பகடி வெண்பா!
தனிமரமே! உன்றன் தனிமை அகற்றக்
கனிவனமே வாய்த்த கதைசொல்! – இனிமைமிகு
வண்ணமுகம் கண்டேன்; மயலுற்றேன்; என்போலும்
பெண்ணவளும் பெற்றாள் பிணி! (1)
மாவதை செய்யும் மதனம்பில் தப்பிக்கத்
தேவதை உன்றனைத் தேர்ந்தனளோ? – பூவமளிப்
போர்க்குப் பொருந்தும் பொலிவின னென்றேதான்
பார்த்துடன் பட்டாள் பசித்து! (2)
எண்ணம் உரைக்க எளிதில் உணர்த்திட
மண்ணில்வாய்ப் பேச்சுக்கு மாற்றுண்டோ? – கண்மொழி
கற்றுத் தெளிந்தால் கதையளக்கும்
வாய்ப்பேச்சு
வெற்றுப் பகட்டென்பாய் வெந்து! (3)
நின்றுதான் பேசிமிக நெஞ்சம் உணர்த்துதல்
ஒன்றுதான் கண்ணின் உயர்வாமோ? – நன்றுகேள்
ஐம்புலனில் கட்புலனே போய்த்தீண்டி
இன்பீயும்
மொய்ம்புடைய தென்பேன் முனைந்து! (4)
உரியமொழி பேசி யுணர்த்தற் குரிய
கரியவிழிக் கின்னோர் கவின்சொல்! –
உரியவரைத்
தன்னுள்ளே வைத்துத் தனதேக்கம் தீர்க்குமே
அன்னியர் காணாத வாறு! (5)
இல்லாள் உடன்நீ இணையப்போம் அவ்விரவில்
நல்லாள் நயனமிடும் கட்டளையென்? – பொல்லா
மதனம்பு பாய்ந்தெனக்கு மையல் வழங்க
மதனுக்கிம் மங்கை விழி! (6)
என்றுமில்லாப் பேருவகை இன்றுநீ கொண்டவகை
மென்றுமுழுங் காமல் மிழற்றாயோ? – இன்றுவரைக்
கொல்லரவம் போலென்னைப் பல்லிரவுங்
கொன்றதுபோய்
நல்லுறவும் வந்த நயப்பு! (7)
நெருநல் வரைநீ நிதமும் அடைந்த
வெருவல் தனித்தா விலகும்? – புருவப்
பெருவில் அணங்கின் மருவில் எனைக்கண்(டு)
உருவில் அனங்கன் உடன்! (8 )
பதமெடுத்து நெஞ்சம் படபடக்கப் பாவை
முதலிரவில் உன்முன் முகிழ்ந்தால்? – இதமுடன்
தொட்டமர்த்தித் தோகை துடியிடை மீதொருகை
இட்டமர்த்திக் காண்பேன் இதம்! (9)
மென்முறைக்கே ஒக்கல் ஒடியுமெனில்
வேட்கையால்
வன்முறைக்கோ நீயங்கு வாய்ப்பளிப்பாய்? – நன்முறையே
அவ்விரண்டும் கட்டில் அமர்க்களத்தில்
என்றவளின்
செவ்விதழே செப்பும் சிலிர்த்து! (10)
தாள்வீழுங் காரிகையைத் தாங்கிப்
பிடித்தவளின்
தோள்வீழ வன்றோ துடிதுடிப்பாய்? – மூள்கின்ற
மோக நெருப்பணைக்க முன்வரும் நேரிழையாள்
தாகத் தவிப்படக்கத் தான்! (11)
பொசுக்கென் றணைக்கப் புகுவாயேல் தோகை
விசுக்கென் றகலாளோ விள்ளாய்? – விசும்பா(து)
அகல்வாளை வாரி அணைக்க இசைவாள்
நிகழப்போம் இன்பம் நினைந்து! (12)
பூவைக் குரலெடுத்துப் பூவைக் குழல்முடிந்த
பூவை பொறென்றால் பொறுப்பாயோ? – கோவையிதழ்
வாயோடு வாய்வைத்து வாங்க வழங்குவாள்
தீயோடும் நெஞ்சம் தெரிந்து! (13)
மச்சம் சிவந்தாளின் மஞ்சல் முகத்தாளின்
கச்சம் களையக் கருதுவதேன்? – அச்சடித்த
உச்சிநிலா தன்னுருவை ஓரிரண்டாய்த்
தோற்றியவள்
கச்சையிலா வைகுதெனக் கண்டு! (14)
தலையணை ஆங்கே தனிகிடக்க பாவை
முலையணை மீதோஉன் மோகம்? – நிலையணை
ஈதெனக் கண்டேன்; இன்பம் பயக்குமால்
தோதெனக் கொள்வேன் துடித்து! (15)
கச்சில் அமைந்த கனிமேல் கருத்தமைத்து
மிச்சில் வடித்தல் மிகையன்றோ? – முச்சில்
புடைத்தரிசி அட்டுதலால் புத்தடிசில் ஆதல்
படைத்துவிடத் தானே பசிக்கு! (16)
தட்டில் கனியிருக்கத் தள்ளித் தனிவைத்துக்
கட்டில் கனிமீதே காதலேன்? – மட்டில்
சுவையாவும் மங்கை சுகந்தஉடல் தன்னில்
குவையாகி நிற்றல் குறித்து! (17)
மங்கைகொள் தேங்குடமே மையல் தனைப்போக்கும்;
அங்கைகொள் பாற்சொம்பும் ஆங்கெதற்கோ? – கொங்கைகொள்
தேறல் தெவிட்டாதே; தீம்பால்
தெவிட்டுமதைக்
கூறல் பொருட்டெனக் கொள்! (18)
கட்டிலில் நீயிருக்கக் கன்னி அருகிருக்கக்
தொட்டணைக்க நாணம் துணையாமோ? மொட்டுவிடும்
ஆசைக்குத் தோதாக ஆங்கு வழிவிட்டுப்
பூசைக்கும் தூதாகும் போ! (19)
விரகம் ஒருபக்கம் வெட்கமொரு பக்கம்
கரகம் எடுத்தாடக் கண்டால்? – விரகத்தால்
வெட்கம் வகிர்ந்து விடியும் வரையவளின்
உட்குச் செகுப்பேன் உவந்து! (20)
கால்நிலா நெற்றிமுக் கால்நிலா
கன்ன(ம்)முகம்
பால்நிலா என்றே பகர்வாயோ? – தால்நிலா(து)
அங்கவளின் அங்க அழகை வருணிக்க
இங்குவந்து வாய்த்த தெனக்கு! (21)
பாய்ச்சல்காட் டாதுபோய்ப் பண்பாய்
மிகுவிரகக்
காய்ச்சல் தணிக்கக் கடவாயோ? – மேய்ச்சலுக்கு
நன்னிலம் கிட்டின் நனிமேயும் பெற்றம்போல்
என்னிலையும் ஆதல் இயல்பு! (22)
ஆய கலையனைத்தும் அத்துப் படிதானோ?
ஏயமறக் கற்ற தெவளிடமோ? – நேயனே!
ஆயகலை ஈரெட்டில் ஒன்றுகலை ஒன்றேதான்
ஆயவிலை அஃதுள் அமிழ்ந்து! (23)
அல்லாக் கலவியைநீ கற்றவன்போற் கற்பிக்க
நல்லாளை நாடும் நயம்நவில்! – இல்லாள்
துணைகொண்டே கற்றுத் தெளிதல் மரபாம்;
இணைகண்டே இன்புறல் ஏற்பு! (24)
கூடல் பொழுதில் கொடியிடை மீதேஉன்
தேடல் எதுவோ? தெரிந்துசொல்! –
ஏடல்
எதுவான போதும் இருவர்க்கும் இன்பம்
பொதுவாதல் ஒன்றே புகழ்! (25)
இனம்காணா இன்பம் இருமடங் காதல்
மனம்கண்டு மாது மருண்டால்? – தனம்கொண்ட
கோதை அவளுக்குக் கூறுவேன் கொல்லுமதன்
வாதைக் கதுவே மருந்து! (26)
இட்டவளை இற்றுவிழ நின்கையால்
மெட்டிப்பெற்(று)
இட்டவளைக் கேளென்றால் என்கேட்பாய்? – மொட்டவளைப்
பூமணைமேல் வைத்துப் புதுத்தாலி கட்டியஇம்
மாமனைமேல் வாங்கென்பேன் வந்து! (27)
மழலை மொழிபேசும் மங்கை அவட்கோர்
மழலை வழங்க மனமோ? – மழலைச்சொல்
கேட்டல் செவிக்கின்பம் தீண்டல்
உடற்கின்பம்
வேட்டல் இலார்யார்? விளம்பு! (28)
நூலிடை என்றே நுவலரிய நுண்ணிடை
சாலிடை ஆவதிற் சம்மதமோ? – நூலுடை
கொண்டு மறைத்தமு தூட்ட மழலைபெறல்
பெண்ணாய்ப் பிறந்தோர்க்குப் பேறு! (29)
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!
மதிநூறும் தோற்கும் மனையோ(டு); - அதிகமெனை
வாழ்த்திப் புணர வழியனுப்பும் நீயுமே
வாழ்கமனை யோடு மகிழ்ந்து! (30)