பாராண்ட அம்மா பரம பதமடைந்தார்;
நேராய் இறைவனடி நேர்கவெனச் – சீராளும்
வெண்பாக் கவிஞன்நான் வேண்டுகிறேன்; கண்கள்கொண்(டு)
உண்பா இரண்டொன் றுரைத்து!
செம்மைப் பணிமுடித்துச் சென்றார் ஜெயலலிதா
அம்மை; இறைவா! அருள்செய்க! - இம்மைவிட்டு
வேனேறி நன்றாய் அமைதி அடையட்டும்
ஊனேறி நின்ற உயிர்!
அம்மா! எனத்தமிழர் அன்போ டழைக்கின்ற
அம்மா! அமரராய் ஆகிவிட்டார்; – அம்மாவின்
ஆன்மா அமைதியுற ஆண்ட வனைவேண்டித்
தேன்பா படைப்போம் தெளிந்து!
நிலத்துதித்த வெள்ளி நிலவாம்; இவர்தான்
பலம்மிக்க ஆட்சி படைத்தார் – சிலர்வந்து
தந்தபல தொல்லைகளை தாங்கித் தடையுடைத்துச்
செந்தமிழ்நா டான்றார் சிறந்து!
நமது பணியந்த நல்லவரைப் பாடல்;
தமது பணிமுடித்தார் சாவில் – அமைதி
உறுக அவரான்மா; ஊரும் உறவும்
பெறுக அமைதி பெரிது!
கடலே கடலலையே! காலன் அவர்தம்
உடலை விடுத்துயிர் உண்டான்; - அட!எம்
உயிரைக் கேட்டிருப்பின் ஓரா யிரமும்
அயிர்த்திடா ஈயோமே அங்கு?
சிறந்த அவர்வாழ்க்கை சீர்த்தி மிகுந்த
திறந்தநல் நூலாய்த் திகழ – இறந்தும்
இருக்கிறார்; எங்கள் இதயத்தில் நின்று
சிரிக்கிறார் அந்தத் திரு!
விரைந்து கடமை விரும்பி முடித்து
தரையை விடுத்துவான் தங்க – விரைந்த
உன்னை நினைந்து உருகும் உளங்களை
என்சொல்லித் தேற்றநான் இங்கு?
இனியோர் பிறவி இருக்குமெனில் அம்மா!
நனிபிறக்க வேண்டுமின் நாட்டில் – தனியொருத்தி
யாயிருந்து நீசெய்த சாதனைகள் எத்தனை
வாயிருந்தால் வான்கூறும் வந்து!
விளக்கே இருளுற்றால் வேறெங்கு போக
விளங்கும் ஒளிக்காய்? விளம்பாய்; – களம்புகுந்து
நாட்டைத் திருத்தி நலங்கள் விளைத்தேனோ
காட்டை அடைந்தாய் கடிது?
இங்கிவர்போல் மக்கள் இதயம் கவர்ந்தவர்யார்?
மங்காப் புகழ்படைத்த மங்கையன்றோ? – தங்கா
தெவண்சென்றார் மக்கள் துயரத் துழல
இவண்நின்றோம் கண்ணீர் இழிந்து!
சால்பு நிறைபணிகள் சற்றும் குறையாமல்
கால்கொளச் செய்து கடன்முடியா – ஏல்வையில்
போதும் எனயிறைவன் போந்தழைத்துக் கொண்டானே
ஏதுநாம் செய்ய இனி?
பனித்த விழிதுடைத்துப் பாரில் அவர்தம்
தனித்த வழிநடத்தல் சாலும் – இனித்த
பணியென் றிதனை எவர்தான் இயற்றார்?
பணிந்து நடப்பார் பகுத்து!
மதித்தாரை என்றும் மதிப்பதும் ஓங்கி
மிதித்தாரைக் கூட வியந்தும் – துதிபாடாத்
தெள்ளிய நல்மதியால் தேசம் நடத்திய
ஓள்ளிய பாவையை ஓர்!
அகவை நிறைந்தோர் அகிலத் திலையா?
அகவை குறைவென் றறிந்தும் – தகவிலா
காலன் விரைந்து கதைமுடித்தும் நற்புழகைக்
காலம் எடுத்துரைக்கும் கண்டு!
வாழ எமக்கு வழிகாட்டி னாய்நாங்கள்
சூழ நடந்த சுடக்கொடியே! – ஆழப்
புரிந்த எமைவிட்டுப் போந்ததேன் வானம்?
சரிந்த குழலாளே சாற்று!
வளர்கிற துன்பம் வடியவழி இன்றித்
தளர்கிற நெஞ்சம் தவிக்க – வளர்முகம்
கண்ட அவரைக் கடவுள் அழைத்தனன்
விண்டுரைக்க வாகா விதம்!
வழிகள் பலவாம்; மகிழ்ந்து நடக்க
விழிகள் இருந்தும் விளக்கை – இழந்தோம்
நலிகள் சுமந்து நடக்கின்ற எங்கள்
வலிகள் கடக்க வழி?
கனிந்த மனத்தால் கருதுபுகழ் உற்றாய்;
முனிந்தது காட்டா முகத்தாய்; - நனியுனை
ஏழை எளியோர் இனிதேத்தும் இந்நாளில்
கோழை இறைநின்றான் கொன்று
விரிந்த விழிகள் விளங்கா இருளால்
கரிந்தநல் பார்வை கலுழ – இரிகின்ற
கண்ணீர் இமைகடந்து கன்னம் கடலாகப்
புண்ணீர் உறையும் புரிந்து!
குளிர்நிலவே! எங்கள் குலவிளக்கே! வண்ணத்
தளிர்மலரே! எந்தமிழர் தாயே! – ஒளிர்கதிராய்
காலம் பலகடந்தும் காசினியில் நீவாழ்வாய்
ஞாலம் புகழும் நனி!
நம்ப மறுக்கிறது நன்நெஞ்சம் தாய்மறைவை;
உம்பர் உலகாள உள்ளியோ? - இம்பர்
உலகில் உடலை உதறிஅவர் ஆன்மா
விலகி விரைந்தது விண்?
கானேகக் கண்டோம் கவினுடல்; நல்லான்மா
வானேகக் கண்டோம்; வணங்கினோம்; - தானேகித்
தானந்த விண்ணுலகைத் தாங்கக் கடவதென
மானங்கு சென்றாள் மறைந்து!
இன்றுபோல் என்றும் இதயம் கனக்கவே
கொன்றுபோய் விட்டான் கொடுங்காலன்; – அன்றுபோல்
சிம்மப் பிறப்பெடுத்துத் தேசத்தை ஆள்வதற்(கு)
அம்மா வருவளோ? அன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக