116 பிரிவாற்றாமை!
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை! 1151
செல்லேன் எனுஞ்செய்தி செப்ப முடியுமெனில்
சொல்வாய், எனது துயர்களைவாய்; – அல்லாமல்
சீக்கிரம் மூண்டுவரும் செய்தியுண்டேல், இன்னுயிர்
தேக்கியுயிர்ப் பார்செவியிற் சேர்!
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு! 1152
முன்னமவர் பார்வை முழுஇன்பம் நல்கியது
என்றன் இளமனதிற்(கு) எல்லையின்றி; – இன்றளவில்
தொட்டுக் கலப்பதும் துன்பம் தருகிறது
விட்டுப் பிரிவரென வேர்த்து!
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்! 1153
அச்சம் விடுதல் அரிதின் அரிதன்றோ?
மெச்சும் அறிவுடையார் வீட்டினிலும் –
சிட்சமயம்
விட்டுப் பிரிகின்ற வேதனைச் செய்திசெவிக்(கு)
எட்டும் படியால் எனக்கு!
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு! 1154
‘நீங்கேன் உனை’,யென்று நேற்றுவரைச்
சொன்னவர்
நீங்க விழையும் நிலையினில் – ஆங்கவரின்
நம்பிக்கை மோசடியை நம்பி இருந்தவள்மேல்
இம்மியள(வு) உண்டோ இழுக்கு!?
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு! 1155
காக்கத் துணிவாயேல் காதலரைக் காத்துக்கொள்
ஏக்கத்தில் பின்வாடாய் என்நெஞ்சே! – நீக்கத்தால்
மாள எனைவிடுத்த மன்னவன் இன்னுறவு
மீளல் எளிதல்ல வே!
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை! 1156
சொல்லிப் பிரிவைத் தொடரும் அளவிற்குக்
கல்நெஞ்சம் கொண்டிருக்கும் காதலரால் – நல்லவை
நேர்ந்துவிடும் என்கிற நெஞ்சின்நப்
பாசையினால்
தேர்ந்தபயன் இல்லை தெளிவு!
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை! 1157
முன்கை மணிக்கட்டு மொத்தமும் சூழ்ந்த,வளை
முன்பே அறிந்து முழங்கியதா? – மன்னவனின்
வன்பிரிவால் கைகள் வருந்தி மெலிவதனைத்
தன்னறிவால் கண்டு தளர்ந்து!
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு! 1158
உற்றார் உறவல்லார் ஊரில் குடியிருத்தல்
வற்றாத் துயரம் வழங்கிடும்; – மற்றதனின்
மிக்கத் துயரம் விளைத்திடும், காதலர்
பக்கமிலாப் போதில் படர்ந்து!
அகதியைப் போல அயலூரில் வாழ்தல்
மிகவும் துயரம் விளைக்கும்; – மிகவதிக
இன்னலை நல்கும் இனிமைமிகு காதலரின்
வன்பிரிவால் ஏக்கம் வளர்ந்து!
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ! 1159
தொட்ட உடன்தன்னைத் தொட்டவர் பூவிரலை
எட்டிச் சுடுவதுபோல் இல்லாமல் –
முட்டியெழும்
கட்டழகுக் காதலெனும் காய்ச்சலைப் போலத்தீ
விட்டாற் சுடுமோ விரைந்து?
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்
பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்! 1160
அரியன செய்தும், அகத்துயர்நோய்
கொய்தும்,
பிரிவினை ஏற்றுவப் பெய்தும், – பெரிதாக
ஒன்றும் நிழவில்லை என்பதுபோல் வாழ்பவர்கள்
இன்றுமுளார் பற்பலரே என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக