131. புலவி!
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது! 1301
மென்பஞ்சே போலிருக்கும் என்நெஞ்சே!
ஊடலினால்
அன்பர் வருத்தம் அடையட்டும் – முன்புபோய்க்
கட்டி அணைக்கக் கருத்தி நெருங்காமல்
எட்டித்தான் கொஞ்சம் இரு!
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்! 1302
தேவையறித் துப்பைத் தெளித்தால் உணவுநம்
நாவைக் கடக்கும் நலமாக; – தேவைக்கு
மேலிட்டால் கெட்டு விடுமுணவைப் போலூடல்
மேலதிகம் ஆக விடேல்!
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்! 1303
மென்மேற் சுமையேறி வேதனை தான்கூடிப்
புன்மை அடைந்து பொசுங்கிடுவார்; – தன்னினிய
பொய்க்கோபம் காட்டப் புகுவார்க்(கு) அதைத்தீர்த்து
வைக்காமல் விட்டு விடின்!
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று! 1304
மென்சண்டை போடுகிற மெல்லியலார் கோபத்தை
முன்நின்று தீர்க்க முயலாமை, – வன்காய்வில்
வாடிக் கிடக்கின்ற வள்ளிக் கொடிவேரைத்
தேடி அரிவதெனத் தேர்!
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து! 1305
பூங்கணைபோற் கண்ணுடைய பூவையரின் நெஞ்சத்து
நீங்காத ஊடல் நிலைசிறப்பே; – பாங்கான
பீடது பெற்றுநற் பேரது சேர்ந்தநல்
ஆடவர்க்(கு) அஃதே அழகு!
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருங்காயும் அற்று! 1306
செல்ல வருத்தமும் சின்ன பிணக்கமும்
இல்லாத காதல் இளைத்திளைத்துப் – பல்பதிக்கத்
தோதற்ற வெம்பழம்போல் தொத்தற் கருங்காய்போல்
ஏதற்கும் ஆகா(து) இறும்!
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவது அன்றுகொல் என்று! 1307
ஆசைக் கலவியின் ஆயுள்நீ ளாதோவென்(று)
ஓசை உளத்தே ஒலிப்பதனால் – பூசையின்
முன்நிகழு கின்ற முறைப்பில் முகங்காட்டும்
துன்பம் சிறிது துளிர்த்து!
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி! 1308
துன்பம் அடைந்து துடித்துத்
துடிதுடித்துப்
பின்பும் வருத்தம் பெருக்குவதேன்? - இன்னதுதான்
தாக்குகிற தென்றறிந்து தானே முனம்நின்று
போக்குகிற அன்பரிலாப் போது!
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது! 1309
உண்ணும் படிச்சுவை உண்டாகும், அந்நீரும்
தண்ணென்ற நீழற்கீழ்த் தானிருந்தால்; – கொண்டபெரும்
ஊடலும் அன்புடையா ரோடு நிகழுமெனில்
நீடலுண்டு இன்பம் நிறைந்து!
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவம் என்பது அவா! 1310
சண்டை தணிக்கச் சமரசம் செய்யவழி
கண்டார் இலையந்தக் காதலரைத் – தண்டாமல்
ஒசை எழுப்பி உறவாட உந்திடுதே
ஆசையி னாலே அகம்!
ஆளெல்லாம் கூடி அமர்ந்து மகிழ்ந்திருந்து
மீளாத யாவினையும் மீட்டெடுக்க -
நாளெல்லாம்
தேனலைபோல் வந்து செவிகள் நிறைத்திடும்
வானலை தந்தவர்க்கென் வாழ்த்து!
தூக்களைப் பற்றி நீங்கள்
தூக்கிய தூக்கு கொஞ்சம்
தூக்கலே; வரிசை கட்டித்
தூக்களும் தூக்கச் சொல்லி
தூக்கவே மகிழ்ச்சி பொங்கித்
தூக்கமே அற்றுப் போன
தூக்களை நானும் கொஞ்சம்
தூக்கித்தான் பார்த்திட்டேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக