வியாழன், 9 ஜூலை, 2026

 

அத்தியூர் வாழ்வரதன் வஞ்சி மகேசுவரி

நெத்திக்குப் பொட்டாக நேர்ந்தனன்; - மெத்தைச்

சுகந்தின்று பிள்ளை சுமந்தீன்று மஞ்சன்

அகம்வென்று வாழ்வாள் அகம்!

 

பாடும் பறவைகள் பந்தம் நிலைபெறக்

கூடும் களியெலாம் கூடலில்; - ஆடும்பொன்

தொட்டில் இரண்டைந்து திங்களில்; ஆமதைக்

கட்டில் உறுதிசெயும் கண்டு!

 

கன்னி யவள்பாடக் கைத்தாளம் போட்டபடி

நண்ணி யவன்பாட நல்லசுகப் - பொன்பொழுதில்

கட்டிலும் பாடும்; கதையறிந்த காரணத்தால்

தொட்டிலும் பாடும் தொடர்ந்து!

 

தானாய் அழுமாம் தளிர்மழலை; போயவளை

ஏனாம்? எனக்கேட்பான் ஏந்தலுமே; - ஆனாலும்

உன்பிள்ளை உன்போலும்; தம்பிக் கழுகின்றான்;

என்பாள்தன் எண்ணத்தை இட்டு!

பகடி வெண்பா!

 

பகடி வெண்பா!

 

தனிமரமே! உன்றன் தனிமை அகற்றக்

கனிவனமே வாய்த்த கதைசொல்! – இனிமைமிகு

வண்ணமுகம் கண்டேன்; மயலுற்றேன்; என்போலும்

பெண்ணவளும் பெற்றாள் பிணி! (1)

 

மாவதை செய்யும் மதனம்பில் தப்பிக்கத்

தேவதை உன்றனைத் தேர்ந்தனளோ? – பூவமளிப்

போர்க்குப் பொருந்தும் பொலிவின னென்றேதான்

பார்த்துடன் பட்டாள் பசித்து! (2)

 

எண்ணம் உரைக்க எளிதில் உணர்த்திட

மண்ணில்வாய்ப் பேச்சுக்கு மாற்றுண்டோ? – கண்மொழி

கற்றுத் தெளிந்தால் கதையளக்கும் வாய்ப்பேச்சு

வெற்றுப் பகட்டென்பாய் வெந்து! (3)

 

நின்றுதான் பேசிமிக நெஞ்சம் உணர்த்துதல்

ஒன்றுதான் கண்ணின் உயர்வாமோ? – நன்றுகேள்

ஐம்புலனில் கட்புலனே போய்த்தீண்டி இன்பீயும்

மொய்ம்புடைய தென்பேன் முனைந்து! (4)

 

உரியமொழி பேசி யுணர்த்தற் குரிய

கரியவிழிக் கின்னோர் கவின்சொல்! – உரியவரைத்

தன்னுள்ளே வைத்துத் தனதேக்கம் தீர்க்குமே

அன்னியர் காணாத வாறு! (5)

 

இல்லாள் உடன்நீ இணையப்போம் அவ்விரவில்

நல்லாள் நயனமிடும் கட்டளையென்? – பொல்லா

மதனம்பு பாய்ந்தெனக்கு மையல் வழங்க

மதனுக்கிம் மங்கை விழி! (6)

 

என்றுமில்லாப் பேருவகை இன்றுநீ கொண்டவகை

மென்றுமுழுங் காமல் மிழற்றாயோ? – இன்றுவரைக்

கொல்லரவம் போலென்னைப் பல்லிரவுங் கொன்றதுபோய்

நல்லுறவும் வந்த நயப்பு! (7)

 

நெருநல் வரைநீ நிதமும் அடைந்த

வெருவல் தனித்தா விலகும்? – புருவப்

பெருவில் அணங்கின் மருவில் எனைக்கண்(டு)

உருவில் அனங்கன் உடன்! (8 )

 

பதமெடுத்து நெஞ்சம் படபடக்கப் பாவை

முதலிரவில் உன்முன் முகிழ்ந்தால்? – இதமுடன்

தொட்டமர்த்தித் தோகை துடியிடை மீதொருகை

இட்டமர்த்திக் காண்பேன் இதம்! (9)

 

மென்முறைக்கே ஒக்கல் ஒடியுமெனில் வேட்கையால்

வன்முறைக்கோ நீயங்கு வாய்ப்பளிப்பாய்? – நன்முறையே

அவ்விரண்டும் கட்டில் அமர்க்களத்தில் என்றவளின்

செவ்விதழே செப்பும் சிலிர்த்து! (10)

 

தாள்வீழுங் காரிகையைத் தாங்கிப் பிடித்தவளின்

தோள்வீழ வன்றோ துடிதுடிப்பாய்? – மூள்கின்ற

மோக நெருப்பணைக்க முன்வரும் நேரிழையாள்

தாகத் தவிப்படக்கத் தான்! (11)

 

பொசுக்கென் றணைக்கப் புகுவாயேல் தோகை

விசுக்கென் றகலாளோ விள்ளாய்? – விசும்பா(து)

அகல்வாளை வாரி அணைக்க இசைவாள்

நிகழப்போம் இன்பம் நினைந்து! (12)

 

பூவைக் குரலெடுத்துப் பூவைக் குழல்முடிந்த

பூவை பொறென்றால் பொறுப்பாயோ? – கோவையிதழ்

வாயோடு வாய்வைத்து வாங்க வழங்குவாள்

தீயோடும் நெஞ்சம் தெரிந்து! (13)

 

மச்சம் சிவந்தாளின் மஞ்சல் முகத்தாளின்

கச்சம் களையக் கருதுவதேன்? – அச்சடித்த

உச்சிநிலா தன்னுருவை ஓரிரண்டாய்த் தோற்றியவள்

கச்சையிலா வைகுதெனக் கண்டு! (14)

 

தலையணை ஆங்கே தனிகிடக்க பாவை

முலையணை மீதோஉன் மோகம்? – நிலையணை

ஈதெனக் கண்டேன்; இன்பம் பயக்குமால்

தோதெனக் கொள்வேன் துடித்து! (15)

 

கச்சில் அமைந்த கனிமேல் கருத்தமைத்து

மிச்சில் வடித்தல் மிகையன்றோ? – முச்சில்

புடைத்தரிசி அட்டுதலால் புத்தடிசில் ஆதல்

படைத்துவிடத் தானே பசிக்கு! (16)

 

தட்டில் கனியிருக்கத் தள்ளித் தனிவைத்துக்

கட்டில் கனிமீதே காதலேன்? – மட்டில்

சுவையாவும் மங்கை சுகந்தஉடல் தன்னில்

குவையாகி நிற்றல் குறித்து! (17)

 

மங்கைகொள் தேங்குடமே மையல் தனைப்போக்கும்;

அங்கைகொள் பாற்சொம்பும் ஆங்கெதற்கோ? – கொங்கைகொள்

தேறல் தெவிட்டாதே; தீம்பால் தெவிட்டுமதைக்

கூறல் பொருட்டெனக் கொள்! (18)

 

கட்டிலில் நீயிருக்கக் கன்னி அருகிருக்கக்

தொட்டணைக்க நாணம் துணையாமோ? மொட்டுவிடும்

ஆசைக்குத் தோதாக ஆங்கு வழிவிட்டுப்

பூசைக்கும் தூதாகும் போ! (19)

 

விரகம் ஒருபக்கம் வெட்கமொரு பக்கம்

கரகம் எடுத்தாடக் கண்டால்? – விரகத்தால்

வெட்கம் வகிர்ந்து விடியும் வரையவளின்

உட்குச் செகுப்பேன் உவந்து! (20)

 

கால்நிலா நெற்றிமுக் கால்நிலா கன்ன(ம்)முகம்

பால்நிலா என்றே பகர்வாயோ? – தால்நிலா(து)

அங்கவளின் அங்க அழகை வருணிக்க

இங்குவந்து வாய்த்த தெனக்கு! (21)

 

பாய்ச்சல்காட் டாதுபோய்ப் பண்பாய் மிகுவிரகக்

காய்ச்சல் தணிக்கக் கடவாயோ? – மேய்ச்சலுக்கு

நன்னிலம் கிட்டின் நனிமேயும் பெற்றம்போல்

என்னிலையும் ஆதல் இயல்பு! (22)

 

ஆய கலையனைத்தும் அத்துப் படிதானோ?

ஏயமறக் கற்ற தெவளிடமோ? – நேயனே!

ஆயகலை ஈரெட்டில் ஒன்றுகலை ஒன்றேதான்

ஆயவிலை அஃதுள் அமிழ்ந்து! (23)

 

அல்லாக் கலவியைநீ கற்றவன்போற் கற்பிக்க

நல்லாளை நாடும் நயம்நவில்! – இல்லாள்

துணைகொண்டே கற்றுத் தெளிதல் மரபாம்;

இணைகண்டே இன்புறல் ஏற்பு! (24)

 

கூடல் பொழுதில் கொடியிடை மீதேஉன்

தேடல் எதுவோ? தெரிந்துசொல்! – ஏடல்

எதுவான போதும் இருவர்க்கும் இன்பம்

பொதுவாதல் ஒன்றே புகழ்! (25)

 

இனம்காணா இன்பம் இருமடங் காதல்

மனம்கண்டு மாது மருண்டால்? – தனம்கொண்ட

கோதை அவளுக்குக் கூறுவேன் கொல்லுமதன்

வாதைக் கதுவே மருந்து! (26)

 

இட்டவளை இற்றுவிழ நின்கையால் மெட்டிப்பெற்(று)

இட்டவளைக் கேளென்றால் என்கேட்பாய்? – மொட்டவளைப்

பூமணைமேல் வைத்துப் புதுத்தாலி கட்டிய‍இம்

மாமனைமேல் வாங்கென்பேன் வந்து! (27)

 

மழலை மொழிபேசும் மங்கை அவட்கோர்

மழலை வழங்க மனமோ? – மழலைச்சொல்

கேட்டல் செவிக்கின்பம் தீண்டல் உடற்கின்பம்

வேட்டல் இலார்யார்? விளம்பு! (28)

 

நூலிடை என்றே நுவலரிய நுண்ணிடை

சாலிடை ஆவதிற் சம்மதமோ? – நூலுடை

கொண்டு மறைத்தமு தூட்ட மழலைபெறல்

பெண்ணாய்ப் பிறந்தோர்க்குப் பேறு! (29)

 

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

மதிநூறும் தோற்கும் மனையோ(டு); - அதிகமெனை

வாழ்த்திப் புணர வழியனுப்பும் நீயுமே

வாழ்கமனை யோடு மகிழ்ந்து! (30)

 

பகடிவெண்பா

 

பகடிவெண்பா

 

தீட்டிய பாவில்தான் தீஞ்சுவையோ? இல்லைமை

கூட்டிய பார்வையில்தான் கொங்குளதோ? – கேட்டவுடன்

நேற்றுவரை பாவென்றாய்; நேரெதிராய் நாளைமை

ஊற்றிய பார்வையென்பாய் ஓர்ந்து! 01

 

சித்திரம் சின்னச் சிலையொத்த மேனியினாள்

பத்திரம் அப்பா!நீ பார்த்துக்கொள்; – அத்திரங்கள்

போட‍ட்டும் காமன்; புதுமண மக்காள்நங்(கு)

ஆட‍ட்டும் கட்டில் அசைந்து! 02

 

இடம்மாறும் பெண்ணால் இடம்மாறும், நெஞ்சம்

இடம்மாறும் பெண்ணின் இயைவால்... – இடம்மாறும்

யாவும் அணைப்பால்யார் ஆண்பெண்ணென்(று) யார்சொல்வார்?

ஓவும்பூங் காற்றும் உணர்ந்து! 03

 

சந்தியா காலத்திற் சந்தித்து நீரிருவர்

சந்தியாக் காலத்தைச் சாடுவிரோ? – சிந்தைநீ

செய்கும் தமிழ்மொழி தேமொழிக்கீ டில்லையென்று

வைகுமோ நண்பா!உன் வாய்!? 04

 

நானென்று சொல்கின்ற நாளோடிப் போனதினி

நானன்று நாமென்று நாமொழியும்; – தேனின்றுன்

உள்ளங்கை தன்னில் உணத்தான் தடைபோடும்

உள்ளபடி நாணம் உயர்ந்து! 05

 

நங்கை தலைசாயும் நாணத்தால் அப்பவும்என்

பங்கைத்தா என்றே பகர்வாயோ? – நுங்குநிகர்

நாவால் அவள்பேர் நவின்றரு கேஅழைத்துத்

தேவாய் சுவைக்கையில் தேர்ந்து! 06

 

உண்ணா வறளும் உடலம் உதறலுறும்

உண்ணாய் பசித்தும் ஒருவாய் – எண்ணாய்

எதையும் அணங்கின் எழில்கண்(டு) உளறும்

அதையும் இதையும்வாய் ஆம்! 07

 

பாயே இலையாக பாவை உணவாக

நீயோ பசியில் நெலிவாயே! – நீயாக

அள்ளித்தான் உண்ணவும் ஆகாதே! நாணத்தால்

உள்ளம்தான் நோகும் உடைந்து! 08

 

பசிக்கும் பசும்பால் பழமிருக்க‍க் கண்டும்

புசிக்கும் நினைவற்றுப் போகும் – புசிக்கின்

புளிக்கும் உளம‍ந்தப் பூவை இடம்மேவிக்

களிக்கும் தடைகள் கடந்து! 09

 

சேவல் எழுப்பச் செழுங்கதிரோன் வான்மேவப்

போவதேன் அல்இப் பொழுதென்றே – ஆவல்

தணியா மனத்தாய்! தவிதவிப்பாய் மற்ற

பணியாவும் போகும் மறந்து! 10

 

மாசறு பொன்னே வலம்புரிசங் கேஎன்று

பேசரு பேச்செல்லாம் பேசியே – நேசமுடன்

மாதிரை ஆகின்ற மஞ்சப் பொழுதுகளை

ஆதிரைச் சித்தா!நீ ஆள்! 11

 

உடலே விரகா உளமே உலையா

அட‍டா! விழியே அணலா – நடக்கும்

சமையல் முடிவில் சனிக்கும் மழலை

உமையே உருவாய் உரித்து! 12

ஞாயிறு, 5 ஜூலை, 2026

 

அழகாய் இளம்பெண்ணை ஆங்குநாம் கண்டால்

பழக மனமே பறக்கும் –அழகலவே

என்பவர் எண்ணித் துணிக; இளம்பருவம்

தன்னில் இதல்ல தவறு!

 

-

சரியாக ஒன்றரை ஆண்டுக்குமுன் இத்தளத்தின் அமைப்பாளர்களுள் ஒருவரான வரதராஜன் அவர்களின் திருமணத்தின் போது, பெண்பார்த்துவிட்டு வந்த அன்று, பெண்ணைப்பற்றி நான் வெண்பாவில் வினவ, அதற்கு அவர் வெண்பாவிலேயே பதிலுரைக்க என பத்துப் பதினைந்து வெண்பாக்கள் எழுதியதாக நினைவு…

 

அந்தப் பதிவுகள் அனைத்தையும் அவரே அன்று எடுத்துச் சென்றுவிட்டார். எனக்கு நினைவில் உள்ளவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். இவற்றின் தொடர்ச்சியை வரதன் அவர்கள் இங்குப் பதிவிட்டால் அனைவருக்கும் வெண்பா விருந்து வைத்தாற்போல் அமையும்…

 

 

பெண்பார்க்கப் போனாயே போவார் வருவார்தம்

கண்பார்க்கு மாறுநற் கட்டழகோ – நண்பா!உன்

எண்ணத்தில் அந்நேரம் ஏற்பட்ட சிந்தனையை

வெண்பாவில் வைப்பாய் விரைந்து!

 

போதை விழிகண்டேன் பொற்கலைகள் கட்டழகில்

பாதை மறந்தேன் பருவமகள் –பேதையுளம்

மட்டும் புரியா மயக்கத்தில் ஆழ்த்தியெனைச்

சுட்டாள் அதுவும் சுகம்!

 

சுகப்போதை தந்து துயில்மறக்கப் பண்ணி

அகத்தைக் களவாண் டவளின் –தகவுரு

மாநிறமோ மால்நிறமோ மங்கை இதழ்சுவைக்கத்

தேனுறுமோ சொல்க தெளிந்து!

 

தெரிந்த நிறமெல்லாம் தீயணைத்த வண்ணம்;

புரியா துழல்கின்றேன் பொன்எண்ணம் –அறிந்ததைச்

சொல்லத் துடிக்கின்ற சொர்க்கமகள் கண்பார்த்து

அள்ளத் துடிக்கின்றேன் ஆம்!

1 ஜூலை, 2021

 

வரதன்:-

அண்ணாந்துப் பாத்தே அளந்திருக்கேன் சூரியனை

கண்ணேதும் ஆகல்ல கண்மணியே -- சின்னவிழி

ஒன்னமட்டும் பாத்தா ஒடம்பெல்லாங் கூசுதுன்னுக்

கண்ணாடி போட்டிருக்கேன்  காண்.

 

அகரம் அமுதன்:-

ரோட்டுல போமுடில; லோலோன்னு பின்னாடி

ஆட்டினு வந்துடுறான் ஆணழகன்; - நீட்டுல

பாஸானா மட்டும்லௌவ் பண்லான்னு லாவந்தா

லூஸாவான் பாய்ஸ்பல பேர்!

 

வரதன்:-

நீட்டுல பாசானா நீயெல்லாம் பொண்ணுன்னு

ரோட்டுலயா சுத்துவேன் ரோந்துக்கு ? -- ஹாட்டில்லா

ஏசிகார் உள்ள  எனக்கான ஏஞ்சலோட

பேசிட்டே போவேன் பிறகு.

 

அகரம் அமுதன்:-

'ஒன்ஸ்'போகக் கூட ஒழுங்கா அறியாநீ

பென்ஸ்ஸுல போவியா பெண்கூட? - என்னழகுக்(கு)

ஊராளும் மன்னவன் ஓடிவந்து பெண்கேட்பான்

தாராள மாகப்பொன் தந்து!

 

1 ஜூலை, 2021