வெள்ளி, 3 ஜூலை, 2026

 

7 ஆகஸ்ட் 2020

 

பெண் கூற்று:-

 

அவன்ஓர் கவிஞன்; அவன்பேர் அமுதன்;

எவளும் விரும்பும் எழிலோன்; - அவன்தான்

எனது மனதை எடுத்தான்; ஒளிந்தான்;

எனக்கவனைக் கண்டால் இயம்பு!

 

சிலை கூற்று:-

 

அந்தமுதன் போல அணிசமைப்பான் இன்னொருவன்

செந்தமிழின் நட்பாய்ச் சிலிர்ப்பவன் --- உந்தன்

அவனை மறந்துவிட்டு ஆழ்மனத்தில் கொஞ்சம்

இவனைவைத் துப்பார் இனி!

 

பெண் கூற்று:-

 

ஆள்மாற்றச் சொன்னால் அடிவிழும்; ஈங்கவன்

தோள்மாற்றி இன்னோர்தோள் தொற்றேனே; - மேல் மாற்றும்

ஆடைபோல் அல்ல என் ஆழ்மனக் காதல் பா(ல்)

ஆடைபோல் தூய தறி!

 

சிலை கூற்று:-

 

அல்லிமலர்த் தோட்டத்தில் அவ்வறளிப் பூக்காதா?

மல்லியிடம் ரோசா மலராதா?-- சொல்லக்கேள்

எண்ணத்தை மாற்ற இனிக்கும்; அதைவிட்டுச்

சொன்னதையே சொல்லாய் தொடர்ந்து!

 

பெண் கூற்று:-

 

கொம்பில் தான் பால்கறக்கக் கூடுமோ? பட்டமரக்

கம்பில்பூ பூக்குமோ? காண்எந்தத் - தெம்பில்நீ

என்னை மடைமாற்ற ஏதேதோ பேசுகிறாய்?

உன்னை உதைக்குமுன் ஓடு!

 

சிலை கூற்று:-

 

மன்ற தமிழை மணிமணியாய்ச் செய்கிறவன்

உன்றன் பொருத்தமென ஓர்கின்றேன் --- என்றன்

உளமறிந்து உந்தன் உளம்மாற்றும் மட்டும்

விலகுவதாய் இல்லை விடுத்து.

 

பெண் கூற்று:-

 

மாறுவதாய் இல்லை; மணித்தமிழன் மாமரபை

மீறுவதாய் இல்லை; மிகைப்படுத்திக் - கூறுவதை

விட்டு நடைகட்டு; வேறா ரிடமேனும்

கட்டுக் கதைகளைக் கட்டு!

 

சிலை கூற்று:-

 

பொன்தாலிச் செய்துப் புதுப்பட்டு நீயுடுத்த

நன்தாரம் ஆக்கவே நான்நினைத்தேன் -- வன்தாலிக்

கட்டித்தான் உன்னைக் கரம்பிடிக்க வேண்டுமென்றால்

எட்டிப்போ ஆமாம் இனி.

 

பெண் கூற்று:-

 

அடப்பாவி! ஏதும் அறியாத எந்தன்

இடம்மேவி இப்படியா ஏய்ப்ப(து)? - அடம்பிடிக்கும்

சேய்க்குக் கிடைக்கலாம் தேன் மிட்டாய்; உன்னுடைய

வாய்க்குநான் சூடுவைப்பேன் வந்து!

 

காணா ததைக்கண்ட காட்டான்போல் என்னிடத்தில்

வீணான வார்த்தைகளை வீசுகிறாய்; - ஆணான

என் தலைவன் கேட்டால் இனியுன் தலைதங்கா(து)

என்வழிக்கு வாராய் இனி!!

 

சிலை கூற்று:-

 

உன்னிலும் பேரழகி ஓடிவந்தாள்; விட்டுவிட்டுன்

பின்னோடி வந்தவனைப் பேசாதே --- என்பேச்சைக்

கேட்டு நடந்தால் கெடுதல் விலக்கியுனைக்

கோட்டையாள வைப்பான் கொடுத்து.

 

பெண் கூற்று:-

கோட்டையே தாண்டிக் கொடுமைக்காள் ஆயினள்

காட்டையும் ஆண்டமன் கண்ணாட்டி! - நாட்டிலோர்

கோட்டையும் வேண்டாமே; கொண்டவன் மண்குடிசை

வீட்டைநான் ஆள்வதே மேல்!

 

சிலை கூற்று:-

 

அக்காலப் பேச்சை அளக்காதே; வாழ்ந்துப்பார்

இக்காலப் போக்கில் இயல்பாக; - எக்காலுங்

காதலுக்குப் பின்போனால் கால்வாரி விட்டுவிடும்

ஆதலால் சொல்லக்கேள் ஆம்.

 

பெண் கூற்று:-

 

காலங்கள் மாறினால்  காதலும் மாறுமா?

சாலத்தைப் பேச்சில்நீ சாத்தாதே! - ஞாலத்தில்

ஆச்சரியம் யாதென் றறிந்துகொள்; பெண்மனதைக்

கூச்சமின்றிப் போடாதே கூறு!

 

சிலை கூற்று:-

 

பந்தல் இருந்தும் படரா அவரையெல்லாம்

கந்தலாகிப் போம்நடக்குங் காலடிக்கீழ் --- உந்தன்

நிலைஉயர்த்த வந்தவன்தான் நின்றன் வரதன்

மலைவாழ்வு வாழமனம் மாற்று.

 

பெண் கூற்று:-

 

பேச்சை அளக்காதே; பேதம் வளர்க்காதே;

கூச்சலினி நீபோடக் கூடாதே; - மூச்சில்

கலந்தவனை நான்தேடிக் கொள்கின்றேன்; நீயுன்

அளந்தவாய்ப் பேச்சை அறு!

 

ஞானிநீ என்றுன்னை நாடினேன்; நீயந்தக்

கூனிநேர் வைக்கின்றாய் கோல்மூட்டி; - நானினி

உன்னோடு பேச உளமில்லை; எட்டிப்போ!

என்னோடு வேண்டாம் இடக்கு!

 

இன்சொல் உரைப்பாயென் றிங்குவந்தேன்; கற்சிலைநீ

புண்சொல் புகட்டுகிறாய் புத்தியின்றி; - என்னினிய

கண்ணாளன் எங்கென்றால் கண்டவனை நீகாட்டிப்

பண்ணுமணம் என்பதா பார்!?

 

வழிசொல்லக் கேட்டேன்; மனங்கோணும் வண்ணம்

மொழிகின்ற நீயொரு முட்டாள்; - இழிசொல்லை

இத்தோடு நிப்பாட்(டு) இலாவிடில் உன்முடியைக்

கொத்தோ டறுப்பேன் கொதித்து!

 

உத்தமன் என்னவன்; உள்ளம் கவர்ந்தான்மேல்

குற்றமொன் றேற்றினால்  கொள்வேனா? - மற்றுமுன்

எச்சரிக்கும் பேச்செல்லாம் என்னிடத்தில் செல்லாது;

நச்சரிக்கா மல்நீ நட!

 

கன்னிமன வாழம் கருங்கல் அறிவதில்லை;

உன்னிடத்தில் பேசியது என்தவறு; - கண்ணினிய

காதலனை நான்தேடிக் கைப்பிடிப்பேன்; நீயுனது

ஆதரவை வேறாட்(கு) அளி!

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக