129. புணர்ச்சி விசும்பல்!
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில்
காமத்திற் குண்டு! 1281
உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளத்தால்
கண்டால் மகிழ்வில்லை கள்ளுக்குக் -
கண்டாலும்
பூமனத்தில் எண்ணம் புகுந்தாலும் பொங்கிவரும்
காமத்தில் தோன்றும் களிப்பு!
தினைத்துணையும் ஊடாமை வேண்டும்
பனைத்துணையும்
காமம் நிறைய வரின்! 1282
வட்டப் பனங்காய்போல் வந்து பெருங்காதல்
கட்டுக் கடங்காமல் காணுகையில் – குட்டித்
தினையளவும் ஆங்கே திரளாமை வேண்டும்;
முனைமழுக்கும் ஊடல் முயல்பு!
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்! 1283
என்னைப் புறந்தள்ளி என்னன்பைப்
பின்தள்ளித்
தன்னைக் கருதித் தடம்மாறும் – மன்னவனை
ஏனத்தான்? என்றே எதிர்க்கேள்வி கேட்காமல்
காணத்தான் ஏங்கிடுதே கண்!
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு! 1284
சண்டை பிடித்தவனின் சட்டைப் பிடித்தவனை
உண்டில்லை என்றாக்க ஓடினேன் – நண்பியே!
நெஞ்சம் அதுமறந்து நேசம் வளர்க்கிறது
மஞ்சம்தான் காண மலர்ந்து!
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து! 1285
மையெழுதும் கோலை மலர்விழிக்கு
மையெடுத்துக்
கையெழுதக் காணாத கண்ணேபோல் – பொய்யெழுதும்
மன்னவர் உற்ற வழுவறியேன் ஆங்கவரின்
பொன்முகம் காணுகிற போது!
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை! 1286
குற்றங்கள் ஆய்ந்து குறிப்பெடுக்கத்
தானறியேன்
பற்றுடையார் பூமுகம் பார்க்கையில்; – முற்றும்பின்
குற்றமல்லா வற்றைக் குறிப்பெடுக்கத்
தானறியேன்
பொற்றோள்கள் பாராத போது!
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து! 1287
ஆற்றுப் புதுவெள்ளம் ஆளிழுக்கும்
என்றறிந்தும்
போற்றிக் குமரர் புகுதல்போல் – தோற்றுத்
துயரடைவேன் என்றறிந்தும் தூக்கிப்
பிடித்தேன்
தியங்காமல் ஊடல் செறித்து!
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு! 1288
தாழ்மதிப்பைத் தந்தும் தனமழித்தும்
மேனிநலம்
வீழ்வித்தும் துன்பில் விழுத்தியும் - சூழ்போதைக்
காரணமாய் உண்டு களிப்பார்க்குக்
கள்ளின்நேர்
தோரணை காட்டும்நின் தோள்!
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்! 1289
பூந்தும்பி மொய்க்கின்ற பூவினும்
மெல்லியது
காந்துகிற நோயளிக்கும் காதல்தான் – மாந்தருள்
கையாளக் கற்றுக் கலந்து பயனடைவார்
மெய்யாலு மேச்சிலரா மே!
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று! 1290
காந்த விழியாற் கலகம் நடாத்திப்பின்
சாந்தம் அடைந்து தழுவினாள்; – பூந்தளிர்
என்னை விடவும் எனைத்தழுவத் தான்விரைந்து
என்னிற் கலந்தாள் இயைந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக