114 நாணுத் துறவுரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி! 1131
உள்ளத்துக் காதலால் உண்டாகும் துன்பத்தைத்
தள்ளித் தனிவைத்துத் தற்காத்துக் - கொள்ளப்
பனைமடல் ஏறல் பயனே;வே றுண்டோ
துனைந்தெனைக் காக்கும் துணை?
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து! 1132
அல்லல்ஆற் றொண்ணாத ஆக்கையும் ஆருயிரும்
வல்லதெனத் தேர்ந்து மடலேறும் – நல்லதென
நாணதனை ஏற்று நலம்பாடல் இப்பொழுது
வீணதென நெஞ்சம் விடுத்து!
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்! 1133
வாட்டுகின்ற காதலால் வாலிபர் ஏறுகின்ற
காட்டுப் பனைமடலைக் கைக்கொண்டேன்; – கூட்டினிலே
அந்நாளில் நானேற்ற ஆண்மையும் நாணமும்
இந்நாளில் தூக்கி எறிந்து!
காமக் கடும்புனல் உய்க்குமே நாணோடு
நல்லாண்மை என்னும் புணை! 1134
ஆணென்னும் அந்த அகந்தை மரக்கலத்தை,
நாணென்னும் அப்பெரும் நாவாயை, – வீணமிழ்த்தும்
காதல் எனுமிந்தக் காட்டுப் புனல்மேவிச்
சேதம் பலவாறு செய்து!
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொரு
மாலை உழக்கும் துயர்! 1135
கொத்து வளையணிந்த கோலக் குலமகளே
மொத்தமாய்த் தந்தென்னை மூழ்கடித்தாள்; – பித்தேற்றும்
மாலை மயக்கொடு வற்றல் பனைமர
ஓலை மடலேற்றம் ஓர்ந்து!
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்! 1136
நட்ட நடுநிசியும் நானேற எண்ணுவேன்
தொட்டு மடலேற்றம் தோதென்று; – வட்டமுகப்
பேதை பொருட்டுப் பெரிதுமுறங் காமற்கண்
காதைத் திருகுவதைக் கண்டு!
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்! 1137
ஓதக் கடலளவு உள்ளத்தே உண்டாகும்
காதலுக்காய் வன்மடலைக் கைக்கொள்ளாச் –
சீதவிழி
மங்கைப் பிறப்பினும் மாட்சி பொருந்தியது
இங்கிருக்கக் கண்டால் இயம்பு!
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்! 1138
வற்றாத அன்பினையும் மாறா மனதினையும்
சற்றும் நினைந்து தணியாமல் – முற்றிப்
பிதுங்கிடுங் காதல் பிறர்காணு மாறு
பொதுவெளியில் போட்டுடைக்கும் போய்!
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு! 1139
இன்றளவும் தன்னை எவரும் அறிந்தில்லை
என்றளவில் நெஞ்சம் இடிந்திளைத்த -
என்காதல்
தேம்பி அழிமே, தெருமுக்கில்
நின்றபடிக்
கூம்பி இராமல் குதித்து!
யாம்கண்ணில் காண நகுப அறிவிலார்
யாம்பட்ட தாம்படா வாறு! 1140
முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண்
செய்வார் அறிவோ(டு) – அகமுமிலார்;
யானுற் றுயிருருகி
வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையால்
சார்ந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக