வியாழன், 18 ஜூன், 2026

132. புலவி நுணுக்கம்!

 

132. புலவி நுணுக்கம்!

 

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு! 1311

 

பொதுமகளிர்க் கெல்லாம் புதுவகையில் தோன்றி

ம‍துமயக்கம் ஊட்டும்நின் மார்பைப் – பதுமைநான்

ஊறெடுத்த போதும் ஒதுங்கி முகம்புதையேன்;

ஏறெடுத்தும் பாரேன் இனி!

 

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து! 1312

 

சண்டை தொடராமல் சற்றே தணிதற்குத்

தொண்டை கனைத்தவர் தும்மினார்; – மண்மீதில்

நீண்ட நெடுங்காலம் நீர்வாழ்க! என்றுநான்

வெண்டுவேன் என்று விளித்து!

 

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று! 1313

 

மாலை நிலாப்பொழுதில் வாச மலர்கொய்து

மாலை அணிந்து வலம்வந்தேன்; – சேலைமீன்

ஆரிடம் காட்ட அணிந்துள்ளீர் சொல்கென்றென்

பேரிலே வைத்தாள் பிணக்கு!

 

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று! 1314

 

ஆங்குறு காதலர்கள் காதலினும் மேலதிகம்

ஈங்குநாம் வைத்துள்ளோம் என்றவுடம் -பூங்கொடி

யாள்விம்மிச் சண்டையிட்டாள் யாரை விடவுமெனும்

கேள்வி தனைத்திருப்பிக் கேட்டு!

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்! 1315

 

இப்பிறப்பில் உன்னை இணைபிரியேன் நானென்றேன்

அப்பொழுதே கண்ணீர் அலர்ந்தழுதாள்; – அப்படியேல்

பிற்பிறப்பிற் சேரப் பிரியமெனக் கில்லையென்ற

கற்பித‍த்தைத் தன்மனத்தே கண்டு!

 

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்! 1316

 

தழுவாமல் என்றனைத் தள்ளித் தனிவைத்(து)

அழுதாள்பூங் கூந்தல் விழுதாள்;பொழுதுமுனை

எண்ணுகிறேன் நான்என்றேன்; என்னைமறந் தால்தானே

எண்ண முடிந்திடும் என்று!

 

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று! 1317

 

அச்சென்று நான்தும்ம அச்சுவெல்ல வாயெடுத்து

நச்சென்று வாழ்த்திய நங்கைபின் – ஒச்சினாள்;

எண்ணுவோள் நான்இங் கிருக்க எவளும்மை

எண்ண,நீர் தும்மினீர் என்று!

 

தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று! 1318

 

தும்மல் மறைத்துநான் கம்மென் றிருப்பினும்

விம்முவாள் நெஞ்சம் வெதும்புவாள்; – அம்மணி

ஆரோ உமைநினைக்க அஃதை எனக்குமறைத்

தீரோவென் றேதிட்டித் தீர்த்து!

 

 

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்

இந்நீர‍ர் ஆகுதிர் என்று! 1319

 

இப்படித்தான் மற்றை இடைச்சிய ரோடும்,இச்

செப்படி வித்தைகள் செய்வீரோ – செப்பென்பாள்;

பொன்மகளின் நெஞ்சப் புகைச்சலைத் தீர்க்கும்என்

அன்பில் குளிர்ந்தும் அவள்!

 

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று! 1320

 

புத்தி முழுதுமவள் பொன்னுருவச் சிந்தனையில்

முத்துமுகம் பார்த்து முகிழ்ந்திருக்க, – அத்தைமகள்

யாரை மனதெண்ணி என்றன் முகம்பார்த்தீர்?

பேரைச்சொல் என்பாள்அம் பெய்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக