ஜோசப் விஜய்எனும்நான்...
ஜோசப் விஜய்எனும்நான்... தூயதோர் ஊழலற்ற
தேசமுரு வாகச் செயல்படுவேன்; – பாசபந்தப்
பற்றற்றுப் பாமரரின், பாட்டாளி
வர்க்கத்தின்,
வெற்றிக்குப் பாடுபடு வேன்!
பள்ளிகளில் கஞ்சா பயன்பாட்டை வேரறுத்துப்
பிள்ளைகளுக் கீவேன் பெருங்கல்வி; – நள்ளிரவில்
பூவையர் அச்சமின்றிப் போய்வரலாம்; கைவைத்தால்
தீவைத் திடுவேன்சே தித்து!
ஏவல் துறையாய், எடுபிடியாய்ப்
போய்விட்ட
காவல் துறை,தன் கடமையை – ஆவலுடன்
செய்யும் படிச்செய்வேன்; சேவை மனப்பான்மை
உய்யும் படிச்செய்வேன் ஓர்ந்து!
பாமரனோ, இல்லை பணங்கா சுடையவனோ,
மாமனோ, மந்திரிக்கு மச்சானோ, – தீமைசெய்யத்
திட்டமிடும் போதே சிறையில் அடைத்திருவேன்;
சட்டமெல் லார்க்கும் சமம்!
போதை கலாச்சாரம்; பேதை பலாத்காரம்;
தாதை*யால் நேர்ந்த சமாச்சாரம்; – தீதையெல்லாம்
இன்றே நிறுத்துவேன்; எத்தர்
திருத்துவேன்;
நன்றே நடத்துவேன் நாடு!
தாதை – அப்பா(முன்னாள் முதல்வர் சுடாலின்)
கடமையைச் செய்வதற்குக் கையூட்டு வாங்கும்
மடமையைஓர் கையெழுத்தில் மாய்ப்பேன்; – அடகெடுவாய்!
பத்துலட்சம் கோடிகடன்; பாமரருக் கேதுபலன்?
அத்தனையும் தீர்ப்பேன் அடைத்து!
அறுவை சிகிச்சையால் அஃதையகற் றாமல்
உறுவ தொருநன்மை உண்டா? – சிறுகத்
திரைமறைவில் தோன்றித் திசைவிழுங்கும் ஊழல்
புரையோடிப் போய்விட்ட புண்!
கருமமே கண்ணாவேன்; காவலும் ஆவேன்;
தருமத்தின் ஆட்சி தருவேன்; – தெருவெங்கும்
பாலோடும் தேனோடும் பாயாசம் தானோடும்
நாலோடும் ரெண்டோடும் நன்கு!