வெள்ளி, 3 ஜூலை, 2026

ஆகஸ்ட் 31 2020

 

ஏடி வரதராசன்:-

 

பைகட்"டி" சேக்க  பணத்தெல்லாம்; எம்மக்கா

கைகட்"டி" நிக்கிரோமே காலமெல்லாம் --- பொய்கட்"டி"

இந்தட்"டீ" வித்துவித்தே எம்மானோ வச்சிருக்கான்

சிந்திச்சி "டீ"குடிங்க டீ.

 

கவிஞர் மறையேந்தி:-

 

சிந்திச்சே டீகுடிப்போம் சேர்ந்துநாம் டீகுடிப்போம்

வந்திடவா சொல்சொல் மகிழ்ந்து.

 

அகரம் அமுதன்:-

தூக்கலா? கம்மியா? டிக்காஷன்; சக்கரை

சேக்கவா? வேண்டாமா? செப்பு!

 

கவிஞர் மறையேந்தி :-

 

செப்புவேன் சேதிதான் சேக்கலாம் சீராக

எப்போதும் ஏற்பேன் இனிப்பு.

 

அகரம் அமுதன்:-

நாட்டுவெல்லம் நான்இடவா? நன்றாய்ப் பனைவெல்லம்

கூட்டவா? சீனியா? கூறு!

 

கவிஞர் மறையேந்தி:-

 

கூறி மகிழலாம்  கூட்டுவது வெல்லமெனில்

ஊறி உரமூட்டும்  ஓர்ந்து.

 

அகரம் அமுதன்:-

 

ஆட்டுப்பால் சேர்க்கவா? ஆவின்பால் சேர்க்கவா?

நாட்டத்தைச் சொல்வீர் நயந்து!

 

கவிஞர் மறையேந்தி:-

எண்ணி மகிழ்ந்தேன் இனியவிந் நட்பிது

பண்தரும் பாங்கைப் பணிந்து.

 

அகரம் அமுதன்:-

 

விருந்து கொடுப்பதில் வெல்வதார் எம்மை?

இருந்துண்ண வாருங்கள் இன்று!

 

கவிஞர் மறையேந்தி:-

 

நயந்தே நவில்கிறேன் நட்பால் நலத்தை

இயல்பாய் ஈவாய்  இனித்து.

 

அகரம் அமுதன்:-

 

மூத்தோரின் வாழ்த்தே முளைவிடும் எங்களை

காத்துவரும் நல்மருந்து காண்!

 

கவிஞர் மறையேந்தி:-

 

இன்றும் இனியென்றும் ஏற்போம் இசைந்துண்ன

நன்றே நயமுடன்  நான்.

 

காண்போம் களிப்போம் கவிச்சுவையைக் கன்னலாய்

ஆண்டே அனுபவிப்போம் ஆம்.

 

அகரம் அமுதன்:-

 

ஆமென்று நீர்சொன்னால் அன்றென்றா நான்சொல்வேன்?

நாமென்றும் காண்போம்  நலம்!

 

கவிஞர் மறையேந்தி:-

 

நலம்காண்போம் என்னும் நயந்துரையால் என்றும்

வலம்வருவீர் நெஞ்சுள் வளர்ந்து.

 

அகரம் அமுதன்:-

மகிழ்ச்சி அளிக்கிறது; மாகவியுன் நட்பால்

நெகிழ்ச்சி அடைகிறது நெஞ்சு!

 

பாவலர் வையவன்:-

 

வெளுவெளு வென்றே வெளுக்குமும் பாட்டில்

அலுப்பில்லை அத்தனையும் தேன்.

 

அகரம் அமுதன்:-

பண்பட்டோர் வாக்குப் பலிக்கட்டும்; வாழ்த்திது

புண்பட்ட நெஞ்சுக்குப் பொன்!

 

ஆகஸ்ட் 31 2020

30/8/2020

 

ஏடி வரதராசன்:-

 

என்னம்மா அங்க சத்தம்

இதுவரைக்கும் கேக்கு தேம்மா

ஒன்னாருந் திட்டிட் டானா

ஒரண்டையும இழுத்துட் டானா

சின்னதா கெட்ட வார்த்த

சேத்தொன்ன சொல்லிட் டானா

என்னன்னு சொன்னா தானே

ஏதாச்சும் செய்வேன் நானே!

 

அகரம் அமுதன்:-

 

பேசிக்கிட் டிருக்கோம் மாமா!

பெரச்சன ஒன்னு மில்ல;

ஏசிப்புட் டொருத்தன் போக

இளப்பமா? விடுவே னாநான்?

பூசிநான் மொழுக வில்ல

பொய்யேதும் சொல்ல வில்ல;

வீசிநீ விலாஒ டிக்க

விறகோடு வரவேண் டாமே!

 

ஏடி வரதராசன்:-

 

என்னம்மா இதஎங் கிட்ட

இவ்வளவு லேட்டா சொல்ர

கொண்டாநீ அவன இங்க

கொத்தாவே அருத்து மூணும்

சுண்டக்கா வத்த லாட்டம்

சுடச்சுட காய வச்சி

அண்டங்காக் காவுந் திங்க

அத்தனையும் வீசி போவோம்!

 

அகரம் அமுதன்:-

 

சுண்டக்கா மேட்ட ருக்கே

சும்மாநீ இருந்தி டாம

வெண்டக்கா வெரலொ டிக்க

வேகமா வருவா யின்னா

துண்டக்கா ணும்மே இன்னுந்

துணியக்கா ணும்மே இன்னுஞ்

சண்டைக்கே வரல யின்னுஞ்

சமாதானம் பேசு வானே!

 

ஏடி வரதராசன்:-

 

வந்தாலும் என்ன இப்போ

வரலைன்னா என்ன இப்போ

அந்தாளு யாரு ஒன்ன

அசிங்கமா பேசிப் போக?

இந்தாவா ரேனே நானும்

எவந்தான்னு பேர சொல்லு

அந்தாளா நானா இன்னு

அப்புறமா நீயும் பாரு!

 

அகரம் அமுதன்:-

 

அட!கூட நீயி ருக்க

அடிக்கஒ ருத்தன் வந்தா

தொடக்கூட விடமாட் டேன்னு

தெரியாதா? தொட்டுப் புட்டா

விடக்கூட மாட்டே யின்னு

வெளங்காதா? கொல்லிக் கண்ணு

படக்கூட விடமாட் டேன்னு

புரியாதா? விட்டுத் தள்ளு!

 

30/8/2020

 

18/8/2020

 

அகரம் அமுதன்:-

 

வெண்பாவாத் தீட்டி வெறுப்பேத்து றான்வரதன்;

பண்பாக நாஞ்சொல்லிப் பாத்துட்டேன்; - ஒண்பா

விருத்தம் இருக்கே விளையாட!? என்ன

வருத்தம் எழுது வதற்கு?

 

ஏடி வரதராசன்:-

 

நளன்கதையை வாசித்த நல்லமுதா; அந்த

விளம்மா"தே மா"ஆமோ வெண்பா? -- உளந்தன்னில்

ஊற்றெடுத்துக் குத்துகின்ற ஊசி; அதுவெண்பா

ஈற்றடியை அன்றி எது?

 

விளம் மா தேமா -- விருத்த சீரமைப்பு.

 

அகரம் அமுதன்:-

 

காவியமே பாடிநம் கம்பன் விருத்தத்தில்

ஓவியமே தீட்டி உலகளித்தான்; - மேவிக்

கலைவலிமை காட்டும் கவிஞர் பலர்க்கும்

தலைவலிதான் வெண்பாத் தளை!

 

ஏடி வரதராசன்:-

 

தலைவலியே அன்றி தனிக்கா வியத்தை

வளைத்தெழுதி விட்டால் வனப்பா? --- தளைதட்டல்

இல்லாமல் வெண்பா இயற்றி அதிலிருக்கும்

கள்ளுண்டுப் பின்சொல் கருத்து!

 

அகரம் அமுதன்:-

 

வெள்ளைப்பா; வெண்பா வெறும்பா; எனப்பலர்

விள்ளக்கேட் டுள்ளேன் விரிவாக; - இல்லையில்லை

வேண்டாம் இதுவென்(று) ஒதுங்கினேன்; நீஎன்னைத்

தூண்டாய் எழுதத் துணைக்கு!

 

ஏடி வரதராசன்:-

 

வெள்ளைப்பா ஆமாம்;  வியன்மணத்தைக் கூட்டுகின்ற

முல்லைப்பா; பெய்யும் முகிலின்பா; -- இல்லைப்பா

என்றியம்ப இங்கே எவருள்ளார்; ஔவையெனுங்

குன்றறிந்துஞ் சொல்லாய் குறை!

 

அகரம் அமுதன்:-

மதுக்கவிதை என்றுநீ மார்தட்டும் வெண்பா

புதுவிருத்தம் போலப் புதுமை - செதுக்கா(து)

அறிவுரைகள் சொல்லி அலுப்பேற்று மன்றிச்

செறிந்தவற்றைச் சொல்கிறதா செப்பு!

 

ஏடி வரதராசன்:-

 

வெண்பாவை என்முன்  வெறுஞ்சொற்க ளோடெல்லாம்

ஒன்றாகப் பேசல் ஒழுக்கமன்று! -- நண்பா!

பலக்கவியை ஆய்ந்தறிந்த நீயாவெண் பாவை

மலக்கவிக்கு நேருரைத்தல் மாண்பு?

 

அகரம் அமுதன்:-

 

கோபப் படவேண்டாம்; கொக்கரித்து என்மீது

சாபம் இடவேண்டாம்; சாந்தம்கொள்; - தூபமிட்டு

நாக்கலப்பைப்* பாவலர்க்குள் நாட்டுகிற வெண்பாவைப்

பூக்குலத்துத் தேனென்றால் பொய்!

 

நாக்கலப்பு - வாய்ச்சண்டை.

 

ஏடி வரதராசன்:-

 

நாக்கலப்பு மட்டும் நடந்ததில்லை; அந்நாளின்

ஆக்கத்தில் வெண்பா அதிகம்தான்; --- ஏக்கங்கள்,

இல்லாமை, ஆன்மீகம், ஏழை மனச்சுமைகள்

அல்லாது அறங்கூறும் அஃது!

 

அகரம் அமுதன்:-

 

பாடு பொருளுக்குப் பஞ்சமில்லா இந்நாளில்

ஈடு கொடுக்கவெண்பா ஏற்றதில்லை; - சாடுவதை

விட்டு முகநூலில் வெண்பாக் களைத்தேடிப்

பட்டுத் திருந்துநீ பார்த்து!

 

ஏடி வரதராசன்:-

 

நானும் கவினென்று நாணமற்று சுற்றுகிறார்

மூணுமிழந் தார்கள் முகநூலில் -- காணும்மண்

பாலைக்குள் நின்றுகொண்டுப் பசுஞ்சுணைநீர் தேடுவது

வேலையற்ற வேலை விடு!

 

அகரம் அமுதன்:-

 

ஆகட்டும் நீசொன்னால் அர்த்தம் இருக்குமது

போகட்டும் ஏன்நமக்குப் பொல்லாப்பு; - சாகசம்

காட்ட விருத்தம் கனக்கச் சிதம்எழுத

காப்பிரைட் கேட்பதார் கண்டு!

 

18/8/2020

14/8/2020

 

அகரம் அமுதன்:-

ஈமெயிலும், செல்ஃபோனும், இன்ஸ்டாக்ராம் வந்தாலும்

பூமயிலே! நெஞ்சம் புகல்வதற்குப் - பூமியிலே

கன்னல் தமிழில் கடிதமிட்டுக் காதலைச்

சொன்னால் கிடைக்கும் சுகம்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஆக்கியதை யெல்லாமும்  ஆறவைக்கும் அக்கடிதம்

தூக்கிப்போம் நேரமெலாம்  தூரமாக; --- மாக்கணிணி

வாய்விட்டுக் காதல்  வரிவிழியால் சொல்லும்முன்

பாய்விரிக்கும் நண்பா  பசிக்கு!

 

அகரம் அமுதன்:-

 

காக்கவைத்துச் சேரும்  கடிதம்போல் பேரவஸ்தை,

ஏக்கம் தரவலதோ இக்கணினி? - தூக்கம்

தொலைக்கவைக்கும்; மேனி இளைக்கவைக்கும்; நெஞ்சை

மலைக்கவைக்கு(ம்) அப்பா மடல்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஊடல் பிரித்தால் உடல்சேருங் கால(ம்)வரை

தேடல் மனத்தீ  தெரியாதா? -- கூடலுக்குத்

தட்டிவிட்ட ஓர்நொடியில்  தாவிக் குறுஞ்செய்தி

ஒட்டவைக்கும் அன்பை  உடன்!

 

அகரம் அமுதன்:-

 

குறுஞ்செய்தி காதல் குறையாயுள் கொண்ட

வெறுஞ்செய்தி யாகி விலகும்; - நறுஞ்செய்தி

ஏந்திவரும் கண்ணீர் எழுத்துமடற் காதலது

நீந்திவரும் ஊர்ப்பகைமுன் நின்று!

 

ஏடி வரதராஜன்:-

 

சுட்டப் பலகாரஞ்  சூடாறும் முன்இணையம்

பட்டென்று செய்திப்  பகர்ந்துவிடும் -- கெட்டமடல்

ஊர்விட்டூர் சுற்றி  உனைநாடும் முன்நாறி

நீர்விட்டுப் போகும்  நினை!

 

அகரம் அமுதன்:-

 

காத்திருத்தல் இன்பம்; கடிதம் வரும் வரையில்

வேர்த்திருத்தல் இன்பம் விழியோரம்; - பூத்தொடுத்தாற்

பொல்எழுத்துக் கோர்த்த  புதுமடல் கைசேரக்

அகரம் அமுதன்:-

ஈமெயிலும், செல்ஃபோனும், இன்ஸ்டாக்ராம் வந்தாலும்

பூமயிலே! நெஞ்சம் புகல்வதற்குப் - பூமியிலே

கன்னல் தமிழில் கடிதமிட்டுக் காதலைச்

சொன்னால் கிடைக்கும் சுகம்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஆக்கியதை யெல்லாமும்  ஆறவைக்கும் அக்கடிதம்

தூக்கிப்போம் நேரமெலாம்  தூரமாக; --- மாக்கணிணி

வாய்விட்டுக் காதல்  வரிவிழியால் சொல்லும்முன்

பாய்விரிக்கும் நண்பா  பசிக்கு!

 

அகரம் அமுதன்:-

 

காக்கவைத்துச் சேரும்  கடிதம்போல் பேரவஸ்தை,

ஏக்கம் தரவலதோ இக்கணினி? - தூக்கம்

தொலைக்கவைக்கும்; மேனி இளைக்கவைக்கும்; நெஞ்சை

மலைக்கவைக்கு(ம்) அப்பா மடல்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஊடல் பிரித்தால் உடல்சேருங் கால(ம்)வரை

தேடல் மனத்தீ  தெரியாதா? -- கூடலுக்குத்

தட்டிவிட்ட ஓர்நொடியில்  தாவிக் குறுஞ்செய்தி

ஒட்டவைக்கும் அன்பை  உடன்!

 

அகரம் அமுதன்:-

 

குறுஞ்செய்தி காதல் குறையாயுள் கொண்ட

வெறுஞ்செய்தி யாகி விலகும்; - நறுஞ்செய்தி

ஏந்திவரும் கண்ணீர் எழுத்துமடற் காதலது

நீந்திவரும் ஊர்ப்பகைமுன் நின்று!

 

ஏடி வரதராஜன்:-

 

சுட்டப் பலகாரஞ்  சூடாறும் முன்இணையம்

பட்டென்று செய்திப்  பகர்ந்துவிடும் -- கெட்டமடல்

ஊர்விட்டூர் சுற்றி  உனைநாடும் முன்நாறி

நீர்விட்டுப் போகும்  நினை!

 

அகரம் அமுதன்:-

 

காத்திருத்தல் இன்பம்; கடிதம் வரும் வரையில்

வேர்த்திருத்தல் இன்பம் விழியோரம்; - பூத்தொடுத்தாற்

பொல்எழுத்துக் கோர்த்த  புதுமடல் கைசேரக்

கால்நிற்கு மோதரையில் காண்!

 

ஏடி வரதராஜன்:-

 

போகும் குரல்செய்தி  பொங்கவைக்கும் நெஞ்சத்தை;

ஆகுமோ காகிதஞ்சேர் அஞ்சலினால்? --- வேகும்

மனத்தை உடனணைத்தல் மாண்பு; கடிதம்

கனத்தைக் கொடுக்கின்ற  கல்!

 

அகரம் அமுதன்:-

 

கோர்வையாய் நான்கு சொல் கூறவும் ஆகாமல்

பார்வையால் பேசப் பயன்தெரியும்; - ஊர்க்கதைகள்

அல்லெல்லாம் கூடி அளக்கின்ற உங்களது

'செல்'லாலே காதெல்லாம் சீழ்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஊர்க்கதைகள் அன்றி  உலகக் கதையெல்லாம்

வார்க்கும்"செல் பேசி வகைவகையாய்ப்; --- பார்க்கின்ற

கண்ணோ(டு) உருகண்டும், கால்நடந்தும், பேசுதற்கு

உன்னாலும் ஆமோ உரை?

 

அகரம் அமுதன்:-

 

ஆன்லைனில் காதல் அலப்பறைகள் எல்லாமும்

வீண்வினையில் தானே முடிகிறது; - நான் சொல்லும்

காகிதத் தூதுவிடு காதலே கண்ணியத்தைச்

சாகும் வரைகாக்கும் சார்ந்து!

 

ஏடி வரதராஜன்:-

 

எல்லாம் சரியமுதா; இந்த மடல்வரைந்த(து)

உள்ளபடி யாரென்று  உளம்கேட்கும்; -- கள்ளமற

வான்செயற்கைக் கோள்வழியே வாரும் இணையமடல்

நான்தான் எனஉரைக்கும் நன்கு!

 

அகரம் அமுதன்:-

 

ஃபேக்ஐடி பற்றிநான் பேசவா? பேசினால்

லாக்ஆவாய் என்னிடத்தில் லாவகமாய்; - யோக்கியன்போல்

உள்பெட்டி தன்னில் உணர்ச்சியைத் தூண்டுகிற

கள்ளரை நானறிவேன் காண்!

 

ஏடி வரதராஜன்:-

 

எல்லா துறையும் இதுபோல் திருட்டிருக்கும்

இல்லையென நானும் இயம்பவில்லை --- சொல்லக்கேள்

உள்ள தொழில்நுட்பம் உண்மை தனையழகாய்ப்

புள்ளிவைத்துக் காட்டும் புரி!

 

அகரம் அமுதன்:-

 

சாமத்தில் போர்வைக்குள் சாட்டிங்கில் மேய்வதெல்லாம்

காமத்தைத் தூண்டும் கடைசியில்; - பூமெத்தைத்

தூக்கக் கனவோடும் தொட்டுவிடா மற்பேசி

ஏக்கத்தில் வாழ்வ(து) எழில்!

 

ஏடி வரதராஜன்:-

 

சாட்டிங்கில் காதல் சனித்தால் உடன்மனங்கள்

மீட்டிங்கில் கண்டு மிகைந்தினிக்கும் --- லேட்டாகும்

உங்கள் மடல்தான் உளத்தில் வலிகூட்டும்

எங்கள் இணையம் இனிப்பு!

 

அகரம் அமுதன்:-

 

சாட்டிங்கில் காதல் சனித்ததென்றாய்; பின்பந்த

மீட்டிங்கோ டேன்நிறுத்தி விட்டாய் நீ? - டேட்டிங்கும்

போவதைச் சொல்வாய்;  புலனடக்கம் இல்லாமல்

மேய்வதைச் சொல்வாய் விரைந்து!

 

ஏடி வரதராஜன்:-

 

பார்த்துப் பிடித்திருந்தால் பற்றும் இருநெஞ்சும்

ஈர்த்திணைவ தெங்கும் இயல்பாகும் -- சேர்த்துவைக்க

உந்தியுந்தி அஞ்சல் உனையடையும் முன்னாகந்

தந்துவிட்டால் என்ன தவறு?

 

அகரம் அமுதன்:-

 

எண்ணத்தைத் தாளில் எழுதி எடுத்துப் போய்ப்

பெண்ணிடத்தில் நீட்டல் பெரும்பாடு; - பெண்ணவளும்

வாங்குவதா? நீங்குவதா? வாடிநிற்பாள்; இந்த சுகம்

ஆங்கில்லை ஆன்லைனில் ஆம்!

 

ஏடி வரதராஜன்:-

 

வைத்த ஒலியமைப்பில் வந்தால் அழைப்படடா!

தைக்க மலர்க்கணைகள் தாவிவரும் --- கைக்குள்

அதிர்கின்ற செல்பேசி அன்பை உலுக்கி

உதிர்க்குமையா தேன்மழையை உள்!

 

அகரம் அமுதன்:-

 

காணும் கடிதத்தில் கையெழுத்தும் ஓவியமே;

ஆணும் அணங்குமென்சொல் ஆதரிப்பர்; - பேணும்உம்

மென்பேசி தன்னிலிது மிஸ்ஸிங்; மடல்வரைந்து

தன்காதல் சொல்லல் தகவு!

 

ஏடி வரதராஜன்:-

 

ஓவியமாய் அஞ்சல் உயர்ந்திடினுந் தன்படத்தைக்

காவியமாய்க் காட்டும் கவினிணையம்; -- தாவிவரும்

நெஞ்சத்தின் தேவை நிஜம்தான்; அதுதவறின்

கஞ்சம் வடிக்குமையா கண்!

 

அகரம் அமுதன்:-

 

பிரிவின் துயரால் பெருகிவரும் கண்ணீர்

வரியின் சிலவெழுத்தை மாய்க்கும்; - அரியவர்தம்

அன்பின் மிகுதியிது; அங்கில்லை இஃதேபோல்

நின்று நிலைக்கும் நிகழ்வு!

 

ஏடி வரதராஜன்:-

 

தொடுதிரையைப் பார்த்துத் துயர்மறக்கும் காட்சி

விடும்மடலில் எங்கே விவரி? -- கடுங்கோபம்

கொண்டாலும் புண்ணைக் குறுஞ்செய்தி ஆற்றுதல்போல்

உண்டாசொல் அஞ்சலிலே ஓர்ந்து!

 

அகரம் அமுதன்:-

 

மொழிநுட்பம் காட்ட முனைகிறாய்; இந்தத்

தொழில்நுட்பம் தீராத தொல்லை; - எழில்நுட்பம்

எல்லாம் அறிந்தஎங்கள் ஏட்டுமடல் இந்நாளில்

இல்லாமற் செய்த(து) இயைந்து!

 

ஏடி வரதராஜன்:-

 

தொல்லையெல்லாம் இல்லை அமுதா! தொழில்நுட்பம்

எல்லையில்லா சேவை இசைந்தளிக்கும்; --- இல்லையில்லை....

என்முயலின் கால்கள்மூன்(று)  என்றால் உமகினிநான்

என்சொல்லக் கூடும்  இயம்பு?

 

அகரம் அமுதன்:-

 

ஆண்ட்ராய்டு ஃபோனால் அவதிப் படும்இளைஞர்

மீண்டு வரவே விளம்பினேன்; - வேண்டாம்இச்

சாக்கடையே போதுமெனச் சாற்றுகிறாய்; வாசமிக்க

பூக்கடைவேண் டாமென்றால் போ!

 

ஏடி வரதராஜன்:-

 

வரிவரியாய் அஞ்சல்தான் வாழ்வினிமை என்று

புரியாமல் பேசுகிறாய் பொய்யை; --- சரிசரிவா!

பட்டறிவு கொண்டவர்கள் பார்க்கட்டும்; ஆங்கவர்கள்

திட்டமிட்டுச் சொல்வார்கள் தீர்ப்பு!

 

அகரம் அமுதன்:-

வாதத்தை வைத்தோம்; வழக்கை அறிஞர்தம்

பாதத்தில் வைத்தோம் பதிலுக்காய்; - நாத

வடிவான தேவி நலம்புரிவாள்; நீஉன்

பிடிவாதம் விட்டுப் பிடி!

 

14/8/2020