வெள்ளி, 3 ஜூலை, 2026

 

அகரம் அமுதன்

 

அங்க மழையா?

   அனல்காத்து வீசுதா?

இங்க மழையா

   இருக்குது; – மங்கிய

வானம் பொசபொசக்க,

   வையம் நச‍நசக்க,

ஊனதுவும் ஜில்லிட்ட(து)

   உள்!

 

வரதன்

 

எங்குமே செல்ல

    இயலாத வாறுதான்

இங்கும் மழையாய்

     இருக்கிறது -- இங்கேயே

சூடான தேனீர்

    சுவைத்தபடி உள்ளேன்நான்

ஆடாது அசையாது 

    அடைந்து.

 

அகரம் அமுதன்

 

தேக‍க் குளிருக்குத்

   தேத்தண்ணீ நான்குடிச்சும்

ஆக‍த்(து) உதறல்

   அடங்கலே; – வேகமா

போர்வைக்குள் போயொளிஞ்சும்

   போகலே; இக்குளிரை

யார்பெத்துப் போட்டாங்க

   இங்கு!?

 

வரதன்

 

எல்லா குளிரும்

  இதமா அடங்கணும்ன்னா

சுள்ளுன்னு மெக்டௌல்

  சுவைச்சிடு -- இல்லைன்னா

பெய்யும் மழையில்

  பெருங்காய்சல் வந்துடும்

பொய்யில்லே டாஸ்மாக்கு 

   போ.

 

அகரம் அமுதன்

 

நானொரு 'பீர்'பிரியன்;

   நன்கதனை நீயறிவாய்;

தேனொத்த போதும்'ஹாட்'

    தீண்டிடேன்; - ஊனொத்துக்

காதென்ப தல்ல;

   கனிந்தவென் நெஞ்சொத்துக்

காதென் பதேயென்

   கருத்து!

 

வரதன்

 

எட்டுசதம் தானே

    இவையிரண்டில்; ஆல்கஹால்

தொட்டுதான் பாரேன்

     துயர்குறையும் -- எட்டெடுத்து

ஓரடியும் வைக்காமல்

      உள்ள விருப்பமென

பீரடிப்ப தெல்லாம் 

    பிழை.

 

அகரம் அமுதன்

 

நொங்கும் நுரையுமாய்ப்

   பொங்குகிற பீர்போல

இங்கெதுவும் ஆனந்தம்

   ஈந்ததில்லை; - உங்கூட

குந்தி அடிச்சதெல்லாம்

   கூல்கிங் பிசர்தானே;

சிந்தை மறந்தாயா

   செப்பு!

 

வரதன்

 

ஊட்டியில ரம்;வெளி

    ஊர்போனா விஸ்கீன்னு

கோட்பாடும் உண்டு

     குறித்துக்கொள் -- பாட்டெழுதி

சைட்டிஷ்சா வெண்பாவ

    சாப்பிடேன் கொஞ்சநாள்

வெய்ட்போடும் பீர 

     விடு

 

 

அகரம் அமுதன்

 

பலப்பலவா ஐட்டத்தைப்

   பார்ப்பவன் நீ நான்

நிலையாக ஒன்றிலே

   நிற்போன்; – மலையையே

பேத்து வழங்கினும்

  பெக்கைத் தொடமாட்டேன்;

ஏத்துக்க நீயும்

   இதை!

 

வரதன்

 

இந்தவெண்பா கூட

     இதிலோர் வரிகுறைச்சா

சிந்தியலா மாறும்

    சிறப்புபோல் -- அந்தபீர்

உள்ள குடிக்கிறப்போ

     ஓர்மூடி ஹாட்சேத்து

சுள்ளுன்னு ஒருநாள்

      சுவை.

 

அகரம் அமுதன்

 

ஆள விடுசாமி!

  ஐடியா கேட்டதுக்கு

நீளமா பாடம்

  நிகழ்த்துகிறாய்; – தாளமே

போடறேன் இற்றைப்

  பொழுதைக் கழிக்கவே,

போடனுமா ரம்ஜின்னைப்

  போய்!?

 

வரதன்

 

மனம்நினைத்த வாறு

     மதுபோதை ஏற்ற

தினம்நினைக்க  ஏலாமல்

     தின்ன -- வனம்வளருங்

காய்கறியை உண்டே

    கடக்கின்றேன்; என்னுடைய

வாய்க்கறியை உண்டால்போம் 

    வாழ்வு

 

அகரம் அமுதன்

 

சரக்கைநீ நிப்பாட்டி

   சாதனை யாய்ஆண்டு

இரண்டுக்கு மேலிருக்கும்

   இல்லை? – பிரண்டுக்கு,

விட்ட சரக்கின்

   விலாசம் தரலாமா?

கெட்டழி என்றுமெனக் 

   கிட்டு!

 

வரதன்

 

ஒண்ணுமில்ல உந்தன்

    உடம்புக்கு; அதனால

தண்ணி அடிக்கலாம்

     தப்பில்ல -- என்றைக்கு

நோயறிஞ் சேனோநான்

      நொந்துட்டேன் அன்றுமுதல்

வாய  அடக்கிட்டேன் 

    வந்து.

 

அகரம் அமுதன்

 

சவுக்கியமா நானிருந்தா

   தண்ணி அடிச்சிக்

கவுந்துவிழ லாமா

   கவிஞா! – அவுந்ததுணி

மானம்வாங் காதா?

  மரியாதை நீங்காதா?

ஏனத்தை நோக்கலநீ

   இங்கு!?

 

வரதன்

 

கொட்டாம பீர

    குடிச்சி;வெண் பாதளையுந்

தட்டாம பாடித்

    தனிச்சிருக்க -- கட்டுந்

துணியவு றாது

     துணிந்துந்தன் சிந்தை

அணியவுக்கும் மட்டும்

    அறி.

 

அகரம் அமுதன்

 

கண்ணி வெடிக்கும்,வன்

   கண்ணடிக்கும் தப்பலாம்;

தண்ணி அடிச்செவன்

   தப்பினான்? - உண்மையில்

ஹாட்டோகூல் பீரோ

   கடைசியில் சேதத்தைக்

கூட்டாமப் போவாது

   கொன்று!

 

வரதன்

 

கால்தான் அளவடியாய்க்

    கட்டிங்கே சிந்தியலாய்

ஆல்போல் தமிழில்

     அளவைபோல் --- நாள்முழுக்க

ஒற்றைபீர் அந்தியில்

    உக்காந்து நீகுடிச்சா

எற்றைக்கும் இல்லை

    இடர்

 

அகரம் அமுதன்

 

வெதுவெதுப்பாய் வெண்பா,

   வெகுகுளிராய் ஓர்பீர்,

அதுபோதும் நான்முடிவேன்

   ஆயுள்; - இதுசரியா

என்பதெலாம் நானறியேன்;

   ஏசுவார் ஏசட்டும்;

பின்நிலைக்கும் என்னெழுத்தின்

   பேச்சு!!

 

வரதன்

 

சிப்புக்கோர் சீரெழுதி

     சிந்தித்து சைட்டிஷ்சில்

சிப்ஸுக்கோர் வெண்பா

      செலவழித்தால் -- எப்போதும்

காசும் குறையாது

     கன்னித் தமிழில்உன்

ஆசும் குறையாது

     அறி.

 

அகரம் அமுதன்

 

சந்தடி சாகில்

   சரக்கின் மகத்துவத்தை

வந்துவெண் பாவா

   வடிக்கிறாய் - குந்தி

உடனடிக்க ஆகாதே

   உன்னாலே என்று

விடத்துணிந்தேன் இந்த

   விஷம்!

 

வரதன்

 

பீர்குடித்தால் என்னே

    பிழையாம்; குடிக்கயில்

சீர்குடிக்கும் உந்தன்

     சிறப்பபின்முன்? -- யார்குடித்தால்

நாடும் மொழியை

    நமக்கேற்ற வாறமைக்கக்

கூடும் இதுபோல்நீ 

     கூறு.

 

கண்ணுக்குள் தூக்கம்

    கனவாக வில்லையென

தண்ணி அடிக்கும்

     தரணியில் -- பண்ணுக்குள்

தங்கும்சீர் வேண்டி

    தனிமையில் நீீயருந்த

பொங்கும்பீர் தப்பில்லை

      போடு.

 

அகரம் அமுதன்

 

பாட்டும்,பீர் பாட்டிலும்,

   பக்கம் வரதனும்,

கூட்டும் களிப்பொரு

   கோடிபெறும்; - போட்டுடைத்துப்

போய்விட்டாய்; நானோ

   புழுங்கித் தவிக்கின்றேன்

தாய்விட்ட சேயாய்த்

   தனித்து!

 

வரதன்

 

நானும் அடித்திருந்தால்

    நன்றாய் இனும்வெண்பா

தேனும் வழிய

    திரித்திருப்பேன் --- ஊனுக்குள்

நோய்த்தொற்று இருப்பதனால்

     உன்றன்நே ராய்ப்பாடத்

தாய்த்தமிழில் கொஞ்சம்

    தடுப்பு.

 

அகரம் அமுதன்

 

அந்தநாள் ஞாபகம்

   அப்பிக் கிடக்கிறது

எந்தனகத் தங்குனக்கு

   எப்படியோ? - இந்த

இடைவெளி என்னை

   இரண்டாய்ப் பிளக்கும்

படைவேலைப் போலுளத்தில்

   பாய்ந்து!

 

வரதன்

 

கூட்டோடு நாமும்

    குளிர்ந்திருந்த நாளெல்லாம்

பாட்டோடு நெஞ்சில்

    பயணிக்கும் -- ஏட்டுடன்

உன்றன் புகழுடன்

    என்புகழ்வா ராவரைக்கும்

என்னே பயனாம் 

    இதில்

 

அகரம் அமுதன்

 

ஆற்றில் அமர்ந்தபடி

   ஆகாயம் பார்த்தபடி

காற்றுமறி யாமல்

   கதைத்தபடி - நேற்றுகளைத்

தின்று செறித்தோம்

   திமிராய் அமர்ந்தபடி

ஒன்றும்நினை உண்டா

   உனக்கு!

 

வரதன்

 

வெண்பாவ மட்டும்

    வெரசா குவிச்சிவச்சிப்

பண்பாடிப் பாடிப்

    பயனென்ன -- நண்பா....

கணையிழந்த வில்லும்

    கவிபாடி ஓங்கும்

உனைையிழந்த நானுமிங்கே 

    ஒன்று.

 

வாந்திஎடுத் தாலும்

     வளர்கவியில் அப்புக

ழேந்தியை எண்ணி

    எழுதிவந்தோம் -- பூந்தியெலாம்

லட்டில் உதிர்ந்ததுபோல்

    லாஸாக்கி என்னைநீ

விட்டுப்போய் விட்டாய் 

    விரைந்து.

 

அகரம் அமுதன்

 

ஆசான்நான்; என்னை

   அவமதிக்கும் செய்கைகளைக்

கூசாமல் செய்ததுயார்

   கூறப்பா? - பேசாமல்

செய்த தவறைச்

   சிறிதேனும் ஒத்துக்கொள்;

பொய்களால் பூசாதே

   பூச்சு!

 

ஆசானை விஞ்சும்

   அளவிற்கே உன்னைநான்

மாஸாக பேணி

   வளர்த்தெடுத்தேன்; - பாஸான

தெம்பில் எனைமறந்து

   சேர்ந்தாய் பிறரோடு

கொம்பு முளைத்ததாய்க்

   கொண்டு!

 

நட்பாலே நாமிருவர்

   நண்பர்கள்; பூந்தமிழ்ப்

பெட்பாலே நானுனக்குப்

   பேராசான்; - உட்புகுந்த

பாட்டா சிரியனுக்கு

   பாவரசை நண்பனென்றாய்;

ஏட்டிலும் செய்தாய் 

   இடக்கு?

 

வரதன்

 

எந்த நிலையிலும்

    யானிகழ்ந்த தில்லையுனை

அந்தநிலை அன்றி

    அசைத்ததில்லை -- உந்தனிடம்

யாரேனுஞ் சொன்னதுண்டா

    இன்றுவரை; என்நிலையுன்

சீரே உரைக்கும்கேள் 

    சென்று.

 

அகரம் அமுதன்

 

மற்றவர் பேச்சில்

   மதிமயங்கும் ஆளானான்?

குற்றமுரைத் தாயென்றா

   கூறினேன்; - மற்றபடி

உன்றன் செயலில்தான்

   ஒன்றிரண்டு தப்புரைத்தேன்

என்றாலும் நீயென்சிஷ்

   யன்!

 

இரவு வணக்கம்;

   இனிதாய் உறங்கு;

வரட்டும் கனவு

   வரமாய்; - தரட்டும்

அமைதியை நெஞ்சில்;

   அதைத்தானே வேண்டிக்

குமைகிறோம் நெஞ்சம்

        கொதித்து!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக