புதன், 17 ஜூன், 2026

கடைசி கண்ணீர்!

 

கடைசி கண்ணீர்!

 

உப்புக் கண்ணீர்நான்

உகுத்ததில்லை இதுவரை

உள்ளம் கவர்ந்தவளே!

உனைக்காணும் அதுவரை

 

தாயடித்து அழுததில்லை

தந்தைமடி புதைந்ததில்லை – உன்

நினைவடித்து நிலையிழந்து

நான்விழுந்த நொடிவரை

 

அழகழகாய்க் கனவுகளை

அடிமனதில் வடித்தாய்

அரும்பரும்பாய்ப் பூத்துப்பூத்துக்

கவிதைகளைப் படித்தாய்

 

சம்மதத்தை ஓரவிழி

சாட்டைவழி மொழிந்தாய் – என்

தருணங்களைச் சுவையுடைய

தேன்சாறாய்ப் பிழிந்தாய்

 

இப்படியாய் உச்சிவானில்

எனைத்தூக்கிப் பறந்தாய் – என்

கற்பனையின் ஊற்றுக்கண்ணைக்

கணப்பொழுதில் திறந்தாய்

 

இப்படியோர் மோனநிலை

அனுபவிக்கும் போது – எனை

இடையினிலே விட்டுவிட்டு

விலகுவதோ கூறு!

 

இருக்கின்ற கண்ணீரை

இதயவாளி இறைக்க – இந்தத்

துயரங்களை எப்படிநான்

சொற்களிலே வடிக்க?

 

கொட்டுகிறேன் கண்ணீரைக்

குற்றாலம் போலே

கொட்டுதற்கு இல்லையடி

கண்ணீர்இனி மேலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக