வியாழன், 4 ஜூன், 2026

காவியமே செய்வார் கவி!

காவியமே செய்வார் கவி!

 

ஓவியன் கூற்று -

 

கண்ணைச் சிமிட்டாமல், கைகால் அசைக்காமல்,

பெண்ணே!என் நெஞ்சைப் பிசையாமல், – வண்ணவிதழ்

ஓரம் பிதுக்காமல், ஓதி ஒதுக்காமல்

பாரம் பதுக்காமல் பார்! 01

 

ஓதி – தலைமுடி

 

காவியமாய்த் தீட்ட கவிஞனல்ல நானுன்னை

ஓவியமாய்த் தீட்ட உடன்பட்டேன்; – பூவினமே!

அச்சுஅசல் மாறாமல் அப்படியே தாள்வரைந்து

உச்சிகுளிர் விப்பேன் உனை! 02

 

வட்டமாய்க் கண்கள், வளைந்தநெற்றி, பொன்கன்னம்,

திட்டமாய் மூக்கதன்கீழ் தேனிதழ்கள்; – சிட்டே!நீ

பொய்க்கால் குதிரையினி; பூரித்த ஓவியம்தான்

மெய்க்கால் குதிரையினி மேல்! 03

 

பிக்காசோ என்னிடம் பெய்ண்டிங் படிப்பதற்குத்

சிக்கனமாய் டைம்ட்ராவல் செய்தவன்தான்; – அக்கணமே

ஆற்றல் திரட்டி அவன்வேண்டு கோட்கிணங்க

நூற்றளித்தேன் மோனலிசா நோட்ஸ்! 04

 

சித்தன்ன வாசல் சிவப்புக்கொட் டோவியங்கள்

அத்தனையும் என்முன்னோர் ஆக்கியதே; – இத்தனைக்கும்

காப்பிரைட்ஸ் கேட்டு கலகம்யாம் செய்ததில்லை

ஹேப்பியாய் ஊர்க்களித்தோம் ஹிஃப்ட்! 05

 

டைட்டானிக் பார்த்ததுண்டா? டாவ்சன் வரைவானே

லைட்டொளியில் ரோஸ்உருவை லைவ்வாக, – லைட்டாய்நான்

கற்பித் ததைத்தான் கனகச் சிதமாக

முற்றளித்தான் கேமரா முன்! 06

 

டாவ்சன்(ஜேக் டாவ்சன்), ரோஸ் – டைட்டானிக் படத்தின் கதாநாயக நாயகியின் பாத்திரப் பெயர்கள்.

 

தான்வனைந்த பெண்ணையே தாரமாய்க் கொண்டாரே

நான்முகர்; ஈங்கவர்க்கு நான்பேரன்; – நான்வரைந்த

பெண்ணைமணப் பேனென்ற பேரச்சம் தேவையில்லை

கண்ணைக் கசக்காமல் காட்டு! 07

 

அங்க இலட்சணங்கள் அத்தனையும் அப்படியே

இங்கோ வியத்தில் இறக்குகிறேன் – பங்கயமே!

ஓவியமா? நீயா? உசத்தி எதுவென்று

காவியமே செய்வார் கவி! 08

 

கூந்தல் அருவி குளித்தேகும் தென்றல்உன்

நாந்தினில் ஆடும் நடனத்தைக் - காந்தம்போல்

ஏந்திநான் வைத்த எழிலைநீ கண்டாயேல்

நீந்துவாய் கற்பனையில் நெஞ்சு! 09

 

நாந்து – முதுகு(பேச்சுவழக்கு)

 

சித்தன் நிலையை சிவன்நிலையை நீயடைவாய்;

புத்தன் நிலைக்குமே போய்விடுவாய்; – மொத்த

உலகப் புகழ்படைத்த ஓவியத்தின் மேலென்(று)

இலகி இரண்டுவைப்பாய் இச்! 10


அகரம் அமுதன்




 

அண்ணன் விக்டர்தாஸ் அவர்களின், 'சக்தி எனத்தொடங்கி சிவம்' எனமுடியும் வெண்பாக்கள்கண்டு வாழ்த்தியொரு வெண்பா நான்செய்ததும் பதிலுக்கவர் ஒருவெண்பா செய்ததும்.... 11-2017

நான் :-

வெண்பா வடிவே! விரசத் தமிழ்செய்யா

ஒண்பா விடிவே! உனதரும் - பண்பாலென்

உள்ளங் கவர்ந்த உயர்கவியே! உன்தமிழ்

வெள்ளங் கலந்தேன் வியந்து!

 

அவர் :-

 

வெண்பா அரங்கில் விளையாடும் வித்தகனே

அன்பால் புகழுகிறாய் ஆகட்டும்-உன்பாவில்

உள்ளம் கரைந்தவன்நான் உள்ளே உறைந்தவன்நான்

துள்ளுகிறேன் உன்அன்பைத் துய்த்து.

புதன், 3 ஜூன், 2026

 


குழந்தை குடோனா? கொழுந்தன் விடானா?

அழகிக்கும் வேலை அதானா? – பழகினால்

பாலும் புளிக்கும்; படுக்கை புளிக்காதா?

மேலும் சிலபெறலா மே!

 

கொடியிடையா? கொப்பரையா? கொட்ட ஒலிக்கும்

துடியிடையா? தோற்பறையா? தோழா! - பிடியிடையா?

பீப்பாயா? பிள்ளை பெறும்மெஷினா? பேரிளம்

பாப்பா வயிறெதுவப் பா!?


வாயில நல்லா வருது!

நாட்டு நடப்புகள நாளேட்டுச் சேதிகள

வாட்டும் அரசியல் வாதிகள – ஓட்டுக்குத்

தாயிலஞ்சம் என்னும் சனங்களப் பாக்கயில

வாயில நல்லா வருது!




 



 

ஜென்சி பசங்களும் ஜெர்சி பசுக்களும்

ஒன்றல்ல; மேலும்நான் என்சொல்ல? – கன்றுகளும்

பன்றிகளும் ஒன்றல்ல; பக்தியும் பான்வகையும்

ஒன்றல்ல வேறுபா(டு) உண்டு!

செவ்வாய், 2 ஜூன், 2026

ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்!

 


ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்!

 

விஜய் –

 

என்சொல்லித் தேற்ற? எதைநான் அரங்கேற்ற?

மின்சாரம் போச்சா விளக்கேற்ற? – அன்னையைச்

சூழ்ந்தமர ணத்தால் துயரப் படுமுனக்கென்

ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்! 01

 

அஜித் –

 

கிழியாத நெஞ்சம் கிழிந்தவெனக் குந்தன்

அழியாத அன்பை அளித்தாய் – விழியால்

நிஜமாய் மனதார நன்றிபல நின்றன்

விஜயத்திற் கீந்தேன் விஜய்! 02

 

விஜய் –

 

தாயை இழந்து தவிக்கின்ற நண்பனே!

சேயைப்போல் விம்மும் சினேகிதா! - தீயையள்ளி

இட்டசெய்தி கேட்டிடிந்தேன்; என்போல் இடிந்தஉன்னைத்

தொட்டணைத்துத் தேற்றவந்தேன் தோள்! 03

 

அஜித் –

 

தக்க சமயத்தில் தாங்கிப் பிடித்தெனது

துக்கங்கள் யாவும் துடைப்பவனே! - மக்கள்

முதல்வனே! என்தாய் மடிபிறவா மூத்த

புதல்வனே! ஆறாதிப் புண்! 04

 

விஜய் –

 

முற்றும் துறந்த முனிவனையும் விட்டுவைக்காப்

பெற்றதாய்ப் பாசம் பெரிதன்றோ? – பற்றுவிட்டும்

தட்டிக் கழிக்காமல் தாய்இழப்பைக் கண்ணீரால்

பட்டினத்தான் பாடிவைத்தான் பாட்டு! 05

 

அஜித் –

 

ஆரடித்த போதும் அசையா இரும்புநெஞ்சம்

பாரடித்துக் கொண்டு படபடத்தல்; – பேரதிர்ச்சி

தந்துவிட்டுப் போய்விட்டாள் தாய்;நான் அனாதையாய்

நொந்துசா கின்றேன் நொடிந்து! 06

 

விஜய் –

 

நாள்முழுதும் நாமிணைந்து நான்குகண்க ளாலழுதும்

மீள்வதில்லை சென்ற‍வுயிர் மேனியிடம்; – வாள்கிழித்த

நெஞ்சின் வடுபோல் நிலைத்த‍துயர் என்றாலும்

கொஞ்சம் தணிவாய் கொதிப்பு! 07

 

அஜித் -

 

பால்வழியத் தொட்டில் படுத்துறங்க வைத்தவளைக்

கால்கழிந்த கட்டிலிலே காண்பேனோ? – தால்சுமந்த

தாலாட்டும் எங்கே? தளிர்வாய்ச் சிரிப்புமெங்கே?

ஏலாதோ கேட்க இனி!? 08

 

விஜய் –

 

பத்தாள் பலம்கொண்ட பந்தைய வீரன்நீ

கொத்தாய் நிலைகுலையக் கூடாது; – புத்தேள்

உலகிருந்து உன்னை உயர்த்துவாள் அன்னை

நலம்விளைக்கும் நன்நினைவை ந‍த்து! 09

 

அஜித் –

 

தஞ்சமாய் உன்மடியைத் தந்ததால் நண்பனே!

கொஞ்சமாய் நிம்மதி கொள்கிறேன்; – பஞ்சராய்

ஆன‍என் நெஞ்சுக் களித்தாய் அமுதமொழி

தேனள்ளிப் பேச்சில் தெளித்து! 10

 

Imayavaramban

எளிய மொழியால் இனியவெண் பாக்கள்

உளமே உருக உரைத்தீர் - களிசேர்

கவின்றமிழ்க் கோவே கவிப்பெருக்கே என்று

நவின்றுமை வாழ்த்திடுமென் நா.

- இமயவரம்பன்

திங்கள், 1 ஜூன், 2026

 


வீஆர் புரௌடுகொத்தூஸ்!

 

வீதியெங்கும் ஒட்டு லித்தோ, வீஆர் புரௌடுகொத்தூஸ்

நாதியென்றோங் கோலார்க்கு நாங்களுண்டித் – தேதிகளில்

தீயசக்தி யானகட்சி ஜென்சி வருகையினால்

தூயசக்தி யானதெனச் சொல்!

 

க‍க்கூஸ் கழுவுதற்கும் காலைப் பிடிப்பதற்கும்

நக்கிப் பிழைப்பதற்கும் நாங்கரெடி – மக்களெல்லாம்

கொத்தூஸ் எனவழைத்தால் கோபம் வராதெமக்குச்

சத்தூசி தான்வ சவு!


 

ஜென்சி திமுக வெண்பா!

 

ஆண்ட திமுக அடம்பிடித்து ஜென்சிகளைத்

தூண்டி இழுக்கத் துணிந்ததுவே – வாண்டுகளின்

மாஸ்அறிந்து கொள்ளா மடமையி னாலடைந்த

லாஸ்அறிந்து கொண்டங்க லாய்த்து!

 

நடிகனின் பின்னால் நடைபோடு வார்தம்

அடிகளைக்கண் ணீரால் அலம்பிப் – பிடித்திழுக்க

ஜென்சியை முன்னொட்டாய்ச் சேர்க்க முனைந்ததெல்லாம்

முன்னேற்றம் அல்ல; முடிவு!

 

கொத்தடிமை என்பதனைக் கொத்தூஸ் எனும்புதுமை

சத்தியமாய்க் காணச் சகிக்கவில்லை; - இத்தகைய

சொல்லால் தனைத்தானே சுட்டல் மடமைஇதைக்

கல்லி எறிதல் கடன்!

 

மூத்த வயதுடைய முட்டாள்கள் சூழ்ந்துளதால்

காத்துமிக வாங்குகிற கட்சியதை – நீத்தார்தம்

பட்டியல் சேர்த்தல் பகுத்தறிவு; ஜென்சிகள்முன்

குட்டிக் கரணமிடல் கூத்து!




வெள்ளி, 29 மே, 2026

 


தங்குதடை இன்றித் தமிழ்சினி மாவைநீ

வெங்கோபத் தோடு விமர்சித்தாய் - இங்கினிமேல்

என்ன விளாச  இருக்கிறது? மேலுலகம்

சென்றுவா சத்யேந்  திரா!

புதன், 27 மே, 2026

 

தன்ராஜ்பாப் பண்ணா! தகப்பா! பழையவற்றைக்

கொன்றாட்சி செய்கின்ற கொக்கோகா! – அன்றலர்ந்த

பூவே! எனது புரிதலுக்கு ஏற்றநள்ளி

ராவே! ரசிக்கின்றேன் ரா!