திங்கள், 16 மார்ச், 2026

வாடிநின்றால் என்னா வது!

 


 

போனவன் போய்விட்டான்; போட்டதெல்லாம் போட்டபடிக்

கீனப்பட் டங்கே கிடக்குதடி; – நானவற்றை

ஓடிப்போய்ப் பார்த்துவரேன் ஓரெட்டு; போனதெண்ணி

வாடிநின்றால் என்னா வது!? 01

 

காற்றில் கலந்த கணவனை எண்ணிநீ

நோற்றது போதுமடி நோய்ச்சலனம்; - சோற்றை

ருசிக்கொருவாய் யல்லாமல் ரோதனை விட்டுப்

பசிக்கொருவாய் தின்று படு! 02

 

சகிக்கத்தான் வேண்டுமடி சாவை; தனியே

வகிக்கத்தான் வேண்டுமடி வாழ்வை; – அகிலத்தில்

யார்தான் நிரந்தரம்? இங்கவர் விட்டேகும்

பேர்தான் நிரந்தரமென் பேன்! 03

 

ஆளப் பிறந்தவன் ஆண்டு முடிக்குமுன்னே

மாளப் பறந்த‍தாய் மாரடியாய்; - ஆளனுயிர்

வானாளப் போனதடி வைகுந்தம்; பூதவுடல்

கானாளப் போனதிடு காடு! 04

 

தேங்கி விடாமலும் தேம்பி அழாமலும்

வாங்கடி தெம்மை மனதிற்குப் – பூங்கங்கில்

வெந்தானை எண்ணி வெறுந்தரையில் மோதாமல்

முந்தாணை யில்சிந்து மூக்கு! 05

 

பொட்டழிஞ்சு போனதென்று பூவழிஞ்சு போனதென்று

பட்டழிஞ்சு போனதென்று பார்க்காதே – கட்டியவன்

விட்டுவிட்டுச் சென்றுள்ள வீட்டை வழிநடத்த

எட்டுவைத்துப் பெண்ணே எழு! 06

 

போனவனை எண்ணிப் பொழுதும்ஒப் பாரிவைத்து

ஆன வரையழுதென் னாவதடி – நான்றிந்த

ஆறுதலைச் சொல்லிவிட்டேன் ஆற்றா தழுவாமல்

மாறுதலைக் கொள்வாய் மனம்! 07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக