110 குறிப்பறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றன்நோய் மருந்து! 1091
மையளந்த கண்ணுக்கு வாய்த்த திருபார்வை;
பொய்யளந்த பெண்ணுக்குப் போதுமிவை; – மெய்யளந்து
நோய்வார்க்கும் ஓர்பார்வை; நோயைத் தணிக்கின்ற
வாய்பார்க்கும் ஓர்பார்வை வந்து!
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது! 1092
என்னை விழியால் இமைப்பதற்குள்
தான்திருடிச்
சென்ற அவளின் சிறுபார்வை – மென்மைமிகு
காதலின் இன்பத்தில் காலும் அரையுமில்லை
ஏதலிக்கும் முக்கால்பங்கு ஏற்று!
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்! 1093
முன்னாலே வந்தென் முகம்பார்த்தாள்
பார்த்ததன்பின்
தன்னாலே தன்பார்வை தாழ்த்தினாள் – அன்னத்தின்
இந்தச் செயல்காதல் இன்பப் பயிருக்கு
நிந்தாமல் ஊற்றிய நீர்!
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்
நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்! 1094
பட்டுப்போற் பூவிழிகள் பார்த்திருந்தேன்
பாவையவள்
சட்டென்று தன்முகம் சாய்த்திருந்தாள் –
எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள்
யானவளைக்
கண்கொண்டு காணாதக் கால்!
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்! 1095
இப்படியே வைத்தகண் இங்குமங்கும் வாங்காமல்
அப்படியே பார்க்கவில்லை ஆனாலும் – செப்புச்
சிலைஒரு கண்ணைச் சிறுத்துமுகம் பார்த்து
நிலைமறந்து புன்னகைப்பாள் நின்று!
உறாஅ தவர்போல் சொலினும் செராஅர்சொல்
ஒல்லை உணரப் படும்! 1096
பந்தமில்லை என்பதுபோல் பாசமில்லை
என்பதுபோல்
சொந்தமில்லை என்பதுபோல் சொன்னாலும் – சிந்தனையில்
கிஞ்சித்தும் வஞ்சமில்லார் கூறுகின்ற
சொற்பொருளை
நெஞ்சறியும் சீக்கிரமே நின்று!
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல்
நோக்கும்
உறாஅர்பொன்று உற்றார் குறிப்பு! 1097
வஞ்சமே இல்லாத வாய்மொழியும் வன்பகைக்குப்
பஞ்சமே இல்லாத பார்வையும் – கொஞ்சமும்
சொந்தமிலார் என்பதுபோல் தோன்றிடினும்
சொந்தத்தில்
குந்தகம் காணாக் குறிப்பு!
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்! 1098
அசையும் இடையாள் ஒசியும் நடையாள்
பிசையும் அழகிற் பெரியாள் – இசைந்துநான்
பார்த்த நொடியினில் பையச் சிரிக்கின்றாள்
ஈர்க்கும் இயல்பிலவள் ஏர்!
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலர் கண்ணே உள! 1099
சொந்தம் இலார்போலும் சுற்றம் இலார்போலும்
பந்தம் இலார்போலும் பார்ப்பதெல்லாம் – இந்தநற்
காதலில் மட்டுமே காணக் கிடைக்குமிது
காதலர்க்கே வாய்த்த கவின்!
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல! 1100
பையன் அவன்கண்ணும் பாவை அவள்கண்ணும்
பையஒன்றை ஒன்று பருகியபின் – தையலின்
வார்த்தையி னாலோ தலைவன்வாய்ச் சொல்லாலோ
ஓர்பயனும் இல்லை உணர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக