வண்டலைப்போல் மொத்த வளங்களையும்
காண்பவர்க்குக்
கொண்டலைப்போல் அள்ளிக் கொடுப்பவனே! –
துண்டலைகள்
சூழ்ந்திருக்கும் பூமிபோல் சூரியன்போல்
வானம்போல்
வாழ்ந்திருப்பாய் நீளாயுள் வாய்த்து!
பல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவனே! –
இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்!
ஈகைவல்லான் தாள்வாழ்க! ஈன்றெடுத்த தாய்வாழ்க!
தோகைநல்லார் தொற்றுகின்ற தோள்வாழ்க! – வாகைமௌலி
ஏந்தும் சிரம்வாழ்க! ஈயும் கரம்வாழ்க!
நீந்தும் நெறிவாழ்க நெஞ்சு!
‘கண்ணன் ரவி’இன்னோர் கர்ணன்
எனுமாறு
மண்ணில் பிறந்து வழங்குகிறான்; – விண்ணுலவும்
வெண்ணிலவே! தண்ணொளியை வேண்டி இரப்பாயேல்
என்றும் அமாவாசை இல்!
உப்புக் கடல்நாளை உண்ணும் படியான
அப்புக் கடலாக ஆகிவிடும்; – ஒப்பில்லா
மன்னவன் ‘கண்ணன்’ மணிக்கரம் பட்டகணம்
தன்னுடல் உப்புத் தகர்ந்து!
குபேரனுக்கும் கொட்டிக் கொடுப்பான்; திருநீற்றுச்
சபேசனுக்கும் அள்ளித் தருவான்; – அபேதமின்றி
யார்க்கும் அளவறிந்து ஈயும் குணத்தானைப்
பார்க்கெடுத்து ஓதுமென் பாட்டு!
பங்களா கார்வாங்கிப் பாசனநீர்க்
காவாங்கித்
திங்களை வாங்கித் திசைவாங்கிச் - செங்கமல
வாணி அருள்வாங்கி வற்றாப் பொருள்வாங்கி
ஏணியாய் யார்க்கும் இரு!
கொடுப்பதிலுன் கைகளே கோலோச்சும், தீந்தமிழ்ப்பாத்
தொடுப்பதிலென் நாப்போல்நாள் தோறும்; - நெடுநாள்
புவியரசைக் காணப் புகுந்தேன்;இவ் ஏழைக்
கவியரசை ஏறெடுத்துக் காண்!
வாழ்வித்தான் கம்பனை வள்ளல் சடையப்பன்
சூழ்ந்துசுதன் காவியம் சொன்னதற்காய்; – ஆழ்ந்த
புலமை அமுதனைப் போற்றிவாழ் விப்பாய்...
நிலத்திலுன் பேர்நிற்கும் நீடு!
முத்தமிழால் மெட்டை முழம்போட்டு
நானளந்தால்
புத்தமிழாள் ஆகிப் பொலியாளா? – தத்தைகள்சூழ்
வித்தகா! பாடல் விளம்புகிறேன்; நின்படத்தில்
தத்தகா ரம்வாங்கித் தா!
