வேண்டுமோ
இன்னோர் சுதந்திரம்!?
விடுதலை வேட்கையின் வீரியம்
கண்டு
வெள்ளையன் ஓட்டம் எடுத்தானே!
– அவன்
கடமையைச் சரியாய்ச் செய்த
நல்லவர்
கைகளில் நாட்டைக் கொடுத்தானே!
எதற்கும் கொஞ்சம் இருக்கட்டும்
என்று
இவன்கையில் ஓட்டைக் கொடுத்தானே–அதன்
மதிப்பை உணரா மடயன் ஓட்டைப்
விற்றே நாட்டைக் கெடுத்தானே!
தீயவர் என்று தெரிந்த பின்னாலும்
தேர்தலில் பலரை வெல்லவைத்தான்!
தகுதியில் லாரைத் தலைவர்
ஆக்கித்
தனக்குத் தானே கொல்லிவைத்தான்!
பெற்ற சுதந்திரம் பேணிக்
காத்த
பெருமை இவனுக் கிருக்கிறதா?
குற்றம் குறைகள் கூறிட மட்டும்
குறிப்பாய்த் திருவாய் திறக்கிறதா?
சுட்டு விரல்போய் மற்றவர்
மீது
குற்றம் சாட்டும் போதினிலே
மற்ற விரல்கள் தன்னை நோக்கி
வழக்கு ரைப்பதை அறிவதில்லே!
எதையும் இங்கே விமர்சனம்
செய்வதில்
ஏற்றம் என்ன இருக்கிறது?
எதிலே பிழையோ இறங்கிச் சரிசெய்
மாற்றம் அதிலே பிறக்கிறது!
சாக்கடை நாற்றம் காற்றில்
கலந்தால்
மூக்கினை மூடுதல் முறையில்லை!
சீக்கிரம் இறங்கிச் சுத்தம்
செய்யும்
போக்கினை வளர்த்தால் குறையில்லை!
வீதியில் ஏதும் விபத்து நடந்தால்
வேடிக்கை பார்ப்பது வீரமில்லை!
தன்படம் எடுத்துத் தம்பட்டம்
அடிக்கும்
தரங்கெட்ட செய்கை மாறவில்லை!
கண்முன் நடக்கும் கொடுமைகள்
கண்டால்
கண்வாய் செவியைப் பொத்தாதே!
புலனம் கீச்சகம் முகநூல்
தன்னில்
போர்வீ ரன்போல் கத்தாதே!
தனிமனி தன்தன் சுதந்திரம்
இங்கே
தறிகெட்டுத் தானே கிடக்கிறது!
வனிதையர்க் கெதிராய் வருடம்
முழுதும்
வன்கொடு மைகள் நடக்கிறது!
மருமகள் தொட்டால் மட்டும்
தானே
மண்ணெண்ணை அடுப்பு வெடிக்கிறது!
கருவில் சுமந்தது பெண்சிசு
வானால்
கள்ளிப் பாலைக் கொடுக்கிறது!
சின்ன புத்தி மனுஷன் வக்கிரம்
சிறுமியைக் கூட விடவில்லை
என்ன சட்டம் இயற்றி என்ன?
எதற்கும் இவன்பயப் படவில்லை!
இறைவன் ஒருவன் இருக்கின்
றான்அதை
இதயத் தில்எவன் நிறைக்கின்றான்?
இறக்கும் வரையில் எகிறி குதித்து
இறுமாப் பில்தான் திளைக்கின்றான்!
மெலியோன் என்றால் ஏறி மிதித்து
வலியோன் புத்தி சுகப்படுது!
எலியைப் பூனையை நாயைப் பார்அந்
நாயோ கல்லுக்குப் பயப்படுது!
இருப்போர் கைகள் இல்லார்
கண்டால்
எடுத்துக் கொடுக்க நீள்கிறதா?
ஒருசாண் வயிற்றின் உறுபசி
போக்க
உலகப் போர்கள் மூள்கிறதா?
படித்தான் எல்லாம் படித்தான்
ஆனால்
பகுத்தறி வென்பது வளர்கிறதா?
அடுத்தவ ரோடு இணங்கி இருக்க
அன்பும் அறனும் மலர்கிறதா?
நடக்கிற மனிதன் தவறி விழுந்தால்
பாதையின் மீது பழியென்ன?
அடுத்தவன் மீது பழியைப் போடும்
அறிவால் விளைந்த பயனென்ன?
உன்னைத் திருத்து உன்னைப்
புதுக்கு
உலகைப் பின்னர் உற்றுப்பார்
உன்னில் உண்மை உறைந்து கிடந்தால்
உலகோர் உன்னை ஒத்துப்பார்!
இருக்கிற சுதந்திரம் போதும்
இங்கே
இன்னொரு சுதந்திரம் கேட்காதே!
இருப்பதை வைத்து இன்பமாய்
வாழ்ந்தால்
இன்னல் வந்து தாக்காதே!
அமுதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக