புதன், 11 மார்ச், 2026

உயிர்வலி!

 

வீட்டுப் பிராணியை வீதிப் பிராணியாய்க்

கூட்டிவந்து விட்ட கொடுமையால் – ரோட்டிலே

ரொட்டிக்கும் நாதியின்றி ரோதனை நான்படுறேன்

சிட்டிக்கும் மத்தியிலே தேய்ந்து!

 

பெட்டிலே தூங்கிப் பெடிகறி சாப்பிட்டு

மட்டின்றிக் கண்ட மகிழ்ச்சியெல்லாம் – பட்டென்று

போரால் தொலைந்துதான் போச்சு!எனக் கில்லையினி

பேரா தரவென்ற பேச்சு!

 

பாதியிலே நானும் பழசானேன்; ஏதிலியாய்

வீதியிலே விட்ட விலங்கானேன்; – பேதியிலே

போகின்ற போராலே போக்கத்துப் போனேன்;என்

னாகியதோ என்னைவளர்த் தார்க்கு!?

 

செல்லமே! என்றவாய் சேர்த்தணைத்துக் கொண்டகை

இல்லாமல் போனதே இன்றெனக்கு; – மெல்லமாய்

இற்றை எதார்த்தம் எனக்குப் புரியுமுன்னே

ஒற்றையில்நிற் கின்றேன் உழன்று!

 

வீட்டில் இடம்தந்த மேடமே! சாரே!ஏன்

வாட்டும் வெயிலில் வதங்கவிட்டீர்? – நாட்டிலே

சண்டித் தனம்பண்ணும் சல்லி அரசுகளால்

துண்டித் ததேன்என் தொடர்பு!?

 

சனாதி பதிபோலச் சாப்பிட்டுத் தூங்கும்

குணாதி சயம்மிகவே கொண்டால் – அனாதியாய்

ஆனபின்பு வாழும் அவலம் மிக‍க்கொடிது

நானதனைக் கண்டேன்இந் நாள்!

 

செல்லப் பிராணி சிரம‍ப் பிராணியாய்

மெல்லவின் றானதோ மேதினியில் – செல்ல‍ஓர்

வீடுநா டின்றி விடப்பட்டு வீதியிலே

கேடுநான் கெட்டேன் கிடந்து!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக