வரதன்:-
ஆண்கூற்று:-
கால்கொலுசை விற்று கடுகுமட்டும்
வாங்கிவிட்டோம்;
பால்வாங்க நாளைப் பதக்கமுண்டு; - கால்வயிறு
கஞ்சிக்கொவ் வொன்றாய்க் கழற்று; சிரிப்புமட்டும்
எஞ்சிநின்றால் போதும் இரவு.
அகரம் அமுதன்:-
பெண்கூற்று:-
பஞ்சத்தில் பாழும் பசியில் உழல்கையில்
மஞ்சத்தில் சேர மனத்தவிப்போ? - கொஞ்சத்தான்
கூப்பிடும் முன்என்னைக் கொல்லும் பசிதீரச்
சாப்பிட வாங்கியெதும் தா!
வரதன்:-
ஆண்கூற்று:-
கதவுகளை மூடிவிட்டுக் காதல்கொள்; பின்னே
எதுவாயின் முன்னின்று எதிர்ப்பேன் --
அதுவரையில்
அப்பசியைத் தீர்க்கட்டும் ஆரம்; உரமூட்ட
எப்பொழுதும் நீதான் எனக்கு.
அகரம் அமுதன்:-
பெண்கூற்று:-
தீண்டுவதும் ஆடை திருடுவதும் நூலிடை
நோண்டுவதும் வேண்டாம் நிறுத்திக்கொள்; - வேண்டுவது
காப்பும் கரிசனையும் கண்இமை போலுறவை
மூப்புவரை காட்டும் முனைப்பு!
வரதன்:-
ஆண்கூற்று:-
எண்ணம் அறிந்தே இடைவருடும்; என்கைகள்
பொன்முகத்தைப் பார்த்தேபின் பூச்சூடும்; --- கண்நான்கில்
முட்டிக் கிடப்பதெல்லாம் மோகமில்லை; தெய்வீகம்
கொட்டிக் கிடக்குதெனக் கொள்.
அகரம் அமுதன்:-
பெண்கூற்று:-
பேசிக் கவிழ்ப்பதில் பேர்போன ஆளாச்சே!
ஏசி விரட்டினும் இங்ககலா(து) - யோசித்தே
இன்னும் ஒருதடவை என்றே இளிப்பவனே!
என்னமோ செய்போ எனை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக