மார்ச் - 8 அனைத்துலக மகளிர் தினம். அந்நாளில் முகநூலில் மகளிரைப் போற்றிப் பற்பல கவிஞர்களின் வாழ்த்துக் கவிதைகள் வரிசைகட்டக் கண்டேன்.
வாழ்த்துகளால் மாற்றம் வருவதில்லை. செயல்களால் சீர்திருத்தம் செழிப்புறும்.
இதையுணந்த மங்கையொருத்தி எதிர்கவிதை தொடுத்தால் எப்படி இருக்கும்?
இதோ கவிதை...
பெண்கூற்று-
அம்மி அரைக்கும்
அலுப்பைத் துணிகளைக்
கும்மி எடுக்கும்
குடைச்சலை – மும்முறை
ஆக்கும் பணிச்சுமையை
ஆலிங் கனஅயர்வை
நீக்காத நாளெதற்கு
நேக்கு!?
நேற்றைய வாழ்த்துகளால்
நெஞ்சுகுளிர்ந் தாலுமில்லை
மாற்றம் நிகழ்ந்த
வரலாறு; – போற்றுவதே
பூவைக்குப் போதுமெனில்
பூமி பிளக்கட்டும்
சேவைக்கு வாழ்த்தா
சிறப்பு!?
பெண்ணுக்கு ஞாயிறும்
பெத்தம் பெருஞ்சுமையாய்
மண்ணில் அமைந்த
மறுநிமிடம் – உண்மைக்கு
மெத்தப் புறம்பாய்
விதந்தொருநாள் காண்பதெல்லாம்
சுத்தப்பொய்; விட்டுத்
தொலை!
காய்ச்சிய ஈயத்தைக்
காதிலே ஊற்றுதல்போல்
வாய்ச்சவடால் ஆண்வர்க்க
வாழ்த்துளது; – தாய்க்குலத்தின்,
தாரத்தின், தங்கையின்,
தங்க மகள்களின்
பாரத்தில் நீயெடுப்பாய்
பங்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக