ஞாயிறு, 5 ஜூலை, 2026

1/9/2020

 

1/9/2020

 

ஏடி வரதராசன்:-

பாய விரிச்சாச்சி பைய படுத்தாச்சி

வாயழாம கண்ணீர் வடிச்சபடி --- மேயநான்

காலையில எங்கபோக காசுபணந் தேடியின்னு

மூலையில குந்திகிட்டேன் முன்.

 

அகரம் அமுதன்:-

முதுக வளச்சி முனைப்பா ஒழச்சா

எதுவும் கெடக்கும் எளிதா; - பொதுவாக

ஓர்கதவு மூடினாமற் றொன்று தெறக்கும்பார்;

சோர்வெதற்கு? நன்றாகத் தூங்கு!

 

ஏடி வரதராசன்:-

வளஞ்ச முதுவின்னும் வானம்பாக் கல்ல

களச்சே நகருது காலம் - களத்துல

கால்வச்சா எல்லாங் கணக்கா சருக்குதே

நாள்பூரா நாசந்தா னா?

 

அகரம் அமுதன்:-

துணிஞ்ச வனுக்கில்ல துக்கம்; அறிவ

அணிஞ்ச வனுக்கில்ல அழிவு; - கணிச்சிநாஞ்

சொல்லுறன் சோகத்தத் தூக்கியெறி; நீகூட

வெல்லுற காலம் வரும்!

 

கலங்காதே கண்கள் கடந்துவிடும் இஃதும்;

மலங்காதே நெஞ்சம் மகனே! - விலகாம

காளை வயதிதில் கஷ்டம் தொடர்ந்தாலும்

நாளை நமதென்றே நம்பு!

 

ஏடி வரதராசன்:-

பாடுபட்டுப் பாடுபட்டு பஞ்சந்தான் நாங்கண்டேன்

ஊடுபூரா கந்துவட்டி சீட்டுதான் --- கோடுபோட்டு

காசோட வாழ  கனவு; கடங்கேட்டா

பூசி மொழுகணும் பொய்.

 

அகரம் அமுதன்:-

"வேர்வைக்கும் வெற்றி,எந்த வேர்வைக்கும்; நாளைக்கே

ஊர்வைக்கும் உன்னைத்தன் உள்ளத்தில்" - வார்த்தையிது

வாலி உரைத்தது வாட்டம் விடுத்துநீ

சோலியைப் பாராய் தொடர்ந்து!

 

கதுப்பில்கை வைத்துக் கலங்கிக் கிடந்தால்

ஒதுங்குமா ஏழ்மை? உரைப்பேன் - இதுகேள்!

முயல்ஆமை போட்டிமுயல்தோற்று நிற்க

முயலாமை காரணம் முன்பு!

 

1/9/2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக