அப்பா!
பல்லவி :-
காதுக்குள்ள கத்தி
காட்டுத்தீயா குத்தி
கண்ணுக்குள் தீப்பூக்குதே
– ரத்தம்
கண்ணீரில் வாய்பார்க்குதே
– என்
ஆகாயம் – அதில்
ஏன்காயம்? – நெஞ்சில்
ஈட்டி பாயும் – செய்தி
பொய்யா போனா ஞாயம்!
சரணம் :- 1
என்கையப் புடிச்சி
உன்னோட அணைச்சி
ஆவன்னா
நீ வரைஞ்ச – நான்
அழுதாக்கா
நீ கரைஞ்ச!
களித்துண்டு உருட்டி
கறிகொண்டு புரட்டி
என்வாயில்
நீ நுழைஞ்ச – என்
எச்சிலில
நீ குழைஞ்ச!
தோளுல தூக்கிநீ
சுத்திக்
காட்டின…
மாருல வாங்கிநீ
புத்தி
ஊட்டின…
சிங்கம்நீ அப்பா!
உனக்குண்டா
ஒப்பா?
சரணம் :-2
தனியாக ஒழைச்சி
மெழுகாக இளைச்சி
கரசேர்த்த
இதுவரைக்கும் – உன்
காய்ப்புக்கை
அதஉரைக்கும்!
உனக்குன்னு எதுவும்
சேர்க்கல துளியும்
உம்போல
யார்எனக்கும் – சாமி
ஒசரம்உன்
கால்வரைக்கும்!
ஆதியும் அந்தமும்
ஆன ஜீவனே!
பாதியில் விட்டுநீ
போவதோ எனை?
சிங்கம்நீ அப்பா!
உனக்குண்டா
ஒப்பா!
சரணம் :-3
கொடுமழை பொழிந்தும்
குடிசைக்குள் வழிந்தும்
நனையாம நீவளர்த்த – உன்
கண்ணீர யார்உலர்த்த?
பேனாவக் கேட்டா
பென்சீலு தருவ
உன்னத்தான் நான்சீவி – தெனம்
எழுதினேன் உன்ஆவி!
கோவணத் தாலநீ
உன்ன மூடின
கோட்டுசூட் வாங்கிநீ
எனக்கு மாட்டின
சிங்கம்நீ அப்பா!
உனக்குண்டா ஒப்பா? -அமுதன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக