வியாழன், 7 மே, 2026

 

கொளுத்தும் வெயிலின் கொடுமையில்தப் பிக்கக்

குளுமையைத் தேடுமென் கூடே! - குளுமைக்குத்

தோப்பிளநீர் கிட்டும் தொலைவிலில்லாக் காரணத்தால்

சாப்பிடுவோம் தர்பூ சணி!

 

குளிர்சா தனப்பெட்டிக் குள்ளேஓர் ஓரம்

ஒளிந்திந்நாள் வெக்கை ஒழிப்போம்; - குளித்தாலும்

கொஞ்சமும் சூடு குறைகின்ற பாடில்லை;

தஞ்சமடை வோமிச் சணம்!

 

மோர்குடித்தும் பார்த்தாச்சு; முற்றும் தயிர்சாதம்

தேர்ந்தெடுத்தும் நண்பகலில் தின்றாச்சு; - நீர்குடித்தும்

தீர்வில்லை; சூட்டால் தினம்தொல்லை; ஊத்துகிற

வேர்வையைத் தந்தோம் விலை!

 

காட்டில் மரம்கீழ் கயிற்றுக்கட் டில்போட்டு

நீட்டிப் படுப்பதே நிம்மதி; - வாட்டி

எடுக்கின்ற வெய்யோன் எரிச்ச(ல்)தரா வாறு

தடுக்கவழி இல்லா ததால்!

 

ஓடைநீர் எங்கேனும்  ஓடாதா? ஓடிப்போய்

ஆடையின்றி நாம்நீந்த ஆகாதா? – கோடைவெயில்

நுங்குக் கடங்காதா? நூல்பிடித்து விஞ்ஞானம்

செங்கதிரைத் தீர்க்காதா தின்று!?

 

வேகா வெயிலேஉன் வீராப்பை விட்டுமண்ணை

நோகாமல் அன்றாடம் நோட்டமிடு – ஆகாத

வேலையைப் பார்ப்பதற்குக் காலை எழாதேபொன்

மாலைவான் ஏகுவிரை வாய்!

 

உச்சியிலே தொங்கும் ஒரேயோர் கதிர்பழத்தைப்

பிச்சிநான் தின்னப் பிரியமுற்றேன்; – அச்சுவெல்லத்

தூளிட்டுத் தேங்காய் துருவியிட்டுத் தேன்தெளித்துத்

தாளித்த நெய்யுமிட்டே சற்று!

செவ்வாய், 5 மே, 2026

 வருத்தப் படாதீங்க; வாட்டமுறா தீங்க;

திருவிழியில் நீர்கசியா தீங்க; – ஒருவழியாய்

ஓய்வு கிடைத்ததென்றே ஓரம்உட் காருங்க

சாய்வுநாற் காலியில் சாய்ந்து! 01

 

நிம்மதியாய் ரெஸ்ட்எடுங்க; நெட்பிளிக்ஸ் பாருங்க;

அம்மணி யோடளவ ளாவுங்க; – கம்மென்று

பேப்பர் படிங்க; பெருசுகளோ டும்கதைங்க

தோப்பிளநீர் வாங்கிச் சுவைத்து! 02

 

காலை டிபன்முடிங்க; காஃபிசூ டாய்க்குடிங்க;

மாலையில் டின்ன(ர்)மற வாதீங்க; – வேலையற்றுப்

போன விசனத்தில் புத்திபிற ழாதீங்க

ஆனமட்டும் பொங்கி அழுது! 03

 

கேரம்போர் டாடுங்க; ஹேப்பியாய்ப் பாடுங்க;

நேரத்தில் தூங்கி நிதமெழுங்க; – வாரமெல்லாம்

சன்டிவி பாருங்க; சாங்குகள் கேளுங்க

முன்வினைமேல் பார முரைத்து! 04

 

அஞ்சரைக் குள்ளவண்டி அந்நாளில் பார்த்ததெல்லாம்

நெஞ்சத்தின் ஓரம் நினைவிருந்தும் – கஞ்சனின்

கைப்பொருளாய்த் தேகம் கலவிக் குதவாது

பொய்ப்பொருள்தான் சொந்தமெய்இப் போது! 05

 

மாத்திரை போடுங்க; மாபாவத் தைக்கழிக்க

யாத்திரை போய்வாங்க; ஏகனைத் - தோத்தரிங்க;

தீபத்தால் வந்தவினை, செந்தில்வே லன்விட்ட

சாபத்தால் தோற்றீங்க சார்! 06

 

கொஞ்சமா ஆடுனிங்க? கோபத்தில் சாடுனிங்க?

பஞ்சமா பாதகம் பண்ணினிங்க; – நெஞ்சம்

அறியா லயத்தில் அறிவா லயத்தில்

சிறிய செயல்நூறும் செய்து! 07

 

சிங்கிளாய் நின்று ஜெயித்தஜோ சப்விஜய்க்கு

அங்கிள்!சொல் லுங்க அகவாழ்த்து; – செங்கதிரை

ஊதி விசிலணைத்த உண்மை உணருங்கால்

பேதிவரக் கூடும் பெரிது! 08

 

வாயில் இனிமேல் வடைசுடா தீங்க;அந்த

நோயினால் தானே நொடிஞ்சீங்க; - கோயில்போய்ச்

சாமிபா ருங்க; சரணா கதியடைங்க

மாமிபார்க் காதீங்க மாம்ஸ்! 09

 

நேற்றை நினைந்து நினைந்துருகி ஏற்பட்ட

மாற்றம் பொறுக்கா மனமுடையும்; – தோற்றால்

விபரீத மானபல வெண்ணங்கள் தோன்றும்;

சபரீசா! மாமனார் தாங்கு! 10

 

வெள்ளியில் பீரோ, வெரைட்டி புடவைகளை

உள்ளிட வாங்கிய உத்தமியே! – தள்ளிப்

படுக்காதே இன்றுனது பாவாவைத் தூக்கிக்

கொடுக்காதே தூக்குத்தாம் புக்கு! 11

 

தம்பி உதயநிதி! தந்தை மனமுடைந்து

வெம்பிப்போய் உள்ளார் விசனத்தில்; – கம்பி நீ

நீட்டிச் சரக்கடிக்க நீலாங் கரைஏகாய்;

வாட்டத்தைப் போக்கியுற வாடு! 12

 

சிட்டிங்சீ யெம்மை, திராவிட ஐகானை,

தட்டித்தூக் கிற்றே தவெக‍;இக் – கட்டில்

கொணர்ந்து நிறுத்தியதே கோட்டையைப் பற்றிக்

கணக்கைநேர் செய்திக் கணம்! 13

 

பர்செகண்டுக் கோர்தடவை பந்தா விளம்பரம்,பாழ்;

ஒர்க்அவுட் ஆகவில்லை ஓசிபஸ்; – தற்குறிகள்

என்றிகழ்ந்த ஏச்சுக்கள் எல்லாம் பொடியாச்சு

நின்றுவிசில் வென்றதனால் நேற்று! 14

 

ரோடுஷோ நாயகனை ரோல்மாடல் ஆனவனை

பேடுவார்த் தையிலா பேசுனீங்க? - கேடுகெட்ட

இன்னொரு ஜென்ம‍ம் இருந்தால் பிறங்காத

நன்மையைச் செய்ங்க நமக்கு! 15






 

திராவிடம் தோற்றதால் சிந்தை கலங்கிச்

சராசரிக்கும் கீழிறங்கிச் சாடிச் – பொறாமையை

நன்றாய் வெளிப்படுத்தும் நண்பரே! நீர்வாழ்க

இன்றுபோல் என்றும் இனிது!

 

பொன்மெத்தை மீது புரண்டு படுக்காமல்

வன்மத்தைக் க‍க்கும் வயோதிகரே! – உன்மத்தம்

கூடியதோ புத்தி குறைந்ததோ தோல்வியினால்

வாடியதோ தூங்கா மனம்!?

ஜோசப் விஜய்எனும்நான்...!

ஜோசப் விஜய்எனும்நான்...

 

ஜோசப் விஜய்எனும்நான்... தூயதோர் ஊழலற்ற

தேசமுரு வாகச் செயல்படுவேன்; – பாசபந்தப்

பற்றற்றுப் பாமர‍ரின், பாட்டாளி வர்க்கத்தின்,

வெற்றிக்குப் பாடுபடு வேன்!

 

பள்ளிகளில் கஞ்சா பயன்பாட்டை வேரறுத்துப்

பிள்ளைகளுக் கீவேன் பெருங்கல்வி; – நள்ளிரவில்

பூவையர் அச்சமின்றிப் போய்வரலாம்; கைவைத்தால்

தீவைத் திடுவேன்சே தித்து!

 

ஏவல் துறையாய், எடுபிடியாய்ப் போய்விட்ட

காவல் துறை,தன் கடமையை – ஆவலுடன்

செய்யும் படிச்செய்வேன்; சேவை மனப்பான்மை

உய்யும் படிச்செய்வேன் ஓர்ந்து!

 

பாமரனோ, இல்லை பணங்கா சுடையவனோ,

மாமனோ, மந்திரிக்கு மச்சானோ, – தீமைசெய்யத்

திட்டமிடும் போதே சிறையில் அடைத்திருவேன்;

சட்டமெல் லார்க்கும் சம‍ம்!

 

போதை கலாச்சாரம்; பேதை பலாத்காரம்;

தாதை*யால் நேர்ந்த சமாச்சாரம்; – தீதையெல்லாம்

இன்றே நிறுத்துவேன்; எத்தர் திருத்துவேன்;

நன்றே நடத்துவேன் நாடு!

 

தாதை – அப்பா(முன்னாள் முதல்வர் சுடாலின்)

 

கடமையைச் செய்வதற்குக் கையூட்டு வாங்கும்

மடமையைஓர் கையெழுத்தில் மாய்ப்பேன்; – அடகெடுவாய்!

பத்துலட்சம் கோடிகடன்; பாமர‍ருக் கேதுபலன்?

அத்தனையும் தீர்ப்பேன் அடைத்து!

 

அறுவை சிகிச்சையால் அஃதையகற் றாமல்

உறுவ தொருநன்மை உண்டா? – சிறுக‍த்

திரைமறைவில் தோன்றித் திசைவிழுங்கும் ஊழல்

புரையோடிப் போய்விட்ட புண்!

 

கருமமே கண்ணாவேன்; காவலும் ஆவேன்;

தருமத்தின் ஆட்சி தருவேன்; – தெருவெங்கும்

பாலோடும் தேனோடும் பாயாசம் தானோடும்

நாலோடும் ரெண்டோடும் நன்கு!




திங்கள், 4 மே, 2026

 

ஓட்டுக் களைவழங்கி உன்னையே தேர்ந்தெடுத்த

நாட்டுமக்கட் கேதேனும் நன்மைசெய்;கை – யூட்டில்

கவனம் செலுத்தாமல் கண்ணியமாய் ஆண்டால்

புவனமுனைப் பாடும் புகழ்ந்து!




 

ஆக்டர் விஜய்நாட்டை ஆளும் அனுமதியை

வாக்குவழி மக்கள் வழங்கிவிட்டார்; – நாக்குத்

தடித்த திராவிடத் தற்குறிகள் நெஞ்சம்

இடிந்துபோய் உட்கார்ந்தார் இன்று!

 

தற்குறிகள் என்றுதிட்டித் தாவுமணில் என்றுசுட்டிக்

கற்பிதங்கள் நூறுசெய்து காட்டியும் – அற்புதமாய்

மண்ணதிரும் வெற்றியை மக்கள் மகிழ்ந்தளித்து

விண்ணதிரப் போட்டார் விசில்!

 

பிசிரடித்துப் போன பெரியார்தம் மண்ணில்

விசிலடித்தான் குஞ்சிகளின் வெற்றி – உசிரெடுத்த

டாடிக்கு நாம்டாட்டா காட்டியதால் வாய்த்தது

கூடிமே நான்கைக் குறித்து!

 

விளம்பர மாடல்; விடியாத மாடல்;

மளமளவென் றேசரிந்த மாடல்; - விளங்காத

மாடல்; தெலுங்கர்தம் மாடல்; திராவிட

மாடலிலே போட்டாரே மண்!

 

"மடக்கூதி* சின்னம் மகத்தான வெற்றி",

மடக்கூதி* என்ற மடையர் - மடக்கூதி*

ஆனதுதான் மிச்சம்; அகந்தையி னாலழிந்து

போனதுதான் மிச்சமிப் போ!

 

மடக்கூதி - மடக்கு ஊதி(விசில்), வசைச்சொல்.

 

முற்றும் கணிக்க முடியா வகையடைந்தோம்

வெற்றிவெற்றி யென்றே விசில்போடு; – சற்றே

சரக்கெடு கொண்டாடு; தாண்டவ மாடு;

உரத்தச் சரவெடி யோடு!







 

சிட்டிகை தங்கத்தில் சின்னதாய் மூக்குத்தி

மட்டுமே னும்போதும் வாங்கித்தா! - ஒட்டிய

மூக்கில் துரும்பை முறித்துத் தரித்துள்ளேன்

போக்கற்ற தாலிப் பொழுது!

ஞாயிறு, 3 மே, 2026

திருமுகமென் பக்கம் திருப்பு!

திருமுகமென் பக்கம் திருப்பு!

 

மீசை முளைக்கும்முன் ஆசை முளைத்ததடி
பாசை பிறக்கும்முன் ஓசையைப்போல்; - காசைவிரல்
சுண்டிவிட்டாற் பொற்பதில்சொல்; தொங்கிக்கொண் டேக‍இந்த
வண்டிவிட்டால் வேறு வரும்!

 

அடுத்துவரும் பேருந்தும் ஆள்கள் திணித்து

வெடுக்கென்று தான்பிடிக்கும் வேகம்; – நடுத்தெரு

நாயகியே! ஐந்துமணி நாரா யணன்வரட்டும்

நீயதிலே போகலாம் நின்று!

நேரத்தில் வீடுபோய் நேர்வதென்ன? உன்நெஞ்சின்
ஓரத்தில் போயொளிந்து உள்ளதென்ன? - வாரத்தில்
ஞாயிறுபோல் என்னை நசுக்காதே; திங்களைப்போல்
நீயிருந்தால் நான்குளிர்வேன் நெஞ்சு!

பாராமல் பார்க்கிறாய் பார்வையால் பேசுகிறாய்
ஆராய்ந் தறியும் அறிவில்லேன்; - தோராய
மாகப் புரிவதற்கே மாதக் கணக்கெடுத்தேன்;
ஆகட்டும் உன்தொண்டை ஆற்று!

நூலிழை புன்சிரிப்பே நோயைத் தருமென்றால்
ஆலிலையே! என்பா(டு) அடுத்தென்ன? - மேலிடத்து
உத்தரவு வேண்டுமா உள்ளம் பகர்வதற்குன்
மெத்தனமே கொல்லும் விஷம்!

பள்ளித்தோ ழர்தம் பரிகாசப் பேச்சிக்கும்
கள்ளியுன்னால் தோன்றும் கனவுக்கும் - உள்ளம்
கிடந்தேங்கும்; உன்வரவைக் கிட்டத்தில் காண
நடந்தேங்கும் கால்கள் நலிந்து!

ஓரா யிரம்கண்கள் உன்னையே மொய்த்தாலும்
நேராய்என் பார்வைக்கே நீசொல்வாய் - ஆராய்ந்து
யாராலும் கண்டுணர ஏலா வகையினில்
பாரா யணமாய்ப் பதில்!

 

ஆவணிக்குப் பின்னே அடுத்துவந்த மாத‍த்தில்

தாவணிக்கு மாறிய தாமரையே! – பூவணிய

ஆசைப் படும்பூவே! அச்சத்தில் என்னிதய

ஓசைகேட் காதா உனக்கு!?

 

கண்ணால் கடுதாசி காற்றில் எழுதிநிதம்

விண்ணில் அடித்து விசிறுகிற - பெண்ணே!

அருகினில் நானிருக்க அங்கென்ன பார்வை?

திருமுகமென் பக்கம் திருப்பு!

 

பொத்தென்று போட்டுவிட்டுப் போகாமல் என்நினைப்பை

வித்தென்று நெஞ்சில் விதைத்துவிடு; - தத்தெடுத்துத்

தாங்குவாய் என்நெஞ்சைத் தள்ளி ஒதுக்காமல்

வாங்குவாய் பேரன்பை வார்த்து!

 

என்றுன்னைக் கண்டேனோ அன்றுமுதல் இன்றுவரை

நின்று நிதானமாய் நேசித்தேன்; – இன்று

நெடுநேரம் காத்திருந்தேன் நீவருவாய் என்று;

விடுவெடுவென் றேகணுமா வீடு!?

 

கால்கள் மிதக்கும் கலைகற்றுத் தந்தவளே!

நூல்மருங்கை நுங்கழுத்த நொந்தவளே! – வால்முளைத்த

கோலாங்கூ லத்தைமனக் கூண்டில் அடைத்தவளே!

காலாகா லத்திலதைக் கா!