111 புணர்ச்சி மகிழ்தல்!
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள! 1101
கண்டறியும் இன்பமும் கேட்டறியும் இன்பமும்
உண்டறியும் மோந்தறியும் உண்மையும் – மண்டிருளில்
தொட்டறியும் இன்பமும் தொல்புவியில்
வால்வளைப்பெண்
மட்டில் இருக்கின்ற மாண்பு!
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து! 1102
நோய்க்கு மருந்தென நூலொர் உரைத்ததெலாம்
ஆய்ந்துவிடின்
யாவும் அடுத்தவையே! -நோய்கொடுத்தந்
நோய்க்கு மருந்தென
நுண்ணணியாள் மாறுவதைத்
தோய்ந்தறிவில்
இட்டுத் துணி!
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு! 1103
தேன்ததும்பும் செவ்விதழாள் செம்மாங்
கனிமார்பில்
நான்படர்ந்து நல்லுறக்கம் நாட்டுதலின் -
வான்கிடக்கும்
செந்தா மரைமலர்போல் செங்கண் அமைந்திட்ட
இந்திரன் தேசமோ இன்பு!?
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால்
தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்! 1104
ஊரில் உலகத்தில் இல்லை எனும்போது
பாரிலிவள் எங்கிருந்து பற்றினாள்? – நேரிழையை
வேண்டா வெறுப்பாய் விலக உடலெரித்துத்
தீண்டக் குளிருமிந்தத் தீ!
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்! 1105
விரும்பும்போ தெல்லாம் விருப்பப்
பொருள்கள்
தருமின்பம் போலத் தருமே – சுரும்புலவும்
வாசமலர் சூட வகிடெடுத்த கார்கூந்தல்
நேசக் கிழதியவள் நெஞ்சு!
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால்
பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்! 1106
வந்தணைக்கும் வேளையெலாம் வாடுகின்ற
என்னுயிரைச்
செந்தளிர் விட்டலரச் செய்வதனால் –
சுந்தரிக்கு
தேவர் அருந்துகிற தேவா அமிர்த்ததைத்
தூவச் சமைந்ததிரு தோள்!
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அறிவை முயக்கு! 1107
இல்வாழ்க்கை தன்னில் இருந்துகொண்டு
கைப்பொருளை
இல்லார்க் குதவும் இனிமையொக்கும்; – நல்லாளின்
மாம்பழ மேனியை மஞ்சம் தனில்வைத்துத்
தாம்தழுவும் இன்பச் சணம்!
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு! 1108
கட்டி அணைக்கின்ற காளைக்கும் கன்னிக்கும்
ஒட்டி இருப்பதினும் உண்மையின்பம் –
முட்டிமுட்டி
உள்நுழையப் பார்க்கின்ற ஊதைக்கு இடமின்றி
அள்ளிக்கொள் கின்ற அணைப்பு!
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்! 1109
சண்டை இடுதல் சமாதானம் ஆதல்பின்
உண்டுறங்கு முன்னே உறவாடல் –
கண்ணுறுங்கால்
இங்கிவை மூன்றும் எழுங்காதல் மிக்குடையார்
பங்கிட்டு அடையும் பயன்!
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு! 1110
பார்க்கின்ற போதெல்லாம் பாராப் பொருள்விளங்கும்
வார்த்தைச் செழுமைநூல் வாக்கியம்போல் –
சேர்த்துச்செங்
கொத்தணிகள் பூண்டாளைக் கொஞ்சும் தொறும்எழுமே
புத்தம் புதியசுகம் பூத்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக