வியாழன், 18 ஜூன், 2026

130. நெஞ்சொடு புலத்தல்!

 

130. நெஞ்சொடு புலத்தல்!

 

 

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா த‍து? 1291

 

என்னைக் கருதாமல் என்பின் திரியாமல்

தன்னைக் கருதுமவர் தன்நெஞ்சம்; – என்நெஞ்சே

நீமட்டும் என்துணையால் நில்லாமல் நீங்குகிறாய்

காமத்தி னாலே கழன்று!

 

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு! 1292

 

அன்பில்லார் என்றே அறிந்தபின்னும் போய்அவரின்

முன்னின்றாய் நெஞ்சே! முறைதானா? – என்றென்றும்

உண்மையில் நம்மை உளத்தால் வெறுத்தொதுக்க

எண்ணிடவும் மாட்டாரே என்று!

 

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செல‍ல்! 1293

 

நண்பரென்ப தில்லை நலிந்துகெட்டார்க் கென்கின்ற

உண்மை அறிந்தா உடன்சென்றாய்? – அண்மை

எனக்கிருக்க மாட்டா தெடுத்தெறிந்து விட்டு

மனமுவந்தென் னைதனிமை வைத்து!

 

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே!

துனிசெய்து துவ்வார்காண் மற்று! 1294

 

என்னைத் தனிவிடுத்து எங்கோ புறப்பட்ட

உன்னிற் பிணக்கின்பம் உண்டாகா - துன்னுடனே

ஒன்றி இருந்தின்ப ஊடற் சுவைகாண

இன்றளவில் யாரும் இலர்!

 

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு! 1295

 

பக்கமிலாப் போதும் படபடக்கும்; காதலவர்

பக்கமிரார் என்றும் பரிதவிக்கும்; – எக்கணமும்

நீங்காத துன்பத்தை நீட்டி எனக்களித்துத்

தூங்காது நெஞ்சம்அந் தோ!

 

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு! 1296

 

நான்தனியே தானிருந்து நாயகரின் பொய்ப்பிரிவைத்

தான்நினைந்து வாடுகையில் தண்டனையாய் – ஊன்வேண்டி

ஊள்ளமே என்னை உணவாக உட்கொண்ட

பள்ளமே நானென் பது!

 

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு! 1297

 

என்ன வரைமறக்க ஏலா மடநெஞ்சு

தன்னொடு சேர்ந்து தறிகெட்டுப் – பின்பும்நான்

ஏன்மறக்க லாகா தெனுமறிவும் இல்லாமல்

நான்மறந்தேன் நான்மறந்தேன் நாண்!

 

எள்ளின் இழிவாமென் றெண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு! 1298

 

வார்த்தைகள் வீசி வசைபாடி என்னவர்மேல்

போர்த்துவ தாலே புகழிலையென்று - ஆர்த்தெழும்

ஆருயிர்க் காதல் அமைவால் அவர்பெருமை

நேருறப் பேசும்என் நெஞ்சு!

 

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சம் துணையல் வழி! 1299

 

வந்த துயரை வடித்துப் புறந்தள்ள

எந்த மனிதர் எனக்கருள்வார்? – சொந்தமனம்

பக்கத்தில் நின்று பரிதவிப்பை ஆற்றாமல்

பொக்கென்று தான்விலகும் போது!

 

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி! 1300

 

மாற்றாரும் எந்த மத‍த்தாரும் என்னளவில்

வேற்றாராய்ப் போதல் வியப்பில்லை; - ஏற்ற‍என்

புந்தியே என்னைப் புரிந்துறவாய்ப் பேணாமல்

குந்தியே தானிருக்கும் போது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக