ஏடி வரதராசன்:-
பைகட்"டி" சேக்க பணத்தெல்லாம்; எம்மக்கா
கைகட்"டி" நிக்கிரோமே காலமெல்லாம்
--- பொய்கட்"டி"
இந்தட்"டீ" வித்துவித்தே எம்மானோ
வச்சிருக்கான்
சிந்திச்சி "டீ"குடிங்க டீ.
கவிஞர் மறையேந்தி:-
சிந்திச்சே டீகுடிப்போம் சேர்ந்துநாம்
டீகுடிப்போம்
வந்திடவா சொல்சொல் மகிழ்ந்து.
அகரம் அமுதன்:-
தூக்கலா? கம்மியா? டிக்காஷன்; சக்கரை
சேக்கவா? வேண்டாமா? செப்பு!
கவிஞர் மறையேந்தி :-
செப்புவேன் சேதிதான் சேக்கலாம் சீராக
எப்போதும் ஏற்பேன் இனிப்பு.
அகரம் அமுதன்:-
நாட்டுவெல்லம் நான்இடவா? நன்றாய்ப்
பனைவெல்லம்
கூட்டவா? சீனியா? கூறு!
கவிஞர் மறையேந்தி:-
கூறி மகிழலாம் கூட்டுவது வெல்லமெனில்
ஊறி உரமூட்டும் ஓர்ந்து.
அகரம் அமுதன்:-
ஆட்டுப்பால் சேர்க்கவா? ஆவின்பால்
சேர்க்கவா?
நாட்டத்தைச் சொல்வீர் நயந்து!
கவிஞர் மறையேந்தி:-
எண்ணி மகிழ்ந்தேன் இனியவிந் நட்பிது
பண்தரும் பாங்கைப் பணிந்து.
அகரம் அமுதன்:-
விருந்து கொடுப்பதில் வெல்வதார் எம்மை?
இருந்துண்ண வாருங்கள் இன்று!
கவிஞர் மறையேந்தி:-
நயந்தே நவில்கிறேன் நட்பால் நலத்தை
இயல்பாய் ஈவாய் இனித்து.
அகரம் அமுதன்:-
மூத்தோரின் வாழ்த்தே முளைவிடும் எங்களை
காத்துவரும் நல்மருந்து காண்!
கவிஞர் மறையேந்தி:-
இன்றும் இனியென்றும் ஏற்போம் இசைந்துண்ன
நன்றே நயமுடன் நான்.
காண்போம் களிப்போம் கவிச்சுவையைக்
கன்னலாய்
ஆண்டே அனுபவிப்போம் ஆம்.
அகரம் அமுதன்:-
ஆமென்று நீர்சொன்னால் அன்றென்றா
நான்சொல்வேன்?
நாமென்றும் காண்போம் நலம்!
கவிஞர் மறையேந்தி:-
நலம்காண்போம் என்னும் நயந்துரையால்
என்றும்
வலம்வருவீர் நெஞ்சுள் வளர்ந்து.
அகரம் அமுதன்:-
மகிழ்ச்சி அளிக்கிறது; மாகவியுன் நட்பால்
நெகிழ்ச்சி அடைகிறது நெஞ்சு!
பாவலர் வையவன்:-
வெளுவெளு வென்றே வெளுக்குமும் பாட்டில்
அலுப்பில்லை அத்தனையும் தேன்.
அகரம் அமுதன்:-
பண்பட்டோர் வாக்குப் பலிக்கட்டும்; வாழ்த்திது
புண்பட்ட நெஞ்சுக்குப் பொன்!
ஆகஸ்ட் 31 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக