புதன், 11 மார்ச், 2026

109 தகையணங்குறுத்தல்

109 தகையணங்குறுத்தல்

 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு! 1081

 

கோதற்ற தேவதையோ? கோலமயிற் பேரழகோ?

காதணிகள் பூட்டிய காரிகையோ? – ஈதறிய

மாட்டா எனதுமனம் மாறா மயக்கத்தில்

மாட்டியதே காதலின் மாட்டு!

 

தெய்வப்பெண் தானோ? தெளிந்த நடைமயிலோ?

மெய்யாய்க் குழையணிந்த மென்மாதோ? – அய்யோ!

மயங்கும் எனது மனமே தவிக்கும்

இயங்கும் நிலையாவும் இற்று!

 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து! 1082

 

வேல்விழியை என்மீது வீசினாள்; நானும்என்

பால்விழியைப் பெண்மீது பாய்ச்சினேன்; – வேல்விழியாள்

பெத்தம் பெரும்படையைப் பேர்த்துவந்து என்மீது

மொத்தம் குவித்துவிட்டாள் மொய்த்து!

 

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு! 1083

 

கூற்றுவன் என்னும் கொடியவனை நான்றியேன்

நேற்றுவரை; இன்றே நிஜம்கண்டேன்; – சாற்றுங்கால்

பூம்பாவை போல‍உடல்; போர்த்தொழிலின் திட்டமிடல்;

வீம்பான கூர்வேல் விழி!

 

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்! 1084

 

காண்பவரின் இன்னுயிரைக் காலை உணவாகத்

தோண்டி எடுத்துண்ணும் தோற்றத்தால் – ஆண்டமைந்த

பெண்தன்மை மிக்குடைய பேரழகுப் பேதைக்கும்

கண்களுக்கும் மாறுண்டு காண்!

 

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து! 1805

 

இன்னுயிர் வாங்கும் எமன்தானோ? அல்லது

இன்முறுவல் பூக்கும் இளம்விழியோ? – அன்றி

வனத்துலவும் மான்தானோ? மங்கையவள் பார்வை

இனமிந்த மூன்றின் இருப்பு!

 

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்! 1806

 

கூன்பிறை போலும் குமரி இளம்புருவம்

தான்வளை யாமல் தடித்திருந்தால் – மீன்கண்கள்

அச்சத்தில் என்மனதை ஆழ்த்தித் துயரத்தின்

உச்சத்தில் ஏற்றாதே ஊர்ந்து!

 

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்! 1807

 

நேராக நின்றிருக்கும் நெஞ்சத்தில் நேரிழையாள்

சீராய் அணிந்திருக்கும் சிற்றாடை – பாராய்வெம்

போர்க்களத்தில் போராடும் போர்வெங் களிறுமுகம்

போர்த்திய ஆடையினைப் போன்று!

 

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு! 1808

 

களம்புகா வீர‍ரும் கண்டஞ்சு கின்ற

வளங்காளை என்றன் வலிமை – இளமான்

சிறுநெற்றி முன்னம் சிதைந்துபொடி ஆச்சே

உறுதுயரம் எல்லாமும் உற்று!

 

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து! 1089

 

மான்விழிப் பார்வையும் மாண்புறு நாணமும்

தேன்மொழியாள் நல்லணியாய்த் தேர்ந்தபின் – ஏன்இன்னும்

பொன்னின் அணிகலன்கள்? பூவின் தொடைச்சரங்கள்?

மின்னும் இவைஅவட்கு வீண்!

 

உண்டார்கண் அல்லது அடுநறாக் காம‍ம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று! 1090

 

உண்டால் மகிழ்ச்சியை ஊட்டுகிற கள்ளைநாம்

கண்டால் மகிழ்ச்சியைக் காட்டாது; – மண்டுமிந்த

நற்பெருமை வாய்த்ததெல்லாம் நாம்கொண்ட காத‍ல்தான்;

அற்பெருமை கள்ளுக்கே ஆம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக