திங்கள், 5 மே, 2014

ஆசைக்கே ஆசையெழும்!



நாடாத கண்களுண்டோ
நறுமுகையே நீநடந்தால்…
பாடாத வாய்களுண்டோ
பைங்கிளியுன் அழகைத்தன்னால்…

வைத்துக்கொண்டே வஞ்சனைகள்
செய்கின்ற சின்னஇடை
வள்ளலென எண்ணிச்சென்று
கஞ்சனிடம் பெற்றகொடை

பிடியளவு இடையிருக்க
படியளவு மார்கனக்க
அடியெடுத்து நீநடந்தால்
அன்னமே கால்கடுக்கும்

செப்புச்சிலை உன்மேனி
சிவந்தவிழி மலைத்தேனீ
தெங்கிளநீர் இரண்டோடும்
சேர்ந்தநிறம் மருதாணி

காதளவு கண்கள்-அவை
வள்ளல்வீட்டு வாசல்கள்
கன்னியுந்தன் வாய்வார்த்தை
கஞ்சன்கொண்ட கைப்பொருள்கள்

வெடியெடுத்துப் போட்டதுபோல்
வெண்ணிலவே நீநடந்தால்
மதுகுடித்த வண்டெனவே
வந்துமனம் வட்டமிடும்

பொடியெடுத்துப் போட்டவுடன்
பூத்துவரும் தும்மலைப்போல்
அன்னமுனைக் கண்டுவிட்டால்
ஆசைக்கே ஆசையெழும்!

வெள்ளி, 14 மார்ச், 2014

கைக்கூலி! (வரதட்சிணை)



பெண்ணாய்ப்
பிறந்த யார்க்கும்
தரணியில்
தாலிதான்
வேலி; -அவ்
வேலியின்
வேலையைச் செய்ய
வேண்டுவதேன் கூலி?

கூலி பெற்று
குவலயத்தில்
வேலியின்
வேலையைச் செய்யும்
ஆண்கள்
ஆரும்
ஆண்கள் அல்ல
ஆண்களிற் போலி!


இன்று
ஏந்திழையர் –
வனப்பைப் பார்த்து
வருவதில்லை வரன்;
பணப்பை பார்த்து –மணம்
பண்ணுவதுதான் முறண்


ஒன்றுபோல்
ஒன்று;
இப்படி ஒன்றுதல்
இருவர்க்கும் நன்று!

ஏற்பதிகழ்ச்சி -
என்றாள் ஔவை; மீறி -
ஏற்கின் எவர்க்கும் -
ஏற்படும் கௌவை!

ஞாயிறு, 9 மார்ச், 2014

வாழ்த்துப்பா! வெண்பாவூர் செ. சுந்தரம்

வெண்பா இமயம், நல்லாசிரியர், வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் 'வெண்பாவில் என்பா விருந்து' நூல் படித்ததால் எழுந்த வெண்பாக்கள்

கனியிருக்கக் காயைக் கவர்ந்தீரே! மெய்யாய்
நனிசிறந்த வெண்பா நவில; -தனிவிருந்(து)
இவ்விருந்(து) இருக்க இமையோர் அழைத்திடினும்
அவ்விருந்துங் கொள்ளேன் அணைந்து!

தலைதந்தும் வெண்பாவைத் தாங்கும் இவர்தம்
நிலைகண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்; -முலைதந்த
அன்னையவள் அன்பைப்போல் ஆங்குறு சுந்தரனார்
வெண்பாவிற்(கு) உண்டோ விலை?

கொட்டருவி போலுமிவர் கொஞ்சுதமிழ்ப் பாவருவி
தொட்டுருவிப் போகுதடா தூநெஞ்சை; -அட்டியில்லை
பாடிக் கடன்தீர்க்கப் பாருதித்தார் போலுமதை
நாடிக் கடன்தீர்ப்போம் நாம்!

பல்லா சிரியர்இப் பாரிலுளார்; சுந்தர
நல்லா சிரியர்போல் நாட்டினரா? -வல்லிடை
மெல்லினமாய்த் தோன்றியிம் மேதினியை ஆள்கின்ற
வெல்தமிழ் வெண்பா விருந்து!

செவ்வாய், 4 மார்ச், 2014

விடுதலை நாடகம்!

"விடுவதுபோல் விடுகின்றேன்; விரைந்து வந்து
விடாவண்ணம் தடையிட்டே இடுவாய் தூக்கில்
அடிபெண்ணே!" என்பதுபோல் இங்கொ ருத்தி
அண்மித்த தேர்தலுக்காய் நாட கத்தைச்
சுடச்சுடவே அரங்கேற்று கின்றார்; மூவர்
தூக்கிற்கே தூக்கிட்ட நயன்மை மன்றும்
விடுகவெனும் ஆணைதனை விளப்பி டாமல்
விடுவதெனில் விடுகவென்ற விளைவால் அன்றோ!

தாலிகட்டி அறுத்தவரும்; தாலி தன்னைத்
தன்கழுத்தில் ஏற்காத தனிப்பெண் தானும்
வேலிகட்டி ஆளுகின்ற இந்த நாட்டில்
விடுதலையா வார்எழுவர் என்னும் பேச்சு
போலிஅதில் உண்மையில்லை; தேர்தல் தன்னில்
பூந்தமிழர் இவர்கட்குப் புகட்டிப் பாடம்
காலிகளை அடைப்பதுபோல் தட்டி தன்னில்
கருத்துடனே அடைத்திடுதல் கடமை என்பேன்!

திங்கள், 24 பிப்ரவரி, 2014

இளங்குமரனார் அருளிய வாழ்த்துமடல்!

  

திருவள்ளுவர் தவச்சாலை,
அல்லூர் 620 101,
திருச்சி மாவட்டம்,
16.03.2012

பேரன்புப் பாவலரே,

வணக்கம். வாழிய நலனே; தாங்கள் நேரில் வழங்கிய 'அமுதன் குறள்' நூலை இன்று படிக்க வாய்த்தது.

யாப்பும், அதன் கோப்பும், பொருள் சீர்த்தியும் போற்றும் பொலிவின. தங்கள் படைப்புத் திறனும் பண்பாடும் வேட்கையும் பைந்தமிழ் நலங்களாம்!

தொடர்ந்து அணிபல சூட்டத் தக்க துலக்கம், துலக்கமாகிறது அமுதன் குறளால்!

இன்ப அன்புடன்,
இரா.இளங்குமரன்

புதன், 12 பிப்ரவரி, 2014

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!

‘அ’கரம் தொடங்கி ‘ன’கரம் ஈறாய்
அகிலம் தோன்றிய அருந்தமிழே!
‘ண’கரம் ‘ந’கரம் ‘ன’கரம் வேறாய்
நாவில் நடமிடும் நறுந்தமிழே!

‘ர’கர ‘ற’கரம் ஒலிபிற ழாமல்
பகர இனிமை தருபவளே!
‘ழ’கர ‘ள’கரத் தனிச்சிறப் பாலே
இளமை குன்றாத் திருமகளே!

வல்லினம் மெல்லினம் இடையினம் மூன்றால்
வளப்பம் குறையா வண்டமிழே!
சொல்லிலும் பொருளிலும் சுடர்மிகு வல்லமை
தோன்றிட இங்குறு தொல்தமிழே!

ஒன்றா? இரண்டா? மூன்று தமிழாய்
உலகில் முதலாய்ப் பிறந்தவளே!
நன்றாய் முதலிடை கடைச்சங் கத்தில்
நாவலர் நாவிற் சிறந்தவளே!

ஒருசொல் பலபொருள் பலசொல் ஒருபொருள்
உடையாய்! உளதோ உனக்கீடு?
பொருந்திய எழுத்துச் சொற்பொருள் யாப்பணி
பொலியவென் நெஞ்சே! பண்பாடு!

காப்பியன் வள்ளுவன் கம்பனைத் தந்து
காசினி யில்சிறப் புற்றாய்நீ
பூப்பினில் நறுந்தேன் பீய்ச்சிடும் பூவுனை
மோப்ப விழையும்நான் நற்றேனீ

காலை கடும்பகல் மாலை இரவிலும்
காதல் தானுன் மீதெனக்கு
தோளின் மீதே தொற்றிக் கொள்ளத்
தடையா தோஇப் போதுனக்கு?

நாரும் பூப்போல் நாறும்; பூவை
நாடின் என்பார் அதுபோலே
நேரில் தமிழை நேர்ந்தேன்; இன்பம்
நேருள தோசொல் இதுபோலே?

செவ்வாய், 21 ஜனவரி, 2014