வியாழன், 12 மார்ச், 2026

 

என்னடா தம்பி! எனக்கெதுக்குப் போன்செஞ்சே?

இன்னிக்கு நாளுனக்கு ஏகலையா? – சின்னதுமாய்ச்

செதியில்லை என்றால்உன் செல்போன் சிணுங்காதே;

மீதிவைக் காமல் விளம்பு! 01

 

அண்ணனுடன் நான்பேசி ஆறுதிங்கள் ஆனதனால்

புண்ணடைஞ்ச நெஞ்சோடு போன்போட்டேன்; – கண்ணளந்த

காட்சிகளில் ஒன்றைக் கடத்தலாம் என்றிருந்தால்

காட்டுவதேன் என்மேல் கடுப்பு!? 02

 

கோச்சுக்  கிடாதடேய்! கோபமெல்லாம் ஒன்னுமில்லை;

ஆச்சரியப் பட்டேன்; அதான்கேட்டேன்; – மாச்சரியம்

ஆர்மீதும் கொண்டாயா? ஆள்காட்டு கின்றாயா?

ஊர்க்கதைதான் உண்டா? உரை! 03

 

உன்பின் பிறந்தவன் ஒப்பனை ஏமாற்றித்

தன்பெயரில் சொத்தெழுதித் தா!ங்கிறான்; – உன்தாயும்

ஒத்தூது கின்றாள்; உனக்கினி மேலிங்கு

சொத்தேது? போய்விட்டாய் தோற்று! 04

 

எல்லாரும் கூடி எனைஏய்க்கப் பார்ப்பதனை

தில்லாய்நீ சொன்னதற்குத் தெண்டனிட்டேன்; – கல்லான

சாமியிப்போ உன்னுருவில் சாட்சிசொல்ல வந்ததென்று

தீமிதித்துச் செய்வேன் சிறப்பு! 05

 

அண்ணனுக் கொன்றென்றால் அஞ்சி ஒதுங்கநான்

அன்னியனா? வேண்டிய ஆளாச்சே! – கண்ணியமாய்க்

கேட்டால் கிடைக்குமென்று கேட்கின்றாய்; உன்தம்பி

வேட்டுவைக் கின்றான் விரைந்து! 06

 

ஆளுக்குப் பாதி அளிப்பதுதான் ஊர்வழக்கம்

தோளுக்கு மேல்வளர்ந்தால் சொத்துகளை; – நாளுக்கு

நாளுரசல் கூடும் நயவஞ்ச கத்தால்அந்

தாளுக்கென் றைக்குவரும் சாவு!? 07

 

எல்லாப் பிரச்சினைக்கும் ஏதுனது தந்தைனென்று

மல்லாக்கப் போட்டு மிதிக்கின்றான்; – பொல்லாப்பு

வந்துவிடும் என்பதனால் வந்து தடுக்கவில்லை

உந்தம்பிக் கஞ்சியே ஊர்! 08

 

போகட்டும் என்று பொறுமையாய் நான்போனால்

சாகட்டும் அப்பனென்றா சாத்துகிறான்? – ஆகட்டும்

ரெண்டிலொன்று பார்க்கின்றேன்; ரெக்கமண்டுக் காள்சேர்த்துக்

கொண்டுவந்தா லும்செல்வேன் கோர்ட்! 09

 

பஞ்சாயம் கூட்டிஉன் பங்கைக்கைப் பற்றாமல்

குஞ்சாட்டிப் போவாயா கோர்ட்டுக்கு? – பொஞ்சாதி

உன்னை மதிப்பாளா? உன்பேச்சைக் கேட்பாளா?

என்னநான் சொல்ல இனி!? 10




 

சோட்டாவைச் சாணியிலே
தோய்த்தெடுத்து நாலடி
போட்டிருந்தால் கூடவிட்டுப்
போய்விடலாம்; - நீட்டாக
நாஞ்சிலார் கேட்ட
நறுக்கென்ற கேள்வியில்
தீஞ்ச தார் ஆச்சுதிவர்
மூஞ்சு!



அறிவுச்செல்வன்

துப்பினாத் தொடச்சுக்குவார்
அம்மணச் சாமியார்!



அகரம் அமுதன்

துப்பினாக் கூட
தொடைச்சிப்போம்; ஓங்கியொன்னு
அப்பினாக் கூட
அடங்கிப்போம்; - எப்போதும்
துண்டுச்சீட் டுக்குத்
துணைபோக வேமாட்டோம்;
ரெண்டுச்சீட் டாஎங்க
ரேஞ்சு!?



புதன், 11 மார்ச், 2026

உயிர்வலி!

 

வீட்டுப் பிராணியை வீதிப் பிராணியாய்க்

கூட்டிவந்து விட்ட கொடுமையால் – ரோட்டிலே

ரொட்டிக்கும் நாதியின்றி ரோதனை நான்படுறேன்

சிட்டிக்கும் மத்தியிலே தேய்ந்து!

 

பெட்டிலே தூங்கிப் பெடிகறி சாப்பிட்டு

மட்டின்றிக் கண்ட மகிழ்ச்சியெல்லாம் – பட்டென்று

போரால் தொலைந்துதான் போச்சு!எனக் கில்லையினி

பேரா தரவென்ற பேச்சு!

 

பாதியிலே நானும் பழசானேன்; ஏதிலியாய்

வீதியிலே விட்ட விலங்கானேன்; – பேதியிலே

போகின்ற போராலே போக்கத்துப் போனேன்;என்

னாகியதோ என்னைவளர்த் தார்க்கு!?

 

செல்லமே! என்றவாய் சேர்த்தணைத்துக் கொண்டகை

இல்லாமல் போனதே இன்றெனக்கு; – மெல்லமாய்

இற்றை எதார்த்தம் எனக்குப் புரியுமுன்னே

ஒற்றையில்நிற் கின்றேன் உழன்று!

 

வீட்டில் இடம்தந்த மேடமே! சாரே!ஏன்

வாட்டும் வெயிலில் வதங்கவிட்டீர்? – நாட்டிலே

சண்டித் தனம்பண்ணும் சல்லி அரசுகளால்

துண்டித் ததேன்என் தொடர்பு!?

 

சனாதி பதிபோலச் சாப்பிட்டுத் தூங்கும்

குணாதி சயம்மிகவே கொண்டால் – அனாதியாய்

ஆனபின்பு வாழும் அவலம் மிக‍க்கொடிது

நானதனைக் கண்டேன்இந் நாள்!

 

செல்லப் பிராணி சிரம‍ப் பிராணியாய்

மெல்லவின் றானதோ மேதினியில் – செல்ல‍ஓர்

வீடுநா டின்றி விடப்பட்டு வீதியிலே

கேடுநான் கெட்டேன் கிடந்து!




111 புணர்ச்சி மகிழ்தல்!

 

111 புணர்ச்சி மகிழ்தல்!

 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள! 1101

 

கண்டறியும் இன்பமும் கேட்டறியும் இன்பமும்

உண்டறியும் மோந்தறியும் உண்மையும் – மண்டிருளில்

தொட்டறியும் இன்பமும் தொல்புவியில் வால்வளைப்பெண்

மட்டில் இருக்கின்ற மாண்பு!

 

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து! 1102

 

நோய்க்கு மருந்தென நூலொர் உரைத்ததெலாம்
ஆய்ந்துவிடின் யாவும் அடுத்தவையே! -நோய்கொடுத்தந்
நோய்க்கு மருந்தென நுண்ணணியாள் மாறுவதைத்
தோய்ந்தறிவில் இட்டுத் துணி!

 

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு! 1103

 

தேன்த‍தும்பும் செவ்விதழாள் செம்மாங் கனிமார்பில்

நான்படர்ந்து நல்லுறக்கம் நாட்டுதலின் - வான்கிடக்கும்

செந்தா மரைமலர்போல் செங்கண் அமைந்திட்ட

இந்திரன் தேசமோ இன்பு!?

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்! 1104

 

ஊரில் உலகத்தில் இல்லை எனும்போது

பாரிலிவள் எங்கிருந்து பற்றினாள்? – நேரிழையை

வேண்டா வெறுப்பாய் விலக உடலெரித்துத்

தீண்டக் குளிருமிந்தத் தீ!

 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்! 1105

 

விரும்பும்போ தெல்லாம் விருப்பப் பொருள்கள்

தருமின்பம் போலத் தருமே – சுரும்புலவும்

வாசமலர் சூட வகிடெடுத்த கார்கூந்தல்

நேசக் கிழதியவள் நெஞ்சு!

 

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்! 1106

 

வந்தணைக்கும் வேளையெலாம் வாடுகின்ற என்னுயிரைச்

செந்தளிர் விட்டலரச் செய்வதனால் – சுந்தரிக்கு

தேவர் அருந்துகிற தேவா அமிர்த்ததைத்

தூவச் சமைந்ததிரு தோள்!

 

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அறிவை முயக்கு! 1107

 

இல்வாழ்க்கை தன்னில் இருந்துகொண்டு கைப்பொருளை

இல்லார்க் குதவும் இனிமையொக்கும்; – நல்லாளின்

மாம்பழ மேனியை மஞ்சம் தனில்வைத்துத்

தாம்தழுவும் இன்பச் சணம்!

 

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு! 1108

 

கட்டி அணைக்கின்ற காளைக்கும் கன்னிக்கும்

ஒட்டி இருப்பதினும் உண்மையின்பம் – முட்டிமுட்டி

உள்நுழையப் பார்க்கின்ற ஊதைக்கு இடமின்றி

அள்ளிக்கொள் கின்ற அணைப்பு!

 

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாம‍ம்

கூடியார் பெற்ற பயன்! 1109

 

சண்டை இடுதல் சமாதானம் ஆதல்பின்

உண்டுறங்கு முன்னே உறவாடல் – கண்ணுறுங்கால்

இங்கிவை மூன்றும் எழுங்காதல் மிக்குடையார்

பங்கிட்டு அடையும் பயன்!

 

அறிதோறு அறியாமை கண்டற்றால் காம‍ம்

செறிதோறும் சேயிழை மாட்டு! 1110

 

பார்க்கின்ற போதெல்லாம் பாராப் பொருள்விளங்கும்

வார்த்தைச் செழுமைநூல் வாக்கியம்போல் – சேர்த்துச்செங்

கொத்தணிகள் பூண்டாளைக் கொஞ்சும் தொறும்எழுமே

புத்தம் புதியசுகம் பூத்து!

110 குறிப்பறிதல்

 

110 குறிப்பறிதல்

 

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் ற‍ன்நோய் மருந்து! 1091

 

மையளந்த கண்ணுக்கு வாய்த்த திருபார்வை;

பொய்யளந்த பெண்ணுக்குப் போதுமிவை; – மெய்யளந்து

நோய்வார்க்கும் ஓர்பார்வை; நோயைத் தணிக்கின்ற

வாய்பார்க்கும் ஓர்பார்வை வந்து!

 

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது! 1092

 

என்னை விழியால் இமைப்பதற்குள் தான்திருடிச்

சென்ற அவளின் சிறுபார்வை – மென்மைமிகு

காதலின் இன்பத்தில் காலும் அரையுமில்லை

ஏதலிக்கும் முக்கால்பங்கு ஏற்று!

 

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்! 1093

 

முன்னாலே வந்தென் முகம்பார்த்தாள் பார்த்ததன்பின்

தன்னாலே தன்பார்வை தாழ்த்தினாள் – அன்னத்தின்

இந்தச் செயல்காதல் இன்ப‍ப் பயிருக்கு

நிந்தாமல் ஊற்றிய நீர்!

 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்! 1094

 

பட்டுப்போற் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்

சட்டென்று தன்முகம் சாய்த்திருந்தாள் – எட்டிநின்றே

என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்

கண்கொண்டு காணாத‍க் கால்!

 

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்! 1095

 

இப்படியே வைத்தகண் இங்குமங்கும் வாங்காமல்

அப்படியே பார்க்கவில்லை ஆனாலும் – செப்புச்

சிலைஒரு கண்ணைச் சிறுத்துமுகம் பார்த்து

நிலைமறந்து புன்னகைப்பாள் நின்று!

 

உறாஅ தவர்போல் சொலினும் செராஅர்சொல்

ஒல்லை உணரப் படும்! 1096

 

பந்தமில்லை என்பதுபோல் பாசமில்லை என்பதுபோல்

சொந்தமில்லை என்பதுபோல் சொன்னாலும் – சிந்தனையில்

கிஞ்சித்தும் வஞ்சமில்லார் கூறுகின்ற சொற்பொருளை

நெஞ்சறியும் சீக்கிரமே நின்று!

 

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்பொன்று உற்றார் குறிப்பு! 1097

 

வஞ்சமே இல்லாத வாய்மொழியும் வன்பகைக்குப்

பஞ்சமே இல்லாத பார்வையும் – கொஞ்சமும்

சொந்தமிலார் என்பதுபோல் தோன்றிடினும் சொந்தத்தில்

குந்தகம் காணாக் குறிப்பு!

 

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்! 1098

 

அசையும் இடையாள் ஒசியும் நடையாள்

பிசையும் அழகிற் பெரியாள் – இசைந்துநான்

பார்த்த நொடியினில் பையச் சிரிக்கின்றாள்

ஈர்க்கும் இயல்பிலவள் ஏர்!

 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள! 1099

 

சொந்தம் இலார்போலும் சுற்றம் இலார்போலும்

பந்தம் இலார்போலும் பார்ப்பதெல்லாம் – இந்தநற்

காதலில் மட்டுமே காணக் கிடைக்குமிது

காதலர்க்கே வாய்த்த கவின்!

 

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல! 1100

 

பையன் அவன்கண்ணும் பாவை அவள்கண்ணும்

பைய‍ஒன்றை ஒன்று பருகியபின் – தையலின்

வார்த்தையி னாலோ தலைவன்வாய்ச் சொல்லாலோ

ஓர்பயனும் இல்லை உணர்!

 

109 தகையணங்குறுத்தல்

109 தகையணங்குறுத்தல்

 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு! 1081

 

கோதற்ற தேவதையோ? கோலமயிற் பேரழகோ?

காதணிகள் பூட்டிய காரிகையோ? – ஈதறிய

மாட்டா எனதுமனம் மாறா மயக்கத்தில்

மாட்டியதே காதலின் மாட்டு!

 

தெய்வப்பெண் தானோ? தெளிந்த நடைமயிலோ?

மெய்யாய்க் குழையணிந்த மென்மாதோ? – அய்யோ!

மயங்கும் எனது மனமே தவிக்கும்

இயங்கும் நிலையாவும் இற்று!

 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து! 1082

 

வேல்விழியை என்மீது வீசினாள்; நானும்என்

பால்விழியைப் பெண்மீது பாய்ச்சினேன்; – வேல்விழியாள்

பெத்தம் பெரும்படையைப் பேர்த்துவந்து என்மீது

மொத்தம் குவித்துவிட்டாள் மொய்த்து!

 

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு! 1083

 

கூற்றுவன் என்னும் கொடியவனை நான்றியேன்

நேற்றுவரை; இன்றே நிஜம்கண்டேன்; – சாற்றுங்கால்

பூம்பாவை போல‍உடல்; போர்த்தொழிலின் திட்டமிடல்;

வீம்பான கூர்வேல் விழி!

 

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்! 1084

 

காண்பவரின் இன்னுயிரைக் காலை உணவாகத்

தோண்டி எடுத்துண்ணும் தோற்றத்தால் – ஆண்டமைந்த

பெண்தன்மை மிக்குடைய பேரழகுப் பேதைக்கும்

கண்களுக்கும் மாறுண்டு காண்!

 

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து! 1805

 

இன்னுயிர் வாங்கும் எமன்தானோ? அல்லது

இன்முறுவல் பூக்கும் இளம்விழியோ? – அன்றி

வனத்துலவும் மான்தானோ? மங்கையவள் பார்வை

இனமிந்த மூன்றின் இருப்பு!

 

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்! 1806

 

கூன்பிறை போலும் குமரி இளம்புருவம்

தான்வளை யாமல் தடித்திருந்தால் – மீன்கண்கள்

அச்சத்தில் என்மனதை ஆழ்த்தித் துயரத்தின்

உச்சத்தில் ஏற்றாதே ஊர்ந்து!

 

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்! 1807

 

நேராக நின்றிருக்கும் நெஞ்சத்தில் நேரிழையாள்

சீராய் அணிந்திருக்கும் சிற்றாடை – பாராய்வெம்

போர்க்களத்தில் போராடும் போர்வெங் களிறுமுகம்

போர்த்திய ஆடையினைப் போன்று!

 

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு! 1808

 

களம்புகா வீர‍ரும் கண்டஞ்சு கின்ற

வளங்காளை என்றன் வலிமை – இளமான்

சிறுநெற்றி முன்னம் சிதைந்துபொடி ஆச்சே

உறுதுயரம் எல்லாமும் உற்று!

 

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து! 1089

 

மான்விழிப் பார்வையும் மாண்புறு நாணமும்

தேன்மொழியாள் நல்லணியாய்த் தேர்ந்தபின் – ஏன்இன்னும்

பொன்னின் அணிகலன்கள்? பூவின் தொடைச்சரங்கள்?

மின்னும் இவைஅவட்கு வீண்!

 

உண்டார்கண் அல்லது அடுநறாக் காம‍ம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று! 1090

 

உண்டால் மகிழ்ச்சியை ஊட்டுகிற கள்ளைநாம்

கண்டால் மகிழ்ச்சியைக் காட்டாது; – மண்டுமிந்த

நற்பெருமை வாய்த்ததெல்லாம் நாம்கொண்ட காத‍ல்தான்;

அற்பெருமை கள்ளுக்கே ஆம்!