112 நலம்புனைந்துரைத்தல்!
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்! 1111
மென்மை மலர்க்கெல்லாம் மேலாம் அனிச்சமே!
மன்றில் உனைவைத்து வாழ்த்துகிறேன்; - என்றாலும்
வன்மை மிகுமென் மனதைக் கவர்ந்தாளின்
மென்மைஉன் மென்மையினும் மேல்!
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று! 1112
பூத்துக் குலுங்குகிற பூக்காணும் போதுதன்னை
ஈத்து மயங்குகிறாய் என்நெஞ்சே! – மாத்துப்பொன்
மங்கைவிழி போன்றுளது மாநிலத்தார் காணுமா(று)
இங்கலர்ந்த பூங்களெல்லாம் என்று!
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு! 1113
பச்சைத் தளிர்உடல்; பல்வரிசை
முத்துக்கள்;
மெச்சும் நறுமண மேடுகள்; - அச்சமிலா
மைவிழி கூர்மிகுவேல்; மாவன மூங்கில்தோள்;
பெய்வளைக்கு வாய்த்தனவிப் பேறு!
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று! 1114
காட்டுக் குவளைக்குக் கண்ணிரண்டு வாய்த்ததென்றால்
நோட்டமிட்டு மண்பார்த்து நொந்துவிழும்; – வீட்டுப்பெண்
மானினிரு கண்கள் வடிவுக் கிணையாக
ஏனில்லை தன்னழகு என்று!
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்
நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை! 1115
தண்டு களைந்துவிட்டுத் தானணிதல்
நன்றெனினும்
கண்டுகொள் லாமல் கவர்ந்தனிச்சஞ் – செண்டை
நனிநெருங்கச் சூடி நகைத்தாள்; இடைக்கே
இனியஇசை உண்டோ இனி!
மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன்! 1116
மண்ணில் உலாவும் மடந்தைத் திருமுகமும்
விண்ணில் நிலாவின் வியனுருவும் – விண்மீனுக்(கு)
ஒன்றென்றே தோன்ற, உருமாற்றம்
காணாமல்
நின்று கலங்கியதே நெஞ்சு!
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து! 1117
தேய்ந்தும், மெலிந்தஒளி தேறுவது மாய்வானில்
தீய்ந்து கிடக்கின்ற திங்களிடம் – ஏய்ந்து
கலக்கம் விளைக்கும் களங்கம்போல் மங்கை
மலர்முகத்தில் உண்டோ மறு!?
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி! 1118
‘வாழ்க நிலா!’வென்று வாயாற
வாழ்த்துவேன்,
ஆழ்மனக் காதல் அகழ்ந்துரைப்பேன், – சூழ்ந்தென்றும்
பொன்னொளி சிந்துகின்ற பூவை முகம்போல
இன்னொளி சிந்தி இரின்!
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி! 1119
பொன்மலர் போலிருக்கும் பூங்கண்கள் கொண்டவளின்
மென்முகம் போலிருக்க வேண்டுமெனில் -
இன்றுமுதல்
முந்தி முகம்காட்ட முற்றந் தொறும்நிலவே!
வந்தொளிராய் ஊர்காணு மாறு!
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்! 1120
பொய்கைவாய் பூத்துப் பொலியும் அனிச்சமும்
துய்ய நிறவன்னத் தூவியும் – செய்ய
உருமுலை மாதர் உயர்பொன் அடிக்கு
நெருஞ்சிப் பழத்துக்கு நேர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக