வியாழன், 18 ஜூன், 2026

130. நெஞ்சொடு புலத்தல்!

 

130. நெஞ்சொடு புலத்தல்!

 

 

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா த‍து? 1291

 

என்னைக் கருதாமல் என்பின் திரியாமல்

தன்னைக் கருதுமவர் தன்நெஞ்சம்; – என்நெஞ்சே

நீமட்டும் என்துணையால் நில்லாமல் நீங்குகிறாய்

காமத்தி னாலே கழன்று!

 

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு! 1292

 

அன்பில்லார் என்றே அறிந்தபின்னும் போய்அவரின்

முன்னின்றாய் நெஞ்சே! முறைதானா? – என்றென்றும்

உண்மையில் நம்மை உளத்தால் வெறுத்தொதுக்க

எண்ணிடவும் மாட்டாரே என்று!

 

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செல‍ல்! 1293

 

நண்பரென்ப தில்லை நலிந்துகெட்டார்க் கென்கின்ற

உண்மை அறிந்தா உடன்சென்றாய்? – அண்மை

எனக்கிருக்க மாட்டா தெடுத்தெறிந்து விட்டு

மனமுவந்தென் னைதனிமை வைத்து!

 

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே!

துனிசெய்து துவ்வார்காண் மற்று! 1294

 

என்னைத் தனிவிடுத்து எங்கோ புறப்பட்ட

உன்னிற் பிணக்கின்பம் உண்டாகா - துன்னுடனே

ஒன்றி இருந்தின்ப ஊடற் சுவைகாண

இன்றளவில் யாரும் இலர்!

 

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு! 1295

 

பக்கமிலாப் போதும் படபடக்கும்; காதலவர்

பக்கமிரார் என்றும் பரிதவிக்கும்; – எக்கணமும்

நீங்காத துன்பத்தை நீட்டி எனக்களித்துத்

தூங்காது நெஞ்சம்அந் தோ!

 

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு! 1296

 

நான்தனியே தானிருந்து நாயகரின் பொய்ப்பிரிவைத்

தான்நினைந்து வாடுகையில் தண்டனையாய் – ஊன்வேண்டி

ஊள்ளமே என்னை உணவாக உட்கொண்ட

பள்ளமே நானென் பது!

 

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு! 1297

 

என்ன வரைமறக்க ஏலா மடநெஞ்சு

தன்னொடு சேர்ந்து தறிகெட்டுப் – பின்பும்நான்

ஏன்மறக்க லாகா தெனுமறிவும் இல்லாமல்

நான்மறந்தேன் நான்மறந்தேன் நாண்!

 

எள்ளின் இழிவாமென் றெண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு! 1298

 

வார்த்தைகள் வீசி வசைபாடி என்னவர்மேல்

போர்த்துவ தாலே புகழிலையென்று - ஆர்த்தெழும்

ஆருயிர்க் காதல் அமைவால் அவர்பெருமை

நேருறப் பேசும்என் நெஞ்சு!

 

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சம் துணையல் வழி! 1299

 

வந்த துயரை வடித்துப் புறந்தள்ள

எந்த மனிதர் எனக்கருள்வார்? – சொந்தமனம்

பக்கத்தில் நின்று பரிதவிப்பை ஆற்றாமல்

பொக்கென்று தான்விலகும் போது!

 

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி! 1300

 

மாற்றாரும் எந்த மத‍த்தாரும் என்னளவில்

வேற்றாராய்ப் போதல் வியப்பில்லை; - ஏற்ற‍என்

புந்தியே என்னைப் புரிந்துறவாய்ப் பேணாமல்

குந்தியே தானிருக்கும் போது!

129. புணர்ச்சி விசும்பல்!

 

129. புணர்ச்சி விசும்பல்!

 

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு! 1281

உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளத்தால்

கண்டால் மகிழ்வில்லை கள்ளுக்குக் - கண்டாலும்

பூமனத்தில் எண்ணம் புகுந்தாலும் பொங்கிவரும்

காமத்தில் தோன்றும் களிப்பு!

 

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காம‍ம் நிறைய வரின்! 1282

 

வட்டப் பனங்காய்போல் வந்து பெருங்காதல்

கட்டுக் கடங்காமல் காணுகையில் – குட்டித்

தினையளவும் ஆங்கே திரளாமை வேண்டும்;

முனைமழுக்கும் ஊடல் முயல்பு!

 

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண்! 1283

 

என்னைப் புறந்தள்ளி என்ன‍ன்பைப் பின்தள்ளித்

தன்னைக் கருதித் தடம்மாறும் – மன்னவனை

ஏனத்தான்? என்றே எதிர்க்கேள்வி கேட்காமல்

காணத்தான் ஏங்கிடுதே கண்!

 

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதென் நெஞ்சு! 1284

 

சண்டை பிடித்தவனின் சட்டைப் பிடித்தவனை

உண்டில்லை என்றாக்க ஓடினேன் – நண்பியே!

நெஞ்சம் அதுமறந்து நேசம் வளர்க்கிறது

மஞ்சம்தான் காண மலர்ந்து!

 

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து! 1285

 

மையெழுதும் கோலை மலர்விழிக்கு மையெடுத்துக்

கையெழுதக் காணாத கண்ணேபோல் – பொய்யெழுதும்

மன்னவர் உற்ற வழுவறியேன் ஆங்கவரின்

பொன்முகம் காணுகிற போது!

 

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை! 1286

 

குற்றங்கள் ஆய்ந்து குறிப்பெடுக்கத் தானறியேன்

பற்றுடையார் பூமுகம் பார்க்கையில்; – முற்றும்பின்

குற்றமல்லா வற்றைக் குறிப்பெடுக்கத் தானறியேன்

பொற்றோள்கள் பாராத போது!

 

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து! 1287

 

ஆற்றுப் புதுவெள்ளம் ஆளிழுக்கும் என்றறிந்தும்

போற்றிக் குமர‍ர் புகுதல்போல் – தோற்றுத்

துயரடைவேன் என்றறிந்தும் தூக்கிப் பிடித்தேன்

தியங்காமல் ஊடல் செறித்து!

 

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு! 1288

 

தாழ்மதிப்பைத் தந்தும் தனமழித்தும் மேனிநலம்

வீழ்வித்தும் துன்பில் விழுத்தியும் - சூழ்போதைக்

காரணமாய் உண்டு களிப்பார்க்குக் கள்ளின்நேர்

தோரணை காட்டும்நின் தோள்!

 

மலரினும் மெல்லிது காம‍ம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்! 1289

 

பூந்தும்பி மொய்க்கின்ற பூவினும் மெல்லியது

காந்துகிற நோயளிக்கும் காதல்தான் – மாந்தருள்

கையாளக் கற்றுக் கலந்து பயனடைவார்

மெய்யாலு மேச்சிலரா மே!

 

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று! 1290

 

காந்த விழியாற் கலகம் நடாத்திப்பின்

சாந்தம் அடைந்து தழுவினாள்; – பூந்தளிர்

என்னை விடவும் எனைத்தழுவத் தான்விரைந்து

என்னிற் கலந்தாள் இயைந்து!

116 பிரிவாற்றாமை!

 

116 பிரிவாற்றாமை!

 

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை! 1151

 

செல்லேன் எனுஞ்செய்தி செப்ப முடியுமெனில்

சொல்வாய், எனது துயர்களைவாய்; – அல்லாமல்

சீக்கிரம் மூண்டுவரும் செய்தியுண்டேல், இன்னுயிர்

தேக்கியுயிர்ப் பார்செவியிற் சேர்!

 

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு! 1152

 

முன்னமவர் பார்வை முழுஇன்பம் நல்கியது

என்றன் இளமனதிற்(கு) எல்லையின்றி; – இன்றளவில்

தொட்டுக் கலப்பதும் துன்பம் தருகிறது

விட்டுப் பிரிவரென வேர்த்து!

 

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்! 1153

 

அச்சம் விடுதல் அரிதின் அரிதன்றோ?

மெச்சும் அறிவுடையார் வீட்டினிலும் – சிட்சமயம்

விட்டுப் பிரிகின்ற வேதனைச் செய்திசெவிக்(கு)

எட்டும் படியால் எனக்கு!

 

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு! 1154

 

நீங்கேன் உனை’,யென்று நேற்றுவரைச் சொன்னவர்

நீங்க விழையும் நிலையினில் – ஆங்கவரின்

நம்பிக்கை மோசடியை நம்பி இருந்தவள்மேல்

இம்மியள(வு) உண்டோ இழுக்கு!?

 

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு! 1155

 

காக்கத் துணிவாயேல் காதலரைக் காத்துக்கொள்

ஏக்கத்தில் பின்வாடாய் என்நெஞ்சே! – நீக்கத்தால்

மாள எனைவிடுத்த மன்ன‍வன் இன்னுறவு

மீளல் எளிதல்ல வே!

 

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை! 1156

 

சொல்லிப் பிரிவைத் தொடரும் அளவிற்குக்

கல்நெஞ்சம் கொண்டிருக்கும் காதலரால் – நல்லவை

நேர்ந்துவிடும் என்கிற நெஞ்சின்நப் பாசையினால்

தேர்ந்தபயன் இல்லை தெளிவு!

 

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை! 1157

 

முன்கை மணிக்கட்டு மொத்தமும் சூழ்ந்த,வளை

முன்பே அறிந்து முழங்கியதா? – மன்னவனின்

வன்பிரிவால் கைகள் வருந்தி மெலிவதனைத்

தன்ன‍றிவால் கண்டு தளர்ந்து!

 

இன்னாது இன‍ன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு! 1158

 

உற்றார் உறவல்லார் ஊரில் குடியிருத்தல்

வற்றாத் துயரம் வழங்கிடும்; – மற்றதனின்

மிக்கத் துயரம் விளைத்திடும், காதலர்

பக்கமிலாப் போதில் படர்ந்து!

 

அகதியைப் போல அயலூரில் வாழ்தல்

மிகவும் துயரம் விளைக்கும்; – மிகவதிக

இன்னலை நல்கும் இனிமைமிகு காதலரின்

வன்பிரிவால் ஏக்கம் வளர்ந்து!

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ! 1159

 

தொட்ட உடன்தன்னைத் தொட்டவர் பூவிரலை

எட்டிச் சுடுவதுபோல் இல்லாமல் – முட்டியெழும்

கட்டழகுக் காதலெனும் காய்ச்சலைப் போலத்தீ

விட்டாற் சுடுமோ விரைந்து?

 

அரிதாற்றி அல்ல‍ல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்! 1160

 

அரியன செய்தும், அகத்துயர்நோய் கொய்தும்,

பிரிவினை ஏற்றுவப் பெய்தும், – பெரிதாக

ஒன்றும் நிழவில்லை என்பதுபோல் வாழ்பவர்கள்

இன்றுமுளார் பற்பலரே என்று!

115 அலர் அறிவுறுத்தல்

 

115 அலர் அறிவுறுத்தல்

 

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்! 1141

 

புறம்பேசு வார்பேச்சே போகும் உயிரைத்

திறம்பட‍ மீட்டுவந்து சேர்க்கும்; – மறந்துமிதை

இன்றளவும் ஊர்காண ஏலா திருப்பதென்

முன்வினைக் காரண மோ!?

 

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்! 1142

 

கூறுபழிச் சொல்லால் குறையவிடா தெம்காதல்

ஏறுமுகம் காணவைத்தார் இவ்வூரார்; – நாறுகிற

அல்லிமலர் போலும் அகன்ற விழியுடைய

மல்லிகையாள் மேன்மை மறந்து!

 

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து! 1143

 

ஊர்முழுதும் எம்பேச்சே ஓங்கி ஒலிப்பதும்,

பார்முழுதும் எம்முறவைப் பாடுவதும், – வேர்பிடித்த

வெண்காதல் மன்னவனின் மேனி தழுவிய

புண்ணியம்யான் பெற்றதனைப் போன்று!

 

கவ்வையால் கவ்விது காம‍ம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து! 1144

 

காணும் பழிச்சொல்லே காதலக ராதியில்

பேணும் கலைச்சொல்லாய்ப் பேறுபெறும்; – வேணுமட்டும்

இப்பெரும் ஊர்ப்பழிச்சொல் இல்லாது போய்விடின்

சப்பென்று போகும் சலித்து!

 

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காம‍ம்

வெளிப்படும் தோறும் இனிது! 1145

 

உண்ணுங்கால் கள்ளையின்னும் உண்ண அடிமனத்தே

எண்ணம் இனிதுற்(று) எழுதல்போல், – உண்மையலர்

தோன்றும் பொழுதெல்லாம் துய்க்கும் பெருங்காதல்

ஈன்றுதரும் இன்பம் இனிது!

 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று! 1146

 

காதலரைப் பொன்மலர்க் கண்களால் கண்டதெல்லாம்

மாத‍த்தில் ஓர்நாள் மணித்துளியே; – பாதகச்சொல்

அம்புலியைத் தின்னும் அரவுபோல் தோன்றிற்றே

இம்பருல கெங்கும் இனிது!

 

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்! 1147

 

ஊரார் குறைகூறல் உற்ற உரமாக,
நீராகி அன்னைசொல் வேர்பாய, - பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்

கடிதோங்கிக் காய்க்கும்இந் நோய்!

 

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காம‍ம் நுதுப்பேம் எனல்! 1148

 

நெய்யெடுத்(து) ஊற்றி நெருப்பை அணைக்கின்ற

பொய்யளக்கும் செய்கையினைப் போன்றதே – வையத்தார்

சொல்லெலாம் சூழ்வதந்திச் சொற்களால் காதலைக்

கொல்ல‍லாம் என்கின்ற கூற்று!

 

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை! 1149

 

ஊர்வதந்திக் கெல்லாம் உளம்நொந்தால் ஆகுமா?

தீர்,வருத்தம்’, என்றன்பு செய்தவன் – பார்கண்டு

வெட்கும் படியாய் விடைபெற்றுச் சென்றதற்காய்

உட்கும் படிநாம் உயிர்த்து!

 

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்கும்இவ் வூர்! 1150

 

தானும் விரும்பித் தனதினிய காதலன்பை

வானும் வியக்க வழங்குவார்; – நானுமே

வாங்க விரும்பும் வத‍ந்திகளை இவ்வூரார்

ஓங்கி ஒலித்த உடன்!