திங்கள், 23 மார்ச், 2026

அன்புள்ள மான்விழிக்கு!

 

அன்புள்ள மான்விழிக்கு!

 

அன்புள்ள மான்விழிக்கு! அன்பன் மனம்பதைத்து

என்பிலிரத் தம்தோய்த் தெழுதுவது; - என்னவென்றால்...

பேஸ்புக்கில் உன்துயரம் பேசும் படம்பார்த்தேன்;

மாஸ்குறைந்த தாகண் மணிக்கு!? 01

 

மாதரசி மண்ணள்ளி மாய்வதா? வெய்யிலிலே

காதல் இளவரசி காய்வதா? - தீதெல்லாம்

தேவதையைச் சேர்வதா? தேன்நிலவு தேய்வதா?

மாவழகு வாடு வதா!? 02

 

பிட்டுக்கு மண்சுமந்தான் பித்தன் பிறைசூடி;

சுட்டிப்பெண் நீயேன் சுமக்கின்றாய்? - துட்டுக்கு

லிப்ஸ்டிக்கு வாங்கவா? லெ தர்பேக்கு வாங்கவா?

செப்பல்கள் வாங்கவா? செப்பு! 03

 

கோட்டுள் கனிபதுக்கும் கோமகளே! ஏனடிஅக்

காட்டில் படுகின்றாய் கஷ்டங்கள்? - மூட்டுவலி

வந்தாலோ தைலமிட மாமன் அருகிலையே!

செந்தா மரைக்கேனித் தீங்கு!? 04

 

பூமகள் நோயுறவா? பொன்விரல் புண்படவா?

தேமலர்ப் பாதங்கள் தேய்வுறவா? - நான்மனம்

வெம்பி அழுதிடவா? வெண்பா எழுதிடவா?

மம்முதன்கிம் தூக்கவைத்தான் மண்!? 05

 

காசுபணக் கஷ்டமா? காடுகரை நஷ்டமா?

ஏசுபவர் ஏசுவதில் இஷ்டமா? - ஆசுவதம்

மண்சுமந்தால் கிட்டுமா? பெண்சுமந்தால் மட்டுமா?

கண்சுமந்தாள் கண்ணீர்க் கடல்! 06

 

ஆண்டியாய் ஆனானோ  ஆரணங்கே! என்மாமன்

போண்டியாய்ப் போனானோ பூங்கரும்பே! - வேண்டுமென்றே

மண்சுமக்க வைத்தானோ மாதுளையே! தாங்குமோ

பெண்சுமக்கும் பூவிரல் பிஞ்சு!? 07

 

இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்க

மொட்டுமலர் மண்சுமத்தல் மோசமே – பட்டென்று

கோபத்தில் கொட்டுவைக்கக் கோமான் குசேலனில்லை;

ஆபத்தில் போய்முடியும் அஃது! 08

 

ராணிபோல் காப்பாற்ற ராஜன் தவறிவிட்டான்;

தோணியில் ஏறிவா தோகையே! – காணி

உழுதுழைத் தேனும் உனைக்காப்பேன்; நெஞ்சில்

விழுதரைத்து நீவை விருந்து! 09

 

நாளை அதிகாலை நான்கு மணியளவில்

காளைநான் கண்மணிக்காய்க் காத்திருப்பேன்; - வேளை

தவறுமுன் ஓடிவந் தாயேல் மணப்பேன்;

தவறினால் மாய்வேன் தடத்து! 10

 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக