ஊரின் சிறப்பு
________________
அகரம் அமுதன்:-
காரூர நீரில் கயலூர முப்போகம்
ஏரூரப் பச்சை எழிலூரப் - பாரூரில்
நின்றாளும் முத்தமிழ் நேராம் அகம்புறம்
குன்றா வகரஞ்சீ கூர்!
ஏடி வரதராசன்:-
காவலுக்கு ஐயனார்; காளை மணிச்சத்தஞ்
சேவலுக்கே கேட்டுச் சிறகடிக்கும்; -- பூவனம்போல்
முத்தானக் கோலத்தில் மொய்க்குமாம்
வண்டினங்கள்
அத்தனையும் அத்தியூரில் ஆம்.
2
வளம்
_______
அகரம் அமுதன்:-
தலையால் இடறித்தன் தாள்விழ வைக்கும்
மலையொத்துத் தோன்றும் மரங்கள்; - குலைநடுங்கிச்
செல்லும் முகில்கள் சிரம்தாழ்த்திச்
சென்றகதை
சொல்லும் எமதூர் சுணை!
ஏடி வரதராசன்:-
மன்னன் அரண்மனைபோல் மக்களுக்கும்
உண்டாம்;சேய்
விண்மீன் பறித்தே விளையாடும்; -- வெண்புறாக்கள்
மாடத்தில் நின்றே மழைமுகிலை
உள்ளிழுத்துக்
காடகலப் பெய்விக்கும் காண்.
3
வீரம்
______
அகரம் அமுதன்:-
ஆனைகட்டிப் போரடித்த அந்நாளில்
எம்முன்னோர்
ஆனை அடித்துப்போர் ஆக்கினார்; - மானைப்போல்
காட்டு வரிப்புலியை வீட்டில்
வளர்த்ததைத்தான்
நாட்டில் கதைப்பர்அந் நாள்!
ஏடி வரதராசன்:-
முன்வந்து நிற்க முரண்பிடிக்கும் நாற்படையும்
என்னூர்பேர் கேட்டால் இளைத்தஞ்சும் --
வண்ண
விடியற் கதிர்போல் வியன்மாந்தர் வாழக்
குடிலல்ல எல்லாம் குகை.
4
ஊராரின் மனம்
__________________
அகரம் அமுதன்:-
செம்பாதி தந்த சிவனும் எமைக்கண்டே
தம்பாதி தந்தான் தளிர்க்கொடிக்கு; - இம்மையில்
தாரமொன் றென்ற தசரதன் மைந்தனைப்
பாரணிந்த தெங்களின் பண்பு!
ஏடி வரதராசன்:-
தண்ணீர்மீன் துள்ளித் தரைமேல் விழப்பார்த்துக்
கண்ணீரே சிந்துங் கவின்மனத்தார் -- என்னூரில்
மாட்டுக்கும் பேர்வைத்து மார்பணைப்பர்; அஃறிணையைக்
கேட்டாலே சொல்லுமையா கேள்.
5
பெண்களின் அழகு
______________________
அகரம் அமுதன்:-
கூந்தல் உதிர்த்தபூ கோடிபெறும்; பொன்மஞ்சள்
சாந்தரைத்த கல்விலைவிண் தாண்டிவிடும்; - சார்ந்துவிலை
காண்பாரும் இன்னவிலை என்றறியார்
எம்பெண்டிர்
தூண்தொடை தொட்ட துணிக்கு!
ஏடி வரதராசன்:-
தேக்கன்னப் பேரெழிலின் தேர்கூந்தல்
சேரு(ம்)வரை
ஈக்கள் அமராது இனங்காக்கும் –
பூக்கள்
அலைத்தென்றல் வீச இலையொளிந்து
நிற்கும்
குலையா திதழ்காத்துக் கொண்டு.
அகரம் அமுதன்:-
இம்மா நிலத்தாரும் இன்கண் இமைக்காத
அம்மா நிலத்தாரும் ஆர்த்துரைப்பர்; - சும்மாஎம்
சுந்தரிகள் கொப்பளித்துத் துப்பியநீர்
தீர்த்தமென்று
வந்தருந்திச் சென்றவர லாறு!
ஏடி வரதராசன்:-
செம்பொன் நிறப்பெண்கள் சென்றுவிட்டால்
ஆலயத்துள்
கும்பலுடன் ஐயர் குழம்பியந்த ---
அம்பாள்
சிலையோ எனவெண்ணிச் சிந்தைமாறிப்
பெண்முன்
மலைத்தோதி நிற்பார் மறை.
6
ஈகை
______
அகரம் அமுதன்:-
மயிலுக்குத் தோகை வழங்கியஎம் பெண்கள்
குயிலுக்கும் கீதம் கொடுத்தார்! -
பயின்றநல்
வீரத்தைத் தந்ததெல்லாம் வேந்தர்க்கே
எம்ஆண்கள்
ஈரத்தை நீருக்கே ஈந்து!
ஏடி வரதராசன்
காணென் கரமென்றால் கண்டு குறிசொல்லார்
ஆணென்றும் பெண்ணென்றும் அத்தியூரார்க்(கு)
-- ஏனென்றால்
ஈகையெனும் ஒன்றால் இருகரமும் ஈந்தீந்து
ரேகை அழிந்திருக்கும் இங்கு.
7
காதலின் தூய்மை
____________________
அகரம் அமுதன்:-
கட்டிவந்த சேலை கசங்காமல் வீடடைய
எட்டிநின்று காதல் எழில்வளர்ப்போம்; - தொட்டாடக்
கண்ணுக்கும் எல்லையுண்டு; கண்ணொடுகண்
பேசுவதெம்
மண்ணுக்கே உண்டான மாண்பு!
ஏடி வரதராசன்:-
நம்பி அமரும் நறுமலர்கள்; பெண்றலையில்
தும்பி மதுவைத் துணிந்தெடுக்கும்; --- எம்மூரில்
தேகம் இணையாத தேன்சுத்தக்
காதலுக்கு
மேகமில்லா வானுவமை மேல்.
அகரம் அமுதன்:-
இன்றளவும் வெண்ணிலா இன்னுடல் தேய்வதும்
பொன்னுடல் மேற்கறை பூப்பதும் -
அன்றொருத்தி
முன்னின்று காதல் மொழிவதற்குத்
தூதாகத்
தன்னை அனுப்பாத தால்!
ஏடி வரதராசன்:-
வேல்போல் விழியென்றும் வில்போல்
புருவமென்றும்
பால்போல் தமிழிற்பண் பாடியதேன் --
கேள்கேள்கேள்
எட்டிநின்றே காதலம்பை எய்து வதைத்தமையால்
கட்டிவைத்தான் அன்றே கவி.
8
அறுசுவை
____________
அகரம் அமுதன்:-
அம்மி மணக்க அடுத்த தெருமணக்கக்
கும்மி அரைத்த குழைசாந்தை -
எம்பெண்கள்
இட்டுச் சமைத்த இளவாட்டுக்
கால்சூப்புக்(கு)
எட்டூர் கிடக்கும் இளைத்து!
ஏடி வரதராசன்:-
எஞ்சியதை ஆக்குகின்ற ஏழை எனும்போதும்
அஞ்சறைக்குள் கையால் அளந்தெடுத்து ---
வஞ்சியிவள்
ஆக்கிப் பரிமாற ஆங்குலவும்
வாசனைக்கே
நாக்கூற நிற்பான் நளன்.
9
சேய்மை
__________
அகரம் அமுதன்:-
விண்ணிடம் ஓர்நாள் விடுப்புமடல்
தந்துவிட்டு
மண்ணிறங்கி எங்கள் மனைக்குவந்(து); - உண்ண
நிலாச்சோறு கேட்டு நிலவுவந்து நிற்கச்
சிலாகித்(து) அளிப்பர் சிறார்!
ஏடி வரதராசன்:-
ஆழ்குளத்தில் நீச்சல் அடிக்குங்கால்
பிள்ளைகளும்
காழ்ப்பின்றி மீன்குஞ்சு கற்குமதை; -- மூழ்கிவிட்டால்
கொக்குகளே தோற்றார் குறிப்பெழுதும்; தாம்பாகும்
அக்குளத்துத் தாமரைத்தண் டாம்.
10
கலவி
_______
அகரம் அமுதன்:-
ஓய்வளிப்போம் நான்முகனுக் கோய்வளிப்போம்
மாதவனுக்
கோய்வளிப்போம் ஆதிசிவ ஓட்டனுக்கும்; - ஓய்வளியோம்
மாதம் முழுதும் மலர்க்கணை
ஏந்துமதன்
தூதனுப்பும் காதல் தொழிற்கு!
ஏடி வரதராசன்
அன்றிற்புள் எல்லைக்குள் ஆங்காங்கே காவலாகி
விண்கதிரோன் வந்தால் விரட்டிவிடும்; -- தண்மதிக்குத்
தேன்கலக்கும் வேலைசெய்யும் தேனீக்கள்; கட்டிலுக்கும்
நாண்பூட்டப் போமோ நகரந்து.
11
ஜூலை, 2021