7 ஆகஸ்ட் 2020
பெண் கூற்று:-
அவன்ஓர் கவிஞன்; அவன்பேர் அமுதன்;
எவளும் விரும்பும் எழிலோன்; - அவன்தான்
எனது மனதை எடுத்தான்; ஒளிந்தான்;
எனக்கவனைக் கண்டால் இயம்பு!
சிலை கூற்று:-
அந்தமுதன் போல அணிசமைப்பான் இன்னொருவன்
செந்தமிழின் நட்பாய்ச் சிலிர்ப்பவன் ---
உந்தன்
அவனை மறந்துவிட்டு ஆழ்மனத்தில் கொஞ்சம்
இவனைவைத் துப்பார் இனி!
பெண் கூற்று:-
ஆள்மாற்றச் சொன்னால் அடிவிழும்; ஈங்கவன்
தோள்மாற்றி இன்னோர்தோள் தொற்றேனே; - மேல் மாற்றும்
ஆடைபோல் அல்ல என் ஆழ்மனக் காதல் பா(ல்)
ஆடைபோல் தூய தறி!
சிலை கூற்று:-
அல்லிமலர்த் தோட்டத்தில் அவ்வறளிப்
பூக்காதா?
மல்லியிடம் ரோசா மலராதா?-- சொல்லக்கேள்
எண்ணத்தை மாற்ற இனிக்கும்; அதைவிட்டுச்
சொன்னதையே சொல்லாய் தொடர்ந்து!
பெண் கூற்று:-
கொம்பில் தான் பால்கறக்கக் கூடுமோ? பட்டமரக்
கம்பில்பூ பூக்குமோ? காண்எந்தத் -
தெம்பில்நீ
என்னை மடைமாற்ற ஏதேதோ பேசுகிறாய்?
உன்னை உதைக்குமுன் ஓடு!
சிலை கூற்று:-
மன்ற தமிழை மணிமணியாய்ச் செய்கிறவன்
உன்றன் பொருத்தமென ஓர்கின்றேன் --- என்றன்
உளமறிந்து உந்தன் உளம்மாற்றும் மட்டும்
விலகுவதாய் இல்லை விடுத்து.
பெண் கூற்று:-
மாறுவதாய் இல்லை; மணித்தமிழன்
மாமரபை
மீறுவதாய் இல்லை; மிகைப்படுத்திக் -
கூறுவதை
விட்டு நடைகட்டு; வேறா ரிடமேனும்
கட்டுக் கதைகளைக் கட்டு!
சிலை கூற்று:-
பொன்தாலிச் செய்துப் புதுப்பட்டு
நீயுடுத்த
நன்தாரம் ஆக்கவே நான்நினைத்தேன் --
வன்தாலிக்
கட்டித்தான் உன்னைக் கரம்பிடிக்க
வேண்டுமென்றால்
எட்டிப்போ ஆமாம் இனி.
பெண் கூற்று:-
அடப்பாவி! ஏதும் அறியாத எந்தன்
இடம்மேவி இப்படியா ஏய்ப்ப(து)? - அடம்பிடிக்கும்
சேய்க்குக் கிடைக்கலாம் தேன் மிட்டாய்; உன்னுடைய
வாய்க்குநான் சூடுவைப்பேன் வந்து!
காணா ததைக்கண்ட காட்டான்போல் என்னிடத்தில்
வீணான வார்த்தைகளை வீசுகிறாய்; - ஆணான
என் தலைவன் கேட்டால் இனியுன் தலைதங்கா(து)
என்வழிக்கு வாராய் இனி!!
சிலை கூற்று:-
உன்னிலும் பேரழகி ஓடிவந்தாள்; விட்டுவிட்டுன்
பின்னோடி வந்தவனைப் பேசாதே ---
என்பேச்சைக்
கேட்டு நடந்தால் கெடுதல் விலக்கியுனைக்
கோட்டையாள வைப்பான் கொடுத்து.
பெண் கூற்று:-
கோட்டையே தாண்டிக் கொடுமைக்காள் ஆயினள்
காட்டையும் ஆண்டமன் கண்ணாட்டி! -
நாட்டிலோர்
கோட்டையும் வேண்டாமே; கொண்டவன்
மண்குடிசை
வீட்டைநான் ஆள்வதே மேல்!
சிலை கூற்று:-
அக்காலப் பேச்சை அளக்காதே; வாழ்ந்துப்பார்
இக்காலப் போக்கில் இயல்பாக; - எக்காலுங்
காதலுக்குப் பின்போனால் கால்வாரி
விட்டுவிடும்
ஆதலால் சொல்லக்கேள் ஆம்.
பெண் கூற்று:-
காலங்கள் மாறினால் காதலும் மாறுமா?
சாலத்தைப் பேச்சில்நீ சாத்தாதே! -
ஞாலத்தில்
ஆச்சரியம் யாதென் றறிந்துகொள்; பெண்மனதைக்
கூச்சமின்றிப் போடாதே கூறு!
சிலை கூற்று:-
பந்தல் இருந்தும் படரா அவரையெல்லாம்
கந்தலாகிப் போம்நடக்குங் காலடிக்கீழ் ---
உந்தன்
நிலைஉயர்த்த வந்தவன்தான் நின்றன் வரதன்
மலைவாழ்வு வாழமனம் மாற்று.
பெண் கூற்று:-
பேச்சை அளக்காதே; பேதம் வளர்க்காதே;
கூச்சலினி நீபோடக் கூடாதே; - மூச்சில்
கலந்தவனை நான்தேடிக் கொள்கின்றேன்; நீயுன்
அளந்தவாய்ப் பேச்சை அறு!
ஞானிநீ என்றுன்னை நாடினேன்; நீயந்தக்
கூனிநேர் வைக்கின்றாய் கோல்மூட்டி; - நானினி
உன்னோடு பேச உளமில்லை; எட்டிப்போ!
என்னோடு வேண்டாம் இடக்கு!
இன்சொல் உரைப்பாயென் றிங்குவந்தேன்; கற்சிலைநீ
புண்சொல் புகட்டுகிறாய் புத்தியின்றி; - என்னினிய
கண்ணாளன் எங்கென்றால் கண்டவனை நீகாட்டிப்
பண்ணுமணம் என்பதா பார்!?
வழிசொல்லக் கேட்டேன்; மனங்கோணும் வண்ணம்
மொழிகின்ற நீயொரு முட்டாள்; - இழிசொல்லை
இத்தோடு நிப்பாட்(டு) இலாவிடில்
உன்முடியைக்
கொத்தோ டறுப்பேன் கொதித்து!
உத்தமன் என்னவன்; உள்ளம்
கவர்ந்தான்மேல்
குற்றமொன் றேற்றினால் கொள்வேனா? - மற்றுமுன்
எச்சரிக்கும் பேச்செல்லாம் என்னிடத்தில்
செல்லாது;
நச்சரிக்கா மல்நீ நட!
கன்னிமன வாழம் கருங்கல் அறிவதில்லை;
உன்னிடத்தில் பேசியது என்தவறு; - கண்ணினிய
காதலனை நான்தேடிக் கைப்பிடிப்பேன்; நீயுனது
ஆதரவை வேறாட்(கு) அளி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக