செவ்வாய், 2 ஜூன், 2026

ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்!

 


ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்!

 

விஜய் –

 

தாயை இழந்து தவிக்கின்ற நண்பனே!

சேயைப்போல் விம்மும் சினேகிதா! - தீயையள்ளி

இட்டசெய்தி கேட்டிடிந்தேன்; என்போல் இடிந்தஉன்னைத்

தொட்டணைத்துத் தேற்றவந்தேன் தோள்! 01

 

அஜித் –

 

தக்க சமயத்தில் தாங்கிப் பிடித்தெனது

துக்கங்கள் யாவும் துடைப்பவனே! - மக்கள்

முதல்வனே! என்தாய் மடிபிறவா மூத்த

புதல்வனே! ஆறாதிப் புண்! 02

 

விஜய் –

 

முற்றும் துறந்த முனிவனையும் விட்டுவைக்காப்

பெற்றதாய்ப் பாசம் பெரிதன்றோ? – பற்றுவிட்டும்

தட்டிக் கழிக்காமல் தாய்இழப்பைக் கண்ணீரால்

பட்டினத்தான் பாடிவைத்தான் பாட்டு! 03

 

அஜித் –

 

ஆரடித்த போதும் அசையா இரும்புநெஞ்சம்

பாரடித்துக் கொண்டு படபடத்தல்; – பேரதிர்ச்சி

தந்துவிட்டுப் போய்விட்டாள் தாய்;நான் அனாதையாய்

நொந்துசா கின்றேன் நொடிந்து! 04

 

விஜய் –

 

நாள்முழுதும் நாமிணைந்து நான்குகண்க ளாலழுதும்

மீள்வதில்லை சென்ற‍வுயிர் மேனியிடம்; – வாள்கிழித்த

நெஞ்சின் வடுபோல் நிலைத்த‍துயர் என்றாலும்

கொஞ்சம் தணிவாய் கொதிப்பு! 05

 

அஜித் -

 

பால்வழியத் தொட்டில் படுத்துறங்க வைத்தவளைக்

கால்கழிந்த கட்டிலிலே காண்பேனோ? – தால்சுமந்த

தாலாட்டும் எங்கே? தளிர்வாய்ச் சிரிப்புமெங்கே?

ஏலாதோ கேட்க இனி!? 06

 

விஜய் –

 

பத்தாள் பலம்கொண்ட பந்தைய வீரன்நீ

கொத்தாய் நிலைகுலையக் கூடாது; – புத்தேள்

உலகிருந்து உன்னை உயர்த்துவாள் அன்னை

நலம்விளைக்கும் நன்நினைவை ந‍த்து! 07

 

அஜித் –

 

தஞ்சமாய் உன்மடியைத் தந்ததால் நண்பனே!

கொஞ்சமாய் நிம்மதி கொள்கிறேன்; – பஞ்சராய்

ஆன‍என் நெஞ்சுக் களித்தாய் அமுதமொழி

தேனள்ளிப் பேச்சில் தெளித்து! 08


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக