புதன், 27 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1991)

இந்தநாள் நமது வீரர்
இன்னுயிர் ஈகம் செய்து
நந்தமிழ் இனத்தைக் காக்க
நடுகற்க ளான தெண்ணிப்
புந்தியில் அவரை வைத்துப்
போற்றுவோம்! குறிக்கோ ளுக்காய்த்
தந்தனர் உயிரை அந்தத்
தகைஞரை வணங்கச் செய்வோம்!

வியர்வை,கண் ணீர்செந் நீரால்
விளைந்தயிவ் விடுத லைப்போர்
வியத்தகு குறிக்கோள் வாழ்வில்
மிகுப்பல இடுக்கண் துய்த்தும்
அயர்வுறா வீரர் கண்ட
அம்கன விவையெல் லாமும்
இயல்புறு வெளிப்பா டாக
இயைந்ததால் பிறந்த தன்றோ?

செருக்களில் எம்போல் பாரில்
தேர்வுகள்* எதிர்பா ராத
திருப்பங்கள் நிறைந்த போரைத்
திறமுடன் கண்டா ருண்டோ?
நெருக்கடி நிறைந்த தாயும்
நீண்டதும் கடின மாயும்
இருக்கிற செலவை* எங்கள்
இயக்கமே தொடரக் காண்பீர்!

ஏற்பிலா இரண்ட கத்தோ
டேமாற்றம் எம்மைச் சூழக்
கூற்றெனப் பகைவர் பாயும்
கொலைக்களம் ஒருபு றம்மும்
வேற்றவர் வன்க வர்பை
விரட்டிட மறுபு றம்மும்
ஆற்றொணா அழிவின் எல்லை
அடைந்துமே மீட்சி கண்டோம்!

அப்பெரும் புயற்கு வெற்பாய்
அசைவுறா நெஞ்சத் திட்பம்
மெய்ப்புறு தூண்க ளாக
மிசையெழுந் தியக்கம் தாங்க
இப்பெரும் போரில் நந்தம்
இணையிலா வீரர் செய்த
செப்பரும் செயலால் அன்றோ
செருவிடை நிமிர்ந்து நின்றோம்!

உளத்திடம் ஊன்று கோலாய்
உதவிட; சூழ்ச்சி வென்று
விளிவிலாக் குறிக்கோள் ஒன்றே
விடுதலைச் செலவில் வெற்றி
அளிப்பதைத் துய்த்த றிந்தே
அறைகிறேன்; செந்நீ ராலும்
விளிவொடு* துன்பத் தாலும்
விளைதலே விடுத லையாம்!

தின்னுணா தடையோர் பக்கம்
செருப்படை* இன்னோர் பக்கம்
இன்னொரு நெருக்க டிக்குள்
எமைவிட முனையும் மாணார்*
சென்றுயாழ் நாட்டைச் சூழ்ந்து
செய்தடை யாலே ஊனுக்
கென்றுமில் லாப்பஞ் சத்தை
எம்மக்கட் கியற்றி னாரே!

இடக்குகள் இயற்றி எம்மை
இடுக்கணுள்* தள்ளி நாளும்
அடக்குமு றையாம் தீயில்
அமுக்கினார்; இறப்பின் நீழல்
படுத்துறங் கிடுமெம் மையிப்
பட்டினி என்ன செய்யும்?
விடுதலைப் பசியுற் றார்க்கு
வேறொரு பசியுண் டாமோ?

அடுகளக் கருவி ஏந்தி
அமைதிசை கையுங் காட்டும்
கெடுமனச் சிங்க ளர்காள்!
கிளர்ந்தெழும் அமைதி யோடே
அடுகளப் போருக் கும்நாம்
அணியமே;* இரண்டில் எத்தை
நெடுமனத் தேற்கின் றாயோ
நேரதை நாமேற் கின்றோம்!

எழுந்தயிப் போராட் டத்தில்
எம்பக்க நயன்மை தன்னைத்
தொழுதுநாம் பார்க்குச் சொல்லத்
தோதான வாய்ப்பை நல்கி
அழுத்தமும் மேலாண் மையும்
அடக்குமுறை கட்டுப் பாடும்
ஒழிந்தநற் பேச்சுக் கென்றால்
உரை;அணிய மாக உள்ளோம்!

போர்வெறி கொண்டோ மில்லை;
போய்இனப் பகையும் உள்ளோம்;*
பாரந்த சிங்க ளர்நம்
பகைவராய்க் கருத வில்லை;
நேரவர் நாட்டை நாங்கள்
நெஞ்சினில் ஒத்தேற் கின்றோம்;
நேரவர் பண்பாட் டைநாம்
நேசித்தோம்; இடறி யற்றோம்!

அங்கவர் வாழு தல்போல்
அழகுறும் ஈழ நாட்டில்
மங்கலம் பொங்க நாமும்
வாழவே விரும்பு கின்றோம்
இங்குதே சியயி னம்மாய்
எழுவதைப் பொருத்தி டாத
சிங்களர் ஒத்தி சைவைச்
செப்பும்நாள் அமைதி தோன்றும்!

தன்படை வலியால் எம்மின்
தாயக சிக்கல் தீர்க்க
உன்னினார்;* ஒல்லா* தென்னும்
உணர்விலார்; மேலும் மேலும்
வன்கவர் பாலெம் மண்ணை
வளைக்கவே விரும்பு கின்றார்
முன்பொரு பெரும்ப டைபோல்
முகமுடை படுவா ரன்றோ?

என்னுயிர் ஈழ மக்காள்!
இப்பெரும் செலவில்* நம்மை
நண்ணிடும் சோர்வு; நாளும்
நனிசுமை நமைய ழுத்தும்
தன்குறிக் கோளை உன்னித்
தகைவுடை உறுதி யோடு
நின்றிடின் நமையெ திர்க்க
நேரெதிர்ப் படுவார் இல்லை!

நெஞ்சினில் உறுதி பூண்டு
நேரெதிர்த் தடுக ளத்தில்
துஞ்சிய மறவர் வாழும்
தூயகல் லறையொ லிக்கும்
விஞ்சரும் விடுத லைப்பா
விளம்பிடும் உறுதி தன்னை
விஞ்சிய கருவி இல்லை
விரைந்துமனத் தேற்போ மாக!

அகரம் அமுதன்

வியாழன், 21 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1990)

தன்னுயிர் ஈந்தும் செந்நீர்
தனையீந்தும் ஈழம் காத்துப்
பின்னவர் பின்பற் றித்தம்
பெருமறம் நாட்டு தற்கு
மன்னிய நடுகல் ஆன
மறவரைப் போற்ற நாமும்
உன்னிய நாளே இந்த
உயர்திரு நாளாங் கண்டீர்!

இறுதியை அடைந்த வீரர்
இழப்(பு)அவர் பின்ன வர்க்கே
உறுதியை ஈந்தும் வீர
உணர்வினை ஈந்தும் நெஞ்சில்
கருதிய செயல்மு டிக்கும்
கடமையை ஈந்தும் தங்கள்
இறுதியைப் பொருளு டைத்தாய்
இயற்றி‘நல் லுயிரன்’ ஆனார்!

தன்னின விடுத லைக்காய்த்
தன்னில மீட்புக் கும்மாய்
இன்னுயிர் ஈயும் வீரர்
இணையிலாக் கொள்கை யாளர்!
தன்னலம் பேணா வாழ்வும்
தமருக்காய் வாழாப் பெட்பும்
மன்னிய அவர்தஞ் சீர்க்கு
மற்றொன்றும் ஈடே இல்லை!

விடுதலை வீரர் என்றும்
விளிவதில்; நிகழும் சாவைச்
சடுதியில் சரித்தி ரம்மாய்ச்
சமைக்கிறார்; கொள்கைத் தீயாய்
அடுத்தமா மறவர் நெஞ்சில்
அமர்கிறார்; இனத்தின் மேன்மை
எடுத்துரை சின்ன மாக
எழுகிறார்; புகழ்பே றுற்றார்!

ஓரியர் படைத னையும்
உலகினிற் பெரும்ப டையாம்
ஆரியர் படைத னையும்
அடுகளத் தெதிர்த்து நின்று
வேரிறச் செய்வ கையால்
வியத்தகு வரலா றானோம்!
சீரிய எம்தி றத்தைத்
திசையெலாம் எட்டச் செய்தோம்!

சொல்லரும் இன்னல் கண்டும்
துவண்டிடா மனத்திட் பத்தால்
மெல்லரும் வலிகள் தாங்கி
விடுதலை ஒன்றே கோளாய்
வெல்லரும் படையை வெல்ல
விரைவதும் வென்று வீழ்ந்தும்
கல்லுரு வான வீரர்
கவின்சொலச் சொற்கள் உண்டோ?

என்னுயிர்த் தோழர் எம்மின்
எழிற்றள பதிகள் நெஞ்சில்
மன்னுபோ ராளி கள்தாம்
மறப்போரில் மடிதல் கண்டே
என்னுயிர் சோரும்; தம்மின்
இன்னுயிர் ஈக ரைநாம்
உன்னவே சோரும் நெஞ்சம்
உறுதியோ டுரனும் வைகும்!

உயிரினும் மேல தாய
உயிர்த்தயிந் நாட்டை யெண்ணி
செயிர்க்களம் சென்று மாண்ட
செயல்மல்லர் தம்மை ஈன்றோர்
அயிர்த்திடா தடைவீர் பெட்பை!
அவர்மரித் தாரில் லைநம்
உயர்சரித் திரமே யானார்!
உயிர்த்தெழும் விதையும் ஆனார்!

அடிமைவி ளங்கு டைத்தே
அடல்தனித் தமிழர் காணும்
மிடிமைவி ரட்டி வாழ
விடுதலை ஒன்றே ஆறாம்!
விடிதலை வேண்டும் போரில்
விளிதலும் இயற்கை யன்றோ?
மடிந்தநம் வீரர் வீழ்ந்து
மணிவிதை ஆனார் வாழ்க!

நல்லுயிரன் –சிரஞ்சீவி; மல்லர் –வீரர்; பெட்பு –பெருமை; மிடிமை –துன்பம்.

அகரம் அமுதன்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1989)

இன்றிந்நாள் தமிழீழ எழுச்சிக்காய்க் களங்கண்ட
எழிலார் வீரர்
பொன்றியதை நினைவுறுத்தும் புகழ்க்குரிய பொன்னாளாய்ப்
பொலியக் காண்பீர்
பொன்றுந்தன் மறவரினைப் போற்றுகின்ற மாமரபைப்
புவிமேல் நாமும்
பின்பற்றி இந்நாளைப் பெட்புமிகும் நன்னாளாய்ப்
பிறங்கச் செய்வோம்!

இன்றுவரை ஆயிரத்தை எட்டிவிட்டார் தம்முயிரை
ஈந்த வீரர்
என்பதனால் தனித்தனியே எழில்மறவர் நினைவுறுநாள்
எடுத்தல் நன்றோ?
அன்றுமுதன் முதலாய்த்தன் ஆருயிரைக் களப்போரில்
அளித்த சங்கர்
பொன்றியயிந் நாளினையே புகழ்மறவர் நாளாகப்
பொலியக் காண்போம்!

உயிரீகம் செய்தாருள் உயர்ந்தோர்யார்? தாழ்ந்தோர்யார்?
உரிமைப் போரில்
உயிரீகம் செய்தவரை ஒப்புரவாய்க் கண்டிடவும்
ஒருவர் செய்த
உயிரீகம் மேலதெனும் உரைதோன்றா வகையுறவும்
ஒருசார் பின்றி
உயரியயிந் நாளினையே உயிர்துறந்த மாவீரர்க்
கோர்ந்து கண்டோம்!

ஈரமிகு தமிழீழம் ஈன்றெடுக்கப் பிறந்திட்ட
சேய்கள் தம்முள்
வீரமிகு மாமறவர் விளைவதில்லை என்னுமுரை
விரிக்கும் வாய்கள்
சோரமிகப் பலமறவர் தோன்றிவிட்டார் தமிழீழம்
தோன்றும் காலம்
தூரமிலை எனப்பார்க்குச் சொல்லுமிந்த நன்னாளைத்
தொழுவோம் வாரீர்!

அகரம் அமுதன்