வெள்ளி, 3 ஏப்ரல், 2026

இதழுக்கு மேலிரண்டு இச்!

இம்மாம் குறுஞ்செய்தி ஏன்தான் அனுப்புகிறாய்?

சும்மாகை காலைச் சுருட்டிவை; – அம்மாவின்

காய்ச்சல் தணிந்த கணமேநான் அங்கிருப்பேன்

போய்ப்படுப்பாய் இந்த‍இராப் போது!

 

எதிர்வீட்டுப் பார்வதியை ஏறெடுத்துப் பார்க்க

அதிகாலை வாசலின் அண்டைக் – கதிரை

எடுத்திட்டுக் குந்தி இலித்தாயேல் வந்து

நடுமண்டை யில்வைப்பேன் நங்!

 

சம்பளம் தந்துவிட்டேன்; சஞ்சாயம் செய்துவிட்டேன்;

நம்மாலே ஏலுவதை நல்கிவிட்டேன்; – நம்பாமல்

அங்கவள் வேலைபற்றி அங்கலாய்த்துத் தூதுவிடாய்

ரிங்டோனில் வேலைக்கா ரிக்கு!

 

பூக்காரி முன்னாலே புன்னகைத்தால், வீடுவரும்

பாற்காரி முன்னாலே பல்லிலித்தால், – காய்க்காரி

கண்டவுடன் கண்ண‍டித்தால் கண்டபடி ஜொல்வடித்தால்

தண்டனை உண்டுந் தனுக்கு!

 

போரடித்தால் கூலிங்காய்ப் போய்வாங்கி வந்துநீ

பீரடித்தாய் என்றறிந்தால் பிய்த்திடுவேன்; – நேரத்தில்

தூங்கி எழவேண்டும்; தூங்காமல் பான்படம்பார்த்(து)

ஏங்கிவிழ வேண்டாம் இளைத்து!

 

பார்வையில் நன்றாய்ப் படுமாறே உன்பொருளை

நேர்வைத்து விட்டுத்தான் நேற்றுவந்தேன் – பேர்பொறித்த

ஜட்டியைத் தேடுகிற சாக்கில் துணிகளைக்

கட்டிலில்போ டாதே கலைத்து!

 

தாய்வீட்டில் ரெண்டுநாள் தங்க முடிகிறதா?

ஓய்வொழிச்சல் அற்றிருக்க ஆகிறதா? – காய்ந்து

வதங்காதே நாளைநான் வந்தவுடன் வைப்பேன்

இதழுக்கு மேலிரண்டு இச்!





 இங்கேதான் அந்தப்போர்;

இவ்வளவு அக்கப்போர்;
தங்குதடை யானஜல
சந்திப்போர்; - இங்கேதான்
ஈரான்போர்; இஸ்ரேல்போர்;
ஈனஅமெ ரிக்கப்போர்;
போராட்ட மானபெரும்
போர்!

வியாழன், 2 ஏப்ரல், 2026


வெறிநாயும் ரெண்டடிகள் விள்ளும்; திரியும்
சொறிநாயும் நாலடிகள் சொல்லும்; - குறிப்பறிந்து
நான்சொல்லித் தந்தால் நரிநாயும் வெண்பாவில்
வான்புகழ் ஈட்டாதோ வந்து!

 ஏப்ரல் ஃபூல்!

மற்றை தினம்போல்
மதிப்புக் குரியதுதான்
இற்றை தினமுமே
என்றாலும் - சற்றே
வரம்புகள் இன்றி
மதிகெட்ட முட்டாள்
டிரம்புக் குகந்த
தினம்!

புதன், 1 ஏப்ரல், 2026

18 டிசம்பர், 2016

 18 டிசம்பர், 2016

 
வேய்த்தோள்; விரல்முருங்கை; விஞ்சு தொடைவாழை;
வாய்த்த இடைநாணல்; மார்தென்னை; -ஆய்ந்திடுங்கால்
சேலை உடுத்திய தேக்கே உடலெனில்இப்
பாலைக்குள் சோலையைப் பார்!
பாலை - பதினாறகவை உடைய பெண்.

16 டிசம்பர், 2016

 16 டிசம்பர், 2016

 
கட்டு மரம்மீண்டும்
'காவேரி' சென்றுளது;
சட்டென ஏமா!
எருமையில்வா! - விட்டுவிடா(து)
'அப்போலோ' போலவக்
'காவேரி' உன்நகலென்(று)
இப்போது காட்ட
எழு!

10 டிசம்பர், 2016

 10 டிசம்பர், 2016

 
மனித உரிமை நாள். (10/12/16).
உமைப்போல் பிறர்க்கும் உலகம் பொதுவாம்;
தமைப்போல் நடத்தத் தவறின் - அமைதி
குலையும்;* உரிமைக் குரல்கள் ஒலிக்கும்;
உலைவறிந்(து)* ஒப்புர(வு) ஓம்பு!
குலைவு, உலைவு - அழிவு.

9 டிசம்பர், 2016

 தன்னிலை விளக்கம்!

நன்பாக்கள் என்று
நவின்றிடேன்; பேரழகு
இன்பாக்கள் என்றும்
இயம்பிடேன்; - என்பாக்கள்
துன்பில் உழன்று
துடிப்போர்க் கிதங்கூறி
அன்பை வளர்க்கும்
அவை!




9 டிசம்பர், 2016

 இன்பத்தேன் வெண்பா!

மாலை நிலாப்பொழுது;
மங்கை உனதருகில்;
காலை வரையில்நாம்
கண்விழிப்போம்; - சேலைக்குள்
இன்பத்தேள் கொட்டும்
எழிலை எனக்குரைத்(து)
இன்பத்தேன் வெண்பா
எழுது!
நெஞ்சுப் பொதிகள்;
நெளியும் இடைசுமக்கும்
பஞ்சுப் பொதிகள்;
படர்ந்தவைமேல் – கொஞ்சித்
துயிலக் கொடுத்துவைத்தோய்!
துய்த்துக் களைவாய்
மயிலின் மனத்து

கன்னம் கடித்துக்
கனியிதழ்த் தேன்குடித்துப்
பின்னம் இளநீர்
பெரிதுண்க; - முன்னம்
அசலைப் பருகி
அனுதினமும் ஆங்கே
பசலை வளர்ந்த
படி!
கடைக்கண் வழியுன்
கவினைப் பருகி
உடைக்கண் எனைநான்
ஒளிக்க; - இடைக்கண்
அடைக்கலம் தேடியுன்
ஐவிரல் தாவும்
படைக்கலம் போலும்
பறந்து!
நோகும் எனவெண்ணி
நோகாமல் சிற்றிடை
தாகம் தணிக்கத்
தலைப்படா(து) - ஆகம்
நொறுக்கி எடுத்துமயல்
நோய்தீர்த்து மீண்டும்
பொறுக்கித் தொடுத்துப்
புதுக்கு!
வள்ளல்நான் வந்து
வழங்கும் பொழுதும்நீ
கொள்ளல் விடுத்துக்
குறிவைத்துக் – கொள்ளை
அடிக்கத் துடிக்கும்
அழகை வியந்து
நடித்துச் சிவக்கும்
நகில்!

கையலம்புதல் கடமை!


இருவேளை கழி!
இருவேளை குளி!
இருவேளை வாயை
ஈறழுந்த தேய்!
இருவேளை என்பது
இவற்றிற்குப் போதலாம்;
அறுவேளை அலம்பினும்
அகங்கைக்குப் போதாதே!
மூக்கினைச் சிந்தவும்…
முடியினைக் கோதவும்…
நெற்றியின் வேர்வையை
நீண்டுமே நீக்கவும்…
முகத்தினைத் துடைக்கவும்…
முழியினைக் கசக்கவும்…
மிகைப்படும் அரிப்பினை
மிருதுவாய்ச் சொரியவும்…
வந்தெதிர்ப் பட்டோர்கை
வாஞ்சையாய்க் குலுக்கவும்…
முந்துவது யாதெனில்
முற்றாகக் கையன்றோ!
இத்தனை வேலைகள்
இயற்றிடும் கைகளில்
மொத்தமாய்க் நுண்ணுயிர்
முந்துற வாழுமே!
பொழுதெல்லாம் உழைப்பதால்
பொருட்களை எடுப்பதால்
அழுக்குகள் கைகளில்
அண்டுதல் இயல்பன்றோ!
கனிவான கையெனினும்
காப்புற்ற கையெனினும்
நுணிதான நுண்ணுயிரி
நின்றினம் பெருக்குமே!
விரல்கொண்ட நகங்களை
வெட்டாமல் விடுவதால்
திரள்கின்ற அழுக்கினால்
தீநுண்மி வளருமே!
கையூட்டும் திருட்டுமில்லாக்
கைச்சுத்தம் என்பதால்
புதுநீரில் அலம்பாது
போயுண்ணல் ஆகுமா?
அழுக்கற்ற வேலையே
அன்றாடம் செய்யினும்
இழுக்குற்ற நோய்க்கிருமி
இல்லாமல் போகுமா?
ஆதலால் கைகளை
அழுக்கற அலம்பியே
நாளெலாம் காத்திடல்
நமக்கெலாம் நன்மையே!