இசைப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசைப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஏப்ரல், 2026

நம்ம

ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன் உயிரோடு உள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே
போரில் போராளி தினம்சாகலாம்
போராட்டம் என்றும் சாகாதது
துரோகம் எதிரிக்குத் துணைபோகலாம்
துணிவே புலிகட்குத் துணையானது
அண்ணனின் வழிநடத்தால் ஈழம் உறுதியடா
அடையும் விடுதலைக்கு அர்ப்பணம் குருதியடா!
வாழவைப்பான் நாளையந்த
மாமறவன் தாள்பணிவோமே
----------------------------------------------------(ஈழ நிலத்தினிலே)
வீரன் மாவீரன் பிரபாகரன்
வீணர் நமையாள விரும்பாதவன்
தாகம் தமிழீழம் தானென்றவன்
தாயாய் உருமாறித் துணைநின்றவன்
எதிரியின் ஆயுதத்தால் எதிரியைத் தோற்கடித்தான்
புலிஇவன் போலஎவன் புரட்சிக்குத் தோள்கொடுத்தான்
வீட்டுக்கொரு ஆள்வருவீர்
வென்றெடுப்பேன் ஈழம்என்றானே
----------------------------------------------------(ஈழ நிலத்தினிலே)

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!


இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!
தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!
முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!
தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!
சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட்டவன்
வாழ்வை தொலைத்துத் தேடுகிறான்!
விதியின் வழியில்
விருப்ப முற்றவன்
'விதியே எல்லாம்' என்றிடுவான் -தன்
மதியி ருப்பதை
மறந்து போனவன்
வாழ்வே சுமையென வைதிடுவான்!
மோகப் போழ்தினில்
மெல்லிடை தனிலே
சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
தேகம் தளர்கையில்
தளிரிடை யதையே
நரகம் என்பவர் சிலருண்டு!
ஆடி அடங்கும்
வாழ்க்கை இதையே
வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
ஆடும் ஆசையை
அகற்றும் ஆசையால்
ஆசையை புத்தன் வென்றானா?
பிறப்பில் தொடங்கும்
ஆட்டம் இதனை
இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
இறப்பில் இவனே
முடித்த ஒன்றை
அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!
அகரம் அமுதன்

திங்கள், 5 மே, 2014

ஆசைக்கே ஆசையெழும்!



நாடாத கண்களுண்டோ
நறுமுகையே நீநடந்தால்…
பாடாத வாய்களுண்டோ
பைங்கிளியுன் அழகைத்தன்னால்…

வைத்துக்கொண்டே வஞ்சனைகள்
செய்கின்ற சின்னஇடை
வள்ளலென எண்ணிச்சென்று
கஞ்சனிடம் பெற்றகொடை

பிடியளவு இடையிருக்க
படியளவு மார்கனக்க
அடியெடுத்து நீநடந்தால்
அன்னமே கால்கடுக்கும்

செப்புச்சிலை உன்மேனி
சிவந்தவிழி மலைத்தேனீ
தெங்கிளநீர் இரண்டோடும்
சேர்ந்தநிறம் மருதாணி

காதளவு கண்கள்-அவை
வள்ளல்வீட்டு வாசல்கள்
கன்னியுந்தன் வாய்வார்த்தை
கஞ்சன்கொண்ட கைப்பொருள்கள்

வெடியெடுத்துப் போட்டதுபோல்
வெண்ணிலவே நீநடந்தால்
மதுகுடித்த வண்டெனவே
வந்துமனம் வட்டமிடும்

பொடியெடுத்துப் போட்டவுடன்
பூத்துவரும் தும்மலைப்போல்
அன்னமுனைக் கண்டுவிட்டால்
ஆசைக்கே ஆசையெழும்!

புதன், 12 பிப்ரவரி, 2014

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!

‘அ’கரம் தொடங்கி ‘ன’கரம் ஈறாய்
அகிலம் தோன்றிய அருந்தமிழே!
‘ண’கரம் ‘ந’கரம் ‘ன’கரம் வேறாய்
நாவில் நடமிடும் நறுந்தமிழே!

‘ர’கர ‘ற’கரம் ஒலிபிற ழாமல்
பகர இனிமை தருபவளே!
‘ழ’கர ‘ள’கரத் தனிச்சிறப் பாலே
இளமை குன்றாத் திருமகளே!

வல்லினம் மெல்லினம் இடையினம் மூன்றால்
வளப்பம் குறையா வண்டமிழே!
சொல்லிலும் பொருளிலும் சுடர்மிகு வல்லமை
தோன்றிட இங்குறு தொல்தமிழே!

ஒன்றா? இரண்டா? மூன்று தமிழாய்
உலகில் முதலாய்ப் பிறந்தவளே!
நன்றாய் முதலிடை கடைச்சங் கத்தில்
நாவலர் நாவிற் சிறந்தவளே!

ஒருசொல் பலபொருள் பலசொல் ஒருபொருள்
உடையாய்! உளதோ உனக்கீடு?
பொருந்திய எழுத்துச் சொற்பொருள் யாப்பணி
பொலியவென் நெஞ்சே! பண்பாடு!

காப்பியன் வள்ளுவன் கம்பனைத் தந்து
காசினி யில்சிறப் புற்றாய்நீ
பூப்பினில் நறுந்தேன் பீய்ச்சிடும் பூவுனை
மோப்ப விழையும்நான் நற்றேனீ

காலை கடும்பகல் மாலை இரவிலும்
காதல் தானுன் மீதெனக்கு
தோளின் மீதே தொற்றிக் கொள்ளத்
தடையா தோஇப் போதுனக்கு?

நாரும் பூப்போல் நாறும்; பூவை
நாடின் என்பார் அதுபோலே
நேரில் தமிழை நேர்ந்தேன்; இன்பம்
நேருள தோசொல் இதுபோலே?

வெள்ளி, 4 ஜூன், 2010

யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!

யார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி
யோர்சொற்கள் விழற்கிறைத்த நீரே!
யார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி
யோர்போலே நடந்ததன்றி வேறே?
(யார்சொல்லிக்)
நூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்
நூதனமாய்ப் பார்த்தெள்ள விழையும்!
வாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து
வருந்திப்பின் துன்பத்தில் புதையும்!
(யார்சொல்லிக்)
மாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த
மடமையினைச் சுட்டுவோர்மேல் உமிழும்!
தேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்
தீண்டத்தகார் என்றுவசை பொழியும்!
(யார்சொல்லிக்)
ஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை
அறிந்துரைப்போர் வாழ்வினிலே சிக்கல்
சூழ்ந்திழைக்கப் புகுமிவரா மக்கள்? –இல்லை
தோற்றத்தால் வளர்ச்சிபெற்ற மாக்கள்!
(யார்சொல்லிக்)
தானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்
தன்னலமே பேணிபொருள் ஈட்டும்!
மானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த
வஞ்சகரின் பைந்நிறைய தேட்டம்!
(யார்சொல்லிக்)
வாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்
வைத்துவளர் பொய்மையினால் இழியும்!
நாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை
நல்லாரை ஏய்த்திடவே விழையும்!
(யார்சொல்லிக்)
தன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்
தன்மதத்தின் வளர்ச்சிகண்டு வேர்க்கும்!
பொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்
புல்லர்களால் தடம்புரளும் நாக்கும்!
(யார்சொல்லிக்)

வியாழன், 29 அக்டோபர், 2009

முதல் எழுத்து!

பெண் எலியின் கருமுட்டையை எடுத்து உயிரணு தோற்றுவித்து, அதனை வேறொரு பெண் எலியின் கருமுட்டையில் செலுத்தி எலிக்குஞ்சி தோற்றுவித்துள்ளார் ஜப்பான் விஞ்ஞானி “டோமகிரோ”
-செய்தி-

இச்சோதனை, முறையே மனிதர்களுக்கும் நிகழ்த்திப் பார்க்கப் படுமாயின், அப்படிப் பிறந்த குழந்தை தன் அவலம் பாடுவதாக இக்கவிதை...

மாலையிட்டு மஞ்சம் கண்டு
மசக்கை கொள்வது –வெட்டி
வேலையென்று எண்ணிவிட்ட
டோமகிரோ நில்லடா!

தந்தையின்றி தாய்கள்கொண்டு
சனித்த பிள்ளைநான் –இந்த
விந்தைசெய்யும் எண்ணமுன்னில்
விளைந்த தேனடா?

அன்றுசெண்டில் தேனெடுத்து
வண்டு சேர்த்தது –இன்று
செண்டில்செண்டு தேனெடுத்து
சேர்த்து வைக்குது!

இயற்கையென்னும் காண்டிபத்தை
இரண்டு செய்தவா! –உறவின்
இயல்புமாற்றி இனம்பெருக்கும்
அவலம் ஏனடா?

அன்னையிருவர் ஆனதாலே
அன்பில் திளைக்கிறேன் –அன்பு
தந்தையொருவர் இல்லையென்று
தவித்து நிற்கிறேன்!

எதிர்த்தவீட்டு ஏழைப்பிள்ளை
தந்தை தோளிலே –என்னை
உதயம்செய்த தந்தையிங்கு
அன்னை உருவிலே!

மின்னலொன்று மின்னிமின்னி
மனதில் மோதுதே! –விழி
சன்னல்மீதில் சோகமேகம்
சாரல் போடுதே!

காதுகிள்ளி ஓடும்சேயைத்
தாய் அடிக்கலாம் –பிள்ளை
பாதுகாப்பு கருதிதந்தை
போர்வை நுழையலாம்!

தாயடிக்க தாயைச்சேரும்
தமையன் நானடா –என்றன்
காயம்பட்ட இதயத்திற்குக்
களிம்பு பூசடா!

சிறுவர்க்கூட்டம் வீதியெங்கும்
சிற்றல் ஆடுதே –என்னை
அருவருக்கும் பார்வைபார்க்கும்
அவலம் நேருதே!

விதவிதமாய்ப் பெயரும்சூட்ட
விழையும் அன்னைகாள் –என்றன்
முதலெழுத்து என்னவென்று
முதலில் சொல்லுங்கள்!

இடியாய்என்னுள் இதயத்துடிப்பு
இரங்கத் துடிக்கிறேன் –மரண
விடியல்தேடி வாழ்க்கைத் தீயில்
விழுந்து கிடக்கிறேன்!

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

துன்பத் தீர்ப்பு!

(திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டபத் தீநேர்ச்சியில் வாழ்விழந்த மணப்பெண் சுபஸ்ரீயின் நிலைநின்று எழுதியது!)

திருமணம் என்னும் தேரில் ஏறுமுன்
தீக்குழி மூழ்கிய நிலவுயிவள்!
நறுமணம் வீசுமுன் நாராய்க் கிழிந்த
நிமலன் தோட்டத்து மலருமிவள்!

செண்டுகள் சூடியப் பெண்டிவள் வாழ்வும்
சதுரங்க மேடை ஆகியதே!
அன்றொடு தலைவன் தலைதகர்ந் தேகினும்
சதுரங்க ஆட்டம் தொடர்கிறதே!

விழியில் தீட்டிய மையின் அளவோ
மேக மந்தையின் ஒருபாதி!
விழிகள் ஊற்றியக் கண்ணீர் மட்டும்
சிரபுஞ்சி மழையில் சரிபாதி!

ஜதிகள் போடும் சலங்க சோகச்
சாசனம் எழுதி வாசிக்கும்!
திதியும் வைப்பதோ திருமண நாளில்
இந்நிலை வேண்டாம் வேசிக்கும்!

சதியே செய்யும் விதியே! என்னை
சந்தித்த வேளை சரிதானா?
விதியைத் தலையில் எழுதிய இறைவன்
விதிக்குத் தப்பித் திருப்பானா?

அகரம்.அமுதா

வெள்ளி, 30 ஜனவரி, 2009

பூங்கா!

நரகத் திடையே
துறக்கம் போல
நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
சிரிக்கும் பூக்களைத்
திருடா திருக்கத்
திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்!

சின்னப் பூக்கள்
சிரிக்கும் அழகில்
சிந்தும் தேனின் சுவைகண்டு -இதழ்க்
கன்னம் வைத்துக்
கவின்மலர்த் தேனைக்
கவர்ந்து போகும் பொன்வண்டு!

திங்கள் தவழும்
தென்றல் உலவும்
சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
தங்கும் பூங்கா
தன்னைச் சார்ந்து
தங்கிக் களிப்பார் தனிமையிலே!

விரித்த பாய்போல்
விளங்கும் பாதை
விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
இருக்கும் மனம்விடுத்(து)
இடையிடை மறைவில்
இருக்கும் வகையால் உளமுவக்கும்!

அமைதி தேடி
அலையும் கூட்டம்
அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
அமைதி தேட
அமைத்த பூங்கா
அமைதி இழந்து தவிக்கிறது!

மாலை வந்தால்
மக்கள் வந்து
மலிவார் அமைதிப் பறிபோகும் -சிலர்
மாலை வந்தால்
மனத்துயர் விடுத்து
மறுபடி கிளப்ப இரவாகும்!

பின்னல் தலையில்
பிஞ்சுப் பூக்கள்
பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
புன்னகை சிந்தும்
பூக்களை மெல்லப்
பூவிரல் நாடிப் பறிக்கிறது!

சிரித்து மகிழ்ந்து
சிலபொழு திருந்து
செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
வருத்தும் நினைவின்
வளர்முளை கிள்ளி
மறக்கச் சிலபேர் வருகின்றார்!

போகாப் பொழுதைப்
போக்கித் தொலைக்கப்
பூங்கா சேரும் சிலருண்டு -உடல்
வாகாய் விளங்க
வடிநற் காற்று
வாங்க வருவார் சிலருண்டு!

முந்தியை விரித்து
மூலையில் படுத்து
மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
குந்திய இடத்திற்
கொஞ்சிக் குலவிக்
குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்!

ஓவ்வொரு மரமும்
ஓவ்வொரு கல்லென
உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
அவ்வவர் துணையொடு
அண்டிக் களித்து
அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்!

கொணர்ந்த பொருளைக்
குதப்பித் தின்றுக்
குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
மணக்கும் பூங்கா
மணத்தைக் குளைக்க
வாயிற் புகையொடு சிலர்வருவார்!

நகைக்கும் பூங்கா
நாடி மகிழ்ந்து
நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
புகைக்கும் அரங்கெனப்
புகைத்தாற் பூங்கா
புகழ்தனை இழந்து காடாகும்!

விழுப்ப மெல்லாம்
விளங்கும் ஒழுக்கம்
வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
ஒழுக்கக் குறைகள்
ஒழித்து விழுப்பம்
உயர்ந்து விளங்க யார்காவல்?

சீருடை அணிந்த
சிறார்கள் போலச்
சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
பேருடை தன்னின்
பெரும்புகழ் குறைத்தல்
பிழையெனச் சாடி முடிக்கிறது!


அகரம்.அமுதா

சனி, 20 டிசம்பர், 2008

தாலி வரம்!

திருமண முறிவு வேண்டி கணவன் நீதிமன்றம் செல்கிறான். அந்த இறுதிக்கட்ட நேரத்தில் அவன் மனைவி அவனுக்கு எழுதும் கவிதைக் கடிதமாக இக்கவிதை!

திருமணம் கசந்துவிட்டத்
திரு-மனம் நலமா?
இறந்துவிட்ட இறந்தகாலம்
திரும்பவும் வரும்?

இழக்கப்போகும் உறவெண்ணி
இறுக்கிடும் ஏக்கங்கள்...
உறவறுக்க முயலுகின்ற
உள்மனதை மாற்றுங்கள்...

அழுதழுது வடிகின்ற
கண்ணீர் கரிக்குது...
அதைக்காணும் ஊர்மனமோ
அழகாய் சிரிக்குது...

பெயர்சொல்ல முத்துப்போல
பெற்றுத்தந்தேன் வாரிசு...
அடிவழிற்றில் வளருது
ஆறுமாத நின்சிசு...

விவகாரம் முற்றிப்போக
விவாகரத்துத் தேவையா?
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால்
வீடும்சுவர்க்கம் இல்லையா?

சொந்தமாய் ஒருதுன்பம்
இருந்தாலது சுகமாகும்...
துன்பமே நீயெனினும்
வாழ்க்கையும் வரமாகும்...

முடிவுக்கு முற்றுப்புள்ளி
முழுமனதாய் வைப்போமே...
விடிவென்னும் விளக்கேற்றி
வாழ்க்கையைப் படிப்போமே...

முந்தானையில் வேண்டிக்கொண்டு
முடிந்தக்காசு இறைவனுக்கு...
முந்துகின்ற விழிநீரால்
முடிகின்றக்கடிதம் உமக்கு!

அகரம்.அமுதா

ஞாயிறு, 23 நவம்பர், 2008

என் பாடல்!

செந்தமிழில் சொல்லெடுத்துத்
தீஞ்சுவைதன் னில்குழைத்துச்
செய்திடுவேன் கவிதைஒரு நூறு! -இந்த
வையமதில் துயில்களையும் பாரு!

காசில்லாப் பேர்களையும்
கனிவுடனே என்கவியில்
ஆசையுடம் ஆசுகவி படிப்பேன்! -அதனை
நேசிப்போர் வாழ்வுபெறும் அடைத்தேன்!

உழைப்பதனால் உயர்பவரை
உண்மைசொல்லும் உத்தமரை
ஓர்ந்துகவி பாடுமென்றன் மனது! -அவர்தாம்
உலகமென்னும் ஆலமதன் விழுது!

முதலாளிப் போர்வையிலே
தொழிலாளர் வியர்வையினை
உறுஞ்சுகின்ற பேடிகளைச் சாடும்! –அதனை
உணர்ந்துதிருந் திடஉயரும் நாடும்!

உழைப்பவர்க் கென்கவியில்
ஓய்விருக்கும்! ஏய்ப்பவரை
எள்ளிநகை ஆடிவிடும் பாக்கள்! –அதனை
அல்லகவி என்பவர்கள் மாக்கள்!

முயற்சியில்லா மூடர்களை
முச்சந்திக்கே அழைத்து
முடிந்தவரை என்கவிதை சாடும்! –அதிலே
முயலாமை என்றமுனி ஓடும்!

சத்தியமாய்க் கனிகையரை
ஒத்திவைத்த விதவையரைப்
பாடுபொரு ளாய்க்கொண்டு படிப்பேன்! -அவர்தம்
பாடுயரப் பாடுபட் டுழைப்பேன்!

எத்தனையோ புலவர்கள்
இயற்றிவைத்தக் கவிபடித்தும்
இப்புவியே திருந்தாத போதும் -என்றன்
ஒற்றைச்சொற் கிணங்குமது போதும்!

காதலர்க் கென்பாடல்
கன்னலென இனித்திருக்கும்
காதலினும் என்பாடல் சிறப்பு! -இதிலே
கண்டுசொல்ல ஏதுமுண்டோ மறுப்பு?

எழிலனைத்தும் ஏற்றிருக்கும்
இயற்கையினை என்பாடல்
தொழுதபடி பாடிநிற்கும் நாளும்! -அதனால்
அழிவில்லை என்கவிக்கெந் நாளும்!

முடியுமென்றால் என்கவியை
முடிந்தவரை நீயோது
மூடியகண் களிரண்டும் திறக்கும்! -அறிவும்
முழுநிலவாய்த் தோன்றியொளி பெருக்கும்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

கருநாடகமே!

தஞ்சை உழவனவன் சிந்தும் விழிநீரால்
நஞ்சைநிலம் ஆனதவன் கன்னங்கள் -விந்தையில்லை
கன்னத் தரும்புகின்ற தாடிநெல் நாற்றானால்
பண்ணலாம்முப் போகம் பயிர்!

வேறு

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

நம்மிரு வர்க்கும் காவிரி அன்னை;
நம்மில் வேற்றுமை பார்ப்பாளா? –நீ
நம்மில் வேற்றுமை பார்ப்பது கண்டால்
நற்றாய் அவளும் ஏற்பாளா?

கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுக்
கழனி உழுது நடுகின்றான் -அக்
கண்ணீர் வற்றிக் கண்ணீர் வற்றிக்
காய்ந்த நிலம்கண் டழுகின்றான்!

ஊருக் கெல்லாம் சோறு போட்டவன்
ஒருபிடி சோறின்றி வாடுகிறான் -அட
நீருக் கன்றோ கைகள் ஏந்தி
நிம்மதி கெட்டு வாழுகிறான்!

நீர்கேட் டெவரும் நேரில் வந்தால்
மோர்கொ டுத்தவன் வாடுவதா? –அவன்
ஏர்பிடித் துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென் றால்நீ சாடுவதா?

பாருக் கெல்லாம் சமமழை என்றே
பார்த்து வழங்கும் கார்குலமே! –தண்
நீருக் கிங்கே கைகள் ஏந்தி
நிற்பதோ எங்கள் தமிழினமே?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென
மத்தியில் ஆளும் காங்கிரசே! –தமிழ்
மக்கள் படுந்துயர் தீர்க்க ஒணாவிடில்
மரித்தால் என்ன அவ்வரசே?

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

அகரம்.அமுதா

திங்கள், 29 செப்டம்பர், 2008

வட்டநிலாச் சுட்டவடு!

தென்றல்போல் என்சிந்தை
தீண்ட விழைகிறாள் -வண்ண
மின்னல்போல் விழிவிழுந்து
ஏனோ ஒளிகிறாள்!

பூமயங்கும் பூவிழிகள்
பேசு கின்றன –அதில்
பூமணமும் பாமணமும்
வீசு கின்றன!

பூங்காந்தள் விழிசொல்வ
தென்ன மந்திரம்? –எனை
ஏகாந்தம் சூழ்ந்துக்கொள்ள
என்னக் காரணம்?

தென்றலெனத் தேடிவந்து
தீண்டும் நினைவுகள் -அது
கொண்டவுயிர் கொண்டுப்போகும்
காலன் கயிறுகள்!

கண்ணழர்ந்து தூங்கையிலும்
கவிதை சொல்கிறேன் -நாளும்
உண்ண(அ)மர்ந்து உண்ணாமல்
எழுந்து கொள்கிறேன்!

சிந்தையுற்ற அன்னையெனை
சினந்து கொள்கிறாள் -கையில்
மந்திரித்தக் கயிறெடுத்து
கட்டி விடுகிறாள்!

மணிக்கட்டில் கயிறுறுத்த
வெட்டி எறிகிறேன் -அவள்
பொன்கூந்தல் குழலெடுத்துக்
கட்டிக் கொள்கிறேன்!

சிந்தையெலாம் உற்றநிலா
தொலைந்து போனதே -இன்று
அந்தநிலா இன்னொருவன்
சொந்த மானதே!

வட்டநிலாச் சுட்டவடு
மறந்து பார்க்கிறேன் -அது
முடிவதில்லை என்றபோது
இறந்து பார்க்கிறேன்!

அகரம்.அமுதா

வியாழன், 18 செப்டம்பர், 2008

உறவு!

விழுதெனவே நமைத்தாங்க
விழைவதுதான் உறவு –நாளும்
பழிபேசிப் பரிகசிக்கும்
பண்பதுவா உறவு?

இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு –வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?

இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு -கையில்
இருப்பிருக்க இன்புறவே
இணைவதுவா உறவு?

வற்றிவிட்ட குலத்துடனே
வாடும்புல் உறவு -தண்ணீர்
முற்றுமின்றி போகஓடும்
புள்ளினமா உறவு?

காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு -நெஞ்சில்
மாசைவைத்து முகத்தளவில்
மலருவதா உறவு?

அகத்தளவில் கலந்திருக்க
அமைவதுதான் உறவு -இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?

கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு -வானில்
இருளகன்றால் ஒளிந்துகொள்ளும்
விண்மீனா உறவு?

கண்ணிமையாய் அருகிருந்து
காக்கவேண்டும் உறவு -அன்றிப்
புண்ணெனவே வலிதந்தால்
பூணவேண்டும் துறவு!

அகரம்.அமுதா

சனி, 30 ஆகஸ்ட், 2008

இதுவா நட்பொழுங்கு?

தேளைப் போலக் கொட்டும் கேளை
நாளும் நாடி நட்புற்றேன் -அது
வேளை பார்த்துக் கொட்டுவ தென்றன்
மூளைக் கேட்டிட துடித்திட்டேன்!

வானம் என்றே பேனை எண்ணி
நானென் தலைமேல் இடந்தந்தேன் -அது
ஊனைக் கடித்தென் உதிரம் உண்ணக்
காணும் போதோ மிகநொந்தேன்!

நஞ்சை நறவம் என்றே எண்ணி
நெஞ்சில் வைத்துக் காத்தேனே –எனை
வெஞ்சினத் தாலது வஞ்சனை செய்ய
விழிநீர் கொட்டித் தீர்த்தேனே!

பாலைக் கேட்டால் பருகக் கள்ளிப்
பாலைத் தருவதா நட்பொழுக்கு? -அது
நாளும் நட்பெனும் போர்வைக் குள்ளே
நடாத்து கின்ற கற்பழிப்பு!

எத்தனை கற்றுத் தெளிந்தி டினு(ம்)இவ்
எத்தர் நெஞ்சம் புரிவதில்லை -அவர்
எத்தனை யாய்இன் சொற்கள் சொல்லி
ஏய்ப்பினும் ஏய்ப்பது தெரிவதில்லை!

சேயைப் போலே மார்பில் மிதித்தால்
தாயைப் போலே பொறுத்திடுவேன் -கொடும்
பேயைப் போலே துன்பம் தன்னை
ஈயப் போந்தால் ஒறுத்திடுவேன்!

அன்பா லென்னை ஆள்வோர்க் கென்போல்
நன்றி காட்டும் நாயில்லை -சுடும்
வன்சொல் லாலெனை வதைப்போர்க் கென்போல்
துன்பம் ஈயும் ஊழில்லை!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஜூலை, 2008

நத்தை!

தொழிலிலை எனினும் சுமைதூக்கி!
தொடர்ந்து நகரும் சுமைதாங்கி!
வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ்
வழிவழி போகா துள்ளபடி!

ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு!
உள்ளதன் படுக்கை அறையுண்டு!
கொற்றவன் இல்லை என்றாலும்
கோல எழில்மணி முடியுண்டு!

கடந்து போகும் இடமெல்லாம் -பொதி
கழுதை போலே சுமந்துசெல்லும்!
அடடா! அதுதான் வீடாகும்!
அதன்பேர் அதன்பேர் ஓடாகும்!

கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
கூரை அமைத்த கொத்தனிது!
பட்டுத் தெளியுமுன் பட்டறிவால்
ஐம்புலன் அடக்கும் சித்தனிது!

கொம்போ டுடலை உள்வாங்கிக்
கொடுமையி லிருந்து தப்பிக்கும்!
ஐம்புலன் அடக்கும் வித்தையினை
அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்!

அகரம்.அமுதா

செவ்வாய், 24 ஜூன், 2008

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
நீட்டி யழைத்து
நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
நிறைப்பது கவிமாலை!


வாசம் பரப்பி
வண்டை அழைப்பது
வண்ண மலர்சோலை! -என்னை
வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
மதியும் வந்தே
மங்கல வானெழுதும்! -விண்மீன்
வாழ்த்திசைப் பண்ணெழுதும்!


சோலை வந்தபின்
சில்வண் டெல்லாம்
சொக்கியா நின்றுவிடும்? –பூக்கள்
வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
உயர்த்திப் பிடித்த
உறுவில் மையெழுத்து! -மின்னல்
ஒளியோ கையெழுத்து!


அருவிக் குழந்தை
ஆறே மங்கை
ஆழி மூப்பாகும்! -கரைக்கு
அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
கயமை சமூகம்
கண்டிடு கவிதையிலே -அவைதான்
கவிதைகள் என்பவனே!


இயற்கைக் கவிஞன்
எழுதாக் கவிகள்
எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
இடுகிறாய் பிடிநெருப்பு!

அகரம்.அமுதா


சனி, 21 ஜூன், 2008

புதியதோர் உலகம்செய்வோம்!

புதியதோர் உலகம்செய்வோம் -ஆங்கே
புகவரும் மடமையைத் தடையும்செய்வோம்!

மூடப் பழக்கங்களைக் -கண்
மூடித் தனத்தொடங் கேற்பதற்கில்லை!
சாடத் தலைப்படுவோம் -பழஞ்
சாத்திரம் சடங்கினுக் கங்கிடமில்லை!

ஒற்றுமை ஓம்பிடுவோம் -அங்(கு)
ஓர்குலம் ஓர்நிரை வேற்றுமையில்லை!
குற்றமே புரிந்திடினும் -திருக்
குறள்வழி திருத்துவோம் தண்டனையில்லை!

சாதிக்குப் பிறந்தவனாய் -மிகத்
தறுக்கிடு வோர்கங் கிடமுமில்லை!
சாதிக்கப் பிறந்தவனாய் -உரை
சாற்றிடு வோர்க்கொரு தடையுமில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -பாயும்
நதிகளை இணைக்கவோர் விதியும்செய்வோம்!

பார்க்குயிர் நாடியெனத் -திகழ்
பாட்டாளி தான்முதல் வகுப்பினனாம்!
வேர்த்தவன் உடலுழைப்பில் -தன்
மேனியை வளர்ப்பவன் இழிந்தவனாம்!

ஏழைசொல் அம்பலத்தே -சென்(று)
ஏறிடும் நிகழ்வுகள் பலநடக்கும்!
கீழிவன் மேலவன்காண் -எனும்
கீழ்மைக்குத் தண்டனை மிககிடைக்கும்!

அணுகுண்டோ டாயுதங்கட் -கங்(கு)
அனுமதி யென்பது சிறிதுமில்லை!
அணுக்கத்தோ டிணைந்திருந்தே -அங்(கு)
அரசுகள் நடந்திடும் சிறுமையில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -யாவும்
பொதுவுடை மையெனும் கொள்கையும்செய்வோம்!

ஆண்பெண் இருவருக்கும் -அங்(கு)
அவசியம் உயிர்நிகர்க் கற்புநெறி!
காண்கின் மதுவிலக்கை -மிகக்
கடுமையென் றாக்கிடும் அரசறிக்கை!

இயந்திர மயமிருக்கும் -அவை
இருப்பினும் பணியிடம் பலவிருக்கும்!
வியந்திடு பொருளிருக்கும் -பண்
விளம்பிடும் வழியிலப் பார்நடக்கும்!

செந்தமிழ் அரியனையில் -ஏறிச்
சிறப்புற ஆளுமப் பாரினிலே...
எந்தமிழ் மாந்தரெல்லாம் -நாளும்
ஏறுவர் புகழெனும் தேரினிலே...!


அகரம்.அமுதா

செவ்வாய், 3 ஜூன், 2008

செல்வம்!


தழைத்த குமுதம் உடனிருந்தும்
அழுக்குத் துணிசேர் தண்ணீர்போல்
உழைப்போர் கைசே ராதேய்ப்போர்
உள்ளங் கைசேர் தரவியமே!

விலகிச் செல்லும் உறவுகளை
விரைந்தே ஒட்டும் செயலதனால்
நலஞ்சேர் தமிழில் நயமுடனே
நவிலும் பெயரது பசையன்றோ!

உள்ளார் இல்லார் எல்லாரும்
உள்ளிப் பதுக்கினும் ஓரிடத்தில்
நில்லா மல்நீ செல்லுதலால்
செல்வ மெனும்பேர் பெற்றனையோ?

மாசை மனதில் வைத்தோர்தம்
மடியோ டும்நீ சேருதலால்
காசென் னும்பேர் பெற்றனையோ?
காசினி யில்சிறப் புற்றனையோ?

மனமென் பதில்லா மாந்தரொடும்
தனமே! உனக்குத் தொடர்புண்டு...
குணமே இல்லாப் பேருடனும்
பணமே! உனக்கு நட்புண்டு...

நாநய மில்லா பேர்களையும்
நாடும் உன்பேர் நாணயமாம்...
ஆனபேர் யாவிலும் பொருளுமில்லை
ஆயினும் பொருளுமுன் பேர்பெறுமாம்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 11 மே, 2008

மனம்!

எண்ண வலையில் இரையைத் தேடி
உண்டுக் களித்து மீளாப் பறவை...
ஆறறி வென்னும் சாரதி சொல்லை
மீறி நடந்து மீளும் குதிரை...

கற்பனை யென்னும் சிற்பம் செதுக்க
சிற்றுளி கொண்டே சனித்த பாறை...
தைத்திடும் முள்ளெனத் தைத்திடும் வேளை
பிய்த்தெறிந் திடினும் பிழைத்தெழும் கோரை...

ஒன்றை விட்டே ஒன்றில் தாவி
ஒன்றைப் பற்றி ஓடிடும் தேனீ...
சஞ்சல மாம்அலை தாவி யெழுந்தால்
கொஞ்சமும் நிலையின்றிக் குதித்திடும் தோணி...

பண்போ டன்பு பாசம் பற்றெனும்
பண்ணெழு திடவே படைத்த ஏடு...
செய்தமுன் வினைக்காய் வினைப்பயன் பெற்றிட
மெய்யெனும் கையது ஏந்திய ஓடு...

ஆசை என்னும் வேசையை நாடிப்
பூசை நடத்திப் புலம்பிடும் போகி...
பற்றாம் தூசைப் பற்றி யெடுத்து
முற்றும் அகற்றி முனகிடும் யோகி...

மறதி யென்னும் மருந்தைப் பூசி
விரைந்து ஆறிட விளைந்த காயம்...
நினைவாம் கணைகள் நிமிடமும் பாய்ந்து
கணத்தில் தைக்கக் கடவுளின் சாபம்...!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஏப்ரல், 2008

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!

தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!

முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!

தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!

சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட்டவன்
வாழ்வை தொலைத்துத் தேடுகிறான்!

விதியின் வழியில்
விருப்ப முற்றவன்
'விதியே எல்லாம்' என்றிடுவான் -தன்
மதியி ருப்பதை
மறந்து போனவன்
வாழ்வே சுமையென வைதிடுவான்!

மோகப் போய்தினில்
மெல்லிடை தனிலே
சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
தேகம் தளர்கையில்
தளிரிடை யதையே
நரகம் என்பவர் சிலருண்டு!

ஆடி அடங்கும்
வாழ்க்கை இதையே
வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
ஆடும் ஆசையை
அகற்றும் ஆசையால்
ஆசையை புத்தன் வென்றானா?

பிறப்பில் தொடங்கும்
ஆட்டம் இதனை
இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
இறப்பில் இவனே
முடித்த ஒன்றை
அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!


அகரம்.அமுதா