வியாழன், 18 ஜூன், 2026

113 காதல் சிறப்புரைத்தல்

 

113 காதல் சிறப்புரைத்தல்

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்! 1121

 

பக்குவப் பேச்சுடையாள் பன்னீர் இதழெச்சில்

எக்குணத்த தென்றே எனைக்கேட்டால், – தக்கபசும்

பாலைப் பதங்காய்ச்சிப் பைந்தேனை ஊற்றியுண்ணும்

காலைத்தே நீரென்பேன் கண்டு!

 

உடம்பொடு உயிரிடை என்னமற் றென்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு! 1122

 

இளமான் தனக்கும் இளையோன் எனக்கும்

உளநட்பின் ஆழம் உரைக்கின், – வளமான

ஆக்கைக்கும் ஆருயிர்க்கும் ஆன தொடர்பேபோல்

நீக்கமறக் காணும் நிலைத்து!

 

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம்! 1123

 

கண்ணில் இருக்கின்ற கண்மணியை விட்டுஇளம்

பெண்ணை அமர்த்திப் பெயர்ந்துபோ! – கண்ணிலே

பூவை அமர‍இடம் போதா தெனும்போதேன்

பாவையுனக் கிம்மாம் பரப்பு!?

 

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து! 1124

 

இன்னுயிர்க்கே இன்னுயிரை ஈகின்றாள் நானவளின்

பொன்னுறவில் ஈடுபடும் போழ்தினிலே; – என்னுயிரை

இல்லாமல் ஆக்குகிறாள் எப்போதே னும்நிகழும்

பொல்லாப் பிரிதலின் போது!

 

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்! 1125

 

எண்ணமறந் தாலன்றோ என்னைக் கவர்ந்தவளை

எண்ணிஎண்ணி நெஞ்சம் இளைத்திருப்பேன்; – கண்ணால்

மறத்தொழில் செய்கின்ற மாதை நொடியும்

மறக்க வறியேன் மனத்து!

 

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்

நுண்ணியரெங் காத லவர்! 1126

 

கண்விட்டு நீங்காத காதலர் நான்மறந்து

கண்ணிமைத்த போதினிலும் கண்டுமனம் – புண்படார்;

பெண்தன்மை மெச்சுகிற பேராண்மை பெற்றிருந்தும்

நுண்தன்மை வாய்ந்ததவர் நோக்கு!

 

கண்ணுள்ளார் காத லவராக‍க் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து! 1127

 

சேல்தீட்டி மைவடியச் செய்திடேன் காதலர்

வேல்வீச்சுக் கண்ணிலே வீற்றுளதால் – மால்கொண்டு

தீட்டும்மை என்னவரின் தேகந் தனைமறைத்து

வாட்டுமெனை என்றே மருண்டு!

 

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து! 1128

 

கூடுவைகும் காதலரைக் கொஞ்சிக் களிக்காமல்

சூடுவைக்கும் நோக்கம் துளிர்விடுமோ? – சூடுமிகும்

எவ்வுணவும் தீண்டேன்; இதயம் குளிர்விக்கும்

அவ்வுணவே உண்பேன் அறிந்து!

 

இமைப்பின் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னுமிவ் ஊர்! 1129

 

கண்ணிமைக்கும் அந்தக் கணநேரம் காதலர்

கண்ணுள்ளே காணாத காட்சியினால் – பெண்ணிவளைத்

தூக்கி எறிந்துவிட்டான் தூய‍அன்பில் லானென்னும்

நாக்கில் நரம்பின்றி நாடு!

 

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னுமிவ் ஊர்! 1130

 

உள்ளத்தின் உள்ளேதான் உள்ளார், கவர்ந்தென்னை

உள்ளத்தில் வைத்த உயிர்நேசர்; – உள்ளத்தின்

உள்ளுள்ள போதும் உணராஊர் முன்வைக்கும்

தள்ளியுள்ள தாய்க்குற்றச் சாட்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக