அகரம் அமுதன்:-
வெண்பாவாத் தீட்டி வெறுப்பேத்து றான்வரதன்;
பண்பாக நாஞ்சொல்லிப் பாத்துட்டேன்; - ஒண்பா
விருத்தம் இருக்கே விளையாட!? என்ன
வருத்தம் எழுது வதற்கு?
ஏடி வரதராசன்:-
நளன்கதையை வாசித்த நல்லமுதா; அந்த
விளம்மா"தே மா"ஆமோ வெண்பா? -- உளந்தன்னில்
ஊற்றெடுத்துக் குத்துகின்ற ஊசி; அதுவெண்பா
ஈற்றடியை அன்றி எது?
விளம் மா தேமா -- விருத்த சீரமைப்பு.
அகரம் அமுதன்:-
காவியமே பாடிநம் கம்பன் விருத்தத்தில்
ஓவியமே தீட்டி உலகளித்தான்; - மேவிக்
கலைவலிமை காட்டும் கவிஞர் பலர்க்கும்
தலைவலிதான் வெண்பாத் தளை!
ஏடி வரதராசன்:-
தலைவலியே அன்றி தனிக்கா வியத்தை
வளைத்தெழுதி விட்டால் வனப்பா? --- தளைதட்டல்
இல்லாமல் வெண்பா இயற்றி அதிலிருக்கும்
கள்ளுண்டுப் பின்சொல் கருத்து!
அகரம் அமுதன்:-
வெள்ளைப்பா; வெண்பா வெறும்பா; எனப்பலர்
விள்ளக்கேட் டுள்ளேன் விரிவாக; - இல்லையில்லை
வேண்டாம் இதுவென்(று) ஒதுங்கினேன்; நீஎன்னைத்
தூண்டாய் எழுதத் துணைக்கு!
ஏடி வரதராசன்:-
வெள்ளைப்பா ஆமாம்; வியன்மணத்தைக் கூட்டுகின்ற
முல்லைப்பா; பெய்யும் முகிலின்பா; -- இல்லைப்பா
என்றியம்ப இங்கே எவருள்ளார்; ஔவையெனுங்
குன்றறிந்துஞ் சொல்லாய் குறை!
அகரம் அமுதன்:-
மதுக்கவிதை என்றுநீ மார்தட்டும் வெண்பா
புதுவிருத்தம் போலப் புதுமை -
செதுக்கா(து)
அறிவுரைகள் சொல்லி அலுப்பேற்று மன்றிச்
செறிந்தவற்றைச் சொல்கிறதா செப்பு!
ஏடி வரதராசன்:-
வெண்பாவை என்முன் வெறுஞ்சொற்க ளோடெல்லாம்
ஒன்றாகப் பேசல் ஒழுக்கமன்று! -- நண்பா!
பலக்கவியை ஆய்ந்தறிந்த நீயாவெண் பாவை
மலக்கவிக்கு நேருரைத்தல் மாண்பு?
அகரம் அமுதன்:-
கோபப் படவேண்டாம்; கொக்கரித்து
என்மீது
சாபம் இடவேண்டாம்; சாந்தம்கொள்; - தூபமிட்டு
நாக்கலப்பைப்* பாவலர்க்குள் நாட்டுகிற
வெண்பாவைப்
பூக்குலத்துத் தேனென்றால் பொய்!
நாக்கலப்பு - வாய்ச்சண்டை.
ஏடி வரதராசன்:-
நாக்கலப்பு மட்டும் நடந்ததில்லை; அந்நாளின்
ஆக்கத்தில் வெண்பா அதிகம்தான்; --- ஏக்கங்கள்,
இல்லாமை, ஆன்மீகம், ஏழை மனச்சுமைகள்
அல்லாது அறங்கூறும் அஃது!
அகரம் அமுதன்:-
பாடு பொருளுக்குப் பஞ்சமில்லா இந்நாளில்
ஈடு கொடுக்கவெண்பா ஏற்றதில்லை; - சாடுவதை
விட்டு முகநூலில் வெண்பாக் களைத்தேடிப்
பட்டுத் திருந்துநீ பார்த்து!
ஏடி வரதராசன்:-
நானும் கவினென்று நாணமற்று சுற்றுகிறார்
மூணுமிழந் தார்கள் முகநூலில் -- காணும்மண்
பாலைக்குள் நின்றுகொண்டுப் பசுஞ்சுணைநீர்
தேடுவது
வேலையற்ற வேலை விடு!
அகரம் அமுதன்:-
ஆகட்டும் நீசொன்னால் அர்த்தம் இருக்குமது
போகட்டும் ஏன்நமக்குப் பொல்லாப்பு; - சாகசம்
காட்ட விருத்தம் கனக்கச் சிதம்எழுத
காப்பிரைட் கேட்பதார் கண்டு!
18/8/2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக