூந்தல் விழுதாள்;பொழுதுமுனை

எண்ணுகிறேன் நான்என்றேன்; என்னைமறந் தால்தானே

எண்ண முடிந்திடும் என்று!

 

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று! 1317

 

அச்சென்று நான்தும்ம அச்சுவெல்ல வாயெடுத்து

நச்சென்று வாழ்த்திய நங்கைபின் – ஒச்சினாள்;

எண்ணுவோள் நான்இங் கிருக்க எவளும்மை

எண்ண,நீர் தும்மினீர் என்று!

 

தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று! 1318

 

தும்மல் மறைத்துநான் கம்மென் றிருப்பினும்

விம்முவாள் நெஞ்சம் வெதும்புவாள்; – அம்மணி

ஆரோ உமைநினைக்க அஃதை எனக்குமறைத்

தீரோவென் றேதிட்டித் தீர்த்து!

 

 

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்

இந்நீர‍ர் ஆகுதிர் என்று! 1319

 

இப்படித்தான் மற்றை இடைச்சிய ரோடும்,இச்

செப்படி வித்தைகள் செய்வீரோ – செப்பென்பாள்;

பொன்மகளின் நெஞ்சப் புகைச்சலைத் தீர்க்கும்என்

அன்பில் குளிர்ந்தும் அவள்!

 

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று! 1320

 

புத்தி முழுதுமவள் பொன்னுருவச் சிந்தனையில்

முத்துமுகம் பார்த்து முகிழ்ந்திருக்க, – அத்தைமகள்

யாரை மனதெண்ணி என்றன் முகம்பார்த்தீர்?

பேரைச்சொல் என்பாள்அம் பெய்து!

131. புலவி!

 

131. புலவி!

 

புல்லா திராஅப் புலத்தை அவருறும்

அல்ல‍ல்நோய் காண்கம் சிறிது! 1301

 

மென்பஞ்சே போலிருக்கும் என்நெஞ்சே! ஊடலினால்

அன்பர் வருத்தம் அடையட்டும் – முன்புபோய்க்

கட்டி அணைக்க‍க் கருத்தி நெருங்காமல்

எட்டித்தான் கொஞ்சம் இரு!

 

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்! 1302

 

தேவையறித் துப்பைத் தெளித்தால் உணவுநம்

நாவைக் கடக்கும் நலமாக; – தேவைக்கு

மேலிட்டால் கெட்டு விடுமுணவைப் போலூடல்

மேலதிகம் ஆக விடேல்!

 

அலந்தாரை அல்ல‍ல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்! 1303

 

மென்மேற் சுமையேறி வேதனை தான்கூடிப்

புன்மை அடைந்து பொசுங்கிடுவார்; – தன்னினிய

பொய்க்கோபம் காட்டப் புகுவார்க்(கு) அதைத்தீர்த்து

வைக்காமல் விட்டு விடின்!

 

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று! 1304

 

மென்சண்டை போடுகிற மெல்லியலார் கோபத்தை

முன்நின்று தீர்க்க முயலாமை, – வன்காய்வில்

வாடிக் கிடக்கின்ற வள்ளிக் கொடிவேரைத்

தேடி அரிவதெனத் தேர்!

 

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூவன்ன கண்ணார் அகத்து! 1305

 

பூங்கணைபோற் கண்ணுடைய பூவையரின் நெஞ்சத்து

நீங்காத ஊடல் நிலைசிறப்பே; – பாங்கான

பீடது பெற்றுநற் பேரது சேர்ந்தநல்

ஆடவர்க்(கு) அஃதே அழகு!

 

துனியும் புலவியும் இல்லாயின் காம‍ம்

கனியும் கருங்காயும் அற்று! 1306

 

செல்ல வருத்தமும் சின்ன பிணக்கமும்

இல்லாத காதல் இளைத்திளைத்துப் – பல்பதிக்கத்

தோதற்ற வெம்பழம்போல் தொத்தற் கருங்காய்போல்

ஏதற்கும் ஆகா(து) இறும்!

 

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவது அன்றுகொல் என்று! 1307

 

ஆசைக் கலவியின் ஆயுள்நீ ளாதோவென்(று)

ஓசை உளத்தே ஒலிப்பதனால் – பூசையின்

முன்நிகழு கின்ற முறைப்பில் முகங்காட்டும்

துன்பம் சிறிது துளிர்த்து!

 

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்

காதலர் இல்லா வழி! 1308

 

துன்பம் அடைந்து துடித்துத் துடிதுடித்துப்

பின்பும் வருத்தம் பெருக்குவதேன்? - இன்னதுதான்

தாக்குகிற தென்றறிந்து தானே முனம்நின்று

போக்குகிற அன்பரிலாப் போது!

 

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது! 1309

 

உண்ணும் படிச்சுவை உண்டாகும், அந்நீரும்

தண்ணென்ற நீழற்கீழ்த் தானிருந்தால்; – கொண்டபெரும்

ஊடலும் அன்புடையா ரோடு நிகழுமெனில்

நீடலுண்டு இன்பம் நிறைந்து!

 

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவம் என்பது அவா! 1310

 

சண்டை தணிக்கச் சமரசம் செய்யவழி

கண்டார் இலையந்தக் காதலரைத் – தண்டாமல்

ஒசை எழுப்பி உறவாட உந்திடுதே

ஆசையி னாலே அகம்!

 

 

ஆளெல்லாம் கூடி அமர்ந்து மகிழ்ந்திருந்து

மீளாத யாவினையும் மீட்டெடுக்க - நாளெல்லாம்

தேனலைபோல் வந்து செவிகள் நிறைத்திடும்

வானலை தந்தவர்க்கென் வாழ்த்து!

 

தூக்களைப் பற்றி நீங்கள்

தூக்கிய தூக்கு கொஞ்சம்

தூக்கலே; வரிசை கட்டித்

தூக்களும் தூக்கச் சொல்லி

தூக்கவே மகிழ்ச்சி பொங்கித்

தூக்கமே அற்றுப் போன

தூக்களை நானும் கொஞ்சம்

தூக்கித்தான் பார்த்திட்டேனே!

130. நெஞ்சொடு புலத்தல்!

 

130. நெஞ்சொடு புலத்தல்!

 

 

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா த‍து? 1291

 

என்னைக் கருதாமல் என்பின் திரியாமல்

தன்னைக் கருதுமவர் தன்நெஞ்சம்; – என்நெஞ்சே

நீமட்டும் என்துணையால் நில்லாமல் நீங்குகிறாய்

காமத்தி னாலே கழன்று!

 

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு! 1292

 

அன்பில்லார் என்றே அறிந்தபின்னும் போய்அவரின்

முன்னின்றாய் நெஞ்சே! முறைதானா? – என்றென்றும்

உண்மையில் நம்மை உளத்தால் வெறுத்தொதுக்க

எண்ணிடவும் மாட்டாரே என்று!

 

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செல‍ல்! 1293

 

நண்பரென்ப தில்லை நலிந்துகெட்டார்க் கென்கின்ற

உண்மை அறிந்தா உடன்சென்றாய்? – அண்மை

எனக்கிருக்க மாட்டா தெடுத்தெறிந்து விட்டு

மனமுவந்தென் னைதனிமை வைத்து!

 

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே!

துனிசெய்து துவ்வார்காண் மற்று! 1294

 

என்னைத் தனிவிடுத்து எங்கோ புறப்பட்ட

உன்னிற் பிணக்கின்பம் உண்டாகா - துன்னுடனே

ஒன்றி இருந்தின்ப ஊடற் சுவைகாண

இன்றளவில் யாரும் இலர்!

 

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு! 1295

 

பக்கமிலாப் போதும் படபடக்கும்; காதலவர்

பக்கமிரார் என்றும் பரிதவிக்கும்; – எக்கணமும்

நீங்காத துன்பத்தை நீட்டி எனக்களித்துத்

தூங்காது நெஞ்சம்அந் தோ!

 

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு! 1296

 

நான்தனியே தானிருந்து நாயகரின் பொய்ப்பிரிவைத்

தான்நினைந்து வாடுகையில் தண்டனையாய் – ஊன்வேண்டி

ஊள்ளமே என்னை உணவாக உட்கொண்ட

பள்ளமே நானென் பது!

 

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு! 1297

 

என்ன வரைமறக்க ஏலா மடநெஞ்சு

தன்னொடு சேர்ந்து தறிகெட்டுப் – பின்பும்நான்

ஏன்மறக்க லாகா தெனுமறிவும் இல்லாமல்

நான்மறந்தேன் நான்மறந்தேன் நாண்!

 

எள்ளின் இழிவாமென் றெண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு! 1298

 

வார்த்தைகள் வீசி வசைபாடி என்னவர்மேல்

போர்த்துவ தாலே புகழிலையென்று - ஆர்த்தெழும்

ஆருயிர்க் காதல் அமைவால் அவர்பெருமை

நேருறப் பேசும்என் நெஞ்சு!

 

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சம் துணையல் வழி! 1299

 

வந்த துயரை வடித்துப் புறந்தள்ள

எந்த மனிதர் எனக்கருள்வார்? – சொந்தமனம்

பக்கத்தில் நின்று பரிதவிப்பை ஆற்றாமல்

பொக்கென்று தான்விலகும் போது!

 

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி! 1300

 

மாற்றாரும் எந்த மத‍த்தாரும் என்னளவில்

வேற்றாராய்ப் போதல் வியப்பில்லை; - ஏற்ற‍என்

புந்தியே என்னைப் புரிந்துறவாய்ப் பேணாமல்

குந்தியே தானிருக்கும் போது!